search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    • கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 5 குளங்கள் அமைந்துள்ளது.
    • குளங்களில் குப்பை, கோழி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

    மதுரை:

    தஞ்சாவூர் மாவட்டம் உடைலூர் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 5 குளங்கள் அமைந்துள்ளது. இந்த குளங்களில் குளங்களில் மீன் பிடிப்பதற்கான குத்தகை ஏலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நடத்தினார். ஆனால் விதிகளை பின்பற்றாமல் விடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பஞ்சாயத்துகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கோவில்களில் இயற்கையான முறையில் பெருகி உள்ள மீன்களை பிடிக்க ஏலம் விடப்படுகிறது. ஆனால், இயற்கையான முறையில் பெருகி உள்ள மீன்களை பிடிக்காமல் வணிக நோக்கில் பல்வேறு வேதியியல் பொருட்களை கலந்து மீன்களை பெருக்குகின்றனர்.

    மேலும், அப்பகுதி மக்கள் குளங்களில் குப்பை, கோழி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே நீரின் தரம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குளத்து நீரையே குடிநீராக பயண்படுத்தினர். தற்போது, குளத்து நீரை கால் நடைகள் கூட குடிக்க முடியவில்லை. இந்த நிலை ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது.

    எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் தரம் எவ்வாறு உள்ளது. கழிவு நீர் குப்பைகள் கொட்டப்படுகிறதா, நீர் நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தஞ்சாவூர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மீன் வளத்துறை அதிகாரிகள், விவசாயத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
    • ஒரு கடைக்கு 2 கைக்குழந்தைகளுடன் பெண்கள் குடை பிடித்த படி வந்தனர்.

    மதுரை:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, விருதுநகரில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே சாலைகள் மோசமாக உள்ள நிலையில் திடீர் மலை காரணமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் மாறி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மழைநீர் தேங்கியிருக்கும் பள்ளங்களில் விழுந்து காயமடைவது நிகழ்ந்து வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் மிதமாகன மலை பெய்தது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. நேற்று சாத்தூரில் உள்ள ஒரு கடைக்கு 2 கைக்குழந்தைகளுடன் பெண்கள் குடை பிடித்த படி வந்தனர்.

    கடை அருகே நெடுஞ்சா லைத்துறையால் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மழைநீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. இதை அறியாமல் கைக்குழந்தைகளுடன் வந்த 2 பெண்களும் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர்கள் விரைந்து செயல்பட்டு 2 கைக்குழந்தைகள், பெண்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.

    பெண்கள் 2 குழந்தையுடன் பள்ளத்தில் விழும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதற்கு பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.


    • மண்டபம்-பாம்பனை இணைக்கும் புதிய ரெயில் பாலம்.
    • பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை.

    ராமேஸ்வரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரெயில்பாலம் அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதையடுத்து புதிய பாலம் கட்ட மத்திய அரசு முடிவெடுத்தது.

    அதன்படி ரூ.545 கோடி மதிப்பில் மண்டபம்-பாம்பனை இணைக்கும் வகையில் பிரமாண்டமாகன புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. அடுத்த மாதம் திறக்கப்படும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில் பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பாம்பன் ரெயில் பாலத்தில் இன்று என்ஜின் மற்றும் 11 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 20 கி.மீட்டர் முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    அப்போது பாலத்தின் நடுவே உள்ள தூக்குபாலத்தின் உறுதி தன்மை, அதிர்வுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதிய பாலத்தில் ரெயில் இயக்கியது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினை கைவிட அதிமுக கோரிக்கை
    • அதிமுக சார்பில் 24.08.2024 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

    பள்ளிக் கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆங்கிலேயர் காலம் முதல் கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, எளிய பொருளாதார நிலையிலும் தங்களுக்கு தாங்களே "கள்ளர் காமன் பண்ட்" மூலமாகவும் தங்கள் நிலங்களையும், கடும் உழைப்பையும் கொடுத்து அமைத்து கொண்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தை பிற்பட்டோர் நலத்துறையிடமிருந்து இருந்து பறித்து, உள்நோக்கத்தோடு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து 17.08.2024 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    அந்த அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கையினால், இதுவரையில் இச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலைவாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற பல அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்பதால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை விடியா திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்.

    பேனா சிலை வைப்பதிலும், நூறு ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், அதனை விளம்பரப் படுத்துவதிலும் மட்டுமே ஈடுபாடாக உள்ள இந்த விடியா திமுக அரசு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறு இல்லை. அதே போல், தற்போதும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாக முறையை மாற்றத் துடிக்கும் தன்னுடைய மக்கள் விரோதப் போக்கில் இருந்து விடியா திமுக அரசு மாறுவதாகத் தெரியவில்லை.

    எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் 24.08.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வங்கக் கடலில் அவ்வப்போது புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவது வழக்கம்.
    • ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    மதுரை:

    தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 20-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை மூலம் 47 சதவீத மழை கிடைத்து வருகிறது. சராசரியாக 90 சென்டி மீட்டர் மழை வரை இந்த பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழையின் போது வங்கக் கடலில் அவ்வப்போது புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவது வழக்கம்.

    இதனால் சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புயல் சேதம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் அதி கன மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்வதாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் இந்த பருவ மழையின் போது பெரும் சேதமடைகிறது. பருவ நிலைகளை முன்கூட்டியே கண்காணிக்கும் வகையில் ஏற்கனவே சென்னை, காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் அதிநவீன ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    ஆனாலும் சில சமயங்களில் இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் கனமழை மற்றும் புயல் காரணமாக அதிக பாதிப்புகளை தென் மற்றும் வட மேற்கு மாவட்டங்கள் சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது ஆனாலும் இது தொடர்பாக இந்திய மாநில மையம் சரியான முன்னெச்சரிக்கை உத்தரவுகளை மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பருவ காலநிலைகளை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வசதியாக ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் அதிநவீன ரேடார்களை அமைக்க மாநில பேரிடர் மேலாண்மை துறை நடவடிக்கையில் இறங்கி உள்ளது .

    இதற்கான டெண்டர் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை துறை புதிய ரேடாரர்களை அமைக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    இந்த அதிநவீன ரேடார்கள் மின்காந்த அலைகள் மூலம் பருவ, காலநிலையில் நிலவும் திட மற்றும் திரவ மூலக்கூறுகளின் தன்மைகளை துல்லியமாக ஆராய்ந்து மழை மற்றும் புயலின் தன்மையை முன் கூட்டியே துல்லியமாக கணிக்க முடியும். மேலும் இந்த ரேடார்கள் புயல் மற்றும் கடலில் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் மையம் கொள்ளும் பகுதிகள், கடக்கும் பகுதிகளையும் துல்லியமாக கணித்து எச்சரிக்கை செய்யும்.

    இது தொடர்பாக இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்தியூஜாய் மோகபத்ரா கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக அதிநவீன ரேடார்கள் நிறுவும் பட்சத்தில் தமிழகத்தின் தென்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து முழுமையாக தடுக்க முடியும். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே சென்னையில் எஸ்-பாண்ட், எக்ஸ்-பாண்ட் வகையான 2 ரேடார்களும், காரைக்கால்-ஸ்ரீஹரிகோட் டாவில் எஸ்-பாண்ட் ரேடார்களும் நிறுவப்பட்டு உள்ளன.

    கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நிலவும் பருவ நிலைகள் ஒரளவுக்கு கண்காணிக்கப்படுகிறது ஆனாலும் பல பகுதிகளை இதன் மூலம் கண்காணிப்பதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனை சரிசெய்யும் வகையிலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவும் பருவநிலைகளை முன்கூட்டியே கண்காணிக்க வசதியாகவும் 2 புதிய ரேடார்கள் நிறுவப்படுகின்றன.

    இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவ நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முடியும். மேலும் ராமநாத புரத்தில் நவீன புதிய ரேடார் நிறுவப்படுவதால் கிழக்கு கடலோர பகுதிகள்,தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பருவ நிலை மாற்றங்களை முன் கூட்டியே கணிக்க முடியும். எஸ்-பாண்ட் வகை ரேடார் கள் மூலம் 500 கிலோமீட்டர் சுற்றளவையும், எக்ஸ்-பாண்ட் ரேடார்கள் மூலம் 150 கிலோமீட்டர் சுற்றளவையும் கணிக்க இயலும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது உள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் நிலவும் பருவ நிலைகளை கண்காணிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தவிர்க்க வசதியாக ராமநாதபுரத்தில் அமைகின்ற ரேடார் மூலம் கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதிலும் பருவ நிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க இயலும். மேலும் ஏற்காட்டில் நிறுவப்படும் ரேடார் மூலம் வட மேற்கு மற்றும் வடபகுதி மாவட்டங்களின் நிலவும் பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க இயலும் என்று இந்திய வானிலை மைய மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிநவீன 2 ரேடார்கள் ராமநாதபுரத்திலும் ஏற்காட்டிலும் நிறுவ மாநில பேரிடர் மேலாண்மை துறை எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக வடகிழக்கு பருவமழையின் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் வெள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகளை தடுக்கவும், பொது மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்கவும் பேருதவியாக இருக்கும் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராஜதந்திரத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து வந்து விட்டீர்கள்.
    • நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு கேட்டிருக்கலாம்.

    மதுரை:

    மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    அண்ணாமலை அரசியல் முதிர்ச்சியின்றி பேசி வருகிறார். திமுக - பாஜக இடையிலான உறவை ரகசியமாக வைக்க வேண்டாம். வெளிப்படையாக அறிவித்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள். மக்களுக்கு அல்வா கொடுக்காதீர்கள்.

    வெள்ள நிவாரணம் கொடுக்க வரவில்லை, ஆறுதல் சொல்ல வரவில்லை, அவர் தமிழ்நாட்டுக்கு வர என்ன தகுதி இருக்கிறது... யோக்கியதை இருக்கிறது என்று எல்லாம் கேட்டது யார்? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்.

    பாதுகாப்புத்துறை அமைச்சரை அழைத்து வந்து விட்டீர்கள். மக்களின் வளர்ச்சிக்கு ராஜதந்திரத்துடன் பீகாரில் நிதிஷ்குமார் எப்படி நிதி வாங்கினார், ஆந்திராவில் எப்படி நிதி வாங்கினார்.

    அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என ராஜ்நாத் சிங்கிடம் தமிழக அரசு கேட்டிருக்கலாம்.

    வெள்ள நிவாரண நிதி தரவில்லை, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று கேட்டிருக்கலாம்.

    அதையெல்லாம் விட்டுவிட்டு எங்க அப்பாவை திமுக-காரன் கூட இப்படி பாராட்ட மாட்டான் என்று ஒரு முதலமைச்சர் சொல்வது எப்படி ஏற்றுக்கொள்வது.

    தமிழ்நாட்டின் உரிமையை அடமானம் வைத்து உங்கள் அப்பாவின் பெருமையை புகழ்பாடுவதால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்பது தான் மக்களின் கேள்வி என்று கூறினார்.

    • அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது.
    • அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    மனிதர் புனிதர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கப்பட்ட இந்த புனித இயக்கத்தை 3-ம் பெரிய இயக்கமாக உருவாக்கி, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் அன்பரசன் நாகூசாமல் பேசியது ஒவ்வொரு தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் உள்ளது.

    அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது. அமைச்சர் அன்பரசன், ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசியதற்கு அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தா.மோ.அன்பரசனை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அம்மா பேரவை வலியுறுத்துகிறது.

    2 கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக திகழும் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து இது போன்று பேசினால் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணையை பெற்று, அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • நெற்கதிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் கொளுத்தும் வெயிலும், மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த பருவம் தவறிய மழையால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்தநிலையில் சோழவந்தான் அருகேயுள்ள இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பேட்டை மற்றும் சோழவந்தான் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் இந்த நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இச்சமயத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.

    பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்ததில் நெற்கதிர்கள் பெரும்பாலானவை வயலில் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.

    ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரத்தில் முதல் போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு அதன் பிறகு விவசாயம் நடைபெறும். கிணறு வைத்துள்ள சில விவசாயிகள் இதற்கு முன்பாகவே விவசாயம் செய்து நெல் அறுவடை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதுபோல இந்த ஆண்டு இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், சோழவந்தான், நாச்சி குளம் ரோடு ஆகிய பகுதிகளில் கிணறு மூலம் நெல் விவசாயம் செய்துள்ளனர்.

    தற்போது பலத்த காற்றுடன் வீசிய கனமழையால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கிறது. இதில் 30 ஏக்கர் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. சேதம் அடைந்த நெற்கதிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சாய்ந்து கிடக்கும் நெற்கதிர் உள்ள நிலங்களை விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர்.

    ஏனென்றால் சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்களை அறுவடை செய்த வயல் என்று கால்நடைகள் இறங்கி பாழாக்கிவிடும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
    • முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்மட்டம் உள்ள இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக 1979-ம் ஆண்டு முதல் கேரளா அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து வருவது நமக்கு கவலைக்குரிய ஒரு விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    எப்பொழுதெல்லாம் கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் இந்த முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து கேள்வி எழுப்பி சந்தேகம் எழுப்பி, கற்பனை கதைகளை கட்டவிழ்த்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை, வீடியோக்களை ஆதாரம் இல்லாமல் வெளியிடுவதை கேரளா வழக்கமாக கொண்டுள்ளது. கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

    அணை கேரளாவில் இருந்தாலும், கட்டுப்பாடு முழுவதும் தமிழக நீர்வளத்துறையிடம்தான் உள்ளது. ஒவ்வொரு மாதமும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணை கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்சநீதி மன்றத்திலே சமர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.

    அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை எழுப்பி புதிய அணை கட்டுவோம் என்று சொல்லி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று கேரளா மக்களிடத்தில் அச்சத்தை பரப்பி, பதட்டத்தை உண்டாக்கி இரண்டு மாநில மக்களிடத்திலே இருக்கிற சகோதர உறவை கேள்விக்குறி ஆக்கி வருகிறது.


    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருப்பதை மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் வேடிக்கை பார்ப்பது எதிர்காலத்திற்கு இந்த நட்புறவிலே இந்த சகோதர உறவிலே ஒரு இடைவெளி ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சமீபத்திலே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட நூற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவிலே மூழ்கி ஏராளமான உயிர்கள் பலியானது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. இந்த இயற்கை பேரிடர் சம்பவத்தை முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையுடன் முடிச்சு போட்டு இடுக்கி எம்.பி. உள்ளிட்ட கேரளா அரசியல்வாதிகள் வலைதளங்களிலேயே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

    இதுகுறித்து தமிழக அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்கின்ற வகையிலே தமிழக முல்லைப் பெரியாறு அணை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலே, இந்த பாதுகாப்பு குறித்து ஒரு உரிய விளக்கத்தை வெளியிட்டு இதுபோன்ற ஆதாரம் இல்லை கற்பனை செய்திகளை, வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முதலமைச்சர் தயாரா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பாலத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
    • காருக்குள் இருந்த சவுந்தர்ராஜ், குழந்தை ஷிவானிகா ஆகிய இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள காடனேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்ற சென்றாயபெருமாள் (வயது 35). இவரது மனைவி பிரியங்கா (30). இந்த தம்பதிக்கு ஷிவானிகா என்ற இரண்டு வயது மகள் இருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக செந்தில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்தார். இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவியின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு கடந்த மாதம் செந்தில் குடும்பத்துடன் சென்றார்.

    பின்னர் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்தார். இதையடுத்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்த செந் தில் நேற்று திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டார். அவரை ஊரில் விட்டு வருவதற்காக உறவினர் சிலரும் முடிவு செய்தனர்.

    அதன்படி வாடகைக்கு ஒரு காரை எடுத்துக்கொண்டனர். அதில் செந்தில், அவரது மனைவி பிரியங்கா, குழந்தை ஷிவானிகா, பிரியங்காவின் சித்தப்பா சவுந்தர்ராஜன் (50), உறவினர்கள் லல்லியம்மாள் (52), சுரேஷ் (35), சாந்தா ஆகியோரும் வந்தனர். காரை திருப்பத்தூரை சேர்ந்த டிரைவர் அப்பீஸ் (29) என்பவர் ஓட்டி வந்தார்.

    நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து புறப்பட்ட அவர்கள் இன்று அதிகாலை திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி பாலத்தில் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது எதிரே முத்து லிங்காபுரத்தில் இருந்து கல்லுப்பட்டி வழியாக திருமங்கலம் நோக்கி செல்லும் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பாலத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கியதோடு, அனைத்து கதவுகளும் திறக்க முடியாமல் லாக் ஆகிக்கொண்டது. இதனை பார்த்ததும் பேருந்தில் வந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்க போராடினர்.

    ஆனால் முயற்சி பலன் அளிக்காததால் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த கல்லுப்பட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரை வெளியே எடுத்து அதன் கதவுகளை உடைத்தனர். ஆனால் இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த சவுந்தர்ராஜ், குழந்தை ஷிவானிகா ஆகிய இருவரும் இடிபாடுகளுள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.

    செந்தில், பிரியங்கா, லல்லியம்மாள், சுரேஷ், சாந்தா, டிரைவர் அப்பீஸ் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்தரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டவர், சிகிச்சை முடிந்து ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.
    • சிறப்பு குழந்தைகள் கின்னஸ் சாதனை படைக்க ஆர்வம்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் இருந்து எஸ்.டி.ஏ.டி. அமைப்பின் சார்பில் 15 சிறப்பு குழந்தைகள் கின்னஸ் உலக சாதனைக்காக சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ நீந்தி செல்கின்றனர்.

    இன்று (5-ந்தேதி) தொடங்கி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் (காலை 6 மணி முதல் மாலை 6 வரை) நீந்தி ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.

    இன்று காலை இதற்கான தொடக்க விழா மண்டபத்தில் நடந்தது. மண்டபம் பேரூராட்சி சேர்மன் ராஜா குடியரசைக்கு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 15 சிறப்பு குழந்தைகளும் கடலில் இறங்கி நீந்த தொடங்கினர்.

    இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் சிராஜுதீன், குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் அன்பழகனார் கூறுகையில், கின்னஸ் சாதனைக்காக 15 சிறப்பு குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

    கடலில் நீந்தும் குழந்தைகளுக்காக 5 படகுகள் பாதுகாப்பாக செல்லும். அவர்களுடன் 8 பயிற்சியாளர்கள் செல்வார்கள். 11 நாட்கள் கடலில் நீந்தும் குழந்தைகள் வருகிற 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்வார்கள் என்று கூறினார்.

    • விரக்தியடைந்த முகேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    புதுச்சேரியை சேர்ந்தவர் முகேஷ்குமார். இவர் அங்கு செயல்பட்டு வரும் தனியார் மருத்துவகல்லூரியில் 2 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இதற்கிடையே சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் முகேஷ் குமார், இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தார்.

    இதனை அறிந்த அவரது பெற்றோர், மகனுக்கு அறிவுரை கூறி திட்டியதோடு, முகேஷ்குமார் வைத்திருந்த செல்போனையும் வாங்கி வைத்துக்கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு முகேஷ்குமார் ஆளானார். மேலும் பெற்றோரிடம் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

    தேர்வில் இரு பாடங்களில் பெயில் ஆனதால் பெற்றோர் அறிவுரை கூறி திட்டியதோடு செல்போனையும் வாங்கி வைத்துள்ளனர். இதனால் கடும் விரக்தியடைந்த முகேஷ்குமார் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு வந்தார்.

    மதுரையில் டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இன்று நீண்ட நேரம் ஆகியும் அவர் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. விடுதி ஊழியர்கள் பலமுறை தட்டிப்பார்த்தும் அறைக்குள் இருந்து எந்த விதமான பதிலும் வர வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் திடீர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் முகேஷ் குமார் தங்கியிருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது.

    அறையின் மின் விசிறியில் முகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முகேஷ்குமார் விடுதியில் அளித்த முகவரியின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் தற்போது மதுரை விரைந்துள்ளனர். எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வி அடைந்ததால் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

    ×