search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • நரம்பு தளர்ச்சிக்கு நீரிழிவு நோய்தான் முக்கிய காரணமாக உள்ளது.
    • நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைத்தான் நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.

    மூளையில் இருந்து சமிக்ஞைகளை உடலின் ஒட்டுமொத்தப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது நரம்புகள்தான். ஒரு நரம்புக்குள்ளேயே மூன்று வகையான நரம்புப் பிரிவுகள் உள்ளன. அவை,

    இயக்க நரம்புகள்:- மூளையில் இருந்து சமிக்ஞைகளை எடுத்துச்சென்று சதைகளை இயங்கச்செய்யும்.

    உணர்ச்சி நரம்புகள்:- தோல், சவ்வு, மூட்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உணர்வுகளை எடுத்துக்கொண்டு மூளைக்குச் செல்லும்.

    தன்னியக்க நரம்புகள் : வியர்வைச் சுரப்பிகள், குடல் இயக்கங்கள், மலம் மற்றும் சிறுநீர் வெளியேற்றம் ஆகிய முக்கிய செயல்களைச் செய்யும்.


    இந்த நரம்புகளில் ஏற்படும் பாதிப்பைத்தான் நரம்புத் தளர்ச்சி என்கிறோம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நீரிழிவு நோய்தான் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி பற்றியும், அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் அறியலாம்.

    நம் உடல் இயங்க ஆற்றல் தேவை. சில வேதியியல் மாற்றங்களால் நாம் உண்ணும் உணவில் இருந்து சர்க்கரை பிரித்து எடுக்கப்பட்டுப் பல நுண்ணிய மூலக்கூறுகளாகக் (குளுக்கோஸ், பரக்டோஸ், ேலக்டோஸ்) மாற்றப்பட்டுத் தேவையான ஆற்றல் உடலுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல இந்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிகமாகும்போது நம் உடலுக்கு அது நச்சுப்பொருளாக மாறுகிறது. எனவே நம் உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

    காலை வெறும் வயிற்றில் சரியான அளவு 100மிகி/டெசிலியும், நீரிழிவு நோயாளிகளுக்கு 126 மிகி/டெசிலி அளவும் இருக்கவேண்டும்.

    உணவு உண்டு 2 மணி நேரத்தில் சரியான அளவு 160மிகி/டெசிலியும், நீரிழிவு நோயாளிகளுக்கு-200 மிகி/டெசிலி அளவும் இருக்கவேண்டும்.

    இடைப்பட்ட அளவான 100-125mg/dl மற்றும் 160-199mg/dl உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை ப்ரீ டையபடீஸ் என்கிறோம்.

    அதிக ரத்த சர்க்கரையானது நம் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கக் கூடியது. இதனால் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் கண்களில் உள்ள விழித்திரை, மூளை, நரம்புகள், ரத்தக் குழாய்கள், இதயம், சிறுநீரகம் எனப் பல உறுப்புகளின் தன்மைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    25 வருடத்திற்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 50 சதவீதம் நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற்பட்டால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படலாம்.


    நரம்புத்தளர்ச்சியின் அறிகுறிகள்:

    * நம் உடலிலேயே பாதத்தில் உள்ள நரம்புகள் தான் நீளமானவை. எனவேதான் நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் முதலில் பாதத்தில் தொடங்குகிறது.

    * காலில் எரிச்சல், கால் விரல் நுனிகளில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த உணர்வு சிலருக்கு இரண்டு பாதங்களிலும் தொடங்கி மேல் நோக்கித் தொடைப்பகுதி வரை வந்த பிறகு, கைகளுக்குப் பரவக்கூடும்.

    * சிலருக்குப் பாதத்தில் மட்டும் உணர்ச்சி குறைந்து மதமதப்பு ஏற்படுகிறது. காலில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடும். விரலில் உள்ள நகங்கள் பழுப்பு நிறமாக மாறி, பலமிழந்து உடையத் தொடங்கும். இவை அனைத்தும் படிப்படியாக வரக்கூடியவை.

    * ஆனால் சிலருக்குத் திடீரென ஆரம்பித்து நடக்கக்கூட முடியாமல் போய்விடலாம். சிலருக்கு கைகளை ஊன்றி எழவோ, தோள்பட்டைக்கு மேல் கைகளைத் தூக்கவோ முடியாமல் போய்விடலாம். இதை அதிவிரைவான நரம்புத் தளர்ச்சி என்கிறோம்.

    நாளுக்கு நாள் இந்திய தேசம் இனிப்பு தேசமாக மாறிக்கொண்டு வருகிறது. வீட்டிற்கொரு நீரிழிவு நோயாளி என்ற நிலையில் நம் சமுதாயம் போய்க்கொண்டிருக்கிறது.

    இவர்களில் பலர் கால் மற்றும் பாதத்தைச் சரிவரக் கவனிக்காமல் விட்டுவிடுவதால் கால்களை அகற்ற வேண்டிய அபாயம் கூட ஏற்படலாம். எனவே அவர்கள் கால் பாதங்களைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.


    செய்ய வேண்டியவைகள்:

    அன்றன்று தங்களது கால்களைக் கண்ணாடியில் பார்த்து அதில் கால் ஆணிகள், கட்டைவிரல் நகத்தில் பாதிப்பு, கால் எலும்புகளில் அதிகப்படியான வளர்ச்சி, வளைந்து காணப்படும் கால் கட்டைவிரல், வறண்ட சருமம், வெடிப்புகள், கால் விரல்களுக்கு இடையில் சிரங்குகள் போன்றவை உள்ளனவா என ஆய்ந்தறிய வேண்டும்.

    * கால்களையும், விரல்களையும் மென்மையான பருத்தித் துண்டால் துடைக்க வேண்டும்.

    * கால் நகங்களை நேராக வெட்ட வேண்டும்.

    * காலணிகளை அணியாமல் வெறும் கால்களுடன் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    * காலுக்குப் பொருத்தமான காலணிகளையே அணிய வேண்டும்.

    * கால்களை ஈரப்பதமாக வைக்கத் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.


    செய்யக் கூடாதவை:

    * செருப்பில்லாமல் நடக்க வேண்டாம்.

    * சூடான நீரில் பாதங்களை வைக்க வேண்டாம்.

    * கால் ஆணிகளை நீக்கும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்.

    * கால் ஆணிகளைத் தாமே வெட்டிக் கொள்ள வேண்டாம்.

    * பாதம் தொடர்பான சிக்கல்களுக்குத் தமக்குத் தாமே மருத்துவம் செய்ய வேண்டாம்.

    * புகையிலை மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

    * மதுப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.

    * மண், விபூதி, சுண்ணாம்பு, சாம்பல், சாணம், கரித்தூள் ஆகியவற்றைப் பாதங்களில் உள்ள காயங்களின் மேல் தடவக்கூடாது.

    * இறுக்கமான உள்ளாடைகள் அல்லது இறுக்கமான துணிக்கட்டுகளைத் (Bandage) தவிர்க்க வேண்டும்.

    * காலில் கொப்புளம் ஏற்பட்டால் முள், ஊசி கொண்டு குத்த வேண்டாம்.

    * அதிக நேரம் கால்மேல் கால்போட்டு உட்கார வேண்டாம், ஏனெனில் இதனால் கால் பாதங்களுக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைபடும்.

    * கத்தி, பிளேடு, கத்தரிக்கோல், ஆணித் துண்டு, சிகரெட் அல்லது பீடி போன்றவற்றால் பாதத்தில் காயம் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

    * அசிடிக் அமிலம், கார்போலிக் அமிலம், அயோடின் அல்லது அயோடெக்ஸ் ஆகியவற்றைப் பாதங்களில் தடவ வேண்டாம்.

    இப்படிச் செய்வதால் கால்களில் ஏற்படும் பலசிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இவற்றுடன் சேர்த்து ஒவ்வொரு மாதமும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் உள்ளதா? இல்லையா? என்பதை ஆய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

    சிலருக்கு உணவுக் கட்டுப்பாடு மட்டுமே போதுமானதாக இருக்கலாம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை.

    தமது சர்க்கரையின் அளவைப் பிறரின் அளவுகளோடு ஒப்பிட்டு, அவர்கள் கூறுவதை வைத்து முடிவு செய்யக் கூடாது. சிலர் சமூக வலைத்தளங்களில் வரும் தவறான செய்திகளை உண்மை என்று நம்பி, மாத்திரைகளை நிறுத்திவிட்டுப் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த தவற்றை யாரும் செய்து விடாதீர்கள். எனவே அவரவர் உடலுக்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்ள வேண்டும்.

    தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் விதையுள்ள திராட்சை, விட்டமின் "சி" அதிகமுள்ள நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்ச் மற்றும் சாத்துக்குடி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியைத் தடுக்க முடியும்.

    • 27 நட்சத்திரங்களில் 6-வது நட்சத்திரம் திருவாதிரை.
    • தன்னம்பிக்கை அதிகமானவர்கள்.

    27 நட்சத்திரங்களில் 6-வது நட்சத்திரம் திருவாதிரை. கால புருஷ மூன்றாம் ராசியான மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளது. இதன் அதிபதி ராகு. இதன் அதி தேவதை சிவன். இதன் உருவம் ரசமணி, பவளமணி என்று கூறப்படுகிறது.

    திருவாதிரை நட்சத்திரம் வான மண்டலத்தில் வைரம் போலவும், மண்டை ஓடு போலவும், திரிசூலம் போன்ற தோற்றத்திலும் காணப்படும்.

    திருவாதிரையின் வேறு தமிழ் பெயர்கள் செங்கை, சடை, (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை, ஆகியன.வானில் நீர்த்துளி போல காணப்படும். ஆகாய கங்கை இந்த நட்சத்திரத்தில் இருந்தே வானில் இருந்து பூமிக்கு வந்தாள் என்கிறது பகீரத புராணம்.


    திருவாதிரை நட்சத்திர பொது பலன்கள்

    மிதுனத்தின் வேகமான இயல்பையும், புதனின் தன்மையை ராகுவின் இயல்பிலும் கொடுக்கும் நட்சத்திரமாகும். இது மிதுன ராசியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

    ஒரு ராசியின் மத்திமப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திரங்களெல்லாம் அந்த ராசியின் இயல்பை தன் நட்சத்திர அதிபதியின் இயல்பில் கலந்து முழுமையாக வெளிப்படுத்தும். பார்வைக்கும் கம்பீரமானவர்கள்.

    தன்னம்பிக்கை அதிகமானவர்கள். மற்றவர்க ளிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.

    அடுத்தவர்களுடன் விவாதித்தால் கவுரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.நிதானமான முன்னெச்சரிக்கையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

    சூழ்நிலைக்கேற்ப மற்றவர்களை அனுசரித்து செல்லக்கூடிய குணம் இல்லாதவர்கள். சற்று கோபமான குணநலன்களை உடையவர்கள். ரகசியங்களை பாதுகாக்கும் வல்லமை உண்டு.

    மலைவாசஸ்தலங்களும், தொலைதூர பயணங்களும் இவர்களுக்கு மிகவும்பிடிக்கும்.

    தனிமையில் அதிகமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.சமூதாயத்தில் பிரபலமான நிலையை அடையக் கூடியவர்கள். மிகக் கடினமான வேலையையும் தன் திறமையால் எளிதாக செய்து முடிப்பார்கள்.

    சொன்னதைச் செய்வார்கள்.உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள்.இவர்களுக்கு ஆளுமைதிறன், செல்வம், செல்வாக்கு உண்டு.

    கல்வி

    ஏட்டுக் கல்வியை விட அனுபவ பாடம் அதிகம் கற்றவர்கள். கல்வியில் எப்போதாவது ஆர்வம் காட்டுவார்கள். உட்கார்ந்து கஷ்டப்பட்டு படிக்கமாட்டார்கள்.மத்திம வயதிற்கு மேல் படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம். எலக்டிரிக்கல் இஞ்சினியரிங், ஜோதிடம் அல்லது சைக்காலஜியில் கல்வி கற்றிருப்பீர்கள்.

    எலக்டிரிக்கல் இஞ்சினியரிங் அல்லது கம்ப்யூட்டர் தொடர்பான பணி, ஆங்கில மொழிபெயர்ப்பு, புகைப்படக்கலை, இயற்பியல் அல்லது கணிதம் கற்பித்தல், ஆராய்ச்சி அல்லது அது தொடர்பான பணி, தத்துவவியல், நாவல் எழுதுதல், நஞ்சுகள் தொடர்பான மருத்துவம், பார்மசிட்டிகல், கண் மற்றும் மூளை தொடர்பான நோய்களை கண்டறிதல், போக்குவரத்து, கருத்து பரிமாற்ற பிரிவு.

    சைக்கியாட்டரி பிரிவு, துப்பு துலக்குதல், துரித உணவு மற்றும் பானங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவராக இருக்கலாம்.

    தொழில்

    தனியார் நிறுவனங்களையும் நடத்தும் திறமை மிக்கவர்கள்.இலாப நோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும் இவர்க ளது நோக்கமாக இருக்கும்.அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், ரத்தின வியாபாரம், பரம்பரை குலத்தொழில், விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித்துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்து வரும்.


    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் கடினமாக உழைக்க விரும்புவதில்லை. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைப்பதை அதிகம் விரும்புவார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகம் உண்டு. தொழில், அரசியல், சமூக ரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தா லும், பெரும்பாலும் திருமண வாழ்க்கை மன நிறைவைத் தருவதில்லை.

    பலரது இல்வாழ்க்கை என்பது தாமரை இலைத் தண்ணீரைப் போன்ற நிலையில்தான் அமை கின்றது. அன்பான மனைவி அமைந்தால் கூடத் தம்பதிகளுக்குள் பிரிவுகள் அடிக்கடி வந்து இவர்களை வாட்டுகிறது.

    தொழில் சம்பந்தமானபிரிவுகள் மிகுதியாகவும் தவிர்க்க முடியாதவைகளாகவே இருந்துவிடும்.கௌரவப் பிரச்சினையால் அன்யோன்யம் குறைவுபடும்.

    தசா பலன்கள்: ராகு தசா

    திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்க ளுக்கு முதல் தசா ராகு தசை. இதன் கால அளவு 18 வருடம். இது ஜென்ம தாரையின் நட்சத்திரமாகும். பால்ய வயது என்பதால் குடும்பத்தில் சிறுசிறு மனக்குழப்பம் உண்டாகும்.

    ஆரோக்கிய குறைபாடு மிகுதியாகும். வீசிங், சளி தொந்தரவு இருக்கும். பிறந்தவுடன் இடப்பெயர்ச்சி நடக்கும். பிறக்கும் போது மீதமுள்ள ராகு தசா அதிக வருடம் இருந்தால் பள்ளி படிப்பில் நாட்டம் குறையும்.

    குரு தசா

    இது தன தாரையின் நட்சத்திரமாகும்.

    இதன் தசா ஆண்டு 16 வருடம். பிறக்கும் போது ராகு தசா அதிக வருடம் நடத்தால் குரு தசையில் திருமணம், குழந்தை, வீடு, வாகன யோகம் என அனைத்து சுப பலன்களும் நடக்கும். பிறக்கும் போது ராகு தசா குறைந்த கால அளவாக இருந்தால் குரு தசையில் பள்ளி கல்லூரி படிப்பு சிறப்பாக இருக்கும்.

    பெற்றோர்களுக்கு பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். குடும்பம் சாதாரண நிலையில் இருந்தால் கூட உயர்வான நிலையை நோக்கி அடி எடுத்து வைக்கும்.

    சனி தசா

    மூன்றாவதாக வரக்கூடியது சனி தசா. இதன் கால அளவு 19 வருடம். இது விபத்து தாரையின் நட்சத்திரமாகும். சிலருக்கு குரு தசையில் சம்பாதித்த அனைத்து பெயர், புகழை இழக்க நேரும். சிலர் தொழில் உத்தியோகம், குடும்ப முன்னேற்றத்திற்காக இடம் பெயர்ந்து செல்வார்கள்.

    பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்பவர்களின் வாழ்க்கை வரமாக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் என சுப விரயம் மிகுதியாகும். இது கொடுக்கல், வாங்கலில் நிதானம் கடைபிடிக்க வேண்டிய காலம். வைத்திய செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.

    புதன் தசா

    திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு நான்காவதாக வரக்கூடியது புதன் தசை. இது 17 ஆண்டுகள் நடக்கக்கூடிய தசாவாகும். இது சேஷம தாரையின் தசையாகும். இழந்ததை மீட்டுப் பெறும் நோம். தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாக குறையும்.

    பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பேரன் பேத்தி என முதுமையை ரசித்து அனுபவிக்கும் காலம். வயது மூப்பு காரணமாக சில ஆரோக்கிய குறைபாடுகள் தலை தூக்கும். சில உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறலாம். கோபம், பிடிவாதம் கூடும்.

    கேது தசா

    ஐந்தாவதாக வரக்கூடியது கேது. இதன் தசா ஆண்டு 7 வருடம். ஆன்மீக நாட்டம் கூடும். எளிமையை மனம் விரும்பும். தான, தர்மம், பாவம், புண்ணியம், மறுபிறவி பற்றிய எண்ணங்கள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.

    ஆன்மீக தலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவார்கள். எதிர்பாராத இடப் பெயர்ச்சியால் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் மறைமுக எதிர்ப்புகள் கூடும்.

    சுக்ர தசை

    இது திருவாதிரை நட்சத்தி ரத்திற்கு 6-வதாக வரக்கூடிய சாதக தாரையின் தசையாகும். வயதில் வர வேண்டிய சுக்ர தசை இளவயோதிகத்தில் நடக்கும். முதுமை காரணமாக வசதி வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் பெரியதாக பயன்படாது.

    குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போல் மனம் வெதும்பும். சிலர் படுத்த படுக்கையாக காலம் தள்ளலாம். உடலில் உள்ள சுரப்பிகள் செயல் இழக்கும் . சிலருக்கு வைத்தியச் செலவு கூடும். மனம் அமைதியை விரும்பும்.

    திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்புகள்:

    எள், கடுகு, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை விதைக்க ஏற்ற நட்சத்திரம்.நடனம் என்றாலே தில்லை கூத்தன் நடராஜன். முதன் முதலாக நடன அரங்கேற்றம் செய்பவர்கள் திருவாதிரையில் செய்தால் மென்மேலும் வளர்ச்சி அடையலாம்.

    இசை கருவிகள் கற்க துவங்க, மந்திரப் பிரயோகம் செய்ய, ஆயுதப் பயிற்சி, வில்வித்தை, குதிரை ஏற்றம், மல்யுத்தம் முதலியவற்றை கற்கலாம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஒரு மர்ம கிரகம் என்பதால் சாஸ்திரம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் தொடங்கலாம்.

    சிதம்பர ரகசியத்திற்கும் திருவாதிரை நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபூஜை செய்தால் சிதம்பர ரகசியத்தை அறிய முடியும் இதன் அதிபதி சிவன் என்பதால் சிவபூஜை செய்ய மிக உகந்த நட்சத்திரமாகும்.

    பைரவர் வழிபாட்டை திருவாதிரை நட்சத்திரத்தில் துவங்கினால் காரிய சித்தி உண்டாகி பிரார்த்தனை களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

    திருவாதிரையில் நோய்வாய்ப்பட்டால் எளிதில் குணமாகாது. காரணம் கண்டு பிடிக்க முடியாத எந்த நோயானாலும், குணப்படுத்த முடியாத எந்த நோயாக இருந்தாலும் திருவாதிரையில் சிவனை வழிபட்ட பிறகு சிகிச்சை துவங்க வேண்டும்.

    அன்று ருத்ர சாந்தி செய்ய படிப்படியாக நோய் தாக்கம் குறையும். பேய், பிசாசு ஆவிகள் தொல்லை இருப்பவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நட்சத்திர நாளில் திருநாகேஸ்வரம், சிதம்பரம், திருவாலங்காடு போன்ற சிவ தலங்களுக்கு சென்று சிவனை வழிபட பேண்டும்.

    நட்சத்திர பட்சி:அன்றில்

    யோகம்: அதிகண்டம்

    நவரத்தினம்:கோமேதகம்

    உடல் உறுப்பு: கண்கள்

    திசை: தென்கிழக்கு

    பஞ்சபூதம்:நீர்

    அதிதேவதை: சிவன்

    நட்சத்திர மிருகம்: ஆண் நாய்

    நட்சத்திர வடிவம்: ரசமணி,

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை: புனர்பூசம்,

    விசாகம், பூரட்டாதி

    சேம தாரை . ஆயில்யம், கேட்டை, ரேவதி

    சாதக தாரை: பரணி, பூரம், பூராடம்

    பரம மிக்ர. தாரை : மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    பொதுவான பரிகாரங்கள்

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜரை வழிபட்டால் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.

    தினசரி ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபட மேன்மை உண்டாகும். ஜென்ம நட்சத்திரநாளில் கருப்பு உளுந்து தானம் வழங்க வேண்டும்.

    சாதக தாரையான பூர நட்சத்திர நாளில் ஆண்டாள் வழிபாடு செய்து வர சுப பலன்கள் அதிகமாகும்.

    • நரம்பு மண்டலத்தினை காக்க பெரிதும் உதவுகின்றது.
    • இதய பாதிப்பு, மறதி பாதிப்பு ஆகியவற்றினையும் ஏற்படுத்தலாம்

    நம்மிடையே ஒரு பழக்கம் உண்டு. மாத்திரை, ஊசி என பாதிப்பிற்கு ஏற்ப ஒருவருக்கு அறிவுறுத்தப்படும் போது நமக்கு நாமே சுய பரிதாபம் கொள்வோம். பயப்படுவோம், டாக்டர் அதிக மருந்து கொடுத்து விட்டார் என அவர் மீது குறை கூறுவோம்.

    உடலுக்கு வைட்டமின் சத்து குறைபாடு இருக்கின்றது. இந்த சத்து மாத்திரையினை எடுத்துக் கொள்ளுங்கள் என டாக்டர் சொன்னால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் சிலர். மனதில் தோன்றியதை எல்லாம் சாப்பிடுபவர் சிலர். முறையாய் பின் பற்றுபவரா? நீங்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

    வைட்டமின் சத்து குறைபாடு என்பது நம் நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. அதில் ஒன்றான வைட்டபின் பி-12 வைட்டமின் சத்து குறைப்பாட்டினைப் பற்றி பார்ப்போம்.

    இதன் ஆரம்பகால அறிகுறிகளாக, உடல் பலவீனம், மலச்சிக்கல், மனச்சோர்வு போன்றவை காணப்படும். இந்த குறைபாடு உணவு, மருந்துகள், ஏதோ உடல்நலக்குறைவு ஆகியவைகளின் காரணமாக இருக்கலாம்.

    வைட்டமின் பி12- இந்த சத்துக்கள் நரம்புகள், ரத்த அணுக்கள் இவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாகும். நரம்பு மண்டலத்தினை காக்க பெரிதும் உதவுகின்றது.

    இதன் குறைபாடு தொடரும் போது நரம்பு மண்டலம், மூளை, ரத்த சோகை இவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இந்த பாதிப்புகள் கடுமையாகலாம்.

    வைட்டமின் பி12 குறைபாடு- ரத்தசோகை, சோர்வு, பலவீனம், பசியின்மை, எடை குறைவு, சிந்திப்பதில் தடுமாற்றம், மனச்சோர்வு, வாய், நாக்கில் புண், செயல்பாடுகளில் கடினம் என கூறிக் கொண்டே செல்லலாம்.

    ரத்த சோகை காரணமாக-மயக்கம், தலைவலி, வெளிர்ந்த சருமம், படபடப்பு, காதில் இரைச்சல், பசியின்மை ஆகியவையும் கூடும்.



    நரம்பு பாதிப்பு காரணமாக- கை, கால் மரத்து போகுதல், மறதி, நடையில் தடுமாற்றம் ஆகிய பாதிப்புகளும் ஏற்படும்.

    ஆய்வுகள் கூறுவது தொடர் பி12 குறைபாடு- இதய பாதிப்பு, மறதி பாதிப்பு ஆகியவற்றினையும் ஏற்படுத்தலாம் என்பதுதான்.

    இருதய பாதிப்பாக குறிப்பிடும் போது இருதய நோய், பக்க வாதம் இகைளை குறிப்பிடுகின்றனர்.

    தேவையான அளவு இந்த வைட்டமின் கிடைக்காத போது குறைபாடு ஏற்படு கின்றது.

    ஆக வைட்டமின் பி12 சத்து பலன்களாக இருதய நோய் பாதிப்பு குறைவு, பக்கவாத பாதிப்பு அபாயம் குறைவு, கண் பார்வை மங்குதல் அபாய நிறைவு, நரம்பு மண்டல பாதுகாப்பு, வளர்சிதை மாற்றங்கள் சீராய் இருத்தல், நல்ல மனநிலை, ஆரோக்கியமான ஜீரண இயக்கம் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.

    அன்றாட உணவில் பி12 சத்து கொண்ட உணவுகளாக மீன், முட்டை, பால், பழ ஜூஸ்கள், சோயா என மேலும் சில உணவுப் பொருட்களை குறிப்பிடலாம்.

    சில உணவுகள் அவரவர் உடல் நலனுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதால் மருத்துவர், சத்துணவு நிபுணர் ஆலோசனையைப் பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு தேவைக்கேற்ற முறையில் மருத்துவர் சிபாரிசு செய்வார்.

    சிகிச்சையின் போது நீண்ட கால பி12 குறைபாடு இருக்குமாயின் இருதய நோய் பாதிப்பு, கடுமையான நரம்புகள் பாதிப்பு, குடல் புற்று நோய், மூட்டு வலி பாதிப்பு, தசைகளின் பலம் இழப்பு, தைராய்டு பாதிப்பு ஆகியவை ஏற்படலாம்.

    சைவ உணவு உட்கொள்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் இவர்களுக்கு பி12 சத்து குறைபாடு உள்ளதா? என மருத்துவர் பரிசோதனை செய்வார்.

    பி12 சத்து குறைபாடு சிலருக்கு மாறுபட லாம். பெண்களுக்கு பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கலாம்.

    இதற்கான அறிகுறிகளை, உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை மூலம் மருத்துவர் கண்டறிவார், ஊசி, மாத்திரை, உணவு முறை மூலம் இதனை சரி செய்வர்.

    ஒருவருக்கு தன் அன்றாட நாள் நேரத்தினை பிரித்து வகுத்துக் கொள்வதில் சற்று குழப்பம் இருக்கும். அவர்கள் இவ்வாறு கூட முயன்று பார்க்கலாமே.

    காலையில் யோகா, உடற்பயிற்சி, தியா னம் செய்து முதல் நாள் எழுதி வைத்த வேலைகளை ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். ஆரோக்கியமான குளியல், ஆரோக்கியமான காலை உணவு முடித்து பின்னர், காலை வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்.

    மதியத்தில் முக்கிய வேலைகளை முடித்து விட வேண்டும். மதிய உணவுக்கு பின் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

    மாலையில் 7 மணிக்குள் இரவு உணவினை முடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் காலாற சற்று நடக்கலாம். மறுநாளைக்கான வேலைகளை எழுதி முறைப்படுத்திக் கொள்ளலாம். 20 நிமிடங்கள் படிக்கலாம், உறங்க செல்லலாம். இப்படி முயன்ற வரை செய்து பார்ப்போமே.


    * குட்டி தூக்கம் (பகலில்), யோகா, நடை பயிற்சி இவை உடலுக்கான ஓய்வினை தரும்.

    * புத்தகம் படிப்பது, தன்னை கவனித்துக் கொள்வது, மூளைக்கான புதிர், குறுக்கெ ழுத்து விளையாட்டு, எதனையும் முழு கவனத்துடன் செய்வது இவை மனம் சார்ந்த ஓய்வாகும்.

    * அதிக டி.வி., கம்ப்யூட்டர் உபயோ கிக்காது இருப்பது, நல்ல புத்தகங்கள் படிப்பது மன நலன் காக்கும்.

    * எழுதுவது, வரைவது இவை உங்கள் திறமையைக் கூட்டும்.

    * தியானம், ஆன்மீக நிம்மதி தரும். நம் உடல் நலன் நம் உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது என்பர்.

    * பொதுவான சாதாரண தலைவலிக்குக் காரணம் ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் என்கின்னர்.

    * கழுத்து வலி- பிறரை மன்னிக்க முடியாத வகையில் கொதிக்கும் உணர்ச்சிக ளோடு இருப்பது அல்லது தன் தவறினை தானே மன் னிக்க முடியாது இருப்பதால் ஏற்படலாம்.

    * தோள் பட்டை வலி-அதிக வேதனை உணர்ச்சிகள் தருவது.

    * மேல் முதுகு வலி- தன் மீது யாரும் அன்பு செலுத்த வில்லை என்ற ஏக்கம்.

    * கீழ் முதுகு வலி-பணத்தைப் பற்றி சதா கவலை.

    * கை முட்டி வலி- வாழ் வில் மாற்றங் களை, தாக்கு தல்களை ஏற்க முடியாமல் இருப்பது.

    * இடுப்பு வலி- முடிவுகள் எடுக்க முடி யாத தவிப்பு.

    * கணுக்கால் வலி- தன்னைத் தானே வெறுப்பது.

    இதனை ஒரு இத்தாலிய ஆய்வாளர் எழுதியிருந்தார். இதனை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாதுதான். ஆனால் மனநல பாதிப்பே உடல் நல பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்பது உறுதி.

    இதனை பகிர்வதன் நோக்கமே மனநலம் என்பது மிக அவசிய மானது என்பதனை உணர்த்தத்தான். எனவே ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், செயல்கள் இவற்றில் மனதினை செலுத்தி உடல் நலனைக் காப்போம்.


    வைட்டமின் பி12 பற்றி பார்த்தோம். அதன் அறிகுறிகள், பாதிப்புகளும் பார்த்தோம். இதன் குறைபாடு இரவில் காட்டும் சில அறிகுறிகளும் உள்ளன.

    * சிலருக்கு மிகவும் சோர்ந்து இரவு படுக்கச் செல்லும் போது தசைகளில் வலி, பிடிப்பு என்று இருக்கும். இது என்றாவது ஒருநாள் என்றால் அது ஓய்விற்குப் பிறகு சரியாகி விடும் எனலாம்.

    ஆனால் அன்றா டம் பிடிப்பு, பல வீனம் என தசை களில் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணு கவும். பி12 குறை பாடு இருக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

    * இரவில் அதிக ஜீரண கோளாறு போல் உணர்ந்தால்- வயிற்று பிரட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அதிக காற்று வெளியேறுதல், மலச்சிக்கல் ஆகியவை இருந்தாலும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

    * இரவில் அன்றாடம் தலைவலி ஏற்பட்டால்...

    * தூக்கமின்மை- இதற்கு பல கார ணங்கள் இருக்கலாம். ஆனால் சில வா ரங்கள் தொடர்ந்து முழுமையான தூக்கம் இல்லாவிடில் வைட்டமின் பி12 சத்து குறைபாடும் ஒரு காரணமாக இருக்க லாம்.

    * படுக்கும் போது காலில் இறுக பிடிப்பது போல் இருந்தாலும் பி12 சத்து குறைபாடு இருக்கின்றதா? என பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    இவை விழிப்புணர்விற்காக எழுதப்படு பவை. இதனை வைத்து தானே ஒருவர் சுய சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது.

    மருத்துவர் குறிப்பிடும் அளவு, காலம் இவை மிக அவசியம். மனம்போன போக்கில் தானே சத்து மாத்திரை எடுத்து உடலில் பி12 அதிகமாகும் போது கல்லீரல், சிறுநீரகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    அடிக்கடி தலைவலி வாந்தி, வயிற்றுப் பிரச்சனை போன்றவை பி12 அதிகம் இருப்பதாலும் ஏற்படலாம். ஆகவே மருத்துவர் ஆலோசனையை முறையாய் பெற வேண்டும் என்பதனை உணர்வோமாக.

    • சொற்களைச் சூத்திரம்போல் பயன்படுத்த வேண்டும்.
    • கவனத்துடன் ஆற்றல் சிதைந்து போகாமல் கையாள வேண்டும்.

    சொற்களைச் சூத்திரம்போல் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ள வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! அதைத் தொழுது படித்திடடி பாப்பா!" என்பார் மகாகவி பாரதி. உலகின் எல்லா மொழிகளிலும் சொற்கள் சிறந்த பெருமைக்கு உரியவைதான் என்றாலும், சொற்களின் இனிமை, அருமை, தொன்மை, புதுமை, பெருமை, எளிமை, பொருண்மை போன்ற தன்மைகளின் அடிப்படையில் உயர்வான இடத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியது தமிழ்ச் சொல் என்கிறார் பாரதி.

    அதிலும் உயர்ந்த இடத்தில் என்றால், அச்சொற்களைப் பயன்படுத்தும் போதெல்லாம், பயபக்தியோடு வணக்கத்துடன் பயன்படுத்த வேண்டும் என்கிறார். சொல்லுக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது அதனைக் கவனத்துடன் ஆற்றல் சிதைந்து போகாமல் கையாள வேண்டும்.

    "ஒரு சொல் கொல்லும்! ஒரு சொல் வெல்லும்!" என்பது நமது பழந்தமிழ்ப் பழமொழி. கவனக்குறைவாகக் கையாண்டு விட்டால் வெல்லுகிற சொல்கூடக் கொல்லுகிற சொல்லாக மாறிவிடும் என்பதற்கு அன்றாட நடைமுறைதொட்டு அக்கால வரலாறுவரை நிறையச் சான்றுகள் உண்டு.

    பாண்டிமாதேவியின் காணாமற்போன காற்சிலம்பு ஒன்றுடன் கள்வன் ஒருவன் பிடிபட்டான் என்கிற தகவலைக் கேட்டவுடன், "கள்வனைக் கொன்றச் சிலம்பு கொணர்க!" எனப் பாண்டியமன்னன் கூறியதாகச் சிலப்பதிகாரத்தில் ஒரு செய்தி உண்டு.

    சிலம்பு காணாமற்போன பதற்றத்தில் இருந்த பாண்டியன் செவியில் கள்வனும் சிலம்பும் கிடைத்துவிட்டன என்று விழுந்த செய்தி, மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியதால், 'கள்வனைக் கொண்டு அச்சிலம்பைக் கொணர்க!

    அந்த திருடனோடு சிலம்பையும் கொண்டு வாருங்கள்! என்பதற்குப் பதிலாக, நாக்குத் தடுமாறக், "கொன்று" அச்சிலம்பு கொணர்க என்று வந்துவிட்டது. இந்தச் சொல் தடுமாற்றம், விசாரிக்கப் படாமலேயே கோவலனைக் கொலைக்களப்பட வைத்துவிட்டது;

    பாண்டிய மன்னனை நீதி தடுமாற வைத்து அவனது உயிரையும் அவனது மனைவியின் உயிரையும் காவு வாங்கி விட்டது.

    "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!"

    என்கிற வள்ளுவம். சொல்லுகிற சொல்லெல்லாம் வெல்லுகிற சொல்லாக இருக்க வேண்டும். வெல்லுகிற சொல்லிலும் பிறிதோர் சொல்லைப் போட்டால், அதனைச் சமப்படுத்தி நிரப்பிவிடும் சொல்லாகவும் இருக்கக் கூடாது.

    " மந்திரம்போல் சொல்லின்பம் வேண்டுமடா!" என்பது பாரதி வலியுறுத்தும் சொற்களின் உறுதித்தன்மை. சொற்கள் இனிமை பயப்பதாய் இருக்கவேண்டும்; அதே நேரத்தில் மந்திரம்போலச் சக்தியூட்டப்பெற்ற ஆற்றல்மிக்க சொற்களாகப் பயன் விளைவிப்பவையாக இருக்க வேண்டும்.

    சொற்களைக் கல்வியறிவினாலும் சிந்தனை ஊற்றத்தாலும் பெருக்கத் தெரிந்த அறிஞர்களும் ஞானிகளுமே நிறைமொழி மாந்தர்கள் எனப் போற்றப்படுவார்கள். அவர்களின் திருவாயிலிருந்து கிளம்பி வருகிற சொற்களெல்லாம் உடனடிப் பயன் விளைவிக்கிற சொற்களாகத் திகழ்வதால், அவை மந்திரச் சொற்களாகப் போற்றப் படுகின்றன.

    நல்ல சிந்தனையாளர்கள், நல்லெண்ணம் கொண்ட பெரியோர் வாயிலிருந்து வருகின்ற எல்லாச் சொற்களுமே மந்திரச் சொற்களாகும். ஏனெனில் அச்சொற்களின் நோக்கம் உலக மக்களின், உலக உயிரினங்களின் நன்மை கருதியதாகவே இருக்கிறது.

    நம்மிடமிருந்து அன்றாடம் புறப்பட்டு வருகிற சொற்கள் பலதிரப்பட்டவையாக இருக்கின்றன. பெரும்பாலான சொற்கள் அர்த்தமற்ற சொற்களாக இருக்கின்றன; இவை நம்முடைய அறிவீனத்தை, முட்டாள் தனத்தை வெளிப்படுத்துகின்றவையாகவே அமைந்து விடுகின்றன.

    இவற்றைக் கேட்போர் எளிதில் நம்மைப் புத்தியற்றவர்கள் என விலக்கிவிட வாய்ப்பு உண்டு. சில சொற்கள் நம்முடைய கவலைகளை, இயலாமையைச், சோகங்களைச் சுமந்து வருகிற சொற்களாக இருக்கின்றன.

    இவற்றைக் கேட்போர் நம்மீது கழிவிரக்கம் கொண்டு நம்மைப் பாவப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்பதற்காகவே சொல்லப்படுவது. சிலருடைய சொற்கள் அவர்களுடைய தற்பெருமையையும் ஆணவத்தையும் பறைசாற்றுபவையாக இருக்கும்.

    பல சொற்கள் நமது எரிச்சல்களையும் கோபங்களையும் தீக்கனைகளாகத் தாங்கிகொண்டு வெளி வரும். கோபமும் எரிச்சலும் கொள்பவரையும் நோய்ப்படுத்திவிடும்; கேட்கிறவரையும் காயப்படுத்திவிடும்.

    "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

    இனமென்னும்

    ஏமப் புனையைச் சுடும்"

    நமக்கு வருகிற கோபத்தால் நாம் பாதிக்கப்படுவதோடு, நாம் வெளிப்படுத்துகிற சுடுசொற்கள் நமக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக் கூடிய உறவினர், நட்பினர் யாவரையும் நம்மைவிட்டு நீங்கும்படிச் செய்து விடும் என்கிறார் திருவள்ளுவர்.

    கையில், பழுத்த சுவையான கனிகள் இருக்கும்போது, சுவையற்ற, கசக்கின்ற, துவர்க்கின்றை காய்களை யாராவது தேடிச்சென்று பறித்து உண்பார்களா? அதைப்போன்றது தான் நமது அன்னைத் தமிழில் உய்ர்வான அழகிய தமிழ்ச்சொற்கள் எண்ணற்றவை இருக்கத் தீய சொற்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது.

    'இன்சொலால் ஈரம் அளைஇ' என்ற தொடரில் ஒவ்வொரு மனிதனும் இன்பம் விளைவிக்கின்ற ஈரமான சொற்களையே பேசவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    அதனால்தான் நாம் பேசுவதற்குப் பெரிதும் பயன்படுகிற நாக்கை எப்போதும் ஈரப்பதத்திலேயே வைத்திருப்பதற்காக உமிழ்நீரில் அதனை ஊறிக்கொண்டே கிடக்கும் வண்ணம் கடவுள் செய்திருக்கிறார்.

    மனத்தில் எண்ணும்போது கோபமாகவும் வேகமாகவும் சொற்கள் கிளம்பி வந்தாலும் நாக்கும் அன்னங்களும் இருக்கின்ற வாய்ப்பகுதியைத் தாண்டும்போது, அவற்றின் சூடு தணித்து இனிமையாக வெளியேற்றப்பட வேண்டும்.

    ஒருவரை ஒருவர் இணைத்துக்கொள்ளச் சொற்கள் இணைப்புப் பாலங்களாக இருக்கின்றன. அவற்றைத் தடித்த சொற்களற்ற அன்புப் பாலங்களாக அமைத்துக்கொள்ள வேண்டியது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். ஒன்றை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.

    அருகருகே இருவர் நின்று பேசிக்கொண்டிருந்தால், இயல்பான பேச்சு என்றால் அது சத்தமற்ற பேச்சாக இருக்கும்; கோபமாகப் பேசிக்கொண்டிருந்தால் சத்தம் கூடியதாக இருக்கும். ஒலியளவு கோபத்தில் கூடுவதற்குக் காரணம், அவர்கள் உடலளவில் அருகருகே இருந்தாலும், மனத்தளவில் வெகுதொலைவிற்குப் பிரிக்கப்பட்டு விட்டதாக நினைப்பதே காரணம்.

    'நான் இயல்பாக இருக்கும்போது நல்ல நல்ல கனிவான சொற்களையே பேசுகிறேன்; ஆனால் கோபம் வந்துவிட்டால், இந்தக் கெட்ட கெட்ட சொற்களெல்லாம் எங்கிருந்துதான் எனக்குள் வருகின்றனவோ தெரியவில்லை.

    கோபத்தில் தடித்த சொற்களைத் தாறுமாறாய்ப் பேசிவிட்டுப், பிறகு அதற்காக எவ்வளவு வருத்தப்பட்டாலும், மன்னிப்புக் கேட்டாலும் தீர்வே கிடைப்பதில்லை' என்று வருத்தப்படலாம். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குமுன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது வாழ்க்கையில் மிகமிக முக்கியம்.

    `நெல்லைக் கொட்டினால் அள்ளிவிட முடியும்; சொல்லைக் கொட்டினால் அள்ளவே முடியாது' என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் கோபமே படக்கூடாது என்பதில் மிகவும் கட்டுப்பாடோடு இருந்தான். ஒருநாள் கண்மண் தெரியாமல் கோபம் வந்து விட்டது.

    வீட்டு வாசலில் உட்கார்ந்து போகிற வருகிறவர்கள் எல்லோரையும் பார்த்து, வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்த்துக் கொண்டே இருந்தான். மாலை வந்தது; இரவும் வந்தது. ஒருவாறு கோபம் தணிந்தது.

    வீட்டிற்குள் சென்று இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுப் படுக்கையில் படுத்து யோசிக்கத் தொடங்கி னான். காலையில் இருந்து நாம் திட்டிய சொற்களை எப்படித் திரும்பப் பெறுவது?. பதிலொன்றும் பிடிபடவில்லை; உறங்கி விட்டான்.

    மறுநாள் காலை எழுந்தவுடன் கிராமத்திற்கு அருகிலிருந்த ஒரு வனத்திற்குள் சென்றான். அடர்ந்த வனத்திற்குள் ஒரு துறவி தவமிருந்து கொண்டி ருந்தார். அவர் முன்னே நின்று வணங்கினான் இளைஞன்.

    கண்விழித்துப் பார்த்த துறவி என்ன விஷயம்? என்று கேட்டார். நேற்றுத், தான் கோபமாக இருந்த செய்தியையும், அதனால் தெருவில் போகிற வருகிறவர்களை எல்லாம் திட்டிக்கொண்டே இருந்ததையும் கூறினான்.

    கோபம் தீர்ந்தவுடன், திட்டிய சொற்களை எல்லாம் திரும்பப் பெறுவது எப்படி? என யோசித்ததாகவும், வழி தெரியாததால் துறவியிடம் வழிகேட்க வந்திருப்பதாகவும் கூறினான் இளைஞன், துறவி சிரித்துக்கொண்டே, அங்கே கீழே கிடந்த ஒரு கூடையைக் காட்டி, " அதை எடுத்துக்கொள். இந்த வனம் முழுவதும் சென்று ஆங்காங்கே உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் இறகுகளைப் பொறுக்கிக், கூடையை நிரப்பிக்கொள்.

    பிறகு உனது கிராமத்திற்குச் செல். அங்குள்ள முச்சந்தியில் இறகுகள் உள்ள கூடையைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் இங்கே வா!.

    திட்டிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதற்கான வழியைச் சொல்லுகிறேன்!" என்றார்.

    கூடையோடு வனத்திற்குள் சென்ற இளைஞன், வெகு சிரத்தையோடு, உதிர்ந்து கிடந்த பறவைகளின் இறகுகளைப் பொறுக்கிக் கூடையை நிரப்பினான்.

    பிறகு கிராமத்து முச்சந்திக்குச் சென்று கூடையிலுள்ள இறகுகளைக் கொட்டிவிட்டு, வெறும்கூடையோடு திரும்பிப் பார்க்காமல் துறவி இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்; நண்பகல் நேரம் ஆகியிருந்தது.

    இளைஞனைப் பார்த்த துறவி, "இப்போது வழி சொல்லுகிறேன்; அதற்குமுன் நீ மீண்டும் கூடையோடு கிராமத்து முச்சந்தி வரை சென்று, அங்கு நீ கொட்டிவிட்ட பறவை இறகுகளை மீண்டும் அள்ளிக்கொண்டு வர வேண்டுமே!" என்றார்.

    சலித்துக்கொண்டே இளைஞன் கிராமத்தை நோக்கிச் சென்றான்; சென்ற இளைஞன் மாலை நேரமாகியும் திரும்பாததைக் கண்ட துறவி, அவனைத் தேடிக் கொண்டு கிராமத்து முச்சந்திக்குச் சென்றார்.

    அங்கே கொட்டிவிட்டு வந்த இறகுகளைக் காணாது வெறுங்கூடையோடு விழித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் இளைஞன். சிரித்துக்கொண்டே துறவி சொன்னார், கோபத்தில் உதிர்த்துவிட்ட சொற்களையும், பறந்துவிட்ட பறவைகளின் இறகுகளையும் திரும்பப் பெறவே முடியாது.

    நாம்தாம் சொற்களைப் பேசும்போதே கவனமாக இருக்க வேண்டும்!".

    சொற்கள் மொழியின் அடையாளங்கள் மட்டுமல்ல; அவை அவற்றைப் பேசுகிற மனிதர்களின் குணங்களை அடையாளப்படுத்துகிற குறியீடுகளும் ஆகும்.

    'அவனுடைய பேச்சு வார்த்தைகளும், பழக்க வழக்கங்களும் அவன் சரியில்லாதவன் என்பதைக் காட்டுகின்றனவே!' என்று மனிதர்களை எளிதில் அடையாளம் கண்டு ஒதுக்கிவிடுவார்கள் அறிஞர்கள்.

    சொற்களில் பணிவு, அன்பில் கனிந்த கனிவு, உறுதியும் உண்மையும் வெளிப்படும் நேர்மை, கோபமும் எரிச்சலும் கலவாத கருணை, எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மை, எளிமையாய் எல்லார்க்கும் விளங்கும் தன்மை, சொற்களைக் கேட்டவுடனேயே செயல் நிகழ்ந்துவிட்டது போன்ற பலனளிக்கும் நம்பகம்.. இவை எப்போதும் வாய்க்கட்டும்.

    சொற்களை வெறும் வாய் சொற்களாக மட்டும் உதிர்க்காமல், மனத்தின் அடியாழத்திலிருந்து புறப்பட்டுவரும் அன்பின் வார்த்தைகளாக மடைமாற்றம் செய்தால் எல்லாச் சொற்களும் நலம் விளைவிக்கும் சொற்களே!. உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்!; வார்த்தைகளில் கவனம்! ; வாழ்க்கை முழுவதும் வசந்த வரவு.

    தொடர்புக்கு 9443190098

    • குரல் மக்கள் மனதில் முத்திரையாகப் பதிந்துவிட்டது.
    • “வாராயோ தோழி” பாடலை ஒலிக்கவிடாத திருமணமே இல்லை.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாட்டுப் போட்டிக்கான நிகழ்ச்சிகளில் இறுதிச் சுற்றுக்குக்கூட எடுத்துப் பாடுவதற்கு பயந்து ஓடுகிறப் பாடல் ஒன்று இருக்கிறது! அதுதான் 'சிவந்த மண்' படத்தில் வரும் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குதான் என எண்ண வேண்டும்" என்று கண்ணதாசன் எழுதி, எம்.எஸ்.வி. இசையமைத்தப் பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார்.

    தொடர்ந்து கோரஸ் பாடி வந்த எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வந்தது ஒரு சோதனை.


    "மணாளனே மங்கையின் பாக்கியம்" படத்தில். "அழைக்காதே... நினைக்காதே" என்று அஞ்சலிதேவி பாடும் பாடலுக்கு கோரஸ் பாடிக் கொண்டிருந்தார் தன் அம்மாவுடன்.

    ஒலிப்பதிவு செய்துக் கொண்டிருந்த ரங்கசாமி, அந்த இரட்டை சடை போட்ட பெண்ணை வெளியே போக சொல்லுங்க. குரல் தனியே கேட்குது என்று கடிந்துக் கொள்கிறார்.

    இதையடுத்து எல்.ஆர்.ஈஸ்வரி வெளியே அனுப்பப்படுகிறார். வெளியே வந்தவர் நெஞ்சில் ஒரு வேகம், இவருடைய வாயாலேயே பாராட்ட வைப்பேன், இது எனக்கு ஒரு சவால் என்று மனத்திற்குள் உறுதி எடுக்கிறார்.

    அடுத்த ஆண்டே, ஏ.பி. நாகராஜன் இயக்கிய, "நல்ல இடத்து சம்பந்தம்" என்றப் படத்தில் முதன் முதலாக இரண்டுக்கு மேல் தனிப் பாடல்கள் பாட எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாய்ப்புத் தருகிறார். கே.வி. மகாதேவன் இசையமைப்பாளர்.

    எல்.ஆர்.ஈஸ்வரி ,ஒலிப்பதிவு செய்யப் போவது யார் என்று கேட்கிறார் கே.வி.எம்மிடம். ஏன் ரங்கசாமிதான் என்கிறார்.

    எல்.ஆர்.ஈஸ்வரி உடனே ஏ.பி. நாகராஜனிடம் சென்று, "சார் நான் பாடவில்லை, ஒலிப்பதிவின்போது அவர் என்னை ஏதாவது சொல்லிவிட்டால்..?" என்கிறார்.

    ஏ.பி. நாகராஜன், எத்தனை நாளைக்கு கோரஸ்லே பாடுவாய்? அதெல்லாம் அவர் ஒன்னும் சொல்ல மாட்டார் என்று தைரியம் கொடுத்து பாடச் சொல்கிறார்.

    முதல் படத்திலேயே பிரமாதமாக பாடிவிடுகிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. பிறகு அேத ரங்கசாமி அவர்களின் வாயால், "இது நம்ம பொண்ணுப்பா நல்லா பாடுது" என்று சொல்ல வைத்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. அவரது சபதம் பலித்த நாள் அது.


    1959ல் அமுதவல்லி படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து "கண்கள் ரெண்டும் வண்டு நிறம்" என்றப் பாடலை பாடினார். பெண்கள் ஜோடிக் குரல் என்றாலே, பி.சுசீலா - எல்.ஆர்.ஈஸ்வரிதான் இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக ஆனது.

    இந்த இருவர் பாடிய ஜோடிப் பாடல்கள் அத்தனையும் ஒன்று கூட சோடை போனதில்லை. கலக்கல் ஹிட்தான்.

    பாசமலர் படத்தில் ஒருபாடலுக்கு கோரஸ் பாடுகிறார். "பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை". என்றப் பாடல்தான் அது. ஒத்திகை பாடல் பதிவு என்று நாள் முழுக்க பாடி பாடி ஓய்ந்த போது, திடீரென்று மெல்லிசை மன்னர்கள் "வாராயோ என் தோழி வாராயோ" பாடலையும் நீயே பாடும்மா என்கிறார்கள்.

    பொழுதெல்லாம் பாடி பாடி ஒய்ந்தக் குரலில் பாட்டைப் பாடிப் பார்த்தால் குரலே வரவில்லை. தனியாகப் பின்னணிப் பாட வாய்ப்புக் கிடைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற கவலை தோய்ந்த முகத்துடன் அவர்களைப் பார்க்க, சரிம்மா வீட்டுக்குப் போய்விட்டு நாளைக்கு வந்து பாடும்மா என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

    எல்.ஆர்.ஈஸ்வரிக்கு தொண்டையை சரி செய்யக் கூட நேரமில்லை. மறுநாள் வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் கவலைகள் பாடாய் படுத்தியது. எனினும் மறுநாள் அந்த பாடலை சிறப்பாக பாடி முடித்தார்.

    "வாராயோ தோழி" பாடலை ஒலிக்கவிடாத திருமணமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வரவேற்பு பெற்ற பாடல் அது. மணப்பெண் வரவேற்பின்போது முதலில் ஒலிக்கும் பாடல் இது.

    ஆண் குரல் மட்டும் ஒலிக்கும் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங், பாடல் முழுக்க இடம் பெற்ற ஒரு முன் மாதிரி பாடலும் இவருக்கு வாய்ந்தது. "கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா?, மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... மன்னவன் மட்டும் அங்கிருக்க மற்றும் வீடு வரை உறவு வீதி வரை மனைவி" போன்றப் பாடல்களில் வரும் ஹம்மிங்கை யார்தான் மறக்க முடியும்.

    தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக வெண்ணிற ஆடை படத்தில்ஜெயலலிதா நடித்தப்போது அவருக்கு பின்னணி குரல் கொடுத்த முதல் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிதான்.


    "கறுப்புப் பணம்" என்றொரு திரைப்படம் கவியரசர் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பு. இதில் இரவு வேளையில் படகில் போய்க் கொண்டே தோழியிடம் தன் காதலைப் பற்றியும் காதலனைப் பற்றியும் பாடும்பாடல்.. ரகசியமான வரிகளுக்கேற்றபடி குறைந்த ஸ்தாயில் பாட வைக்க மெல்லிசை மன்னர்கள் முடிவெடுக்கிறார்கள்.

    தயாரிப்பாளர் என்ற முறையில் கவியரசர், ஈஸ்வரியை வைத்து இந்த பாட்டை பாடச் சொல்லுங்கள் என்கிறார். இரட்டை இருக்கோ, ஈஸ்வரி மெல்லியக் குரலில் பாடினால் சரி வருமா? என்கிறார்கள்... கொடுத்துதான் பாருங்களேன் என்கிறார் கவியரசர்.

    சரி, புதுமையாக முயற்சிக்கலாம் என்று பாட வைத்தார்கள். "அம்மம்மா கேளடி தோழி, சொன்னானே ஆயிரம் சேதி" என்ற அந்தப் பாடல் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இருந்த வேறொரு பரிமாணத்தையும் காட்டிக் கொடுத்தது.

    இவரது குரலின் தனித்தன்மை, மூச்சடக்கும் தன்மை, எவ்வளவு உச்சஸ்தாயிக்கு போனாலும் பிசிறில்லாத உடையாத குரல் எல்லாம் சேர்ந்து, உல்லாச விடுதிப் பாடல்கள் என்றாலே அது எல்.ஆர்.ஈஸ்வரிதான் என்று மக்கள் மனதில் முத்திரையாகப் பதிந்துவிட்டது. மயக்கும் தொனியில் இவர் பாடிய பாடல்களுக்கு இசைப்பிரியர்கள் நடுவே தனி வரவேற்பு உண்டு.


    சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடலில் வந்த சவுக்கடி வலிக்கு துடிக்கும் துடிப்பு அசாத்தியமானது. அந்த துடிப்பு ஒலி அடிவயிற்றிலிருந்து தர வேண்டும். அதுவும் தாள அளவுக்குள்...

    இந்தியில் இந்தப் படத்தை எடுத்தப்போது இதே காட்சிக்கு லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். அவர் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலை கேட்டுவிட்டு இது யார் பாடியது? என்று கேட்டிருக்கிறார்.

    எல்.ஆர்.ஈஸ்வரிப் பற்றி சொன்னதும், வியந்து போய் எல்.ஆர்.ஈஸ்வரியை தேடி வந்து பாராட்டிவிட்டு சென்றார்.

    கத்தோலிக்க கிருஸ்தவராக இருந்தாலும் இவர் அம்மனைப் பற்றி பாடினால் உருகாத உள்ளங்களே இல்லை எனலாம். ஆடி மாதத்தில் இவரது கச்சேரிக்கு நாட்கள் கிடைப்பது அரிது என்கிற அளவில் இன்றும் கோவில்கள் தோறும் ஒலிக்கும் இவரது குரல் மதங்களுக்கிடையே உள்ள பேதங்களை களைந்து விட்டது என்றே சொல்லலாம்.

    இவர் பின்னணி பாடகியாக பிரபலமானவுடன், நீ உன் பெயரை மாற்றிக்கொள் என்று ஏ.பி. நாகராஜ் மற்றும் கே.வி. மகாதேவன் இருவரும் வலியுறுத்தினர். லூர்துமேரி ராஜேஸ்வரி என்ற பெயரை எல்.ஆர்.ஈஸ்வரி என்று அவர்கள் மாற்றி வைத்த ராசி அவர் திரையிசையில் மிகவும் பிரபலமானார்.

    • இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறைய கனவுகள் வருகின்றன.
    • ராமாயணத்தில் இரண்டு கனவுகள் சொல்லப்படுகின்றன.

    நமது இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிறைய கனவுகள் வருகின்றன. ராமாயணத்தில் முக்கியமாக இரண்டு கனவுகள் சொல்லப்படுகின்றன.

    ஒன்று பரதன் கண்ட கனவு. அது விளையப்போகும் தீமையைச் சொல்கிறது. இன்னொன்று திரிஜடை கண்ட கனவு. அது நடக்கப் போகும் நன்மையைச் சொல்கிறது.

    அயோத்யா காண்டத்தில், அயோத்தியை விட்டுப் பிரிந்து கேகய நாட்டில் இருக்கும் பரதன் கெட்ட கனவு கண்டு விழித்துக் கொள்கிறான். அயோத்தியில் இருக்கும் தன் தந்தை தசரதருக்கு ஏதோ ஆபத்து என உணர்ந்து அவன் உள்ளம் பதறுகிறது. தன் தம்பி சத்துருகனிடம் தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்லிக் கவலையோடு புலம்புகிறான்.

    அந்த கனவு பின்னால் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளுக்கான முன்கூட்டிய சூசகம் என்பதை அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் அவனுக்குப் புலப்படுத்துகின்றன. அவன் கேகய நாட்டில் இருந்து மறுபடி அயோத்திக்கு அழைத்துவரப் பட்டபோது, தசரதரின் உயிரற்ற உடலைத்தான் அவனால் காண முடிகிறது.

    சுந்தர காண்டத்தில் ராமனைப் பிரிந்து தாளாத துயரத்தில் இருக்கும் சீதாதேவிக்கு ஆறுதலாக விபீஷணனின் புதல்வி திரிஜடை பேசுகிறாள். அவள், தான் கண்ட கனவைப் பற்றி சீதையிடம் சொல்லி அவளுக்கு ஆறுதல் தருகிறாள்.

    தன் பெரியப்பா ராவணன் எண்ணையில் மூழ்குவதாகவும், கழுதையும் பேயும் இழுக்கும் தேரில் ரத்த ஆடை அணிந்து தெற்கு திசை நோக்கிப் போவதாகவும் கனவில் கண்டதாகச் சொல்கிறாள் திரிஜடை. எனவே ராவணன் அழிவு நிச்சயம் என சீதாதேவியைத் தேற்றுகிறாள்.

    `எண்ணெய் தன் முடிதொறும்

    இழுகி ஈறு இலாத்

    திண்நெடும் கழுதைபேய்

    பூண்ட தேரின்மேல்

    அண்ணல்வேல் இராவணன்

    அரத்த ஆடையன்

    நண்ணினன் தென்புலம்,

    நவைஇல் கற்பினாய்!`....

    இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில், ஒன்பதாம் பகுதி `கனாத்திறம் உரைத்த காதை` என்ற தலைப்பிலேயே அமைந்துள்ளது. தன் தோழி தேவந்தியிடம் கண்ணகி தான் கண்ட தீக்கனா பற்றிக் கூறுகிறாள்.

    தானும் கோவலனும் அயலூர் செல்வதாகவும் அங்கு `இடுதேள் இட்டதுபோல்` ஒரு பழிச்சொல் நேர்வதாகவும், அதன் பின்னர் கோவலனுக்கு ஓர் ஊறு நேர, தான் மன்னனிடம் சென்று வாதாடியதாகவும் அந்த ஊருக்கே தீங்கு நேர்வதாகவும் தான் கண்ட கனவுக் காட்சிகளை விவரிக்கிறாள் அவள்.

    `கடுக்கும் என் நெஞ்சம் கனவினால்

    என்கை

    பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள்

    பட்டேம்!

    பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை

    இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு

    என்தன்மேல்!

    கோவலற்கு உற்றதுஓர் தீங்கு என்று

    அதுகேட்டுக்

    காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்

    காவலனோடு

    ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்

    உரையாடேன்...`

    இலக்கியங்களிலும் புராணங்களிலும் பின்னால் நிகழப் போகும் சம்பவங்கள் பலவற்றைப் பற்றி முன்கூட்டியே குறிப்பாலுணர்த்தும் உத்தியாகப் பாத்திரங்கள் காணும் கனவுகள் கையாளப்பட்டுள்ளன.

    தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரும், நந்தனும் ஒருசேரக் கண்ட கனவை பற்றிச் சேக்கிழாரின் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.

    ஜாதி காரணமான இன்னல் தரும் இழிபிறவி சிவபெருமானை அடைவதற்குத் தடை என எண்ணி துயரத்தோடு துயில்கிறார் தில்லை சென்ற நந்தனார். அவர் கனவில் வருகிறான் சிவன். நந்தனைத் தீயில் மூழ்கிப் பின்னர் தன்னிடம் வருமாறு பணிக்கிறான்.

    அதுபோலவே தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர் கனவிலும் வந்து நந்தனாருக்கு எரியமைத்துக் கொடுக்குமாறு பணித்து மறைகிறான். அந்த கனவு பற்றி பெரியபுராணம் பேசுகிறது.


    'இப்பிறவி போய் நீங்க

    எரியினிடை நீ மூழ்கி

    முப்புரிநூல் மார்பர் உடன்

    முன்அணைவாய் எனமொழிந்து

    அப்பரிசே தில்லைவாழ்

    அந்தணர்க்கும் எரியமைக்க

    மெய்ப்பொருள் ஆனார் அருளி

    அம்பலத்தே மேவினார்!`.

    சென்னை அருகே திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் என்ற சிவனடியார் புராணத்தையும் விரிவாகப் பேசுகிறது சேக்கிழாரின் பெரிய புராணம்.

    ஏழை அடியவரான அவர், தாம் வழிபடும் சிவபெருமானுக்கு கோவில் கட்ட விரும்பினார். கற்கோவில் கட்டுமளவு அவருக்குச் செல்வ வளம் இல்லை.

    அதனால் என்ன? பக்தியோடு நெஞ்சத்தில் மனக்கோவில் கட்டத் தொடங்கினார். `உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்` என்கிறாரே திருமூலர்?

    கோவில் கட்டுவதில் நாள்தோறும் ஒவ்வொரு பணியாக முடித்தார் பூசலார். கற்களை அடுக்கித் தூண்கள் கட்டுதல், அவற்றில் சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்தல், கோவிலின் உள்ளே கிணறு வெட்டுதல் என இப்படியான எல்லா வேலைகளையும் மனத்தினுள் கற்பனையாக ஒவ்வொன்றாக நிகழ்த்தினார்.

    மெல்ல மெல்ல அவர் கட்டிய மனக்கோவில் முழுமையாக அவர் நெஞ்சத்தில் உருப் பெற்றது. தானே தன் உள்ளத்தில் நிர்மாணித்த அந்த விந்தையான கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறித்தார்.

    அப்போது காஞ்சியை ஆண்ட மன்னன் காடவர்கோன் என அழைக்கப்பட்ட சிவபக்தனான ராஜசிம்மன் உண்மையிலேயே சிவனுக்குக் கற்கோவில் கட்டிக் கொண்டிருந்தான்.

    மன்னன் அவன். எனவே செல்வ வளத்திற்கு ஒரு குறைவும் இல்லை. நூற்றுக் கணக்கான சிற்பிகள் வந்து பணி செய்து அந்தக் கோயிலின் கட்டுமானப் பணி முடிந்தது. அந்தக் கற்கோயிலுக்கும் கும்பாபிஷேக நாள் குறிக்கப் பட்டது.

    ஆனால் பூசலாரின் மனக்கோவில் கும்பாபிஷேக நாளும் மன்னன் கட்டிய கற்கோவில் கும்பாபிஷேக நாளும் ஒன்றாகவே அமைந்துவிட்டன. எங்கு செல்வான் சிவன்?

    அவனால் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களுக்கும் செல்ல முடியாதா என்ன? அவன் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் அல்லவா?

    என்றாலும், உள்ளத்தில் கோவில் கட்டிய பூசலாரின் பக்திச் சிறப்பை உள்ளபடியே உலகிற்கு அறிவிக்க எண்ணியது சிவபெருமானின் திருவுள்ளம்.

    பொன்னார் மேனியனாய் புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை மலர் அணிந்து காடவர்கோன் கனவில் வந்தான் கடவுள் சிவன்.

    `உன் கற்கோவில் கும்பாபிஷேக நாளை மாற்றி வைத்துக் கொள் அன்பனே! நான் பூசலார் கட்டும் கோவில் கும்பாபிஷேகத்தில் அன்று கலந்து கொள்ளத் திருநின்றவூர் செல்கிறேன்` எனச் சிவன் கனவில் அறிவித்து மறைந்தான். விழித்த மன்னன் வியந்தான்.

    யார் அந்த பூசலார்? கோவில் கட்டப் பெரும் செல்வம் வேண்டுமே? தன்னை விட0 செல்வந்தரா அவர்?

    குழம்பிய காடவர்கோன் பூசலாரைச் சந்திக்கத் திருநின்றவூர் சென்றான். அவரைத் தேடிக் கண்டு உரையாடினான். அவர் உள்ளத்தில் ஆலயம் கட்டும் உண்மையை அறிந்து பரவசமடைந்தான். அவரை வணங்கிப் போற்றினான்.

    இந்த அரிய வரலாற்றைச் சேக்கிழார் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட விவரிக்கிறார்.

    பெரியாழ்வார் கதையிலும் கனவு வருகிறது.

    தன் மகளான ஆண்டாள் இறைவனுக்கான மலர்மாலையைத் தான் சூடிக் கொடுத்தது பற்றி மனம் வருந்துகிறார் அவர்.

    அந்த மாலையை நீக்கிவிட்டுத் தான் தொடுத்த புதிய மாலையோடு ஆலயத்திற்குச் சென்று அதை அரங்கனின் திருமார்பில் அணிவிக்கிறார்.

    அன்றிரவு பெரியாழ்வார் வழக்கம்போல் உறங்குகிறார். அவரின் கனவில் வருகிறான் கண்ணன். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பக்திவயப்பட்ட அந்தச் செயல் தனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றும் இனி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைகளையே அவர் தனக்கு அணிவிக்க வேண்டும் என்றும் சொல்கிறான்.

    திகைத்த பெரியாழ்வார் அதன்பின் கண்ணன் கட்டளைப் படியே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் மாலையையே கண்ணனுக்குச் சூட்டுகிறார் என்கிறது பெரியாழ்வார் திருச்சரிதம்.

    கண்ணனையே மணக்க வேண்டும் எனக் கனவு கண்டவள் அல்லவா ஆண்டாள்? புனிதமே வடிவான ஆண்டாள் நாச்சியார் எழுதிய `நாச்சியார் திருமொழி` என்ற பாசுரம், பட்டர்பிரான் கோதையான ஆண்டாள் கண்ட திருமணக் கனவைத் தித்திக்கும் தமிழில் விவரிக்கிறது.


    `வாரணமாயிரம் சூழ வலம் செய்து

    நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்

    பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ

    நான்...

    தமிழில் பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன், பொன்னவன் என்பவர் இயற்றிய `கனா நூல்` ஒன்று இருந்ததாகத் தெரியவந்துள்ளது. கனவுகளின் பலன் பற்றிப் பேசுகிறது அந்நூல்.

    தன் இறப்பைத் தானே காண்பது போன்ற கனவுகள் கண்டால் செல்வம் வந்து சேரும் என்பதுபோல் பற்பல கனவுகளின் பலன்கள் அந்தக் கனா நூலில் கூறப்பட்டுள்ளன...

    புத்தரின் தாயான மாயாதேவி ஒரு கனவு காண்கிறாள். மன்னர் சுத்தோதனர் மூன்று நிமித்திகர்களை அழைத்து மாயாதேவி கண்ட கனவின் பலன் என்ன என்று வினவுகிறார்.

    அவர்கள் உலகத்தை வழிநடத்தப் போகும் மகான் ஒருவர் உங்களுக்கு மகனாகப் பிறக்கப் போகிறார் என அந்தக் கனவுக்குப் பலன் கூறுகிறார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகார்ஜுன மலைச் சிற்பம் ஒன்றில் இந்தக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

    நனவில் இறைச் சிந்தனையில் தோய்ந்து, அதன் பயனாய்க் கனவிலும் இறைவனை தரிசிக்கும் பேறு பெறுவது என்பது, பக்தி சார்ந்த மனத்தின் உயர்நிலையைப் புலப்படுத்துகிறது.

    இறைவனை நேரில் காண வேண்டும் எனக் கனவு கண்ட ஆண்டாள், நந்தனார் போன்ற அடியவர்கள், முதலில் இறைவனைக் கனவில் கண்டார்கள். பின்னர் அவர்களே நேரிலும் கடவுளைக் காணும் பாக்கியம் பெற்றுக் கடவுளோடு கலந்தார்கள். கனவு நனவான வரலாறே நம் ஆன்மிகம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • மிகுந்த தேசப்பற்றுடன் வளர்ந்தார்.
    • ரவீந்திர நாத் தாகூர் ஜகதீஷ் சந்திர போஸை மிகவும் போற்றினார்.

    தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்த ஒருவர் யார்? மார்கோனி வானொலியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அதைக் கண்டுபிடித்தவர் யார்? அவர் தான் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ்.


    பிறப்பும் இளமையும்:

    இன்றைய பங்களாதேஷில் இருக்கும் டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் ஜகதீஷ் சந்திர போஸ் 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி பிறந்தார்.

    தந்தையார் பகவான் சந்திர போஸ் பிரிட்டிஷ் இந்தியாவில் அரசாங்க உயர் அதிகாரியாகப் பணி புரிந்தார். ஆனால் தேசப்பற்று மிகுந்தவர். தனது மகனை சாதாரண ஏழை எளிய மக்கள் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்தார்.

    தந்தையின் வழிகாட்டுதலுக்கு இணங்க அனைவருடனும் எளிமையாகப் பழகிய ஜகதீஷ், படிப்பில் சூரனாக விளங்கினார். மிகுந்த தேசப்பற்றுடன் வளர்ந்தார். போஸின் தாயாரோ இந்தியப் பெண்மணிக்குரிய இலக்கணத்துடன் வாழ்ந்தவர். தன் மகனுக்கு நல்ல நற்பண்புகளைக் கற்பித்தார்.

    பள்ளிப்படிப்பு:

    ஆரம்பக் கல்வியை தூய சேவியர் உயர் நிலைப்பள்ளியில் முடித்துக் கொண்ட ஜகதீஷ் கல்கத்தா சென்று கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தாவில் ஒரு மிஷனரி பள்ளியில் அவர் சேர்ந்து படித்த போது அங்கிருந்த ஆங்கில மற்றும் ஆங்கிலோ இந்திய மாணவர்கள் அவரது எளிமையையும் நாட்டுப்புற பின்னணியையும் கண்டு கேலி செய்ய ஆரம்பித்தனர்.

    அந்த மாணவர்களுள் குத்துச் சண்டை தெரிந்த ஒருவன் அடிக்கடி அவரைக் குத்தி வம்புக்கு இழுப்பது வழக்கம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய போஸ் ஒரு நாள் அவன் சண்டைக்கு வந்த போது அவனை அடித்து நொறுக்கி விட்டார்.

    அன்றிலிருந்து அவர் மதிப்பு பள்ளியில் உயர்ந்தது. கல்கத்தாவில் 19-ம் வயதிலேயே பட்டத்தைப் பெற்ற பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

    கல்லூரியில் ஆசிரியர்:

    லண்டனில் தன் மேல் படிப்பை முடித்து விட்டு கல்கத்தாவிற்குத் திரும்பி வந்த போஸ் 1885-ம் ஆண்டு பிரஸிடென்ஸி காலேஜில் பேராசிரியராகப் பணி புரியச் சேர்ந்தார். ஆனால் அவரது சம்பளமோ மற்ற ஐரோப்பிய பேராசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்காக நிர்ணயிக்கப்பட்டது.

    அத்தோடு புதியவர் என்பதால் அந்த சம்பளத்திலிருந்தும் இன்னும் கொஞ்சம் குறைக்கப்பட்டது. இதனால் வெகுண்ட போஸ் அந்த சம்பளத்தை ஏற்கவில்லை. ஆனாலும் பணியை விடாது தொடர்ந்து செய்து வந்தார்.

    மாதாமாதம் சம்பளம் வாங்காமல் அவர் பணி புரிந்தது மூன்று வருடம் வரை தொடர்ந்தது. இறுதியில் தங்கள் தவறை உணர்ந்த நிர்வாகத்தினர் ஒரு விசேஷ ஆர்டரை மாண்புமிகு ஹிஸ் மெஜஸ்டிக் அரசின் வாயிலாகப் பிறப்பித்தனர். இதன் மூலம் மூன்று ஆண்டுக்கான முழு சம்பளத்தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.

    கல்லூரியில் வேலை பார்க்கும் போதே பல்வேறு துறைகளிலும் தன் ஆராய்ச்சியை அவர் தொடங்கலானார்.

    தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சி:

    தாவரங்கள் மிருகங்களைப் போலவே வலியை உணரும் தன்மை படைத்தவை என்பது போஸின் முடிவு. பல்வேறு சோதனைகள் மூலமாக இதைக் கண்டறிந்த போஸ் உலகிற்கு இதைக் காண்பிக்கத் துடித்தார். தனது கண்டுபிடிப்பை உலகிற்கு நிரூபிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

    இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை நிரூபிக்கத் துடித்த பிரிட்டிஷார் அவரை அங்கீகரிக்கவே இல்லை என்பது ஒரு புறமிருக்க அவரை அவமானப்படுத்தினர்; தொல்லை கொடுத்தனர்.

    சகோதரி நிவேதிதா தேவியின் உதவி:

    இதிலிருந்தெல்லாம் அவர் மீண்டு வர உத்வேகமூட்டியவர் சகோதரி நிவேதிதை என்பது பலருக்கும் தெரியாது.

    ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை நிவேதிதா தேவி ஆரம்பத்திலேயே நன்கு உணர்ந்து கொண்டார்.

    ஆயிரத்தி எண்ணூற்றுத் தொண்ணூறுகளிலேயே ஜகதீஷ் சந்திர போஸ் ரேடியோ டிரான்ஸ்மிஷன் பற்றிய அரிய கண்டுபிடிப்பைக் கண்டார். அத்துடன் தாவரங்கள் வலியை உணரும் சக்தி கொண்டவை என்று அவர் கூறிய போது யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை.

    ஆனால் நிவேதிதை அவரிடமிருந்த அபாரமான அறிவியல் அறிவை நன்கு கண்டு கொண்டு அவரை ஊக்குவித்ததோடு, அவருக்கு பண உதவியும் தங்க இடமும் கூடத் தந்தார். 1899-ம் ஆண்டில் பாரிஸில் விவேகானந்தரும் நிவேதிதையும் இருந்த போது ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களைச் சந்தித்தார்.

    போஸும் அவரது மனைவி அபலாவும் விம்பிள்டனில் இருந்த நிவேதிதையின் வீட்டில் 1900ஆம் ஆண்டு தங்கி இருந்தனர்; திடீரென்று அங்கு போஸ் நோய்வாய்ப்படவே நிவேதிதையின் தாயார் மேரி நோபிள் தான் அவருக்குத் தேவையான உதவிகளை ஒரு மாத காலம் அவர் நோயிலிருந்து குணமடையும் வரை செய்தார்.

    இங்கிலாந்தில் இந்தியர்களை மதிக்காத ஒரு பெரும் ராட்சச பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் மோத வேண்டி இருப்பதை உணர்ந்த போஸ் மிகவும் மனம் நொந்து போனார்.

    இப்படி மனம் நொந்திருந்த போஸின் மன நிலையை நன்கு அறிந்து கொண்டு நிவேதிதை, ஆய்வு லாபரட்டரியை அமைக்க அவருக்கு உதவி செய்தார். பிரபல வயலின் மேதை ஓல் புல் -இன் மனைவியும் விவேகானந்தரின் சிஷ்யையுமான சாரா சாப்மன் புல் தந்த நன்கொடை மூலம் இந்த ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டது.

    தாகூருக்கு கடிதம்:

    ரவீந்திர நாத் தாகூர் ஜகதீஷ் சந்திர போஸை மிகவும் போற்றினார். லண்டனிலிருந்து 1900ஆம் ஆண்டு லண்டனிலிருந்து போஸ் தனது மன வேதனையை ரவீந்திர நாத் தாகூருக்கு ஒரு கடிதம் மூலமாகத் தெரிவித்தார், இப்படி: "நீங்கள் நான் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்களை அறிய மாட்டீர்கள்.

    உங்களால் கற்பனையே செய்ய முடியாது. 'தாவர உணர்வு' பற்றிய எனது கட்டுரையை சென்ற மே மாதம் ராயல் சொஸைடியில் வெளியிடப்படுவதை வாலர் மற்றும் சாண்டர்ஸன் ஆகிய இருவரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் வாலர் அதைத் தனது பெயரில் நவம்பர் மாதம் வெளியிட்டுக் கொண்டார்.

    எனக்கு இத்தன நாள் வரை அது தெரியாமலேயே இருந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். பாரதபூமியின் தூசியைத் தொட்டு வாழ்க்கையின் உற்சாகத்தை மீண்டும் பெற இப்போது இந்தியா வர விரும்புகிறேன்."


    க்ரஸ்கோகிராப் கருவி:

    தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்பதைக் காட்ட க்ரஸ்கோகிராப் (Crescograph) என்ற கருவியை அவர் வடிவமைத்தார். தாவரத்தின் வளர்ச்சியை மிக நுட்பமாக, நுணுக்கமாக இது காட்டும்.

    அதாவது ஒரு லட்சத்தில் ஒரு பங்கு என்ற அளவிற்கு மிக நுண்ணிய அளவில் தாவரத்தின் வளர்ச்சியை இது காட்டியதால் உலகமே வியந்து அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. அவரது கருவி தாவரம் அசையும் போது அதுவும் அசைந்து துல்லியமாக தாவர இயக்கத்தைக் காட்டியது.

    இந்திய துணைக்கண்டத்திலிருந்து விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக முதன் முதலாக ஒரு பேடண்டைப் பெற்றவர் அவரே. பிரபல விஞ்ஞானிகளான டெஸ்லா, மார்கோனி, போபாவ் ஆகியோர்களுக்குச் சமமாக இந்த சாதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார்.

    எவ்வளவோ பேர் தடுத்தும் கூட அவர் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1920இல் ராயல் சொஸைடிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் அறிவியலில் கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

    சதியை முறித்த போஸ்:

    ஒரு முறை 'லெக்சர் டூர்' ஒன்றுக்காக அவர் இங்கிலாந்து சென்றிருந்தார். அவரது கண்டுபிடிப்புகளை நேரடியாகக் காண்பித்து விளக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாவரங்களைப் பிடுங்கும் போது வலியால் அவை துடிக்கின்றன என்பதையும் விஷம் கொடுக்கப்பட்டால் அவை துடிதுடித்து இறக்கின்றன என்பதையும் அவர் நேரில் காட்ட விழைந்தார்.

    ஏராளமான விஞ்ஞானிகளும் பெண்கள் பலர் உள்ளிட்ட பிரபலமானவர்களும் குழுமி விட்டனர். போஸ் விஷம் அடங்கிய ஊசியை எடுத்து தாவரத்தின் மீது இஞ்ஜெக்ட் செய்தார். தாவரம் துடிதுடிக்க வேண்டும். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. இதைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

    போஸோ தன் நிதானத்தை இழக்கவில்லை. யோசிக்க ஆரம்பித்தார். இந்த விஷம் தாவரத்தை ஒன்றும் செய்யவில்லை எனில் என்னையும் ஒன்றும் செய்யாது என்ற முடிவுக்கு வந்த அவர் அதே விஷத்தைத் தன் மீது ஏற்றுமாறு கூறினார்.

    இஞ்செக்ஷன் ஊசி எடுக்கப்பட்ட போது அங்கு வந்திருந்தோரில் ஒருவன் தான் விஷத்திற்குப் பதில் அதே நிறத்தில் உள்ள சாயத் தண்ணிரை வைத்து விட்டதாக ஒப்புக் கொண்டான். போஸ் நிஜமான விஷத்தை எடுத்து தாவரத்தின் மீது செலுத்த அது துடி துடித்து இறந்தது. அனைவரும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

    தன்னையே சோதனைக்குட்படுத்திக் கொள்ளவும் தயங்காத மேதை ஜகதீஷ் சந்திர போஸ்!


    பெர்னார்ட்ஷாவின் ஆச்சரியம்!

    எதையும் நேரில் பார்க்க ஆசைப்படும் பெர்னார்ட் ஷா ஒரு முறை அவரது சோதனையைப் பார்க்க வந்தார். ப்ரோமைட் கரைசலில் முட்டைகோஸ் இலையைப் போடும் போது அந்த விஷக் கரைசலில் அது துடிதுடிக்க ஆரம்பித்ததைப் பார்த்த பெர்னார்ட் ஷா அந்த பயங்கரத்தைப் பார்க்க முடியாமல் வேதனைப் பட்டார்; சோதனையை எண்ணி ஆச்சரியப்பட்டார்.

    அறிவியல் புனைகதைகளில் ஆர்வம்:

    மிகப் பெரிய விஞ்ஞானியாக இருந்த போதிலும் கூட ஸயின்ஸ் ஃபிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைகதைகளை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.

    வங்காள மொழியில் அவர் எழுதிய 'போலடாக் தூஃபான்' என்ற அவரது பிரபலமான கதை எப்படி ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலைக்குத் தடவிக் கொள்ளும் எண்ணெய் ஒரு சூறாவளியைத் தடுத்து நிறுத்தியது என்பதை சுவைபடச் சொல்கிறது.

    எண்ணெயானது புறப்பரப்பு விசையை (Surface tension) மாற்றி நீரைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பது தான் கதையின் அடிப்படையான கரு. 'நிருத்தேஷர் கஹானி' என்ற அவரது நாவல் தான் முதன் முதலாக வங்க மொழியில் எழுதப்பட்ட ஸயின்ஸ் ஃபிக்ஷன் நாவல்!

    குடும்பம்:

    1887-ல் அவர் அபலா (பிறப்பு 8-8-1865 மறைவு 25-4-1951) என்பவரை மணந்தார். அபலா போஸ் சிறந்த சமூக சேவகி. பெண் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்.

    மறைவு: 1937-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி போஸ் மறைந்தார்.

    அனைத்து உயிர்களையும் நேசியுங்கள்:

    தன் வாழ்நாள் முழுவதும் பல அரிய கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே வந்தார் போஸ். அவற்றில் சில..

    மனமே ஒரு சோதனைச்சாலை. அதில் மறைத்திருக்கும் மாயையை விலக்கிவிட்டால் சத்தியத்தின் விதிகளைக் காணலாம்.

    எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே. எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்திய விஞ்ஞானி!

    தாவரங்களுக்கும் உயிர் உண்டு; அனைத்து உயிர்களையும் நேசியுங்கள் என்ற பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்தியவர் என்ற அளவில் அபூர்வமான உன்னத அறிவியல் அறிஞராகிறார் போஸ்!

    • கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
    • புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கணையம் ஓர் உறுப்பா? உடலில் இது எந்த பாகத்தில் இருக்கிறது? இதன் பணிதான் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் யாவை? இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கலாம்.

    ஒரு மனிதன் உயிர்வாழ இதயம், மூளை போன்ற உறுப்புகள் எந்த அளவுக்கு முதன்மையோ அதே அளவுக்குக் கணையமும் முதன்மை வாய்ந்தது.

    இது உறுப்பா? எனக்கேட்டால், இலைவடிவில், ஒரு சுரப்பி என்றே சொல்லலாம். வயிற்றின் தொப்புள் பகுதிக்குப் பின்புறத்தில் இருக்கும் இந்த கணையம், டியோடினம் என்று அழைக்கப்படும் சிறுகுடலின் முதல் பிரிவில் இருக்கிறது.

    கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த உறுப்பின் செயல்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் உள்ளன.

    உடலில் ஹார்மோன்கள் மற்றும் உணவு செரிமானத்திற்கான நொதி என்ற திரவத்தைச் சுரக்கச் செய்வது போன்ற பல பணிகளை இந்தக் கணையம் செய்கிறது. இதன் குறிப்பிட்ட 2 முதன்மை வாய்ந்த செயல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    நொதிகளை சுரக்கும் கணையம்:

    நொதி என்பது நாம் உண்ணும் உணவுகளைச் செரிக்க செய்யும் ஒரு வகை நீர்மமாகும். இதைச் சுரக்கச் செய்யும் பணியைக் கல்லீரல், குடல், மற்றும் இரைப்பையுடன் சேர்ந்து கணையமும் செய்கிறது. உணவு மனிதன் உயிர்வாழ எவ்வளவு தேவையோ, அவ்வளவு அதன் சத்துகள் முழுமையாக உடலைச் சென்றடையக் குடலில் நடக்கும் செரிமானச் செயல்பாடுகளும் தேவை.

    அந்தப் பணியைத்தான் கணையம் செய்கிறது. இந்த நொதிகள் கணையத்தில் உள்ள குழாய்கள் வழியாகச் சென்று சிறுகுடலின் மேல்பகுதியில் கலக்கின்றன. அதனைத் தொடர்ந்து, குடலில் இருக்கும் உணவில் உள்ளபுரதம், கொழுப்புமாவு சத்துகளைப் பிரித்துச் செரிக்க உதவுகிறது.

    லிபேஸ் -இந்த நொதி உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்துடன் இணைந்து உடைக்கிறது.

    புரோட்டீயேஸ் - இந்த நொதி புரதங்களை உடைக்கிறது. அமிலேஸ் -இந்த நொதி மாவுச்சத்தைச் சர்க்கரையாக மாற்றுகிறது.

    ஹார்மோன்களைச் சுரக்கும் கணையம்:

    எங்குப் பார்த்தாலும் நீரிழிவு நோய். இன்றளவில் நீரிழிவு நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது வருவதற்கு என்ன காரணம்? நம்மில் பலருக்கு நீரிழிவுநோய் என்றால் உடலில் இன்சுலின் அளவு குறைவாகச் சுரப்பதால் வருவது என்றுதான் தெரியும். ஆனால் இந்த இன்சுலினைச் சுரப்பது கணையம் என்று தெரிவதில்லை.

    நாளமில்லாச் சுரப்பியாகச் செயல்படும் இந்தக் கணையம் இன்சுலின், குளுகோகான் என்ற இரு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அதில் இன்சுலின் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், குளுகோகான் சர்க்கரையின் அளவைக் அதிகரிக்கவும் செய்து, உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைச் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.

    இதுவரை கணையத்தின் முதன்மை, அதன் பணிகள் குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து கணையத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கணையத்தைப் பாதிக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள்

    கணைய அழற்சி, கணையப் புற்றுநோய், சிஸ்டிக் பைப்ரோசிஸ், மது மற்றும் பித்தப்பைக் கற்களால் ஏற்படும் நோய்கள் கணையத்தைப் பாதிக்கிறது.

    கணைய அழற்சி (Pancreatitis):

    கணையத்தைப் பாதிக்கும் நோய்களில் மிகவும் முதன்மையானது கணைய அழற்சியாகும். இந்த நோயின் காரணத்தால் ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

    பித்தப்பைக் கற்கள் அல்லது அதிக மது அருந்துதல் பொதுவாகக் கணைய அழற்சிக்குக் காரணமாக அமைகின்றன. அதுமட்டுமன்றி, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும் போதும் (உயர் டிரைகிளிசரைடு டி.ஜி.எல். அளவு) கணைய அழற்சி ஏற்படுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    இதன் அறிகுறிகள். வயிற்றின் மேல் பகுதியில் வலி உணர்வு, உணவு உட்கொண்டபின் ஏற்படும் வயிற்று வலி, முதுகு பகுதிக்கும் பரவுதல், உடல் எடை குறைவது, சில நேரங்களில் காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஆகும்.

    கணையப் புற்றுநோய்:

    புற்றுநோய் என்பது இக்காலத்தில் மனிதர்கள் இடையே நாளுக்கு நாள் கூடி வருகிறது. பலவகையான புற்றுநோய்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கணையப் புற்றுநோய். கணையத்தில் உள்ள செல்கள் தம் கட்டுப்பாட்டை இழந்து பல்கிப் பெருகுவதால் கணையப்புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தநோய் முற்றும் போது அதன் செல்கள் பிறபாகங்களுக்கும் பரவுகின்றன.

    இதன் அறிகுறிகள், முதுகில் பரவும் வயிற்று வலி, பசியின்மை அல்லது எதிர்பாராத எடை இழப்பு, தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் ஏற்படுவது (மஞ்சள் காமாலை), வெளிர் நிற மலம், கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர், தோல் அரிப்பு, உடலில் ரத்தக் கட்டிகள்.நீரிழிவு நோயின் அறிகுறிகள் (மீறியப் பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மீறிய தாகம்)

    கணையச் சிக்கல்களை கண்டறிவது எப்படி?

    அழற்சியைத் துல்லியமாகக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பித்தப்பைக் கற்கள் மற்றும் அழற்சியைக் கண்டறிய டோமோகிராபி (சி.டி.), ஊடுகதிர் (ஸ்கேன்), ரத்த ஆய்வுகள்.

    கணையத்தைப் பாதுகாக்கும் வாழ்வியல் வழிமுறைகள்:

    * மது மற்றும் புகைபழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    * கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    * புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    * இரவில் கால தாமதமாய் உணவு உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.

    * நினைக்கும் நேரங்களில் எல்லாம் கிடைத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * வாரத்திற்கு ஒருமுறையாவது உண்ணாநோன்பு இருப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    * உடல் பருமனாவதைத் தவிர்க்கத் தேவையான வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    * மிகவிரைவாக உடல் எடையைக் குறைக்க முயலாமல், பொறுமையாக ஒரு மாதத்திற்கு 2 முதல் 4- கிலோகிராம் வரைமட்டுமே எடையைக் குறைக்க வேண்டும்.

    * உணவுப் பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

    * அன்னாசி, பப்பாளி, மாம்பழம், தேன், வாழைப்பழம், வெண்ணெய், மற்றும் இஞ்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இயற்கையாகவே நொதிகளைச் சுரக்கச் செய்யும் தன்மை உண்டு. இதனால் அந்த உணவுகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

    இது போன்ற வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் கணையத்தை நலத்துடன் பாதுகாக்க முடியும். கணையம் தொடர்பான நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

    • பக்தர்களின் வேண்டுதல்களை பெருமாள் உடனே கொடுப்பார்.
    • அலை பாயும் மனதால் தங்களது ஒழுக்கத்தைத் தவற விடுவார்கள்.

    "பிச்சை எடுத்தாராம் பெருமாளு!! அதை புடுங்கி தின்னாராம் அனுமாரு.." கிராமங்களில் சொலவடையாக சொல்லும் இந்த பழமொழி ஆனது, தன்னை வணங்கி பிரார்தித்து கேட்கும் வேண்டுதல்கள் மற்றும் கேட்காத வேண்டுதல்களையும் பக்தர்களின் தேவையறிந்து கருணையோடு வழங்கும் இரண்டு தெய்வங்களின் கீர்த்தியை குறைப்பதாக உள்ளதே என்று பழமொழிக்கான நிஜ அர்த்தத்தை தேடும் போது கிடைத்த தகவல்கள் உங்கள் பார்வைக்கு..

    தவறுதலான ஒரு சொலவடை உச்சரிப்பால் அர்த்தம் மாறிய பழமொழிகளுள் இதுவும் ஒன்று ஆகும்.

    பொதுவாக வாழ்க்கை பந்தத்தில் நாம் சிக்கி உழலும் போது சந்தோசமாக இருக்கும் நேரத்தைக் காட்டிலும் சங்கடமாக இருக்கும் நேரத்தில் கடவுளை நன்றாகவே தேடுவோம், கடவுளை நன்றாகவே வணங்குவோம்.

    நமது தேவைகளை நிறைவேற்றி தர கடுமையான விரதம் இருந்து கடவுளிடம் நமது வேண்டுதல்களை பிரார்த்தனையாக தெரிவிப்போம்.

    எய்யா.. நாராயண சாமி!! பெருமாளே!

    ஊருக்கு மேக்கால இருக்க மலங்கரையில (மலையோரம்) நாலு ஏக்கர் தோப்பு வெலைக்கு வருது. வாங்கிப் போட ஆசையா இருக்கு. நல்ல முறையில எடவாடு முடிஞ்சு பத்திரம் ஆயிடுச்சுன்னா திருப்பதிக்கு வந்து தல முடியை காணிக்கையா தாரேமுய்யா! என தான் நினைக்கும் காரியம் வெற்றி அடைய பெருமாளிடம் நேர்ந்து கொள்வார்கள்.

    மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும். மகளுக்கு திருமணம் ஆக வேண்டும், சொந்த வீடு வேண்டும், கார் வேண்டும் என பெருமாளிடம் கேட்பார்கள்.

    இன்னும் சிலரோ உன்னோட புள்ள தானே நான்!!. எலி வளைன்னாலும் தனி வளையா இருக்கணுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்களே.

    புறாக்கூடு மாதிரியான வாடகை வீட்டுல இருந்து கஷ்டப்படுறேனே. நாம் படுற செரமம் ஒன்னோட கண்ணுக்கு தெரியலையா??

    எய்யா!! எம்பெருமாளே!!! ஒம்ம கால புடிச்சு பிச்சையா கையேந்தி கேக்குதேன். என்னையும் கண்ண தொறந்து பாத்து ஒம்மோட கருணையால ஒரு வீட்ட வாங்கி தாரும். நடந்தே திருப்பதிக்கு மலையேறி வந்து கும்பிட்டு போவேன் பெருமாளே!!

    என்று பெருமாளிடம் நம்முடைய வேண்டுதல்களை வேண்டி இருப்போம், அல்லது பிறர் வேண்டுவதை கேட்டிருப்போம்.

    உள்ளன்போடு தன்னிடம் உரிமை கலந்த பக்தியோடு கேட்கும் பக்தர்களின் வேண்டுதல்களை பெருமாள் உடனே கொடுப்பார்.

    ஆம்!! பக்தர்கள் பெருமாளிடம் பிச்சையாக பணிவு கலந்த பக்தியோடு கண்களில் கண்ணீரோடு மனமுருகி கேட்கும் வேண்டுதல்களை உடனே பெருமாள் நிறைவேற்றிக் கொடுப்பார்.

    தனது பக்தர்கள் அல்லல் படுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் வாரி வாரி கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவன் வைகுண்ட வாசரான பெருமாள்.

    பெருமாளின் கருணையால் பணம், பதவி, புகழ் கிடைத்ததும் சிலர் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.

    பணம், பதவி, புகழ் வந்ததும் பெரும்பான்மையானோர் முந்தைய காலத்தில் தாங்கள் சிரமப்பட்ட நிலையை மறந்து மனதை அலை பாய விடுவார்கள்.

    சற்று பணம் வந்ததும் சிலர் ஏழ்மை காலத்தில் தன்னுடன் இருந்த பக்தி நெறியை மறந்து கடவுளை வணங்காமல், கடவுளுக்கு பயப்படாமல், கடவுளை மதிக்காமல் நடந்து கொள்வார்கள்.


    குரங்கைப் போல் அங்கும் இங்கும் அலை பாயும் மனதால் தங்களது ஒழுக்கத்தைத் தவற விடுவார்கள்.

    கிளைக்கு கிளை இங்கும், அங்கும் குரங்கு தாவுவதை போல் மனம் அங்கும், இங்கும் அல்ப விஷயங்களுக்கு சபலப்பட்டு அலை பாய்வதால் "மனம் ஒரு குரங்கு" என்று மனதை குரங்குக்கு ஒப்பிட்டு சொல்வார்கள்.

    கிராமங்களில் குரங்கினை அனுமார் என்று அழைப்பதுவும் உண்டு..

    சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வரும் பொழுது அனுமன் தன் வாலினால் ஏற்படுத்தப்பட்ட தடத்தின் வழியாக பாயும் ஆறு குரங்காறு என பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டாலும் அனுமன் நதி என்று தான் பெரும்பான்மையானோர் அழைப்பார்கள்.

    பெருமாள் பிச்சையாக தந்த பொன், பொருள், புகழ் போன்ற செல்வங்களை அலை பாயும் குரங்கு போன்ற மனதால் மது, மாது, சூது போன்றவற்றில் தொலைத்து விட்டு நிர்கதியாய் நிற்பார்கள் சிலர்.

    மனதை குரங்கை போல் அலைபாய விடாமல் இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு நேர்மையாக நடந்தால் இறைவன் நமக்கு தந்த வீடு,பேறு,புகழ் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும்.

    பெருமாள் பிச்சையாக தந்தது தான் இந்த செல்வங்கள் என என்னாமல் மனதை குரங்கை போல் அலை பாய விட்டு தான் தோன்றித்தனமாக நடந்தால் அனைத்து செல்வங்களும் வந்த வேகத்தில் காணாமல் சென்று விடும்.

    இதை உணர்த்துவதற்காகவே "பிச்சை கொடுத்தாராம் பெருமாள்...

    அதைப் பிடுங்கி தின்றாராம் அனுமார்"

    என சொலவடையாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.

    பேச்சு வழக்கில் திரித்து பழமொழியை தவறாக உச்சரித்து பழமொழியின் பொருளையும் திரித்து பெருமாளையே பிச்சை எடுக்க வைத்து விட்டனர்.

    "பிச்சை எடுத்தாராம் பெருமாள் பிடுங்கித் தின்றாராம் அனுமார்" என்பது தவறான சொலவடை.

    "பிச்சை கொடுத்தாராம் பெருமாள் பிடுங்கி தின்றாராம் அனுமார்" என்பது தான் சரியான சொலவடை ஆகும்.

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    • ஆயுளை நீட்டிப்பதற்கு தாது உப்புக்கள் மிகவும் அவசியமானவை.
    • நம் உடலில் 14 வகையான முக்கிய தாதுஉப்புகள் உள்ளன.

    நம் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும், ஆயுளை நீட்டிப்பதற்கும் தாது உப்புக்கள் மிகவும் அவசியமானவை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினத்திற்கும் பொருந்தும்.

    இந்த தாது உப்புகளின் வேலை என்ன? குறைந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அதைத் தடுக்க நாம் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

    நம் உடலில் 14 வகையான முக்கிய தாதுஉப்புகள் (மினரல்கள்) உள்ளன.

    இதில் 6 தாது உப்புக்கள் அதிக அளவில் தேவைப்படக்கூடியவை, அவை கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம் ஆகும்.

    குறைந்த அல்லது மிகக் குறைந்த அளவு தேவைப்படுபவைகள் இரும்பு மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், அயோடின், கோபால்ட், செலீனியம், மாலிப்டினம் ஆகியவைகள் ஆகும். இவை அனைத்தும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை.

    அனைத்துத் தாது உப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம் உடலில் 300-க்கும் அதிகமான வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உயிர் வேதியியல் எதிர்வினைகள் (பயோகெமிக்கல் ரியாக்சன்ஸ்) நடக்க உதவி புரிகின்றன.


    கால்சியம்

    கால்சியம் எல்லா வயதினருக்கும் தேவையான ஒன்று. நம் எலும்புகள் மற்றும் பற்களைப் பாதுகாக்கக் கால்சியம் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அத்துடன் கசியும் நம் ரத்தத்தை உறைய வைப்பதற்கும், இதயம், தசைகள், நரம்புகள், செல்கள், திசுக்கள் சீராக இயங்குவதற்கும் இது அவசியம்.

    கால்சியத்தின் குறைபாட்டால் உடல் வலி, எலும்பு வலி, எலும்பு உடைதல், சதைகள் துடிப்பது, உடல்சோர்வு, கண்ணில் புரை விழுதல், சீரற்ற இதயத் துடிப்பு, ஞாபகமறதி ஆகியவை ஏற்படுகின்றன. எனவே நம் அன்றாட வாழ்வில் கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.

    கால்சியம் நிறைந்த உணவுகள்: பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள், கொண்டைக்கடலை, கீரைகள், பாதாம், சால்மன் மீன், அத்திப்பழம், பருப்பு வகைகள், வெள்ளை பீன்ஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, விதைகள் மற்றும் ஆரஞ்சு ஆகியவையாகும்.


    பாஸ்பரஸ்

    இது ஒரு கனிமம் ஆகும். உடலில் எலும்புகள், பற்கள், உடல் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நம் உடலில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உற்பத்தியில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. தசை வலிமையைப் பாதுகாக்கிறது. சிறுநீரகங்களில் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

    நாம் உண்ணும் உணவுகளில் இருந்து உடலுக்குத் தேவையான பாஸ்பரஸைப் பெற்றுவிடலாம். இதன் குறைபாட்டினால் பசியின்மை, மனப்பதற்றம், எலும்பு வலி, உடல் இறுக்கம், உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படுகின்றன.

    பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகள்: முட்டை, சீஸ், தயிர், டார்க் சாக்லேட் மற்றும் பால் போன்ற உணவுகள்.


    மெக்னீசியம்

    நமது உடலிற்குத் தேவையான மிகவும் அத்தியாவசியமான 7 மினரல்களில் மிகவும் முக்கியமானது இந்த மெக்னீசியம். இதன் பற்றாக்குறையினால் நம் உடலில் எலும்பு சார்ந்த குறைபாடுகள், பசியின்மை, அடிக்கடி தலைவலி, குமட்டல், தசை வலி, தசைப்பிடிப்பு, தொடு திறன் குறைவு, தசைச் சுருக்கம் மற்றும் மன அழுத்தம் அதிகப்படியான கோபம், தூக்கமின்மை போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன.

    மேலும் இதயம் தொடர்பான சிக்கல்கள், சுவாசக் கோளாறுகள், மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலி மற்றும் வலிப்பு நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

    மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள்: உலர் பழங்கள், முந்திரி, பாதாம், முழு தானிய வகைகளான கோதுமை, சிகப்பரிசி மற்றும் கருப்பு கொண்டைக் கடலை, பச்சை காய்கறிகள், பிரக்கோலி, வாழைப்பழம், விதைகள் குறிப்பாக எள் மற்றும் சூரியகாந்தி விதை, மீன் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி, சாக்லேட், காபி.


    சோடியம்

    இது உடலின் எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாகும். உடலின் பெரும்பாலான சோடியம் ரத்தத்திலும் செல்களைச் சுற்றியுள்ள திரவத்திலும் உள்ளது. சோடியம் உடலில் நீர்ச் சத்தைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

    நரம்பு மற்றும் தசைச் செயல்பாட்டில் சோடியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சோடியமானது நம் உடலில் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.

    நம் உடலில் சோடியத்தின் அளவானது லிட்டருக்கு 135-145 மில்லி சமநிலையில் (இணையாக/சமமாக) இருக்க வேண்டும். இதன் அளவு குறையும்போது உடல் சோர்வு, தலைவலி, வாந்தி, மயக்கம், தலைசுற்றல், தசைப் பிடிப்பு, சுயநினைவை இழத்தல், மனப்பதற்றம், கவனிக்கும் திறன் குறைதல், சிந்திக்கும் ஆற்றல் குறைதல், வலிப்பு என்று பல வகையான நரம்புக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

    சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்: கேரட், நூல்கோல், பீட்ரூட், கீரைகள் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு.


    பொட்டாசியம்

    மன ஆரோக்கியத்திற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும், தசைகள் வலுப்பெறவும், உடலில் இருக்கக் கூடிய அழுக்குகள் வெளியேறவும், திரவ அளவை உடலில் சீராக வைத்துக் கொள்ளவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் பொட்டாசியம் மிகவும் அவசியமான ஒன்று.

    இதன் குறைபாட்டினால் சீரற்ற இதயத் துடிப்பு, தசைச் சோர்வு, தசைப் பிடிப்பு, மலம் இறுகல், மதமதப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

    பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்: வாழைப்பழம், ஆரஞ்சு, தேன், திராட்சை, கீரைகள், உருளைக்கிழங்கு மற்றும் புரோக்கோலி.


    இரும்பு

    இது நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கவும், சீரண உறுப்புகள் சரியாகச் செயல்படவும் உதவுகிறது. கருவுற்ற பெண்களுக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது, எனவே உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கு இது அவசியம். இரும்புச் சத்துக் குறைவினால் ரத்தச்சோகை பற்றி பகுதி 12-இல் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகள்: கீரைகள், முந்திரி, பாதாம், வால்நட்ஸ், உலர்ந்த பழங்கள், பேரீச்சம் பழம் மற்றும் மாதுளை.

    எவ்வளவு தேவை?

    தாது உப்புகள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு தேவை என்பதை பார்ப்போம்.

    கால்சியம்-1000 மிகி

    பாஸ்பரஸ்-700 மிகி

    மெக்னீசியம்-ஆண்கள் - 400 மிகி, பெண்கள் - 310 மிகி

    சோடியம்- 1200 மிகி - 1500 மிகி

    பொட்டாசியம்- 1600 - 2000 மிகி

    கந்தகம்-1000 மிகி

    இரும்பு-ஆண்கள் - 8 மிகி, பெண்கள் - 18 மிகி

    மாங்கனீசு-ஆண்கள் - 2.3 மிகி, பெண்கள் - 1.8 மிகி

    தாமிரம்-900 மிகி

    துத்தநாகம்-ஆண்களுக்கு 11 மிகி, பெண்களுக்கு 8 மிகி

    அயோடின்-150 மைகி

    கோபால்ட்-5-8 மைகி

    செலீனியம்-55 மைகி

    மாலிப்டினம்- 45 மைகி


    தாது உப்புகள் நிறைந்த உணவுகள்:

    மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வகையான தாதுஉப்புகளும் நம் உடலுக்குக் கிடைக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்- காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால், பால் சார்ந்த பொருட்கள், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகள் முளைக்கட்டிய தானியங்கள் போன்றவைகளாகும்.

    இவற்றில் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் வைட்டமின்களும் நிறைந்துள்ளதால் நாம் என்றுமே ஆரோக்கியமாகவும், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதையேதான் நம் முன்னோர்கள் "உணவே மருந்து" என்று கூறியிருக்கிறார்கள்.

    • திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.
    • புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான்.

    சித்திரை தொடங்கிக் கணக்கிடப்படும் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆறாவது மாதம். இம்மாதம் முப்பத்தியோரு நாட்களை உடையது.

    `மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்` என்று கண்ணன் கீதையில் சொன்னாலும், அன்பர்கள் புரட்டாசியையும் பெருமாளுக்குரிய மாதமாகவே கருதுகிறார்கள்.


    திருமாலின் வடிவமான திருப்பதி வேங்கடவனின் ஆசி பெற விரும்பும் அன்பர்கள், வேங்கடாஜலபதியை விசேஷமாகப் புரட்டாசியில் வழிபடுகிறார்கள்.

    அதற்கு ஒரு காரணம் உண்டு. வெங்கடாஜலபதி திருப்பதியில் அவதரித்தது ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான்.

    படிப்படியாய் மலையில் ஏறி திருப்பதி மலையப்பனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், நம்மை எப்படி கடக்க முடியும் என மலைக்க வைத்த துன்பங்களெல்லாம் படிப்படியாய்க் குறைந்து நிம்மதி தோன்றும் என்று அடியவர்கள் நம்புகிறார்கள்.

    வைணவர்கள் மட்டுமல்லாமல் சைவர்களில் பலரும் கூட புரட்டாசி சனிக்கிழமையன்று நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.

    வேங்கடவனுக்கு மாவிளக்கு ஏற்றிப் பிரார்த்தனை செய்யும் மரபு பல குடும்பங்களில் வழிவழியாக வருகிறது. அவர்களெல்லாம் மாவிளக்கு ஏற்ற புரட்டாசி சனிக்கிழ மையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    புரட்டாசி காலஞ்சென்ற நம் குடும்ப முன்னோர்களை வழிபடுவதற்குரிய மாதமாகவும் கருதப் படுகிறது. முன்னோருக்கு நீர்க்கடன் செலுத்தும் மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தில்தான் வருகிறது.

    பவுர்ணமி தொடங்கி அமாவாசை முடிய உள்ள பதினைந்து நாட்கள் அடங்கிய காலகட்டம் `மகாளய பட்சம்` எனப்படுகிறது. அந்தப் பதினைந்து நாட்களும் நம் முன்னோர் மேலுலகில் இருந்து வந்து நம்மோடு தங்கிச் செல்கிறார்கள் என்பதும் அந்த நாட்களில் அவர்களைப் பிரார்த்தனை செய்வதால் அவர்கள் ஆசியைப் பெறமுடியும் என்பதும் அன்பர்களின் நம்பிக்கை.

    பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துதல் பழங்காலம் தொட்டே தமிழர்களிடம் நிலவிவந்த ஒரு பழக்கம். திருக்குறளும் நீத்தாருக்கு நீர்க்கடன் செய்யும் அவசியத்தைப் பேசுகிறது.

    ஒருவன் தன் சம்பாத்தியத்தை ஐந்தாய்ப் பிரித்து அதில் ஒரு பங்கை நீத்தார் கடன் செலுத்தப் பயன்படுத்தவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    `தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்

    தான் என்றாங்கு

    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

    என்கிற திருக்குறளில் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லும்போது `காலமான முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான்` என்ற வரிசையில் பித்ருக்களை முதலில் வைக்கிறார் வள்ளுவர் என்பதும் கவனத்திற்குரியது.


    புரட்டாசி அமாவாசை மட்டுமா, புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான். அன்று உண்ணாநோன்பு மேற்கொண்டு பெருமாளைத் துளசியால் அர்ச்சித்து வழிபட்டுப் பலனடைகிறார்கள் பக்தர்கள்.

    தேவியை வழிபடும் நவராத்திரியும் இந்த மாதத்துப் பண்டிகைதான். இது பெண்களுக்கே உரிய பண்டிகை. `காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி ஆனால் கன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி' என்பன கண்ணதாசன் வரிகள்.

    அழகிய படிகளைக் கட்டி பொம்மைகளை அவற்றில் வரிசையாய்க் கொலு வீற்றிருக்கச் செய்து கொண்டாடப்படும் நவராத்திரி போன்றதொரு பண்டிகை உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    மண் பொம்மைகளைச் செய்து அவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கைவினைக் கலைஞர்கள் ஆண்டுதோறும் ஆவலாக எதிர்பார்ப்பது நவராத்திரிப் பண்டிகையைத் தான். வருடம் முழுவதற்குமான அவர்களின் வாழ்க்கைக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி விற்பனைதான் வழி செய்கிறது.

    கவுரி விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம் போன்ற பற்பல வித்தியாசமான விரதங்கள் எல்லாம் புரட்டாசியில்தான் வருகின்றன.

    புரட்டாசி ஆன்மிக மாதம் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் பற்பல மகான்கள் பிறந்திருப்பது இந்த மாதத்தில்தான் என்பதைச் சொல்லலாம்.

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் புரட்டாசியில் பிறந்தவர்தான். திருவள்ளுவரின் புலால் உண்ணாமைக் கோட்பாட்டைத் தீவிரத்தோடு வலியுறுத்திய மகான் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

    புரட்டாசி வள்ளலார் பிறந்த மாதம் என்பதால் அந்த மாதத்திலாவது அசைவ உணவை முற்றிலுமாகத் தவிர்க்கும் பழக்கம் சிலரிடம் காணப்படுவது பொருத்தமானதுதான்.

    வைணவச் சான்றோரும் தமிழ் வடமொழி இரண்டிலும் மிகச் சிறந்த நூல்களைப் படைத்தவருமான வேதாந்த தேசிகர் பிறந்ததும் புரட்டாசியில் தான்.

    திருமந்திரம் என்ற அரிய தத்துவச் செய்யுள் நூலைப் படைத்தவரும் திருவிடை மருதூரில் சமாதிக் கோயில் கொண்டிருப்பவருமான திருமூலர் அவதரித்ததும் ஒரு புரட்டாசி மாதத்தில்தான்.

    தாகூரால் மகாத்மா என அழைக்கப் பட்ட காந்தி அடிகளும் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடிகாத்த குமரன் பிறந்ததும் புரட்டாசியில்தான். ராமாயணம் என்ற மகத்தான இதிகாசத்தைப் படைத்த ஆதிகவி வால்மீகி அவதரித்ததும் புரட்டாசி அனுஷ நட்சத்திரத்தில்தான்.

    மறுமையில் வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியச் செயல்களைச் செய்யும் மாதம் இது என்பதாலோ என்னவோ, இம்மையில் வீடு வாங்குதல் போன்ற செயல்களைப் பொதுவாகப் புரட்டாசி மாதத்தில் செய்வதில்லை.

    புதுமனை புகுவிழாக்களையோ புது வியாபாரம் தொடங்குதல் போன்றவற்றையோ அதுபோன்ற எந்தப் புது முயற்சியையுமே புரட்டாசியில் செய்யும் வழக்கமில்லை.

    பூண்டு வெங்காயம் போன்றவற்றை இந்த மாதத்தில் உணவில் சேர்க்காமல் தவிர்ப்பவர்கள் உண்டு. புரட்டாசி மாதம் முழுவதிலும் முடியவில்லை என்றாலும் புரட்டாசி சனிக்கிழமை அன்றாவது அசைவத்தையும் பூண்டு வெங்காயத்தையும் தவிர்ப்பவர்கள் நிறையப் பேர் உண்டு.

    புரட்டாசி சனிக்கிழமையன்று முழுவதுமாக உண்ணாவிரதம் இருப்பவர்களும் கூட உண்டு.

    திருமாலைப் பற்றிய பக்திப் பனுவல்களில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நாராயணீயம் முக்கியமானது. நாராயணனைப் போற்றி நாராயண பட்டதிரி அருளிய நூலே நாராயணீயம்.

    குருவாயூரப்பனை முன்னிலைப் படுத்தி அவருடன் பேசுவது போலான உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை எப்போது பாராயணம் செய்தாலும் புண்ணியம்தான். என்றாலும் திருமாலுக்குரிய புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வது விசேஷமானது.

    ஒரு பக்தி நூலைப் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிச் சொல்லக் கூடியது அந்த நூலின் இறுதியில் அமைந்து ள்ள பலச்ருதி என்ற பகுதி.

    நாராயணீயத்தின் பலச்ருதி என்பது உடல் ஆரோக்கியம்தான். நம் உடல் நலனை வலுப்படுத்தக் கூடிய மந்திர சக்தி நிறைந்த சுலோகங்களைக் கொண்டது நாராயணீயம்.

    பத்துப் பத்துக் கவிதைகளாக அமைந்த நாராயணீயத்தின் நூறு தசகங்களில் ஒவ்வொரு தசகத்தின் இறுதியாக அமையும் பாடலிலும் `என் நோயிலிருந்து என்னைக் காத்தருள் இறைவா!` என்ற பொருளுடைய வாக்கியம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

    நாராயணீயத்தைப் புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வதால் நோய்நீங்கி நல்ல உடல்நலத்தோடு கூடிய ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முடியும்.

    திருமாலின் ஆயிரம் நாமங்களைக் கூறி அவரைத் துதிக்கும் சகஸ்ர நாமத்தையும் புரட்டாசியில் நாள்தோறும் ஜபிப்பது நல்ல பலனைத் தரும்.

    புரட்டாசியில் செய்யும் ராமநாம ஜபம் அதிகப் பலன்தரக் கூடியது. வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், பாகவதம், மகாபாரதம் முதலிய திருமாலின் பெருமைகளைப் பேசும் நூல்களை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது சிறப்பு.

    கண்ணன் அருளிய கீதையை மனமொன்றி வாசித்து அதுசொல்லும் கருத்துகளை ஆழ்மனத்தில் சிந்திப்பதற்குரிய விசேஷ மாதமும் புரட்டாசியே.

    பலர் பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதாக மனத்தில் வேண்டிக் கொள்வதுண்டு. ஆனால் உலகச் சூழலில் பற்பல காரணங்களால் அத்தகைய நேர்த்திக் கடன்களை உடனுக்குடன் செலுத்த இயலாமல் போவதும் உண்டு.

    செலுத்தாமல் தாமதமான நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதற்குரிய மாதமும் புரட்டாசிதான். விட்டுப்போன நேர்த்திக் கடன்களைப் புரட்டாசி மாதத்தில் செலுத்தினால், இறைவன் அந்தத் தாமதத்தை மன்னித்து அன்பர்களுக்கு அருள் புரிவார் என நம்பப் படுகிறது.

    புரட்டாசியில் திருப்பதி, ஸ்ரீரங்கம், குணசீலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலான வைணவத் திருத்தலங்களில் பிரம்மோத்சவத் திருவிழா கொண்டாடப் படுகிறது.

    பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் காலையும் மாலையும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும். திருப்பதி பிரம்மோத்சவமும் திருவரங்க பிரம்மோத்சவமும் மிகப் பிரசித்தமானவை.

    புரட்டாசி மாதத்தில் நாம் வழிபடும் திருமால், தொன்றுதொட்டுத் தமிழர்கள் வழிபட்டுவரும் தெய்வமாவார். தொல்காப்பியம் என்ற மிகப் பழைய தமிழ் இலக்கண நூல் திருமாலை `மாயோன்` என்ற பெயரால் குறிப்பிடுகிறது.

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் `ஆய்ச்சியர் குரவை` என்ற பகுதியில் மதுரையில் வாழும் இடைக்குலப் பெண்கள் திருமாலைப் போற்றுவதாக அமைந்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    `மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும்

    போற்ற

    படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத்

    தூது

    நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே!

    நாராயணா என்னா நா என்ன நாவே!'

    என்றெல்லாம் அந்தப் பகுதியில் திருமாலைப் போற்றுகிறார் சமணப் புலவரான இளங்கோ அடிகள்.

    படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை இறைச்சக்தியின் மூன்று பெரும் தொழில்கள். அவற்றில் காக்கும் தொழிலைச் செய்பவர் திருமால். அவருக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் அவரைப் பிரார்த்திப்பதன் மூலம் நம் இன்னல்கள் அனைத்திலிருந்தும் நாம் காக்கப் படுவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாது இருக்கும் போது கண் பாதிப்பு ஏற்படலாம்.
    • குண்டாக இருப்பவர்களை மட்டுமே சர்க்கரை நோய் பாதிக்கும் என்பது தவறு.

    மருத்துவ விஞ்ஞானம் என்பது தொடர்ந்து ஆய்வு செய்து பல தீர்வுகளை கண்டுபிடிக்கும் வழியில் செயல்படுகிறது. 'பென்சிலின்' என்ற ஒரு மருந்து கண்டு பிடிக்கப்படாமல் இருந்திருந்தால இன்றைய ஜனத் தொகையில் முக்கால் பங்கு அழித்திருக்கும் எனலாம்.

    கடுமையான கிருமி தாக்குதல்களை தடுக்கும் மருந்துகள், நோய்களை தவிர்க்கும் முறையாக 'வாக்சின்' (தடுப்பூசி) மருந்துகள் என மக்களை தாக்கும் நோய் என்ற அரக்கனோடு மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் போராடி மனித குலத்தினை காத்து வருகின்றன.

    நோய் தாக்குதலை தவிர்க்கும் முறையினையும் இந்த ஆய்வுகள் மேற்கொள்கின்றன. அவ்வகையில் சர்க்கரை நோய் பிரிவு-2ஐ தவிர்க்கும் விதமாக பல கருத்துக்களை ஆய்வுகள் வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆய்வாளர்கள் இப்போது கூறுவது என்ன தெரியுமா?

    இரவு நேரங்களில் அதிக ஒளி கொண்ட விளக்குகளின் கீழ் பணிபுரிபவர்களுக்கு உடல் நலத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகின்றது என்பதுதான். இந்த ஒளி நீரிழிவு பிரிவு 2 பாதிப்பினை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்கின்றனர். இதனை பல ஆய்வுகள் உறுதியும் செய்து உள்ளன.

    இரவில் அதிக ஒளி கொண்ட மின்சார விளக்குகளை தவிர்ப்பது செலவில்லாத, எளிமையான நீரிழிவு, தவிர்ப்பு முறையாகக் கூறுகின்றனர்.

    அதிக வருடங்கள் இரவு நேர ஷிப்ட் வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருக்குமாயின்- இரவு நேர செயற்கை ஒளி காரணமாக பாதிப்பு கூடுகின்றது என்கின்றனர்.

    உடலின் Circadianrhthm முறையில் சீர்குலைவு ஏற்படுவதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். இரவு 12.30 மணி முதல் காலை 6 மணி வரையில் பாதிப்பு கூடுதலாகவே உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

    இரவில் 7 மணி முதல் 9 மணி நேர உறக்கம் என்பதும் சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு முறையாகின்றது.

    இந்த ஒரு முறை என்பது அதாவது இரவு நேரம் தொடர்ந்து அதிக செயற்கை ஒளியில் இல்லாது இருப்பது ஒன்று மட்டுமே சர்க்கரை நோய் தவிர்ப்பு அல்லது தள்ளி போடும் என்பதாகிறது. இதுவும் ஒருவர் கடைபிடிக்க வேண்டிய ஒன்று எனலாம்.

    இரவு ஷிப்ட் பார்ப்பவர்களால் நோயாளிகள் உயிர் பிழைக்கின்றனர். பல மனித சமுதாயத்திற்கான சேவைகள் அதாவது மின்சாரம், பாதுகாப்பு என பல சேவைகள் நடைபெறு கின்றன. இவர்களை நாம் கை கூப்பி வணங்குவோம். ஆனால் இரவில் நைட் ஷோ சினிமா, கேளிக்கை பார்ட்டிகள், விடிய விடிய அரட்டை இவையெல்லாம் தவிர்த்து விடலாமே.

    மின்சாரம் என்ற ஒன்று வந்த பிறகு, மனிதனின் வாழ்க்கை வெகுவாய் முன்னேற்றம் அடைந்தது. ஆனால் பகல் செயற்கை ஒளியால் நீண்டது. இரவு சுருங்கியது. தேவையில்லாது விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தவறாய் பயன்படுத்துவதனை தவிர்க்கலாமே.

    ஆதிகால மனிதன் உணவைத் தேடி அலைந்தான், நடந்தான், ஓடினான். வழியில் எந்த டீ கடையும், பிஸ்கட்டும் இருக்கவில்லை. உணவில்லாத நேரங்களில் பட்டினி கிடந்தான்.

    இன்றைய மனிதனோ ரைஸ்மில் போல் சாப்பிடத்தொடங்கிய நாள் முதல் மூச்சு நிற்கும் காலம் வரை எதனையோ மெல்கிறான். கொரிக்கின்றான், குடிக்கின்றான்.

    அவனது வாய்க்கும், குடலுக்கும் ஓய்வு என்பதே இருப்பதாகத் தெரியவில்லை. உபவாசம், விரதம் என மேற்கொள்பவர்கள் எப்படியோ ஒரு கட்டுப் பாட்டினை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    ஓயாத குடல், ஜீரண மண்டல உறுப்புகளின் உழைப்பு அவைகளை பலவீனம் ஆக்குகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு என வந்து விடுகின்றன.

    உடலுக்கு உழைப்பு இல்லை, கண்ணுக்கு ஓய்வு இல்லை, குடலின் கழிவுகள் தேக்கம் என்ற வாழ்க்கை முறை மனிதனின் உடல் நலம் மன நலம் இரண்டி னையுமே கெடுத்து விடுகின்றது.

    சர்க்கரை நோய் வரும் போது கூடவே இருதய நோய் பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு என கைகோர்த்து வந்து விடுகின்றன. சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகின்றது. மனிதன் பூலோகத்திலேயே நரக வாழ்க்கை வாழும் நிலை ஏற்படுகிறது.


    வீட்டில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிக்கு சர்க்கரை நோயா? நீங்க உஷாராயிடுங்க. Hbaic-1 சோதனை செய்து கொள்ளுங்கள். பயிற்சியாளர் ஆலோசனைப்படி உடற்பயிற்சி முறைகளை மாற்றுவது, சற்று கூடுதல் படுத்துவது போன்றவற்றினை செய்யுங்கள்.

    உணவு முறையில் சத்துணவு நிபுணரின் அட்வைஸ் வேஸ்ட் என்று நினைக்காதீர்கள். ஒரு சேர அனைத்து முயற்சிகளும் தான் ஒருவரை ஆரோக்கியமாக வைக்க முடியும்.

    ஸ்ட்ரெஸ் என்பது ஒரு எமன். தியானமும், யோகாவும் அதனை விரட்டி அடித்து விடும். வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது சரியா? தவறா? என்று இப்போது நீங்களே உணர்ந்து இருப்பீர்கள்.

    உடல் பருமன், நடுத்தர வயது (30ஐ தாண்டி னாலே போதும்) பருத்த வயிறு இவற்றோடு நாம் போராட வேண்டாம். உடனே விரட்டி அடித்து விடுவோம். ஆரோக்கியமான முறையில் வயது கூடட்டும்.

    காலை முதல் இரவு வரை 'பொத்'தென இடித்த புளி போல் ஒரே இடத்தில் அமர்ந்து வாழ்வதால் நோய்களின் கூடாரமாக ஆகி விடுகின்றீர்கள். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடங்கள் சுறுசுறுப்பாய் நடக்க வேண்டும்.


    * சர்க்கரை நோய் பயத்தால் சிறிது கூட சர்க்கரை வேண்டாம் என்று இருப்பவர்களையும் பார்க்கின்றோம். அடிக்கடி ஸ்வீட், கேக் என சாப்பிடுபவர்களுக்கும் எடை கூடும் போது சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் ஆகின்றது.

    * குண்டாக இருப்பவர்களை மட்டுமே சர்க்கரை நோய் பாதிக்கும் என்பது தவறு. குண்டாக இருப்பவர்களுக்கு பாதிப்பு அபாயம் அதிகம் என்பதே ஆய்வு கூறும் கருத்து.

    * சர்க்கரை நோய் உள்ளவர்கள் வண்டி ஓட்டக்கூடாது என்பது இல்லை. நல்ல கட்டுபாடு, மருந்துகள், மருத்துவ செக்-அப் இவை இயல்பான வாழ்க்கைக்கு உதவும்.

    * சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாது இருக்கும் போது கண் பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

    * நல்ல உடற்பயிற்சியும், முறையான உணவும் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

    * நீங்கள் ஆயுர் வேதம் போன்ற மாற்று முறை சிகிச்சை எடுத்துக் கொள்பவராக இருந்தால் அதனை உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் கூறுவது உங்களுக்கு பாதுகாப்பாய் அமையும்.

    * இன்சுலின் எடுத்துக் கொள்வதும் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த உதவிதான். இதில் பல பிரிவுகள் அளவு முறைகள் உள்ளன. தேவைப்படும் போது மருத்துவர் பரிந்துரை செய்வார். முறைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    'யாரும் உங்களை கொல்வதில்லை, நீங்கள் தான் உங்களை கொன்று கொண்டு இருக்கின்றீர்கள்' என்கி றார் டாக்டர் மென்டி- தலை சிறந்த சத்துணவு நிபுணர். இவர் கூறுவது "Intermitlnt Fasting" முறைகளை பயன்படுத்து வதன் மூலம் அதிக உடல் நலத்தினை பெற முடியும் என்பதுதான்.

    ஆனால் இதனை தகுந்த பயிற்சியா ளரின் வழி காட்டுதல் மூலமே மேற்கொள்ள வேண்டும். பொதுவில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தண்ணீர் தவிர வேறு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது முதல் படியாக மேற்கொள்ளலாம்.

    மாதம் இருமுறை பழம் தவிர வேறு எதுவும் எடுக்காது இருப்பது, மாதம் இரு முறை நீர் மட்டும் பருகி விரதம் இருப்பது போன்றவை அவரவராகவே மேற்கொள்கின்றனர். நன்மைகள் பல இருந்தாலும் தகுந்த வழிகாட்டுதல்கள் அவசியம்.

    இந்த "Intermitlent Fasting" முறையில் எடை குறைப்பு,சர்க்கரை அளவு கட்டுப்படுதல், கெட்ட கொழுப்பு குறைதல், நல்ல மனநிலை, உடலில் நச்சு நீக்கம் ஆகியவை ஏற்படுகின்றன.


    சில குறிப்புகள்:

    * வீட்டில் உள்ள தூசு, வெளியில் உள்ள தூசு, மாசு இவற்றின் காரணமாக உலக அளவில் மில்லியன்கள் எண்ணிக்கையில் இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வீட்டினை தூசு இன்றி சுத்தமாக வைத்திருங்கள். சுற்றுப்புறத்தினை சுத்தமாகவைத்திருங்கள். வெளியில் மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.

    * 12 முதல் 17 வயதுள்ள குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்ற னர் என வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. நம் வீட்டு குழந்தைகள் மீதும் நாம் கவனம் செலுத்துவோமே.

    * இன்றைய மருத்துவ உலகில் கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. கல்லீரல் உடலில் எண்ணற்ற வேலை களைச் செய்கின்றது. இதன் பாதிப்பு கவனிக்கப்படா விட்டால் ஆபத்தான நிலை வரை கொண்டு விடலாம். ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை, உணவு முறை மூலம் சரி செய்ய முடியும்.

    பலருக்கு கொழுப்பு, கல்லீரல் பாதிப்பு என்பது ஆரம்ப நிலையில் அவ்வளவாகத் தெரிவதில்லை. ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் போன்றவை மூலம் இதனை கண்டுபிடிப்பர் எதேச்சையாக கண்டு பிடிப்பர்.

    * அதிக சோர்வு, குன்மம், நெஞ்செரிச்சல், வலது பக்க மார்பக கூடு கீழே லேசான வலி, அதிக காற்று, பசியின்மை, வயிற்றுப் பிரட்டல் போன்றவை இருந் தால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    பாதிப்பு கூடும்போது உடலில் அரிப்பு, மஞ்சள் காமாலை, சிகப்பு சிறிய திட்டுகள், இரவு கண் பாதிப்பு, வெள்ளை நகங்கள் என்ற அறிகுறிகளைக் காட்டும்.

    தகுந்த மருத்துவர் ஆேலாசனை, சத்துணவு நிபுணரின் வழி காட்டுதல் போன்றவை சிறந்த நன்மை பயக்கும். கவனத்துடன் செயல்படுவோம்.

    ×