search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
    • இன்று சென்னையில் எங்கும் பரவலாக மழை பெய்யவில்லை.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதனால் இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று சென்னையில் எங்கும் பரவலாக மழை பெய்யவில்லை. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    இந்நிலையில், வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வானிலை முன்னறிவிப்பு ரெட் அலர்ட் வழங்கியிருந்தது. ஆனால், இன்று மாலை வரை ஒரு சொட்டு மழை கூட இல்லை. அரசும், மக்களும் தயாராக இருக்க வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.
    • ரேஷனில் கிலோ ரூ30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.

    ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பான அவரது அறிக்கையில், "தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்கள் யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. கடந்த பல மாதங்களாக சில நாட்கள் மட்டுமே துவரம் பருப்பு கிடைக்கிறது வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால் ரேஷனில் கிலோ ரூ30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை நடுத்தர மக்கள் உள்ளனர்.

    தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3473 டன் மட்டுமே மட்டுமே சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே திமுக அரசு தனறு தூக்கத்தை கலைத்து போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல தீபாவளிக்கு முன்பாக பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கரையை கடக்காததால் ரெட் அலர்ட்.
    • முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை.

    ரெட் அலர்ட் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக விடுக்கப்படுகிறது. ஒரு சில மணி நேரத்திற்கு இந்த ரெட் அலர்ட் அல்ல. 24 மணி நேரத்திற்கும் கொடுக்கப்படுகிறது. இன்னும் கரையை கடக்கவில்லை என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும் பெரிய பாதிப்பு இல்லை.
    • இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளனர்.

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும் பெரிய பாதிப்பு இல்லை.

    * தமிழக அரசின் நடவடிக்கையால் தண்ணீர் தேங்காமல் வெள்ளச்சேரி வேளச்சேரியாக மாறி உள்ளது.

    * கடந்தாண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பால் பாடம் கற்று இந்தாண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 முதல் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    * அதிகனமழை பெய்த போதிலும் சென்னையில் 4 மணி நேரத்தில் மழைநீர் வடிந்துள்ளது.

    * அதிமுக ஆட்சியில் அடையாற்றில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    * மழைநீர் வடிகால் பணிகளில் சில அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அதனை நிறைவு செய்தது திமுக அரசுதான்.

    * பல இடங்களில் நான் ஆய்வு செய்தேன் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. அதிமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறது.

    * இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளனர்.

    * தமிழக அரசின் பணியை மக்களே பாராட்டுகின்றனர் என்று அவர் கூறினார்.

    • தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பெருமளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் பயணிகள் வருகை மற்றும் கார்கோ சேவையும் அதிகரித்துள்ள அதேவேளை தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

    இதனிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அவர் தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தடை செய்யப்பட்ட சிகரெட் வகைகளை விமானத்தில் கடத்தி வந்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மற்றும் பீடி இலைகள், விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதைத்தடுக்க மாவட்டம் முழுவதும் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி முறப்பநாடு பகுதியை சேர்ந்த துரை என்பவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று துரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 3 கிலோ கிரிஸ்டல் மெத்தமைட்டல் என்ற ஐஸ் போதைப்பொருளும், சாரஸ் என்ற போதைப்பொருள் 300 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (16-10-2024) காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும்.

    இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    18-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    21-ந்தேதி மற்றும் 22-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • சென்னையில் கனமழையிலும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கினார்.
    • நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    சென்னையில் பெய்து வரும் மழையால் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றி வரும் மாநகராட்சி முன்கள பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவு மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார்.

    சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி சட்டமன்ற அவலகத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றுடன் உதவித் தொகையையும் அவர் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நீர் இருப்பு, நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    • விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
    • சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற நவம்பர் 2-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.

    முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற நவம்பர் 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகின்ற நவம்பர் 6-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ந்தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யப்பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணி கைகொடுத்துள்ளதை மக்களை கேட்டாலே தெரியும்.

    பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏரியில் ஜேசிபி மூலம் வண்டல் மண் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    நாராயணபுரம் ஏரியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * கடந்த 3 மாதங்களாகவே மழை நீர் வடிகால் பணிகளை செய்து வந்தோம்.

    * அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன.

    * அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணி கைகொடுத்துள்ளதை மக்களை கேட்டாலே தெரியும்.

    * தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி, பல்துறை ஊழியர்களுக்கு சென்னை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    * மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

    • டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன.
    • தி.மு.க. தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் நான்காம் தொகுதி பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக்கும் நிலையில், அப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி நடத்திய போட்டித்தேர்வுகளின் மூலம் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கையை 8,932-லிருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன. அவை குறித்த அனைத்து விவரங்களும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்குத் தெரியும். அவற்றைக் களைய வேண்டும் என்று நினைத்தால், ஊடகங்கள் முன்னிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கலாம். அதற்கு அமைச்சர் கயல்விழி தயாரா? இப்படியாக டி.என்.பி.எஸ்.சி அமைப்பில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும் போது சமூகநீதிக்காக குரல் கொடுத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குறை கூற அமைச்சர் கயல்விழி முயல்வது கண்டிக்கத்தக்கது.

    அவருக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புவதுடன், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க. தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன.
    • உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை.

    வடமதுரை:

    திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பியூலா என்ற பெண் தனது 3 வயது மகனுடன் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வடை சாப்பிட சென்றார். சிறுவனுக்கு வடையுடன் குருமா ஊற்றி கொடுத்துள்ளனர்.

    பாதி வடையை சாப்பிட்ட பின்னர் அதில் பூரான் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது தாயிடம் தெரிவித்தான். அவர் கடைக்காரரிடம் வடையில் பூரான் கிடப்பதை காட்டி கேட்டார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளனர்.

    இந்த நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நகரில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சுகாதாரம் என்பது துளியளவு கூட கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் பூரான், பல்லி, பூச்சி உள்ளிட்ட விஷ சந்துகள் ஆங்காங்கே ஊர்ந்து வருகின்றது. பெரும்பாலான சாலையோர கடைகளில் உணவு பொருட்கள் தரையிலேயே வைக்கப்படுகின்றன. இதனால் பூச்சிகள் அதில் விழும் அபாயம் உள்ளது.

    மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன. இதில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை. இதுபோன்ற தரம் குறைந்த உணவுகளை உண்பதால் பொதுமக்களுக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றது.

    எனவே திண்டுக்கல் நகரில் உள்ள ஓட்டல்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×