search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்"

    மது குடித்து விட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சகோதரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சூரைக்குடியை சேர்ந்தவர் மீனாள். இவருக்கு பிரதாப் (வயது29), பிரதீஷ் (24) ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    பிரதாப்புக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர் சென்னையில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த பிரதாப் மது குடித்து விட்டு வந்து தாயாரிடம் ஏன் மீன் குழம்பு வைக்கவில்லை என்று தகராறு செய்துள்ளார். இதேபோல் அவரது தொந்தரவு அதிகரித்துள்ளது. இதனால் பிரதீசுக்கும், பிரதாப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்று நள்ளிரவு மதுகுடித்து விட்டு வந்து பிரதாப் வீட்டு திண்னையில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரதீஷ் சகோதரரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினார்.

    இதனால் உடல் கருகிய பிரதாப் வலியால் அலறி துடித்தார். அவரது கூக்குரல் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிரதாப்பை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக செட்டிநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரபு வழக்குப்பதிவு செய்து பிரதீசை தேடி வருகிறார்.
    தாய் என்ற அமைப்பை துவங்கியிருக்கும் ராகவா லாரன்ஸ், அதற்கான விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார்.
    நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் துவங்கியுள்ளார்.

    தங்கள் பெற்றோர்களை யாரும் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். 



    அன்னையர் தினத்தை முன்னிட்டு இப்பாடலை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இவ்விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும் அடுத்த படத்தில் பாட வாய்ப்பு தருவதாகவும் கூறியிருக்கிறார் லாரன்ஸ்.


    திருப்பதி அருகே தாய், மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அடுத்த சூர்யாபேட்டையை சேர்ந்தவர் மாதவி (வயது 34). இவருக்கு கார்த்திக் (18) என்ற மகன் உள்ளார். மாதவி கடந்த 2 ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிபட்டு வந்தார்.

    இதற்காக ஐதராபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் குணமடையாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாதவி தன்னுடைய மகன் கார்த்திக்குடன் ஸ்ரீசைலம் மலை பகுதியில் உள்ள சாட்சி கணபதி கோவிலுக்கு நேற்று வந்தார்.

    பின்னர் தான் தயாராக கொண்டு வந்த பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து தன்னுடைய மகன் கார்த்திக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.

    பின்னர் தனது உறவினர்களுக்கு போன் செய்து எனக்கு கேன்சர் நோய் உள்ளதால் நான் இனி பிழைக்க மாட்டேன். அதனால் நானும் என்னுடைய மகனும் பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறிவிட்டு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.

    இதுகுறித்து உறவினர்கள் ஸ்ரீசைலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சின்னய்யா மற்றும் போலீசார் விரைந்த வந்து மயங்கி கிடந்த தாய் மகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இவர்களை சோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியந்தோப்பில் வீடு இடிந்து தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.
    பெரம்பூர்:

    புளியந்தோப்பு கன்னிகாபுரம் நியூ காலனியில் காசியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்பவர் வெங்கடேசன் (வயது 32). இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது மனைவி சஞ்சிதா (28), மகள் யுவஸ்ரீ (7), மகன் கிருஷ்ணகுமார் (3) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று வீட்டின் மேல்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சஞ்சிதா, யுவஸ்ரீ ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயம் அடைந்த வெங்கடேசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற விமானத்தில் ஒரு பெண் பயணி தனது குழந்தையை மறந்து வந்து விட்டதாக கூறியதால் அந்த விமானம் அவசரமாக ஜெட்டாவில் தரையிறங்க நேர்ந்தது. #Saudiplane #jeddahairport #motherforgetsbaby
    ரியாத்:

    சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் அப்துல் அஜிஸ் விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சமீபத்தில் சவுதி நாட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் புறப்பட்டு சென்றது.

    வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதில் வந்த ஒரு பெண், தனது குழந்தையை ஜெட்டா விமான நிலையத்தின் வரவேற்பு பகுதியில் மறந்து விட்டுவிட்டு, விமானத்தில் ஏறி விட்டதாகவும், குழந்தையை கொண்டு வருவதற்காக விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் பணிப்பெண்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. விமானியும் ஜெட்டா விமான நிலையத்தை தொடர்புகொண்டார். நிலைமையை எடுத்துக்கூறி அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

    வழக்கமாக, விமானங்களில் மிகவும் ஆபத்தான கோளாறு, பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இதுபோன்ற அனுமதி அளிக்கப்படும். மற்றபடி, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு அந்த பகுதியில் வட்டமடிக்கவோ, உடனடியாகவோ தரையிறங்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.



    இந்நிலையில், குழந்தையை தவறவிட்டு விமானத்தில் ஏறிவிட்ட அந்த தாயின் வேண்டுகோளின்படி ஜெட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க ஜெட்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சிறிதுநேர ஆலோசனைக்கு பின்னர் அனுமதி அளித்ததாக சவுதி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

    கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் அந்த விமானி பேசிய பதிவுகளையும் சில ஊடகங்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளன. #Saudiplane #jeddahairport #motherforgetsbaby
    கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை மாவட்ட எல்லை பகுதியான கே.ஜி. சாவடி அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா தேவி (30).

    இவர்களுக்கு சாய்மகதி (4) என்ற பெண் குழந்தை இருந்தது. ஜெகதீசுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தகராறு உருவானது.

    அதன் பின்னர் காஞ்சான தேவி மற்றும சாய்மகதி ஆகியோர் மாயமானார்கள். இது குறித்து கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான தாய்-மகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் காஞ்சனா தேவியும், சாய்மகதியும் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு கட்டி இறங்கி தாய் -மகள் உடலை மீட்டனர்.

    குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு காஞ்சனா தேவி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஆரல்வாய்மொழியில் தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய 10 பேர் மீது போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூரைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது மனைவி அமுதா, (வயது 40).

    இவர்களது மகன் விக்னேஷ், (17). இவரும், மாதவலாயத்தைச் சேர்ந்த வாசிமும் நெருங்கிய நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்றிரவு வாசிம் தனது நண்பர்கள் சிலருடன் விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த விக்னேஷை சரமாரியாக தாக்கினர். அதை தடுக்க வந்த அவரது தாயார் அமுதாவையும் கையால் தாக்கினர். மேலும் அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    தாக்குதலில் விக்னேஷ் காயம் அடைந்தார். அவர், சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தாயார் அமுதா, ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    அமுதா அளித்த புகாரின் பேரில் மாதவலாயத்தைச் சேர்ந்த வாசிம், ‌ஷகில், ஷாஜித், பாரிஸ், அசிம், சல்மான் மற்றும் கண்டால் தெரியும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து செண்பகராமன்புதூர் மாதவலாயம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
    என்ன வேலை செய்தாலும் லஞ்சம் மட்டும் வாங்க கூடாது என தன் தாய் சத்தியம் வாங்கியதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார். #PMModi
    புது டெல்லி:

    பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் ஐந்து வார தொடராக வெளியாகி வருகிறது. முந்தைய பதிவுகளில் மோடி தனது இளமைக்கால அனுபவங்களையும், நண்பர்கள் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். தற்போதைய பதிவில் தனது தாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில்,

    ‘நிறைய பேர் என்னிடம் நீங்கள் பிரதமரானபோது உங்கள் தாய் அதை எப்படி பார்த்தார் என்று கேட்டுள்ளனர். நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது.

    என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் என் தாய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் குஜராத் முதல்வராக தேர்வானபோதுதான் என் தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

    நான் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்பதற்கு முன்னால் டெல்லியில் தங்கியிருந்தேன். என் தாய் அகமதாபாத்தில் என் சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அப்போது டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும்போது மக்கள் அதை விழாவாக கொண்டாடினர்.



    ஆனால் என் தாய் என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு கட்டி அணைத்துக்கொண்டார். நான் எப்போது குஜராத் சென்றாலும் அவர் இதையே தான் செய்வார். அதுதான் அவரின் குணம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர் யோசித்ததே இல்லை. ஆனால், தன் பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணமாக இருந்தது.

    நான் முதல்வர் ஆன பிறகு என் தாய் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து அதை தினமும் என்னை கூறச்சொன்னார். அவர் என்னிடம், ‘நீ என்ன வேலை செய்கிறாய் என எனக்குத் தெரியாது. ஆனால், லஞ்சம் மட்டும் வாங்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடு. அந்த பாவத்தை எப்போதும் செய்யக்கூடாது’ எனக் கூறினார்.

    அவரின் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் கூறுகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு உடுத்த நல்ல உடைகூட இல்லாமல் அவர் இருந்தார். அதனால் ஒரு நல்ல நாளில் என்னிடம் அந்த சத்தியத்தை பெற்றுக் கொண்டார்.

    நான் சாதாரண வேலையில் இருக்கிறேன் என யாரேனும் என் தாயிடம் கூறினாலும் அவர் ஊருக்கே மிட்டாய் அளித்துக் கொண்டாடுவார். அவரைப் பொறுத்தவரை முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் எதுவுமே கிடையாது.

    தன் மகன் சிறந்த மனிதராக நேர்மையானவராக இருந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பம்.’’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMModi
    காரிமங்கலம் அருகே வீட்டில் மர்மமான முறையில் மாணவி இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டி கலைஞர் நகர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி (16). இவர் சேலம் தனியார் டிப்ளமோ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் பயின்று வந்தார். இவரது சகோதரி மலர்வேணி மற்றும் மாலதி ஆகியோர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்ற காரணத்தினால், இவர்களது தாயார் சாந்தி சேலம் அம்மாபேட்டையில் தனியாக வாடகை வீடு எடுத்து அங்கேயே தற்காலிகமாக குடியிருந்து வருகின்றார். 

    இந்நிலையில் நேற்று (29-ந் தேதி) மாலை குடும்ப பிரச்சினை காரணமாக சங்கவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சாந்தி இறந்த சங்கவியை இரவோடு இரவாக காரிமங்கலத்தை அடுத்த சொன்னம்பட்டி கிராமத்திற்கு எடுத்து வந்து சொந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது.

    காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சங்கவி பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்க்கப்பட்ட நிலையில் மேலும் 3 குழந்தைகளை தம்பதி விற்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    கோவை:

    கோவையை அடுத்த சூலூர் மயிலம்பட்டி கரையான்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி(வயது 37).

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயலட்சுமிக்கு கடந்த 6-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் 9-ந் தேதி ஜெயலட்சுமி திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவர் தனது குழந்தையை விற்று விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும், சைல்டுலைன் அமைப்பினருக்கும் புகார் செய்தனர்.

    அதன்பேரில் அவர்கள் ஜெயலட்சுமியை பிடித்து விசாரித்த போது பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.25 ஆயிரத்துக்கு விற்றது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தையை வாங்கிய தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜெயலட்சுமி- வெங்கடேசன் தம்பதிக்கு ஏற்கனவே பிறந்த 6 குழந்தைகளில் 3 குழந்தைகளை சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மதுரையில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதில் ஒரு ஆண் குழந்தையை ரூ.40 ஆயிரத்துக்கும், ஒரு குழந்தையை ரூ.20 ஆயிரத்துக்கும் விற்றுள்ளார். மற்றொரு குழந்தையை தங்களது உறவுப்பெண் ஒருவரிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

    ஜெயலட்சுமிக்கு குழந்தைகளை விற்றுக் கொடுப்பதில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் புரோக்கராக செயல்பட்டுள்ளார். ஜெயலட்சுமி போலீசில் சிக்கியதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

    இதுகுறித்து சைல்டுலைன் சார்பில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலட்சுமி ஏற்கனவே விற்பனை செய்ததாக கூறப்படும் 3 குழந்தைகள் தற்போது எவ்வாறு உள்ளனர்? ஜெயலட்சுமியிடம் குழந்தைகளை வாங்கி விற்றது போல பெண் புரோக்கர் வேறு பெண்களிடமும் குழந்தைகளை வாங்கி விற்றாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் பிடிபட்டால் பல தகவல்கள் வெளியாகும் என்பதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மீட்கப்பட்ட ஆண் குழந்தையை உக்கடத்தில் உள்ள டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைக்க இருப்பதாக சைல்டுலைன் அமைப்பினர் தெரிவித்தனர். #tamilnews
    கோவை அருகே பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தையை விற்க முயன்ற தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் மயிலம்பட்டி கரையான் பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ஜெயலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 6-ந் தேதி ஜெயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 9-ந் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகிவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஜெயலட்சுமி தனது குழந்தையை விற்க முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகள் நலவார்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக குழந்தையின் தான் ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயலட்சுமி தனக்கு ஏற்கனவே பிறந்த குழந்தையையும் விற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பெற்ற குழந்தையை தாய் விற்க முயன்ற சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    பிரசவத்தின்போது தாய், குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது விசாரணை நடந்து வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 23). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா பிரசவத்துக்காக விஜயமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த நவம்பர் 28-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக காஞ்சனாவை விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள்.

    அங்கு டாக்டர் விஜயசித்ரா பரிசோதனை செய்தபோது காஞ்சனாவுக்கு லேசான வலி மட்டுமே இருந்தது. எனவே முழுமையான வலி வரும்வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும்படி கூறினார். அதன்படி காஞ்சனா அங்கு இருந்தார். மாலையில் காஞ்சனாவுக்கு கடுமையான வலி வந்தது. அப்போது பணி நேரம் முடிந்து டாக்டர் வெளியே சென்றுவிட்டார். செவிலியர் சுகன்யா என்பவர் மட்டுமே பணியில் இருந்தார். அவர் காஞ்சனாவுக்கு பிரசவம் பார்க்கத் தொடங்கினார்.

    குழந்தையின் தலை பாதி வெளியேவந்த நிலையில் பின்னர் எந்த அசைவும் இல்லாமல் நின்றுவிட்டது. இதனால் பிரசவம் சிக்கலானதாக மாறியது. செவிலியர் சுகன்யாவுக்கு உதவிக்கு வேறு யாரும் இல்லை. எனவே அருகில் உள்ள வேறு சுகாதார நிலையங்களுக்கு காஞ்சனாவை கொண்டுசெல்ல முயற்சித்தார்.

    அருகில் உள்ள திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காஞ்சனாவை மிக ஆபத்தான நிலையில் செவிலியர் அனுப்பிவைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கும் டாக்டர்கள் யாரும் இல்லை. உடனே ஆம்புலன்சு மூலம் காஞ்சனா ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்ட சில நிமிடங்களிலேயே காஞ்சனா பரிதாபமாக இறந்தார். பல மணி நேரமாக துடித்துக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக பலியானது. தாயும், குழந்தையும் மரணம் அடைந்த தகவல் காஞ்சனாவின் உறவினர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்தது.

    விஜயமங்கலம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் விஜயசித்ரா, செவிலியர் சுகன்யா ஆகியோர் மீது காஞ்சனாவின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். முதலிலேயே ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று இருந்தால்கூட தாயையும், குழந்தையையும் காப்பாற்றி இருக்க முடியும். பணியில் அலட்சியமாக இருந்து தாய் மற்றும் குழந்தை பலிக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, “இதுதொடர்பாக ஆரம்பசுகாதார நிலைய டாக்டர், செவிலியர் மீது துறைரீதியாக விசாரணை நடந்துவருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அதன்பேரில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
    ×