search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

    ஊட்டி:

    கோவை மாநகர காவல்துறை சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் 'போலீஸ் அக்கா' திட்டம் துவக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பெண் காவலர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பர்.

    இவர்கள் மாணவிகளுடன் ஒரு தோழியை போன்று பழகுகின்றனர். மாணவிகள் குடும்பத்தினர், ஆசிரியர்கள் அல்லது தோழிகளுடனோ பகிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை இவர்களிடம் தெரிவிக்கின்றனர். அவர்களும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர். இதுவே இந்த திட்டத்தின் நோக்கம்.

    கோவையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்காக போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 16 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தாங்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு 2 வாரத்திற்கு ஒரு முறை நேரில் சென்று, போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு, சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

    குறிப்பாக உளவியல் ரீதியான பிரச்சனைகள், பாலியல் தொந்தரவுகள், கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் மாணவிகளுக்கு நடக்கும் இடையூறுகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட பெண் காவலரிடம் தெரிவிக்கலாம்.

    மேலும் போதை பொருட்கள் விற்பனை, கேலி கிண்டல் சம்பவங்கள் தொடர்பாக தங்கள் கல்லூரிக்கு என நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

    மாணவிகள் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைத்திருப்பதுடன், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வரும் நாட்களில் கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து தற்காப்பு குறித்த வகுப்புகளும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் 'போலீஸ் அக்கா'வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக கியூ ஆர் குறியீடுடன் நோட்டீசும் ஒட்டப்பட்டிருக்கும். அதனை மாணவிகள் ஸ்கேன் செய்தும், அவர்களை தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கலாம்.

    நீலகிரியில் செயல்படுத்தப்பட உள்ள போலீஸ் அக்கா திட்டத்தை கூடுதல் எஸ்.பி. கண்காணிப்பார். நானும் திட்ட செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்வேன்.

    பள்ளிகளில் பயில கூடிய மாணவிகளின் பாதுகாப்புக்கான திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்.

    பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பிற்கு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    பெண்கள் பாதுகாப்பிற்கென காவல் உதவி என்ற செயலி உள்ளது. தற்போது இந்த செயலியை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    போக்சோ, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி., சவுந்திரராஜன், புறநகர் டி.எஸ்.பி. நமச்சிவாயம், கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள், பெண் காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • அருவியில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு நீர்வரத்து அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருவியில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கரையில் இருந்தவாறு நின்று ரசித்து பார்த்தனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் நாளன்று பவுர்ணமி வந்தது. தொடர்ந்து 2-வது பவுர்ணமியும் இந்த புரட்டாசி மாதத்தின் நிறைவையொட்டி வந்துள்ளது. அதாவது நேற்று இரவு 8 மணியளவில் பவுர்ணமி தொடங்கி புரட்டாசி மாதத்தின் நிறைவு நாளான 31-ந் தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5.38 மணியளவில் நிறைவடைகின்றது.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    மேலும் கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • மழை உருவாகும் வானிலைச் சூழல்களையும், காற்று இயக்கங்களையும் பொறுத்து பொதுவாக 9 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் கடற்கரைகளை கொண்டுள்ளன.

    மகிழ்ச்சியோடு கொண்டாடி வரவேற்க வேண்டிய மழையை, சென்னை மக்கள் மட்டும் அச்சத்துடன் எதிர்கொள்கின்றனர். ஏனென்றால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் மழை கொட்டி தீர்க்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மழையை பற்றி முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    மழை என்பது ஒரு இயற்கை சுழற்சியால் நடக்கிறது. கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி வளிமண்டலத்தில் சேருகிறது. அங்கு குளிர்ந்து நீர்த்துளிகளாக மாறி மேகங்களை உருவாக்குகிறது. மேகங்கள் கனமாக மாறி மழையாக விழுகின்றன.

    மழை உருவாகும் வானிலைச் சூழல்களையும், காற்று இயக்கங்களையும் பொறுத்து பொதுவாக 9 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அதில் முதலாவது 'பருவ மழை'. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரை தெற்கு-மேற்கு பருவ மழையும் மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழையும் பெய்யும் காலங்களாகும். இந்தியாவில் இதுதான் முக்கிய மழைக்காலம் ஆகும். இந்த மழையை நம்பி தான் விவசாய பணிகள் எல்லாம் நடக்கின்றன.

    2-வது இடைமழை. அதாவது வெப்பமான இடங்களில் காற்று மேலே சென்று குளிர்ந்து நீர்த்துளிகளாக மாறும்போது உருவாகும் மழை. இது பொதுவாக வெப்ப மண்டலங்களில், கோடைகாலங்களில் மாலையில் நிகழும். 3-வது மலைமழை. அதாவது மலைகளின் அடிப்பகுதியில் உள்ள காற்று மேலே சென்று குளிர்வதால் மழையாக மாறும் மழை. இது மலையோரப் பகுதிகளில் அதிகமாக காணப்படும்.

    4-வது இடிமுழக்க மழை. மின்னல், இடியுடன் கூடிய, வலுவான மழையாகும். இது கடுமையான வானிலைச் செயல்பாடுகளால் உருவாகும், பொதுவாக வெப்பமான பகுதிகளில் அல்லது பருவநிலை மாற்றங்கள் அதிகமாக உள்ள இடங்களில் இது அடிக்கடி ஏற்படுகிறது. 5-வது, சுழல்புயல் மழை. இது புயலினால் ஏற்படும் மழை. சுழல்புயல் என்பது கடலில் உருவாகி, கடல் நீர் மேலே உயர்ந்து, காற்றழுத்தம் குறைவதால் உண்டாகும் ஒரு பெரிய நிகழ்வு. இதன் காரணமாக பலமுறை திடீர் மழை, பெரும் காற்று மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பொழியும்.

    6-வது, இடையிலான மழை. இது வெப்பமான காற்று மற்றும் குளிர் காற்று சந்திக்கும் பகுதியில் உருவாகும் மழை. இது மிதவெப்ப மண்டலங்களில் காணப்படும். 7-வது சிறுகாற்று மழை. இது மெல்லிய, சிறிய நீர்த்துளிகள் மெதுவாக மழையாக விழும் ஒரு மழை வகையாகும். இந்த மழையில் நீர்த்துளிகள் பரவலாக கிடைக்கின்றன, ஆனால் அவை மிகச் சிறியதாகவும், மெதுவாகவும் இருக்கும். இது பொதுவாக வெப்பநிலை குறைவாக இருக்கும் நாட்களில் அல்லது மிதமான குளிர்ந்த காற்று மண்டலங்களின் மூலம் கிடைக்கும்.

    8-வது நிச்சயமில்லாத மழை. இது பருவம் இல்லாத நேரங்களில் திடீரென்று பெய்யும் மழை. ஒன்பதாவது திடீர் மழை. இது மிக குறுகிய நேரத்தில் அதிகமான நீர் விழும் மழை, இது பேரழிவுகளை உருவாக்கும்.

    இந்த மழை வகைகளில் மிகவும் பேராபத்தானது சுழல்புயல் மழை மற்றும் திடீர் மழை தான். அதில் சென்னையில் இதற்கு முன்பும், இப்போதும் பெய்வது சுழல்புயல் மழை தான். இது கடலில் ஏற்படும் புயலால் அதிகளவு மழை பொழிவு இருக்கிறது. திடீர் மழை என்பது வயநாட்டில் பாதிப்பினை ஏற்படுத்திய மழை தான்.

    சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொரு முறையும் வங்கக்கடலில் ஏற்படும் சுழல் புயல் மழையால் பாதிக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் கடற்கரைகளை கொண்டுள்ளன. அதில் சென்னை உள்பட 13 மாவட்டங்கள் வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் ஆகும். கன்னியாகுமரி மட்டும் வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடலோரங்களை உள்ளடக்கி உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகி, இயற்கையாகவே சென்னை மற்றும் ஆந்திரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் தான் கரையை கடக்கிறது. இதுதான் சென்னையில் அதிக மழை பொழிவுக்கு முக்கிய காரணம்.

    கடந்த காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் தான் கரையை கடந்து வந்தன. ஆனால் பருவ நிலை மாற்றத்தால் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையிலும் கரையை கடக்கிறது. அதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. பொதுவாக புயல் கரையை கடக்கும்போது அந்த நகரங்களில் 10 முதல் 30 செ.மீட்டர் கூட மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பு மற்ற மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. அதேவேளையில் பிற மாவட்டங்களில் இதே மழை பெய்தாலும், அவை கவனம் ஈர்க்கப்படுவதில்லை.

    • கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும்.
    • வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் வார நாள் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி, அனைத்து முனையங்களில் இருந்தும் முதல் மெட்ரோ ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும்.

    கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும். சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில் 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயங்கும். வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.
    • சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரமடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.

    இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலைக்குள் தமிழகத்தின் வடமாவட்டங்கள்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நெல்லூர் மற்றும் புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடந்தது.

    கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.

    • காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.
    • சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரமடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்தது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.

    இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலைக்குள் தமிழகத்தின் வடமாவட்டங்கள்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தாழ்வு மண்டலம் இன்று கரையை கடந்தாலும், தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவி ஏற்றார்.
    • அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பொறுப்பேற்ற உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

    இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும், வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம், வெற்றி காண்போம் என தெரிவித்துள்ளார்.

    • திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.
    • மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

    மதுரை:

    வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:

    அ.தி.மு.க. ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். ஆனால் தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

    மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ சூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    தி.மு.க. அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.

    மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அமைச்சர் மூர்த்தி கூட மதுரையில் அவர் தொகுதியில் தான் ஆய்வு செய்கிறார்.

    புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநர் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க, தற்போது ஆளுநரோடு இணக்கமாக இருக்கிறார்கள்.

    முதல்வர் ஸ்டாலின் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது.

    ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வார். ஆனால் ஆளுநர் தற்போது மாறி இருக்கிறார் என தெரிவித்தார்.

    சென்னை மழையை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று சென்னையில் எங்கும் மழை பெய்யவில்லை.
    • இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    சென்னை:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதனால் இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று எங்கும் மழை பெய்யவில்லை என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இம்மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

    இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

    • இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
    • இன்று சென்னையில் எங்கும் மழை பெய்யவில்லை.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதனால் இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று சென்னையில் எங்கும் பரவலாக மழை பெய்யவில்லை.

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இம்மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை என வானதி குற்றச்சாட்டு
    • பருப்பு விநியோகம் தொடர்பான எனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை எனவும் ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், வானதியின் குற்றசாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "பருப்பு விநியோகம் தொடர்பான எனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார். பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்கப்படும்.

    அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று (15.10.2024) வரை 9,461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 2,04,08,000 பாமாயில் பாக்கட்டுகள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கட்டுகள் விநியோகப்பட்டுவிட்டன. மீதியுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ×