search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    • உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சு நாட்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக அந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 'ஏ' பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, 2 முறை ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 5 முறை சாம்பியனான இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். 'சூப்பர் 4' சுற்றில் 4 அணிகள் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் 2-வது 'லீக்' போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் மோதின. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளைய போட்டி இரு நாட்டு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உலக கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்

    விராட் கோலி தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. இதனிடையே, இந்த போட்டியின் முடிவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. இதனால் நாளைய போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் மிகப்பெரிய பலமாக இருப்பார். அதே நேரத்தில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப் படுகிறது.  20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் நாளை 10வது முறையாக மோத உள்ளன. இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 7-ல், பாகிஸ்தான் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.  

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), வீராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யுசுவேந்திர சாஹல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்

    பாகிஸ்தான்: பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), பகர் ஜமான், ஆசிப் அலி, ஹைதர் அலி, இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ஹஸ்னைன், ஹரிஸ் ரவூப், முகமது ரிஸ்வான், நசிம் ஷா, ஷாநவாஸ் தானி, உஸ்மான் காதிர். 

    • ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.
    • பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் 7 டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.

    துபாய்:

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

    இதற்கிடையே, ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான முகமது வாசிம் முதுகுவலி காரணமாக துபாயில் பயிற்சியிலிருந்து வெளியேறினார். முகமது வாசிமுக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் 7 டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு உற்சாகமானது.
    • பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி இன்னும் வருத்தமளிக்கிறது.

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 11 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. நாளை மறுநாள் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டி குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நாங்கள் எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பெரிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறோம். எனவே, பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு ஒரு உற்சாகமானது. நமக்கும் நாமே சவால் விடும் சிறந்த வாய்ப்பு.

    கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வி அடைந்தது இன்னும் வருத்தமளிக்கிறது. பெரிய போட்டிகளில் விளையாடும்போது ஒவ்வொரு அணியும் பெரிதாக சாதிக்க விரும்புகிறது, துரதிர்ஷ்டவசமாக, அது எங்களுக்கு நடக்கவில்லை. வலுவான பாகிஸ்தானிடம் நாங்கள் ஆட்டமிழந்தோம். எனவே இப்போது அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    பிற கருத்துக்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது உண்மையில் ஒரு வீரரைப் பாதிக்காது, குறிப்பாக விராட் கோலி போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர் வெளியில் இருந்து வரும் கருத்தால் பாதிக்கப் படமாட்டார்.

    அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறார். நான் காயமடைந்து 2 மாதங்கள் வீட்டில் இருந்தபோது, ​அவரை (விராட் கோலியை ) டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் பார்மில் இல்லை என்று நான் உணரவில்லை. இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.

    • பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படுபவர் ஷஹீன் அப்ரிடி.
    • காயம் காரணமாக இவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    துபாய்:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

    இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி காயம் காரணமாக இந்தப் போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    ஷஹீன் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • தனது பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரியாக விருப்பப்பட்ட ஹூத் ஹத்தாத் என்ற சிறுமியின் ஆசையை போலீசார் நிறைவேற்றினர்.
    • சிறுமி போலீசார் பயன்படுத்தும் சொகுசு ரோந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டார். நகரின் சில பகுதிகளுக்கு ரோந்து காரில் வலம் வந்தார்.

    துபாய்:

    துபாய் நகரில் ஹூத் ஹத்தாத் என்ற அரபு நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அவர் தனது பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரியாக வேண்டும் என பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து அவர்களின் பெற்றோர் தங்களது மகளின் விருப்பத்தை எவ்வாறு நிறைவேற்றுவது? என நினைத்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் போலீஸ் தலைமையகத்துக்கு தனது மகளின் விருப்பத்தை இ-மெயில் மூலம் அனுப்பினர். இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள் சிறுமியின் பிறந்த நாள் ஆசையை நிறைவேற்ற உறுதியளித்தனர். இதையடுத்து சிறுமியின் பிறந்தநாளான நேற்று போலீஸ் அலுவலகத்துக்கு சீருடையில் வந்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் வரவேற்று பூங்கொத்து வழங்கினர். மேலும் பிறந்த நாளையொட்டி சிறுமிக்கு பரிசு அளித்து மகிழ்ச்சிபடுத்தினர்.

    பின்னர் போலீஸ் அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர். அப்போது போலீஸ் துறையில் உள்ள பல்வேறு வகையான பணிகள் குறித்தும் சிறுமிக்கு தெரிவித்தனர். மேலும் போலீஸ் அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியினையும் அழைத்து சென்று காண்பித்தனர்.

    தொடர்ந்து சிறுமி போலீசார் பயன்படுத்தும் சொகுசு ரோந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டார். நகரின் சில பகுதிகளுக்கு ரோந்து காரில் வலம் வந்தார். இதன் காரணமாக சிறுமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

    தனது பிறந்த நாள் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசாருக்கு அந்த சிறுமியும், அவரது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர். இது குறித்து அவரது தந்தை கூறும்போது, தனது வேண்டுகோளை ஏற்று விரைவாக பரிசீலனை செய்து மகளின் பிறந்த நாள் ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

    இது குறித்து போலீசின் அதிகாரி அலி யூசுப் யாகூப் கூறும்போது, ''சிறுமியின் ஆசையை நிறைவேற்றும் திட்டத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த சிறுமியும், அவரது குடும்பத்தினர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இத்தகைய திட்டத்தின் மூலம் பல்வேறு வயதுடைய பல்வேறு நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்'' என்றார்.

    • கனமழை காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க ஐக்கிய அரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டு உள்ளன.
    • தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    துபாய்:

    வளைகுடா நாடுகளில் எப்போதாவதுதான் பலத்த மழை பெய்யும்.

    இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். இதனால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து செல்வோர் அந்த மாதங்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம்.

    அதே நேரம் மழை காலத்தில் லேசான மழை பெய்யும். சில நேரங்களில் கனமழையும் பெய்து மக்களை மகிழ்விக்கும்.

    அந்த வகையில் ஐக்கிய அரபு நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கனமழை காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க ஐக்கிய அரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் இங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அப்போது அணைகளுக்கு மேலும் நீர் வர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஐக்கிய அரபு நாட்டில் உள்ள வுராயா, ஷவ்கா, புராக், சிப்னி, அல்அஜிலி, அஸ்வானி, மம்தூஹ் ஆகிய 7 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன.

    • காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன்கள் எடுத்தார்.
    • டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3-வது இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் மெல் லானிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி இரண்டாம் இடம் பிடித்தார்.

    இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன் எடுத்ததால் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 5ம் இடத்தில் உள்ளார்.

    டி20 தரவரிசையில் பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி வர்மா 5வது இடத்தில் உள்ளார்.

    இதேபோல, ஆல்-ரவுண்டருக்கான பட்டியலில் இந்திய அணியின் தீப்தி வர்மா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • ஐ.சி.சி.அறிவிப்புக்கு பி.சி.சி.ஐ.வரவேற்பு
    • அனைத்து வித உள்கட்டமைப்பு வசதியும் இருப்பதாக பி.சி.சி.ஐ. தகவல்

    அடுத்து நடைபெற உள்ள ஐ.சி.சி.உலக கோப்பை தொடர்களுக்கான இறுதிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஆண்டுக்கான பெண்கள் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்புக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, ஆகியோர் வரவேற்றுள்ளனர். 2025 ஐசிசி பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு எங்களிடம் அனைத்து உள்கட்டமைப்பும் உள்ளது என்றும், இந்த போட்டிகளை வெற்றிகரமாக நாங்கள் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

    • ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
    • இதில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் முதலிடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.

    இதில், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி உள்ளார்.

    அதேபோல் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 4-வது இடத்தில் விராட் கோலியும், 5வது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

    ஆல் ரவுண்டருக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 8-வது இடத்தில் உள்ளார்.

    • சென்னை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன
    • மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் சத்குரு நன்றி தெரிவித்தார்

    உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும், மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள், மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச தலைவர்கள், விஞ்ஞானிகள், பிரபலங்களின் காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன.

    இது தொடர்பான நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மண் வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைநோக்கும் பார்வையும், செயல்களும் பாராட்டுக்குரியதாக உள்ளது. மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றிகள்.

    சவாலான மோட்டர் சைக்கிள் பயணம் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையில் கடினமான வேலை இப்போது தான் தொடங்கியுள்ளது. மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகள் எவ்வளவு வேகமாக நாம் நடைமுறைப்படுத்த போகிறோம் என்பது தான் இப்போதைய முக்கிய சவால்.

    மண் காப்போம் இயக்கம் உலகம் முழுவதும் 'மண்' குறித்த பார்வையை மாற்றியுள்ளது. இவ்வியக்கத்தின் தாக்கத்தால் மக்களும், அரசாங்கங்களும் மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகளை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல் நிகழ்த்த தொடங்கியுள்ளன. இத்திட்டங்களுக்கான நிதிகளும் ஒதுக்கப்பட தொடங்கியுள்ளன. இருப்பினும், அந்த சட்டங்கள் களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் வரை நம்முடைய பணி நிறைவு பெற போவதில்லை" என்றார்.

    Actyv.ai நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக சி.இ.ஓ திரு. ரகு சுப்பிரமணியன் மற்றும் 1Digi Investment Management நிறுவனம் இந்நிகழ்ச்சியை நடத்த நன்கொடை வழங்கியது. இது குறித்து திரு. ரகு சுப்பிரமணியன் கூறுகையில், "சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்றும் எங்கள் வர்த்தகத்தின் முக்கிய அம்சங்கள். சத்குரு தலைமையிலான மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றுவதில் Actyv.ai நிறுவனம் பெருமை கொள்கிறது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திருமதி. மரியம் பிண்ட் முகமது அல்ஹெரி பேசுகையில், "எங்களுடைய அரசு மண் காப்போம் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளது. இவ்வியக்கத்துடன் இணைந்து நாங்கள் செய்ய உள்ள பணிகள் எதிர்கால சந்ததியினருக்காக மதிப்புமிக்க மண்ணை பாதுகாக்கும் பணியின் தொடர்ச்சியாக இருக்கும்" என்றார்.

    புர்ஜ் கலிஃபா மட்டுமின்றி, நயாகரா நீர் வீழ்ச்சி, ஜெனிவாவில் உள்ள ஜெட் டியோ, தி மோண்ட்ரியல் ஒலிம்பிக் மைதானம், டொரோண்டோ டிவி டவர், மும்பை மாநகராட்சி கட்டிடம், சென்னை மற்றும் ஹூப்ளி ரயில் நிலையங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கமான மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நா அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வியக்கம் கடந்த 3 மாதங்களில் 390 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. மேலும், 8 இந்திய மாநிலங்கள் இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநாட்டில் பருவ நிலை, எரி சக்தி, சுகாதாரம் ஆகியவை தொடர்பான அமர்வில் மோடி பங்கேற்று பேசினார்.
    • ஜி-7 மாநாட்டில் போரிஸ் ஜான்சன், புமியோ கிஷிடா, மரியோ டிராகி ஆகியோரை சந்தித்தேன்.

    துபாய்:

    ஜி-7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் எல்மாவ் நகரில் நடந்து வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    மாநாட்டில் பருவ நிலை, எரி சக்தி, சுகாதாரம் ஆகியவை தொடர்பான அமர்வில் மோடி பங்கேற்று பேசினார்.

    இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோரை சந்தித்து பேசினார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஜி-7 மாநாட்டில் போரிஸ் ஜான்சன், புமியோ கிஷிடா, மரியோ டிராகி ஆகியோரை சந்தித்தேன்.

    இந்த சந்திப்புகள் அற்புதமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் செனகல் அதிபர் மெக்கிசால், உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானோம் ஆகியோரை சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் உர்சுலா வான்டெர் லேயனை மோடி சந்தித்து பேசினார்.

    ஜி-7 மாநாட்டை முடித்து விட்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எரேட்சுக்கு செல்கிறார். அங்கு ஐக்கிய அரபு எரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்திக்கிறார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்புகிறார்.

    • ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடத்திலும், இங்கிலாந்து 2-வது இடத்திலும் உள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    துபாய்:

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 105 ரேட்டிங் உடன் 5-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி 6-வது இடத்தில் நீடிக்கிறது. வங்காளதேசம், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    ×