search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
    • அந்த வாய்ப்பை 10 சதவீத வீரர்கள் மட்டுமே அவர்கள் வாழ்நாளில் பெறுவார்கள்.

    நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக ஆடி வரும் முகமது சமி இன்று உலக அளவில் முக்கியமான வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

    இந்த நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என சக வீரர்களான முகமது சமி கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர்கள் இருவரும் இந்தியாவின் ஜாம்பவான்கள். இந்திய நாட்டுக்காக கடந்த 15 - 16 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ராஜாக்கள் என்ற பெயரை பெற்று இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    ஆனால், இதுதான் இயற்கை. ஒரு வீரர் வெளியே செல்வார். மற்றொரு வீரர் உள்ளே வருவார். எனினும், இது போன்ற நட்சத்திர வீரர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை ஈடு கட்டுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. நீங்கள் நினைத்ததை அடைந்த பிறகு அந்த பயணத்திலிருந்து விடை பெறுவது என்பது உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயமாக இருக்கும்.

    இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததற்காக ரோகித் மற்றும் கோலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியாவுக்காக அற்புதமான இன்னிங்ஸ்களை ஆடினார்கள். போகிற போக்கில் பல்வேறு சாதனைகளை உடைத்தார்கள்.

    உலகக் கோப்பை வென்றதற்கு ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்கள், அதன் உதவியாளர்கள் மற்றும் தன்னம்பிக்கை அளித்த ரசிகர்கள் ஆகியோர்தான் காரணம். நான் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அந்த வாய்ப்பை 10 சதவீத வீரர்கள் மட்டுமே அவர்கள் வாழ்நாளில் பெறுவார்கள்.

    என்று முகமது சமி கூறினார்.

    • அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும்.
    • 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இந்தியா -பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடுவது இல்லை.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி விருப்பம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது தொடர்பான முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடருக்கு உதவுவதிலும், எளிதாக்குவதிலும் எங்களால் ஒரு பங்கை ஆற்ற முடிந்தால், அதைச் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.

    அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும் என்பதை உறுதி செய்வதே உலக கிரிக்கெட்டுக்கான சவால் என்று நான் நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இறுதிப் போட்டிக்கு இரு அணிகள் முன்னேறும். அதுபோல ஒவ்வொரு தொடரிலும் இருக்க வேண்டும்.

    வெள்ளை பந்து தொடருக்கும் இதே போன்ற ஒன்று தேவை. தரவரிசை மற்றும் இதர வழிகள் முறையே உலகக் கோப்பைகளுக்கான தகுதி இருக்க வேண்டும்.

    மேலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இறுதி முடிவு இரு கிரிக்கெட் வாரியங்களின் கையில்தான் உள்ளது.

    என்று நிக் ஹாக்லி கூறினார்.

    • டேவிட் மில்லரின் கேட்சை பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவ் பிடித்தார்.
    • அப்போது எல்லைக்கோட்டை சூர்யா தொட்டுவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில், தொடர் தொடங்கியது முதல் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்க அணி, இறுதிப்போட்டியில் நல்ல நிலையில் இருந்தபோது இந்தியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்தது.

    தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லவிடாமல் செய்தது இந்தியாவின் ஆட்டத் திறனா அல்லது க்ளாசன் செய்த தவறா, இல்லை ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சா, சூர்யகுமாரின் கேட்சா என அந்தச் செய்தி இணையதளம் கேள்வி எழுப்பியுள்ளது.

    டேவிட் மில்லரின் கேட்சை பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவ் பிடித்தார். அப்போது எல்லைக்கோட்டை சூர்யா தொட்டுவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

    ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனை அதுவல்ல. மாறாக, ஃபார்ம் அவுட்டில் இருந்த கோலியை தொடக்கத்திலேயே பவுண்டரி விளாச அனுமதித்ததும் தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு ஒரு காரணம் சொவீடன் லைவ் இணையதளம் கூறியுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டியில் தோற்றதற்கான மூன்று முக்கியக் காரணங்களை தி சௌத் ஆப்ரிக்கன் என்ற இணையதளமும் பட்டியலிட்டுள்ளது.

    இது குறித்து அந்த இணையதளம் கூறியதாவது:-

    டேவிட் மில்லரும், க்ளாசனும் களத்தில் நின்றவரை, தென்னாப்பிரிக்காவின் கை ஓங்கியிருந்தது. க்ளாசன் ஆட்டமிழந்தது, தென் ஆப்பிரிக்காவின் வேகத்தைக் குறைத்துவிட்டது. இருந்தாலும் மில்லர் இருந்த வரை, தென் ஆப்பிரிக்கா வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது.

    பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே முடியவில்லை. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த க்ளாசனால்கூட பும்ரா ஓவரில் பவுண்டரி விளாச முடியவில்லை. நன்றாக ஆடிக்கொண்டிருந்த மில்லரும் பும்ரா பந்தில் சிங்கிள் எடுத்து, புதிதாகக் களமிறங்கிய மார்க்கோ யான்சனுக்கு ஸ்டிரைக்கை வழங்கினார். பும்ராவின் பந்துவீச்சை அவரால் எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழக்க நேர்ந்தது.

    இதேபோல, மில்லரின் கேட்சும் அதைத்தொடர்ந்து எஞ்சிய 5 பந்துகளில் வெற்றிக்காகப் போராடிய கேசவ் மகராஜ், ககிசோ ரபாடாவின் விக்கெட்டுகளும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவிட்டது.

    மில்லரின் கேட்ச்சை பவுண்டரி லைனில் சூர்யகுமார் பிடித்தபோது அவரது கால் லேசாக பவுண்டரி லைனில் பட்டதாக சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக், அந்த கேட்ச்சில் எந்தத் தவறும் இல்லை. குஷன் லேசாக நகர்ந்தது. ஆனால் அது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். சூர்யகுமார் குஷன் மீது ஏறவில்லை எனக் கூறினார்.

    இவ்வாறு அந்த இணையதளம் செய்தி வெளியிட்டது.

    • மீண்டும் மீண்டும் அவர் அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார்.
    • புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும்.

    இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருது ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கோஹினூர் வைரத்தை விட இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா அதிக மதிப்புமிக்கவர் என இந்தியாவின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இறுதிப் போட்டியின் வர்ணனையில் இருந்த போது அவரை நான் கோகினூர் வைரத்தை விட விலைமதிப்பு மிக்கவர் என்று சொல்லியிருந்தேன். உண்மையில் உலக கிரிக்கெட்டில் அவர் தற்போது அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்த கூடிய பந்து வீச்சாளராக இருக்கிறார். மீண்டும் மீண்டும் அவர் அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார்.

    அதை இங்கே பலரும் செய்வதில்லை. எந்த ஒரு போட்டியிலும், எந்த நேரத்திலும் வெற்றி பெற விரும்பும் கேப்டன் அவரை பயன்படுத்த விரும்புவார்கள். அதுவே அவருடைய ஸ்பெஷலாகும். புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை.
    • என்னைப் பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் அவர் தான் என லாரா கூறினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

    இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆன்டர்சன் சமகால கிரிக்கெட்டில் விளையாடும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவரது புள்ளிவிவரங்கள் அற்புதமானவை மற்றும் அவர் இங்கிலாந்துக்காக நிறைய செய்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது மனதில் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரது கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் அப்படி நினைத்தால், அது அப்படியே இருக்கட்டும்.

    அவர் இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும் அவர் தனது கடைசி போட்டியில் விளையாடுவதன் காரணமாக அலட்சியமாக இருப்பார் என நான் நினைக்கவில்லை. அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளச்ர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான்.

    என லாரா கூறினார்.

    • மார்ச் 1-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • லாகூரில் அதிகபட்சமாக 7 போட்டிகள் நடைபெற உள்ளது.

    "மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

    கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக நடத்துகிறது.

    பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுவதால் அந்த அணியே அட்டவணையை அறிவிக்கும். அந்த அட்டவணையை ஐசிசி-யிடம் பரிந்துரைக்கும். ஐசிசி மற்றும் மற்ற நாடுகள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றால் அந்த அட்டவணைப்படி போட்டி நடைபெறும்.

    அந்த வகையில் சாம்பியன் டிராபி தொடரின் அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 19-ல் தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிவடைகிறது. அதன்படி முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளது.

    லாகூரில் அதிகபட்சமாக 7 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மார்ச் 9-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியும் அடங்கும். மார்ச் 1-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் இதில் இடம் பெறவில்லை. ஒருநாள் போட்டித் தரவரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது. இந்த தொடருக்கு இந்திய அணியை தவிர மற்ற அணிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டனர்.

    இந்தியா பங்கேற்க மறுத்தால் கடந்ந காலங்களை போல இந்தியா ஆடும் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படும். 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பையில் பங்கேற்ற ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் நாடு திரும்ப தாமதம் ஏற்பட்டது.
    • அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சிங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

    உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதற்கிடையே, அவர்களுக்கு பதிலாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றதன் அடிப்படையில் ஹர்ஷித் ரானா, சாய் சுதர்சன், ஜிதேஷ் சிங் ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளனர்.

    ஆனால், முன்னணி வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வருண் சக்ரவர்த்தி, மயங்க் யாதவ், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் போன்றோரை சேர்க்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் வரை இந்திய அணியின் அனைத்து வடிவ வீரராக இருந்த இஷான் கிஷன், பிசிசிஐயிடம் ஓய்வு கேட்டார். தென் ஆப்பிரிக்கா தொடருக்கும், டி20 உலகக் கோப்பை 2024 அணித் தேர்வுக்கும் இடையில் நிறைய நடந்தது. இது மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரை ஓரங்கட்டி வைக்க தேர்வாளர்களைத் தூண்டியது.

    இஷான் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட வேண்டுமெனில் ஜார்க்கண்டிற்காக ரஞ்சி டிராபி மற்றும் வேறு சில உள்நாட்டு போட்டிகளில் விளையாடும்படி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஐ.பி.எல். தொடருக்காக ஹர்திக் பாண்ட்யாவுடன் பயிற்சிபெற முடிவு செய்திருந்தார்.

    இஷான் கிஷனின் இத்தகைய நகர்வு பிசிசிஐ முதலாளிகள் மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கு அவரைத் தேர்வு செய்யாத தேர்வாளர்களுடன் சரியாகப் போகவில்லை. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இஷான் கிஷனை விட பந்தயத்தில் முன்னிலையில் உள்ளனர்.

    இதேபோல கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 7 வீரர்களிடமும் இதேபோன்ற கேள்விகள் கேட்கப்படலாம்.

    • தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
    • ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாடும் இருதரப்பு போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி சம்மதம் தெரிவித்துள்ளார்.

    மேலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி தெரிவித்தார்.

    • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றது.

    மும்பை:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் அணி, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வேயில் இருக்கும் ஹராரே நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

    அப்போது, மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங் செய்யும்போது, எனது பாஸ்போர்ட்டை காணவில்லை என இந்திய வீரர் ரியான் பராக் கூறியுள்ளார். அவரது பையில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்போர்ட் கிடைத்ததால் பராக் ஹராரேவுக்கு பறந்தார்.

    இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. இணையதளத்திற்கு பேட்டி அளித்த பராக், மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங்கில் எனது பாஸ்போர்ட்டை காணவில்லை. நல்லவேளை, அதே பையில் தான் இருந்திருக்கிறது. இது கவனக்குறைவு கிடையாது. இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்தபின் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் எனது பாஸ்போர்ட், செல்போன் உள்ளிட்ட பொருட்களை எங்கு வைத்தேன் என்பதையே மறந்து விட்டேன். இந்திய அணிக்கு ஆடப்போகிறோம் என்ற ஆர்வத்தில் இந்த தவறு நடந்தது என தெரிவித்தார்.

    • இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் பெரில் என்ற புயல் அவர்களை மேலும் 2 நாட்கள் பர்பட்டாசில் காக்க வைத்து விட்டது. இதனையடுத்து பர்பட்டாசில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    இந்நிலையில் உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூட திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    பேரணி முடித்தபின் மும்பை வான்கடே மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

    • டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தஸ்கின் அகமது விளையாடவில்லை.
    • பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லாததால் போட்டியில் விளையாடவில்லை.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியலில் அவர் இல்லை. இதனால் அவர் போட்டியில் விளையாடவில்லை.

    இதனால், ஹசன் சாகிப் மற்றும் முஸ்தபிசுர் ரகுமான் என்ற 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வங்காளதேச அணி போட்டியை எதிர்கொண்டது. தஸ்கின் போட்டியில் விளையாடாமல் போனது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் நிபுணர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தஸ்கின் அகமது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் போனதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

    அறையில் படுத்து தூங்கிய அவர், போட்டிக்காக விளையாட எழுந்து வரவில்லை. இதனால் அணி வீரர்களுக்காக தயாராக இருந்த பஸ்சிலும் அவர் ஏறவில்லை. சரியான நேரத்திற்கு வராத சூழலில் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவரை அணி நிர்வாகமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பின் பஸ்சை தவற விட்டதற்காக சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் தஸ்கின். ஆனாலும் அவரை இந்திய அணிக்கு எதிரான போட்டியில், விளையாட வைக்கவேண்டாம் என அணியின் பயிற்சியாளர் முடிவு செய்திருக்கிறார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் தூக்கம் காரணமாக ஓட்டல் அறையில் மூத்த வீரர் ஒருவர் படுத்துக்கொண்டு, விளையாடாமல் போனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார்.
    • இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த தொடரில் பேட்டிங்கில் 144 ரன்களும் பந்து வீச்சில் 11 விக்கெட்டும் பாண்ட்யா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார்.

    இவருடன் சேர்ந்து முதல் இடத்தை இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா பகிர்ந்துள்ளார். இருவரும் 222 புள்ளிகளுடன் உள்ளனர். 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ் உள்ளார். 4, 5 இடங்கள் முறையே சிக்கந்தர் ராசா, சகிப் அல் ஹசன் ஆகியோர் உள்ளனர்.

    இந்திய அணியின் மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் 7 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.

    ×