search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • போக்குவரத்துதுறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையானது கடந்த 18-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா என கண்காணித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்திலும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று காலை சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகு ளத்துக்கு செல்வதற்காக கோவை வழியாக ஒரு ஆம்னி பஸ் வந்தது.

    இந்த ஆம்னி பஸ் கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே இன்று காலை வந்தது. இதனை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பஸ்சில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பின்னர் பஸ்சை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ் மத்திய போக்குவரத்துதுறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த பஸ்சில் இருந்த கேரளாவை சேர்ந்த 21 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, அவர்களை சொந்த ஊர் அனுப்புவதற்கான நடவடிக்கையை அந்த ஆம்னி பஸ் நிர்வாகம் செய்து வருகிறது.

    இதுகுறித்து கோவை போக்குவரத்துத்துறை அதிகாரி ஆனந்த் கூறும்போது, `வெளிமாநில பஸ்கள் தமிழ்நாட்டில் பயணிகளை ஏற்றக்கூடாது. தமிழ்நாட்டு வழியாக மற்ற மாநிலங்களுக்கு சென்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த ஆம்னி பஸ்சை நிறுத்தியுள்ளோம். இந்த பஸ்சில் கேரளா செல்லக்கூடிய 21 பயணிகள் உள்ளனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைளை அந்த ஆம்னி பஸ் நிர்வாகம் செய்து தரும்' என்றார்.

    • ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.
    • மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணைக்கு நீலகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.

    தற்போது நீலகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து நேற்று நள்ளிரவு அதிகரித்தது. இதனால் அதிகாலை 4 மணியளவில் பில்லூர் அணையில் இருந்து ஓராண்டுக்கு பிறகு 4 மதகுகள் வழியாக சுமார் 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இருப்பினும் 5 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்ததால் 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு மீண்டும் 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. காலை 6 மணி நிலவரப்படி 14,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையொட்டி நெல்லித்துறை பத்திரகாளி அம்மன் கோவில், ஓடந்துறை, வச்சினம்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோரத்தில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையிலுள்ள பவானி ஆற்றுப்பாலத்தில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், நகராட்சி தலைவர் பர்வீன், கமிஷனர் அமுதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    சோலையார் அணை 100 அடியை எட்டியது வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான சோலையார் அணை 5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்கும் அணையாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையார் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 20 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.

    வால்பாறை 72 மில்லி மீட்டர் மழை அளவும், சின்கோனா 64 மில்லி மீட்டர் மழை அளவும், சோலையாறு அணை 47 மில்லி மீட்டர் மழை அளவும், அதிகபட்சமாக சின்னக்கல்லார் 92 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.

    • ருக்குமணி தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார்.
    • யானை அவரை தும்பிக்கையால் தாக்கி அவரை அங்கிருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசியது.

    பேரூர்:

    கோவை மாவட்டம் செம்மேடு, அடிகளார் வீதியைச் சேர்ந்தவர் ருக்குமணி(வயது 70). தோட்ட வேலை பார்க்கிறார்.

    இவரது வீட்டில் அருகே வசிப்பவர் ஈஸ்வரி. நேற்று இரவு 12 மணிக்கு மேல், ஈஸ்வரியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.

    இதனால் அதிர்ச்சியான ருக்குமணி தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு ஈஸ்வரி வீட்டின் கதவை உடைத்து யானை ஒன்று அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. இருட்டாக இருந்ததால் யானை தெரியவில்லை.

    இதையடுத்து யாரோ ஒருவர் கதவை தட்டுகிறார் என நினைத்து ருக்குமணி, ஈஸ்வரியின் வீட்டின் அருகே சென்றார். அப்போது தான் அங்கு யானை நின்றிருந்தது தெரியவந்தது.

    உடனடியாக ஓட முயற்சித்தார். ஆனால் அதற்குள் யானை அவரை தும்பிக்கையால் தாக்கி அவரை அங்கிருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசியது.

    யானை நிற்பதை அறிந்த ஈஸ்வரி வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டார். இந்த நிலையில் வெளியில் நின்ற யானை ஆவேசமாக பிளறியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றது.

    யானை சென்ற பின்னர் வீட்டை விட்டு வெளியில் வந்த ஈஸ்வரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யானை தாக்கி படுகாயம் அடைந்த ருக்குமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தொடர் மழையால் தொரப்பள்ளி பகுதியில் உள்ள இருவயல் ஆற்றுவாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வால்பாறை:

    கோவை மாவட்டத்தின் மலைப்பிரதேசமான வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 10 நாட்களாக இங்கு அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று மாலை வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கருமலை, அக்காமலை, வெள்ளமலை, சின்னக்கல்லார், நீரார், சின்கோனா, சிறுகுன்றா, சோலையார் அணை, உருளிகல், பண்ணிமேடு, வில்லோனி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    மாலையில் தொடங்கிய மழை இரவு வரை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    தொடர் கனமழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வால்பாறை தாசில்தார் வாசுதேவன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கூழாங்கல் ஆறு பகுதியில் ஆய்வு செய்தனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழையால் வால்பாறையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

    கோவை மாநகர் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவை குற்றாலம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 19 செ.மீ மழையும், சின்கோனாவில் 14 செ.மீ மழையும் பதிவாகி இருந்தது.

    கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சின்னக்கல்லார்-198, சின்கோனா-147, சோலையாறு அணை-122, வால்பாறை-107, சிறுவாணி அடிவாரம்-60, தொண்டாமுத்தூர்-33 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இரவும் மழை நீடித்தது. மழைக்கு கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் சாலையில் 4-ம் மைல் பகுதியில் சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டு, மூங்கில்கள் சரிந்து சாலையில் விழுந்தன.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மண்குவியலை அகற்றினர்.

    கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் மூங்கில்கள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் தொரப்பள்ளி பகுதியில் உள்ள இருவயல் ஆற்றுவாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள பேரூரில் பேரூராட்சி சார்பில் வடக்கு ரதவீதியில் ரூ.71 லட்சத்தில் சாக்கடை வாருகால் அமைக்கும் பணி நடக்கிறது.

    கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சாக்கடை வாருகால் அமைக்கும் பணியில் தேனியை சேர்ந்த வேல்முருகன்(வயது49) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

    தற்போது சாலையோரத்தில் சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டப்பட்டு, கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. தோண்டப்பட்ட குழியை அளவீடு செய்யும் பணி மற்றும் மண்ணை பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நடந்தது.

    நேற்று மாலை பேரூர் கோவிலுக்கு வடக்கே ஆற்றுப்பாதைக்கு முன்பு தோண்டப்பட்ட குழியில் இறங்கி வேல்முருகன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனியார் இடத்தை சுற்றி போடப்பட்டிருந்த கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் வேல்முருகன் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து வேல்முருகனின் மகன் மயில்சாமி பேரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், அஜாக்கிரதையாக வேலையாட்களை பணியாற்ற வைத்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கட்டிட காண்டிராக்டர் செந்தில்குமார், மேஸ்திரி சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.

    • உலகில் உள்ள பிரதான மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைப்பெறுகிறது.
    • ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 25-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) பெரு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்களும் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சூஃபி பாடல்கள் இசை வடிவிலும் அர்ப்பணிக்கப்பட்டன.

    தியானம் என்றால் என்னவென்றே அறியாத மக்களும் தியானத் தன்மையை உணர வழிவகுக்கும் வகையில், யோகா அறிவியலின் படி 7 சக்கரங்களும் சக்தியூட்டப்பட்ட லிங்க வடிவமே தியானலிங்கம். சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு தியானம் செய்ய விரும்பும் ஒவ்வொரு தனி மனிதருக்கும், அந்த வாய்ப்பை வழங்க தியானலிங்க வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது என்பதை உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தில், உலகில் உள்ள பிரதான மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைப்பெறுகிறது.

     இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் இன்று காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் "ஆம் நமசிவாய" மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடகம்' எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

    பின்னர் மயிலை சத்குரு நாதன் அவர்களால் தேவாரமும், 'செரா மே' என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் புத்த மந்திர உச்சாடனமும் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து கோவையை சேர்ந்த FSPM சிஸ்டர்ஸ் கிறிஸ்தவ பாடல்களையும், சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் ருத்ர-சமக வேத கோஷத்தையும் அர்ப்பணித்தனர்.

    மேலும் வெறும் இசைக்கருவிகளை கொண்டு நடத்தப்படும் நாத ஆராதனை நிகழ்வும், அதனை தொடர்ந்து குருத்வாரா சிங் சபா அவர்களின் குருபானி, சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதியின் மந்திர உச்சாடனங்கள் நடைப்பெற்றன. பின்னர் சிறப்பு விருந்தினர்கள் இஸ்லாமிய பாடல்களை அர்ப்பணித்தனர்.

    அதற்கடுத்து, ஆசிரமவாசிகள் சூஃபி பாடல்களையும், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா பாடல்களையும் இசை அர்ப்பணிப்புகளாக வழங்கினர். பிறகு தீக்ஷை நிகழ்ச்சியும் இறுதியாக 'குண்டேச்சா சகோதரர்களின்' இசை நிகழ்ச்சியுடன் இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவுப்பெற்றன.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
    • சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை அடிவார பகுதியான இந்திரா நகர், ஐ.ஓ.பி.காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

    ஐ.ஓ.பி.காலனி பகுதியில் அந்த யானை நடமாடி கொண்டிருந்தது. அப்போது சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தனர்.

    அந்த பெண்ணின் கணவர் நுழைவு வாயில் வழியாக வெளியே சென்றார். அப்போது அங்கு சுற்றி திரிந்த யானை திடீரென அவரை தாக்க முயன்றது.

    அவர் அங்கிருந்து ஓடி வீட்டிற்குள் நுழைந்தார். அவருடன் அவரது மனைவியும் உள்ளே ஒடியதால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இருவரும் காட்டு யானையிடம் இருந்து தப்பியோடிய சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து பாரதியார் பல்லைக்கழக வளாகம் மற்றும் நீச்சல் குளம் பகுதியில் யானை முகாமிட்டிருந்தது.

    இதையடுத்து இரவு முழுவதும் அந்த யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கோவை விமான நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இன்று காலையும் விமான நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்களை வழி அனுப்பி வைக்கவும், ஊர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கவும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. விமானநிலைய ஊழியர்களும் தங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

    இன்று காலை 7.30 மணிக்கு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது. அதில் விமான நிலையத்தின் குளியலறை தண்ணீர் குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசாரும் மோப்ப நாய்களுடன் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் விமான நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

    குளியலறை மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஆனாலும் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடி குண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மிரட்டல் எங்கிருந்து வந்தது. எந்த மின்னஞ்சல் முகவரியில் வந்தது. மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே கோவை விமான நிலையத்திற்கு 2முறை வெடிகுண்டு மெட்டல் வந்தது. தற்போது 3-வது முறையாகவும் மிரட்டல் வந்துள்ளது.

    இதற்கிடையே கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
    • இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    கோவை:

    கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) மதுரை ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து, கைது செய்துள்ளனர்.

    மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து உள்ளார்கள். கோவையில் எந்த இடம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் சொல்லுங்க அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தோம்.

    ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்க கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

    கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்து உள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த கடிதத்தை நிராகரித்து இருக்கிறார்கள். எங்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னரிடம் தொலைபேசியில் முறையிட்டேன்.

    இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பா.ஜ.க. கட்சி குழு கவர்னரை சந்திக்க உள்ளது. இந்த குழு கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, நாங்கள் நேரிடையாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட்டது என அனைத்தையும் கவர்னரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் தி.மு.க.விற்கு உள்ள தொடர்பு குறித்து கவர்னரிடம் அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். எங்களது கருத்துரிமையை பறிக்க கூடிய தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கவர்னர் முன்வைப்போம். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்துவோம்..

    தி.மு.க.விற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிகொண்டு வர சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு சி.பி.ஐ. வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை.

    தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா.
    • உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்த படம் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கோவையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    தேர்தல் வர 20 மாதங்கள் தான் உள்ளது. அதனால் 10 லட்சம் என்ன போட்டி போட்டு ஒரு ஆளுக்கு 1 கோடி கூட கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த உயிர்களை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாக கோபப்படுகிறீர்கள். நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா. இவன் இப்பவே செத்து விடுவான். இவன் 5 வருடம் கழித்து சாவான். இது ஸ்லோ பாஸ்சன்.

    உங்களால் கள்ளச்சாராயத்தை எல்லாம் ஒழிக்கவே முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    இது யாருக்கும் தெரியாமலோ, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு தெரியாமலோ நடந்திருக்காது.

    இது எவ்வளவு வருத்தப்படக்கூடிய சம்பவம். இன்றைக்கு காலையில் எங்காவது விற்றுக்கொண்டிருப்பார்கள். இது முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். இப்போதும் எங்காவது சரக்கு ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறினார்.

    • மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது.
    • இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஜப்பான் நாட்டின் அரிய வகை மா மரம் மியா சகி இந்தியாவில் பரவலாக பல மாநிலங்களில் காய்க்க துவங்கியுள்ளது.

    இதில், அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டின் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் ஏ, சி மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளது. இந்த மாம்பழம் 2.5 முதல் 3 லட்சம் வரை ஒரு கிலோ விலை போகின்றது.

    இந்நிலையில், காவேரி கூக்குரல் - முக்கனி திருவிழாவிற்கு வருகை தர பதிவு செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மியா சகி மா மரக்கன்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டும் வழங்க வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் உங்கள் அதிக தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம் என்றும் காவேரி கூக்குரல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்க்கெட்டில் 3000 வரை விற்கக்கூடிய மியா சகி மா மரக்கன்றை நாம் நேரடியாக இறக்குமதி செய்து ஒரு மரக்கன்று 300 ரூபாய்க்கு வழங்க உள்ளோம்.

    இந்த சலுகை நிகழ்வில் கலந்து கொள்வார்களுக்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவேரி கூக்குரல் - முக்கனி திருவிழாவில் பங்கேற்க

    இன்றே பதிவு செய்யவும் என்றும், குறைந்த அளவு நாற்றுகள் மட்டுமே வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், விழாவில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யவும்..

    https://forms.gle/z6XzwcuG5GhXjmjb8 அல்லது 94425 90081, 94425 90079 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.

    • சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இதை சீர்ப்படுத்த மரம் வளர்ப்பு தேவையாகிறது.
    • முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

    காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

    இதில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா மற்றும் வாழை ரகங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காவேரி கூக்குரல் இயக்கம், இந்திய தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) ஆகிய 4 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது.

    இதில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்களும் பண்ருட்டி முன்னாள் வேளாண்மை துணை இயக்குனர் அக்ரி.பி. ஹரிதாஸ் அவர்களும் பங்கேற்று பேசினர்.

    இதில் தமிழ்மாறன் அவர்கள் பேசியதாவது:-

    பருவ நிலை மாற்றத்தால் முக்கனி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். வழக்கத்தைவிட மா, பலா, வாழையின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 30% இந்தாண்டு குறைந்துள்ளது.

    ஒரு பயிர் சாகுபடியை விடுத்து, பலப்பயிர் பல அடுக்கு முறையில் உணவுக்காடாக உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளை பாதிப்பிலிருந்து காக்கலாம்.

    சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் இதை சீர்ப்படுத்த மரம் வளர்ப்பு தேவையாகிறது. அதுவும் குறிப்பாக பழ மரமாக இருந்தால் நம் ஆரோக்கியம் மேம்படும், சுற்றுச்சுழல் மேம்படும், நிலம் வளமாகும் மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். இத்தோடு விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும்.

    எனவே, விவசாயிகள் தங்களிடம் எவ்வளவு நிலம் இருந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியில் உணவுக்காடு உற்பத்தி செய்ய வேண்டும். நிலமே இல்லாவிட்டாலும் மாடியில் கூட உணவுக்காடு சாத்தியம் என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.

    இந்த நிகழ்ச்சியில் 300 வகையான மாம்பழங்கள், 100 வகையான பலா பழங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாழை ரகங்கள் கண்காட்சியாகவும், விற்பனைகாகவும் வைக்கப்பட உள்ளது. இத்துடன் முக்கனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×