search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பயிற்சியில் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ஆறு செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும்.
    • முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    அரவேணு.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி அரக்கம்பை கிராமத்தில் நடைப்பெற்றது.

    பண்ணைப்பள்ளி பயிற்சியில் விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை ஆறு செயல் முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும். இப்பண்ணை பள்ளியில் கோத்தகிரி வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு தோட்டக்கலை துறை மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சிந்தியா கலந்து கொண்டு காய்கறி சாகுபடி யில் அங்கக இடுபொ ருட்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முன்னோடி விவசாயி ராமதாஸ் கலந்து கொண்டு ஜீவாமிர்தம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    • கடந்த 2 நாட்களில் 5 இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்தான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மலைப்பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன.

    குன்னூர் அருகே உள்ள கோலணிமட்டம், முட்டி நாடு, செல்விப் நகர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் மலை காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருந்தது.

    கன மழையால் இந்த பகுதியில் உள்ள ஓடையில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

    குன்னூர் அருகே உள்ள சின்ன வண்டிச்சோலை பகுதியில் வசிக்கும் வினோத் குமார் என்பவரின் கார் மீது ராட்சத மரம் விழுந்ததால் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.

    குன்னூர் அருகே உள்ள பாரத் நகர், கல் குளி பகுதியில் நடைபாதை மற்றும் குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டதால் 7 குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் அருகே உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டாப் காலேஜ் பகுதியில் இருந்து பந்துமை வழியாக கோத்தகிரி செல்லும் சாலையில் தொடர்ந்து மண் சரி ஏற்பட்டு வருவதால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் பகுதிக்கு செல்லும் சாலையில் கரன்சி பகுதியில் மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் 5 இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனை உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்தான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனவும், மலைப்பாதையில் வாகனங்களை மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இன்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில் 57 மில்லி மீட்டரும், கெத்தை பகுதியில் 27 மில்லி மீட்டரும், குன்னூரில் 19 மில்லி மீட்டரும் என மொத்தம் 364 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குறுகிய நேரத்தில் விடுக்க நடவடிக்கை
    • நீலகிரி எம்.பி ராசா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கலந்துகொண்டார் அப்போது நடுஹட்டி பகுதியில் பஸ்வசதி, பள்ளியில் ஆங்கில வழி கல்வி, நடமாடும் நியாய விலைக்கடை ஆகியவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் குறுகிய காலத்தில் நிறைவேற்றி தந்து உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நீலகிரி எம்.பி ராசா கலந்துகொண்டு ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், பொதுகுழு உறுப்பினர் கே.எம்.ராஜிசெல்வம், காளிதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புகைப்பட அட்டையை பெற விண்ணப்பம் பெற வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகம்
    • குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

    அருவங்காடு,

    பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை தேர்தல் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர் இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இதனை ஆர்.டி.ஓ பூரணகுமார் தலைமை தாங்கிகொடித்து வைத்தார். அப்போது பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இருசக்கர வாகன பேரணியும் நடந்தது.

    மேலும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆண்டுதோறும் வாக்காளர் புகைப்பட அட்டையை பெறுவதற்கான விண்ணப்பம் பெறுவதற்கும் வாக்காளர் உதவி மைய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் புதிய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து. பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் அலுவலர் கோபி, மற்றும் நகரமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணிநேரமும் பட்டாசுகள் வெடிக்க நடவடிக்கை
    • ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் விழிப்புணர்வு பேரணி

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்கள் தீபாவளி யன்று பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் ஒலி மாசு ஏற்படும். செவிதிறன் குறையும் வாய்ப்பு ஏற்படும்.

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உயிர்க்கோளப்பகுதி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு வசிக்கும் பொதுமக்கள் தீபாவளி நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் அரியவகை தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்க முன்வர வேண்டும்.

    தீபாவளி அன்று பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே நீலகிரி மாவட்ட த்தில் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பட்டாசு கள் வெடிக்க வேண்டும். மேலும் அதிகஓசை எழு ப்பும் தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் விற்பனை உரிமை ரத்து செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக வனத்துறை சார்பில் மாசற்ற தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் நடந்து. இதில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் தொடங்கிய பேரணி, மத்திய பஸ் நிலையத்தில் முடிந்தது. அப்போது பேரணியில் நடங்கேற்ற வர்கள் பட்டாசு வெடிக்க மாட்டோம், காற்று மாசு இல்லாமல் கட்டுப்படுத்து வோம், ஒலிமாசுவை கட்டுப்படுத்துவோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி (ஊட்டி) கவுதம், உதவி வனபாது காவலர் தேவராஜ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், ஊட்டி நகராட்சி பொறியாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டார்.

    • வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலாததால் நடவடிக்கை
    • ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வருவதால், மார்கெட் நுழைவு வாயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலவில்லை. மேலும் அந்த பகுதியில் சரக்குவாகன நிறுத்தம் செயல்பட்டு வந்தது.

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வி.பி.தெரு பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே சரக்குவாகன நிறுத்தும் இடம் தற்போது குன்னூர் மெயின் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது இதனால் அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான நிகழ்ச்சியில் சரக்குவாகன நிறுத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பிக்கப் டிரைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    • தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கால நிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக, பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நேற்றிரவும் கோத்தகிரி, குன்னூர், அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை, விடிய, விடிய பெய்தது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், கோத்தகிரி-மேட்டுப்பாளையம், சாலை, குன்னூர் சாலை, ஊட்டி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதுடன், சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை என்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

    மண் திட்டுகள், பாறைகள் உருண்டு நடுரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்திட்டுக்கள், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜே.சி.பி.எந்திரம் கொண்டு ராட்சதபாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் மண்திட்டுகளை ஒழுங்குபடுத்தி சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட 4 தாலூக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    • கோத்தகிரி வி.சி.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்
    • அட்டடி கிராமத்திற்கு குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

    அரவேணு,

    கோத்தகிரி அருகே நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டடி கிராம த்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக உரிய நடைபாதை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அட்டடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் முன்பாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோத்தகிரி வி.சி.க. ஒன்றிய செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுதாகர், மண்டல துணை செயலாளர் மண்ணரசன், கிறிஸ்தவ சமூக நீதி அமைப்பின் மாநில துணைச் செயலாளர் கோல்ட்ரஸ், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அட்டடி கிராமத்திற்கு குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், பாதியில் நிறுத்திய பணியை நிறைவு செய்து தரவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்மு ருகன், சப்இன்ஸ்பெக்டர்கள் ரகுமான்கான், ரமேஷ், பப்பிலாஜாஸ்மின் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்னும் சில தினங்களில் மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டத்தின்கீழ் அட்டடி கிராமத்திற்கு உரிய குடிநீர் வசதி செய்து தரப்படும்.

    மேலும் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம மக்கள் கேட்கும் நடைபாதை தனியாருக்கு சொந்தமான நிலம். எனவே சம்பந்தபட்ட நில உரிமையாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

    பின்னர் அங்கு வந்த கோத்தகிரி தாசில்தார் கோமதி அட்டடியில் கிராம மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் நிலம் ஒடை புறம்போக்கு நிலமா அல்லது தனியாருக்கு சொந்தமானதா என்பதை அறிய வருகிற 17-18-ந் தேதிகளில் நிலஅளவை செய்யப்படும்.

    அரசுக்கு சொந்தமான நிலம் என தெரிய வந்தால் உடனடியாக அங்கு நடைபாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அட்டடி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • வனவிலங்குகள் நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து உணவு-தண்ணீர் தேடி உலா வருகின்றன.
    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே அம்பிகாபுரம் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

    குன்னூர் பகுதியில் வனத்தையொட்டி அம்பிகாபுரம் கிராமம் அமைந்து உள்ளது. எனவே காட்டுக்குள் இருக்கும் வனவிலங்குகள் நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து உணவு-தண்ணீர் தேடி உலா வருகின்றன. அப்போது அவை வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை அடித்து கொன்று தின்று விட்டு மீண்டும் காட்டுக்குள் தப்பி செல்கின்றன.

    அம்பிகாபுரம் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் வீடுகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன்மூலம் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அம்பிகாபுரம் பகுதிக்கு நேற்று பட்டப்பகலில் ஒரு சிறுத்தை வந்தது. அது காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் முருகன் என்பவர் வீட்டுக்குள் கேட்டை தாண்டி குதித்து சென்றது. அப்போது வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு வளர்ப்புநாய், சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தது. எனவே அது சத்தமாக குரைத்தது.

    இது சிறுத்தைக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. தொடர்ந்து வளர்ப்பு நாயை கொல்வதற்காக பாய்ந்து சென்றது. இந்த நிலையில் அந்த நாய் லாவகமாக தப்பித்து குடியிருப்பு பகுதியில் இருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது. எனவே சிறுத்தைப்புலி ஏமாற்றத்துடன் மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றது.

    இதற்கிடையே அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதியில் அதிரடியாக புகுந்த ஒரு சிறுத்தை, அங்கு நின்ற வளர்ப்பு நாயை விரட்டி செல்வது அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூா் வனச்சரகா் ரவீந்திரநாத் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அம்பிகாபுரம் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டி அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள், அம்பிகாபுரம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனா்.

    • நகரமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சிக்கு வெற்றி
    • அக்கீம்பாபு, நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் மேரிஸ்ஹில் பகுதியில் இருந்து ஜெ.எஸ்.எஸ் வரையிலான சாலையில் மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டும் கல்வெட்டு போடாமல் இருந்தது. எனவே அந்த பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் அப்பகுதி நகரமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியால், அங்கு ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய கல்வெட்டு அமைக்கும் பணி துவங்கியது.

    இந்த பணிகளை நகரமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க பாசறை மாவட்டசெயலாளருமான அக்கீம்பாபு மற்றும் நகரமன்ற உறுப்பினர் நாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    • ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தொழிலை பதிவு செய்ய வலியுறுத்தல்
    • சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டுகோள்

    ஊட்டி,

    ஊட்டி தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் தமிழக சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல் மேலாளர் குணேஷ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அப்போது டூர் ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜெண்டுகள் ஆகியோர் ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தங்களின் தொழிலை பதிவு செய்ய வேண்டும். மேலும் உரிய அங்கீகாரம் தருவதன்மூலம் சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டும் என்பவை தொடர்பாக கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

    நீலகிரி மாவட்ட மேக்சி கேப்-டிராவல் ஏஜெண்டுகள் உரிமையாளர் சங்க தலைவர் குலசேகரன், செயலாளர் நித்தின்சேகர், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் இம்பாலாபாபு, பிரீத்திரவி, பவானிரமேஷ், இம்பீரியல் நஞ்சுண்டன், ஸ்டேன்லி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • 8-ந்தேதிக்குள் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்க உத்தரவாதம்
    • குறிப்பிட்ட தேதியில் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட முடிவு

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள முறையாக சம்பளம் வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதில் நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யு சங்கத் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வினோத், பொருளாளர் நவீன்சந்திரன், நகராட்சி-உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க செயலாளர் சேகர், பொருளாளர் ரவி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    பின்னர் ஊழியர் சங்க பிரதிநிதிகளிடம் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 8-ந்தேதிக்குள் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

    குறிப்பிட்ட தேதியில் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×