search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டவாளம்"

    திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் காங்கிரீட் கல்லை வைத்த சம்பவத்தில் போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு வாலிபரை கைது செய்தனர்.
    விருதுநகர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-கள்ளிக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சில தினங்களுக்கு முன்பு ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே 2 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக கடந்த 26-ந் தேதி திருமங்கலம் அருகே இரவு 10 மணி அளவில் தண்டவாளத்தில் காங்கிரீட் கல் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தின் குறுக்கே ஒரு பொருள் கிடப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்தார். எனினும் அந்த என்ஜினின் முன்பகுதி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் கல் மீது மோதி கடந்து சென்றது.

    இதுகுறித்து என்ஜின் டிரைவர் மதுரையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இரவோடு இரவாக அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

    அந்த பகுதியில் காலி மதுபாட்டில்கள், உணவு பொட்டலங்கள் சிதறிக்கிடந்தன. இதனால் குடிபோதையில் யாரேனும் காங்கிரீட் கல்லை வைத்தார்களா அல்லது ரெயிலை கவிழ்க்க நடந்த சதியா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சரத்குமார் தாக்கூர் நேற்று அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் குருசாமி ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு துரிதமாக விசாரணை நடந்தது.

    இந்த சம்பவம் நடந்த இடம் அருகே ராணுவத்தில் பணிக்கு சேர விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியது. இதைத்தொடர்ந்து அங்கு படிக்கும் மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அங்கு படித்த கள்ளிக்குடி அருகே திருமால் என்ற கிராமத்தை சேர்ந்த திருவேட்டை என்பவரது மகனான அழகுமலை கண்ணன்(வயது19) என்பவரிடமும் விசாரணை நடந்தது. அப்போது அவர், விளையாட்டாக தண்டவாளத்தில் காங்கிரீட் கல்லை வைத்ததாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் கல் வைத்த நபரை பிடித்த ரெயில்வே போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
    தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    தூத்துக்குடியில் இருந்து நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இரவு 11.30 மணி அளவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியை ரெயில் கடந்தது.

    அப்போது ரெயில் என்ஜின் பெரிய கல் மீது மோதுவது போன்ற பலத்த சத்தம் கேட்டது. இருப்பினும் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தவில்லை.

    இதுதொடர்பாக என்ஜின் டிரைவர் திருமங்கலம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து சென்று சிவரக்கோட்டை தண்டவாள பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் கற்கள் சுக்குநூறாக சிதறி கிடந்தது. விசாரணையில் மர்ம நபர்கள் வேலிக்கு போடும் 4 அடி நீளமுள்ள கல்லை தண்டவாளத்தின் நடுவே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

    ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லை வைத்து சதி செயலுக்கு முயன்றது யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.

    சில வாரங்களுக்கு முன்பு திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அப்போது திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரெயில்கள் மோதும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படும் புகாரின் பேரில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். #TirumangalamStation
    மதுரை:

    மதுரையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு செங்கோட்டை பயணிகள் ரெயில் புறப்பட்டது. 5.40 மணிக்கு திருமங்கலம் சென்றடைந்த ரெயில், சிக்னல் கிடைக்காததால் அங்கேயே நிறுத்தப்பட்டது.

    புறப்பட்ட 10 நிமிடத்துக்குள்ளேயே ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். திருமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது.



    இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபின் பயணிகள் ரெயில் புறப்பட்டது.

    200 மீட்டர் தூரம்கூட சென்றிருக்காத நிலையில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு ரெயில் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

    ரெயில் நிலையம் என்பதால் இரண்டு ரெயில்களும் மிகக்குறைந்த வேகத்தில் வந்துகொண்டிருந்தது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்தவர்களும், பயணிகளும் பீதியடைந்து கூச்சலிட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இரண்டு என்ஜின் டிரைவர்களும் உடனே ரெயில்களை நிறுத்தினர்.

    டிரைவர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின்னர் மதுரை -செங்கோட்டை பயணிகள் ரெயில் மீண்டும் ரெயில் நிலையத்துக்கு வந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டை- மதுரை ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    திருமங்கலத்துக்கு 5.40 மணிக்கு வந்த மதுரை- செங்கோட்டை பயணிகள் ரெயில் 2 மணி நேரம் தாமதத்துக்கு பின் 7.40-க்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பெண்களும், முதியோர்களும் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் மதுரை - செங்கோட்டை இருமார்க்க ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்து மோதும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படும் புகாரின் பேரில், மதுரை கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் பீம்சிங் மீனா, திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயகுமார், கண்ட்ரோலர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம்  செய்து ரெயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். #TirumangalamStation
    கடத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகேயுள்ள புட்டி ரெட்டிப்பட்டி ரெயில் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது45). தொழிலாளியான இவர் நேற்று காலை அந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செவிசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆறுமுகத்திற்கு ரேவதி (40) என்ற மனைவியும், மாதேஷ் (21), பாலசுப்பிரமணியன் (19) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, கோவை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் யார்டு அருகே உள்ள தண்டவாளத்தை இரவு 10.15 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள் சோதனை செய்தபடி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்ட ஊழியர்கள் உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஊழியர்கள் தண்டவாள விரிசல் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் அவ்வழியாக வந்த கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், எர்ணாகுளம் வராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12.45 மணியளவில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரெயில்கள் அந்த பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது.

    ரெயில்கள் 2 மணி நேரம் நிறுத்தபட்டதால் பயணிகள் குறித்த நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    விருத்தாச்சலம் பயணிகள் ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்மநபர்கள் யாரோ தண்டவாளத்தின் மீது சிமெண்ட் சிலாப்பை வைத்துள்ளதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் ரெயில் இன்று காலை 9 மணிக்கு ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு விருத்தாசலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது கூத்தக்குடி முகாச பாரூர் என்ற இடத்தில் மர்மநபர்கள் யாரோ தண்டவாளத்தின் மீது சிமெண்ட் சிலாப்பை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இந்த சிலாப்பின் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதனால் சிலாப் தூள், தூளாக உடைந்து சிதறியது. இதை கவனித்த என்ஜீன் டிரைவர் உடனே ரெயிலை அங்கு நிறுத்தி, விட்டு, உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து உயர் அதிகாரிகள், ஆர்.பி.எப். போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு பார்வையிட்டனர். மேலும் தண்டவாளம் சேதமாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த உடைந்த சிலாப் துண்டுகளை அகற்றி, தண்டவாளத்தை சரி செய்தனர். அதன் பிறகு ரெயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு விருத்தாசலத்தை நோக்கி சென்றது.

    ரெயிலை கவிழ்க முயன்ற நாசகார கும்பல் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க கூத்துக்குடி மற்றும் முகாச பாரூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலத்தின் தனாப்பூர் நிலையம் அருகே இன்று மாலை ஜன் சதாரன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #JanSadharanExpress #Danapurstation
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் செயற்கைக்கோள் நகரம் என்றழைக்கப்படும் தனாப்பூர் நிலையத்தில் இருந்து டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியை இணைக்கும் வகையில் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜன் சதாரன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் தனாப்பூர் நிலையம் அருகே இன்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த ரெயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #JanSadharanExpress #Danapurstation
    ஆத்தூர் அருகே இன்று காலை பலத்த மழை பெய்ததில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சேலம் ரெயில் வந்ததால் பொதுமக்கள் துணியை காட்டி நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் ஆத்தூர் அருகே உள்ள அம்மம் பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் மண் அரிப்பு காரணமாக தொங்கி கொண்டிருந்தது. அந்த சமயம் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி, பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரெயில் என்ஜீன் டிரைவரை பார்த்து சிகப்பு துணியை காட்டி ரெயிலை நிறுத்துமாறு கூறினார்கள். உடனே டிரைவரும் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

    இதையடுத்து, தண்டவாளத்தில் மண் அரிப்பு குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்தி ரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது.

    பின்னர், சேலம்- விருத் தாச்சலம் ரெயில் அங்கிருந்து 8.05 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக இந்த ரெயில் தினமும் காலை 9 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். ஆனால், இன்று ½ மணி நேரம் தாமதமாக ரெயில் சேலம் வந்து சேர்ந்தது.

    இதனால் ரெயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகள், வேலைக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    தக்க சமயத்தில் பொதுமக்கள் சிகப்பு துணியை காட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சோர்ட் நேற்று காட்பாடி பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது துருப்பிடித்த பகுதிகளை மாற்ற உத்தரவிட்டார். #KatpadiJunction
    காட்பாடி:

    காட்பாடி வழியாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. காட்பாடியில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்னை செல்லும் ரெயில்கள் சில நேரங்களில் அரக்கோணம் உள்பட சில இடங்களில் தடம் புரண்டு விடுகிறது. இதனால் ரெயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சோர்ட் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    அவர் காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரத்திற்கும் சென்று பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தார். தண்டவாளங்கள் உறுதியாக இருக்கிறதா?, துருப்பிடித்திருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

    சில இடங்களில் தண்டவாளங்கள் துருப்பிடித்து காணப்பட்டது. அதை பார்த்த அவர் துருப்பிடித்த பகுதிகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் பார்வையிட்டார்.

    அப்போது காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், டிவிஷனல் என்ஜினீயர் அருண் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து அவர் சேவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  #KatpadiJunction
    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள ரெயில்வே பாதையை நக்சல்கள் சேதப்படுத்தியதால் அந்த தடத்தில் வந்த சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து இரும்புத் தாது ஏற்றிக் கொண்டு விசாகப்பட்டினம் சென்ற சரக்கு ரயில் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தை கடக்கும்போது இஞ்சின் உட்பட 8 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



    இந்த விபத்து நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் அதிகாரி கம்லோசன் காஷியப் கூறுகையில், சிறிய ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த ரெயில் பாலத்தை நக்சலைட்டுகள் நாசப்படுத்தியதாகவும், அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, விபத்து ஏற்பட்ட சுற்றுவட்டாரங்களில் நக்சலைட்டுகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #Chhattisgarh
    அரியலூர் அருகே தண்டவாளத்தின் நடுவே விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் மீது ரெயில் மோதியதில் என்ஜின் மற்றும் பெட்டிகளில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ரெயில் நிலையத்திற்கும் ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே பெரியாக்குறிச்சி பகுதியில் ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

    இந்த சுரங்கப்பாதையை கடந்துதான் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் நிரம்பி விடும். இருப்பினும் பொதுமக்கள் சிரமத்துடன் தண்ணீரை கடந்து சென்று வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. நேற்று சிலுப்பனூர் கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அந்த வழியே சென்றனர்.

    சுரங்கப்பாதை அருகே செல்லும் போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்ததால் பாதையை கடக்க அச்சமடைந்தனர். இதையடுத்து சுரங்கப்பாதை அருகே அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் மோட்டார் சைக்கிளை தூக்கிக்கொண்டு ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

    அப்போது மதுரையில் இருந்து சென்னையை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் வருவதை அறியாத இருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்தனர். ரெயில் அருகே வந்ததும் சத்தம் கேட்கவே, அதிர்ச்சியடைந்த இருவரும் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

    பின்னர் உயிர் பிழைக்க மோட்டார் சைக்கிளை தண்டவாளத்திலேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அதிவேகமாக வந்த ரெயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரெயில் என்ஜினில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த தீ என்ஜின் மற்றும் அதன் பின்னால் இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது.

    உடனடியாக சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினர். இதையடுத்து பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ரெயிலில் இருந்த தண்ணீரை கொண்டு என்ஜின் மற்றும் பெட்டிகளில் பற்றிய தீயை அணைத்தனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இல்லையென்றால் மிகப் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கும்.

    தொடர்ந்து டிரைவர்கள் என்ஜின் மற்றும் பெட்டிகளில் ஏதாவது பழுது ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து, ரெயிலை இயக்கினர். இதன் காரணமாக பெரியாக்குறிச்சியில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    விருத்தாசலம் சென்றதும் என்ஜின் டிரைவர் நடந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் எரிந்த மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    மோட்டார் சைக்கிளின் வாகன பதிவு எண்ணை வைத்து விசாரிக்கும் போது, மோட்டார் சைக்கிள் செந்துறை பகுதியை சேர்ந்த அன்பழகன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×