search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106670"

    • ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • தற்போது இரண்டு வகையான டயாலிசிஸ் சிகிச்சைகள் உள்ளன.

    நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) என்பது உலக அளவில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது. ஒரு ஆய்வு அறிக்கையில் இந்த நோய் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் 13வது இடத்தில் இருந்தது. மேலும் 2040ம் ஆண்டில் இது உலக அளவில் இறப்புக்கான காரணங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயர்இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் ஆகியவை சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். ஒரு கட்டுப்பாடற்ற நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளி ஒரு இறுதி நிலை சிறுநீரக நோயாளியாக (End Stage renal disease) எளிதாகவும், விரைவாகவும் முன்னேறலாம். இந்நோயின் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை.

    இருதய நோயாளிகள் , நீரழிவு நோயாளிகள், இரத்த கொதிப்பு நோயாளிகள், குடும்பத்தில் மற்றவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் அவ்வப்போது சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    எடை இழப்பு, பசியின்மை, கை-கால் வீக்கம், மூச்சு திணறல், உடல் சோர்வு, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தல், தூக்கம் இன்மை, தோல் அரிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஏற்படலாம்.

    நோயின் ஆரம்ப நிலைகளில் சரியான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மருந்துகள் உட்கொள்வதன் மூலம் நோய் முற்றிய நிலையை அடைவதை தடுக்க முடியும். சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடலில் நீர் மற்றும் நச்சுப் பொருள்கள் அதிக அளவில் ரத்தத்தில் கலந்து இருந்தால் அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும். நவீன டயாலிஸிஸ் சிகிச்சை மூலம் இந்நோயாளிகளின் சராசரி வாழ்நாள் சற்று உயர்ந்துள்ளது.

    தற்போது இரண்டு வகையான டயாலிசிஸ் சிகிச்சைகள் உள்ளன. ஒன்று ஹீமோ டயாலிசிஸ் , மற்றொன்று பெரிட்டோனியல் டயாலிஸிஸ். ஹீமோ டயாலிசிஸ் என்பது உடம்பில் உள்ள ரத்தத்தை ரத்தக்குழாய் (AV Fistula) மூலம் வெளியே எடுத்து ஹீமோ டயாலிசிஸ் இயந்திரத்தினுள் செலுத்தி சுத்திகரிப்பு செய்து மறுபடியும் உடம்பினுள் செலுத்துவதாகும். இது ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்றவாறு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தேவைப்படும் சிகிச்சைக்கு. இச்சிகிச்சைக்கு ஒவ்வொரு முறையும் நோயாளி மருத்துவ நிலையத் திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.

    பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை வீட்டிலிருந்து தினமும் செய்யக்கூடிய சிகிச்சை முறை ஆகும். இதற்காக நோயாளி ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.

    சிறுநீரக செயலிழப்பிற்கு சிறந்த சிகிச்சையாக தற்போது இருப்பது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Renal Transplantation) ஆகும்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் சாதாரண மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழமுடியும். எனினும் மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது தற்போது அரிதாகி வருகிறது. எனவே சிறுநீரக செயலிழப்பு நோயின் நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் நிரந்தர சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்.

    கமலா ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, கோவில்பட்டி

    Dr.R. கிருஷ்ணன்M.D., DM (Nephro)

    • துரித திண்பண்டங்களை கண்டிப்பாக வெயில் காலத்தில் சாப்பிடக் கூடாது.
    • கோரைப்புல் படுக்கை விரிப்புகள் உடற்சூட்டைத் தணித்து, பசியை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது.

    கோடை காலம் தொடங்கி விட்டாலேஅதனுடன் இணைந்த நோய்களும் உடலுடன் ஒட்டிக்கொள்கின்றன.மழையைகூட தாங்கிக் கொள்ளலாம், ஆனால் வெயிலை ஏற்பது என்பது இயலாதது. அவ்வாறான காலங்களில் வசதி படைத்தவர்கள் கோடைவாச ஸ்தலங்களை நாடிச்செல்வார்கள். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை, எளியோர் உணவு முறை மாற்றத்தின் மூலம் தான் இந்த கோடையை கடக்க வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றங்களால் உடல் நிலை பல்வேறுவகையில் பாதிக்கப்படுகிறது. மேலும் மனிதனின் தற்போதைய நவீன வாழ்க்கை முறை, நவீன உணவு முறை மாற்றங்களும் உடல் பாதிப்படையவும், உடற்சூடுஏற்படவும்காரணமாகின்றன.

    இலவம் பஞ்சு மெத்தை, தலையணை, கோரைப்பாய் பயன்படுத்திய காலம் மாறி, இன்றுசெயற்கைபோம் மெத்தை, தலையணைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். வெயில் காலம் மட்டுமல்ல எல்லா காலத்திலும் படுத்து உறங்க, உட்கார சிறந்தது இலவம் பஞ்சால் செய்த இருக்கை, மெத்தை, தலையனைதான் சிறந்தது. இலவம்பஞ்சு மெத்தை உடல் சூட்டை தணித்து, உடல் சூட்டை சமச்சீராக்கி உடல் முழுவதையும் குளிர்ச்சி அடையச் செய்யும்.

    கொதிக்கும் கோடை வெயில் காலங்களில் போம் வகை செயற்கை மெத்தை, தலையனைகளைப் பயன்படுத்தும் போது தோலில் எரிச்சல், கட்டி, கொப்புளங்கள், கண் எரிச்சல், மலக்கட்டு, மூலம், பவுத்திரம், பிறப்புறுப்பு பாதிப்பு, விந்தணுக்கள்அழிவு, சினைப்பைநீர்க்கட்டி, வெள்ளைப்படுதல், ஞாபக மறதி, உடல் வலி, அசதி போன்றவை வருவதற்கான காரணங்கள் அதிகம்.

    இதைத் தெரிந்து தான் நம் முன்னோர்கள் செயற்கை மெத்தை, தலையணைகளைத் தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் இலவம் பஞ்சு மெத்தை, தலையணையை பயன்படுத்தி, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் வராமல் தற்காத்து வாழ்ந்தனர்.

    காற்றின்இசைக்கேற்ப ஆற்றங்கரையோரம் நடனமாடும் கோரை புற்களைச் சேகரித்து, பதப்படுத்தி, கற்றாழை நாரினால் கோர்த்து சேர்த்த கோரைப்புல் பாய்களின் பயன்பாடு அதிகமாக இருந்த காலத்தில் படுக்கை விரிப்புகளால் உண்டாகும் நோய்கள் மிகக்குறைவாகவே இருந்தது. இப்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நெகிழிப் பாய்களை குளிர்காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றில் உடலுக்கு நன்மை பயக்கும் எவ்வித மருத்துவ குணங்களும் இல்லை என்பதுதான் உண்மை.

    வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் உடலும் சூடாகி தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதிக்கின்றன. மேலும் உடல் நோய்களையும் ஏற்படுத்துகின்றது. தமிழ் மக்கள் பாரம்பரியமிக்க கோரைப் பாயை படுக்கைவிரிப்புகளாக பயன்படுத்துவது மட்டுமின்றி மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்பதை அறிந்துதான் இதைப் பயன்படுத்தி பயனடைந்தனர்.

    இந்தகோரைப்புல் படுக்கைவிரிப்புகள் உடற்சூட்டைத் தணித்து, பசியை அதிகரிக்க செய்யும் தன்மை உடையது. இதில் படுப்பதால் நல்ல தூக்கம் வருவதோடுமலக்கட்டு பிரச்சினைகள்ஏற்படாது. கெட்ட கனவுகள் வராது, உடற்சூட்டினால் ஏற்படும் மூலம், பவுத்திரம் தொந்தரவு வராது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குத்தல், வலியை ஏற்படுத்தாது. கண்ணுக்கும், மூளைக்கும்,உடல் முழுமைக்கும் குளிர்ச்சியைத் தரும். ஆண், பெண் பிறப்புறுப்பு பிரச்சினைகள், நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

    கோரைப் பாய் குளிர்ச்சி தரும்,நல்லநித்திரை தரும்... என்ற பாடல் வரி, கோடைக்காலத்தில் நாம் தேடும் குளிர்ச்சியை வழங்கி, சுகமான உறக்கத்தையும் கோரைப்பாய் அள்ளிக் கொடுக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவேஅழகு, ஆடம்பரம் தவிர்த்து செயற்கை படுக்கை மற்றும் இருக்கை விரிப்புகளை கண்டிப்பாக தவிர்ப்போம்.

    உடற்சூடு அதிகரிக்க காரமான உணவுகள், அதிக சூடான உணவு, நேரம் தவறி உண்பது, நேரம் தவறி உறங்குவது, பல்வேறு நோய்களுக்கு நிறைய மருந்துகளை தொடர்ந்து உண்பது, அடுப்பின் முன் நீண்ட நேரம் நின்று சமைப்பது, அதிக நேரம் வெயிலில் சுற்றுவது, அதிக புகைப்பழக்கம், தலைக்கு, உடலுக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல், குளிக்காமல் தவிர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் உடற்சூடு ஏற்படலாம். மேலும் பல்வேறு வகை ஆடைகளை மிகவும் இறுக்கமாக அணிவது, காற்றோட்டம் இல்லாத ஆடைகளை இறுக்கமாக அணிந்திருப்பது, நாள்பட்ட மலக்கட்டு பிரச்சினை இருப்பதும் உடற்சூட்டை அதிகப்படுத்த காரணமாகிறது.

    மனக் கவலை, மன உலைச்சலும் காரணமாகலாம். உடற்சூட்டைபோக்க தலைக்கு எண்ணெய் வைப்பது, வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, வருடத்திற்குஇரண்டு முறைவயிறு பேதிக்கு சாப்பிடுவது, உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள் நிறைந்த காய், கீரை, பயறு வகைகள், பழங்களைச் சாப்பிடுவது, தண்ணீர் நிறைய குடிப்பது, மோர், பதநீர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம் சாப்பிடுவது, எலுமிச்சை பழச்சாறு குடிப்பது, மண்பாணையில் தண்ணீர் வைத்து குடிப்பது, இயற்கை உந்தல்களை (மலம், சிறுநீர்) அடக்காமல் தவிர்ப்பது, இறுக்கமாக ஆடைகள் அணிவதை தவிர்ப்பது, துரித உணவு திண்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, மது-புகையிலை தவிர்ப்பது, இரவு நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்ப்பது, அதிக காரம், மசாலா சேர்ந்த உணவு திண்பண்டங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது போன்றவைகளால் உட ற்சூடு வராமல் தடுக்கலாம்.

    உடற்சூட்டைத் தணிக்க திரிபலா சூரணம் -மாத்திரை, அதிமதுர சூரணம்-மாத்திரை, கடுக்காய் சூரணம்-மாத்திரை, பரங்கி ப்பேட்டை சூரணம்-மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், வெண்பூசணி லேகியம், வில்வாதி லேகியம், துறுஞ்சி மணப்பாகு, நன்னாரி சர்பத் (தரமானது) போன்ற சித்த மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

    மேலும் துரித உணவுகள், துரித திண்பண்டங்கள் கண்டிப்பாக வெயில் காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் சாப்பிடக் கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும் திண்பண்டங்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு முறைகளை பின்பற்றினால் உடற்சூடு வராமலும் அதனால் ஏற்படும் நோய்கள் வராமலும் தடுக்கலாம்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும்.
    • டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    கோடை காலத்தில் இருதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.விஸ்வநாதன்.

    அவர் கூறியதாவது:-

    வெயில் காலம் இருதய நோயாளிகளுக்கு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் மருத்துவர்கள் சொன்ன மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

    வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உடலில் ரத்த அழுத்தம், பொட்டாசியம், சோடியத்தின் அளவு மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மயக்கம், சோர்வு ஏற்படும். அப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும்.

    பொதுவாக இரண்டு வகையான இருதய நோயாளிகள் இருக்கிறார்கள். ரத்தத்தை வழக்கமான அளவில் 'பம்பிங்' செய்யும் இருதய நோயாளிகள் ஒருவகை. இதயத்தின் 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் மற்றொரு வகை. இவர்களில் 'பம்பிங்' திறன் நன்றாக உள்ள இருதய நோயாளிகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் 1.5 லிட்டர் தண்ணீர்தான் குடிக்க வேண்டும்.

    கூடுமானவரையில் டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி அருந்துவதாக இருந்தால், காலையில் எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, மற்ற வேலைகளை தொடங்கலாம். சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.

    காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், இருதய நோயாளிகள் காலையில் நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் போது 'சன் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையவும், அதிக வியர்வையினால் மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு 7 மணிக்கு பிறகு நடைபயிற்சி செல்லலாம். வெயில் காலத்தில் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலை நேர நடைபயிற்சி மிகவும் நல்லது.

    காலை வேளை உணவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, பப்பாளி, பேரிக்காய் பழங்களும் சாப்பிடலாம். என்றாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளியாக இருந்தால் இவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மதியம் 11 அல்லது 12 மணி அளவில் காய்கறி சூப், மோர் அருந்தலாம். சிறந்த நீர்பானம் என்றால், அது மோர்தான், குறைவாக உப்பு சேர்த்து மோர் அருந்துவது மிகவும் நல்லது. மோர் குடிப்பதால் கொழுப்பு அதிகரிக்காது.

    இளநீரில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதால் இளநீர் குடிக்கலாம். அதேசமயம், இளநீர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இளநீரை தவிர்க்க வேண்டும். தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதாக இருந்தால் குறைவாக சாப்பிடுங்கள்.

    நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சர்க்கரையின் அளவு கூடாது என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.

    கோடை காலத்தில் மதிய உணவில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.

    பச்சை காய்கறிகளெல்லாம் 'கிரீன் சிக்னல்' மாதிரி. சாலையில் 'கிரீன் சிக்னல்' விழுந்ததும் நாம் செல்வது மாதிரி, பச்சை நிற காய்கறிகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நல்லது. பீன்ஸ், அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், காராமணி, காலிபிளவர், கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். சாதத்தை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வு எடுப்பது நல்லது. இதனால் வெயிலை தவிர்க்க முடியும் என்பதோடு, சிறிதுநேரம் தூங்கி எழுந்தால் மாலையில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    மாலையில் ஏதாவது பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு, அவரவர் விருப்பத்துக் ஏற்ப சர்க்கரை இல்லாமல் சிறிது டீ, அல்லது காபி அருந்தலாம்.

    இரவில் சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு விட்டு 2 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். தூங்கச்செல்வதற்கு 1.30 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவேண்டும்.

    மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இருதய நோயாளிகள் காற்றடைக்கப்பட்ட ரெடிமேட் குளிர்பானங்களை அருந்தக்கூடாது. பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதை விட பழங்களை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

    வெயில் அதிகமாக இருக்கும் போது வீட்டினுள் குளிர்ச்சியான இடத்தில் இருங்கள். குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் வெயில் படாத காற்றோட்டமான அறையில் இருக்கவேண்டும். வீட்டுக்கு வெளியே மரத்தின் நிழலிலும் அமரலாம்.

    பொதுவாக எல்லா இருதய மற்றும் சர்க்கரை நோயாளிகளுமே 3 மாதத்துக்கு ஒருமுறை டாக்டரை சென்று பார்க்க வேண்டும். உடல் நிலைக்கு ஏற்ப அவர்கள் மாத்திரைகளை மாற்றிக்கொடுப்பார்கள் அல்லது ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள்.

    இந்த யோசனைகள் இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி வயதான எல்லோருக்குமே பொருந்தும்.

    இவ்வாறு டாக்டர் என்.விஸ்வ நாதன் கூறினார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கோடை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும்.
    • ஒவ்வொரு பருவகால பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு.

    கோடை காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமானது. பருத்தி ஆடை அணிந்து, சருமத்தில் சன்ஸ்கிரீன் பூசி வெளிப்புற உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதுபோல் உட்புற உடல் நலனையும் பேண வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் ஒருசில தவறுகளை தவிர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

    தண்ணீர் அருந்தாமல் இருப்பது:

    கோடை காலத்தில் மட்டுமல்ல எல்லா பருவ காலங்களிலும் உடலில் நீரிழப்பை தவிர்க்க போதிய அளவில் தண்ணீர் பருக வேண்டும். இருப்பினும் கோடை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். அத்துடன் பழ ஜூஸ்கள், நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழ வகைகள், திரவ வகை உணவுகளை தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும்.

    உப்பு நிறைந்த தின்பண்டங்களை உட்கொள்வது:

    கோடை காலத்தில் உப்பு அதிகம் கலந்த திண்பண்டங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ்கள், குக்கீஸ்களை உட்கொள்ளும்போது அதில் இருக்கும் உப்பு உள்ளடக்கத்தை நீர்த்துப்போக செய்வதற்கு உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அதன் காரணமாக நீரிழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க உப்பு நிறைந்த தின்பண்டங்களை ஒதுக்கிவைப்பதுதான் சரியானது.

    அதிக கலோரி கொண்ட பானங்களை உட்கொள்வது:

    கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தை தணிப்பதற்கு குளிர்பானங்களைத்தான் பலரும் நாடுவார்கள். அதிக கலோரி கொண்ட பானங்களை தவிர்ப்பதுதான் நல்லது. இளநீர், பதநீர், நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ் போன்ற இயற்கை பானங்களை பருகலாம்.

    பருவகால பழங்களை புறக்கணிப்பது:

    ஒவ்வொரு பருவகால பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு. அவை பருவகால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். உடல் உபாதை பிரச்சினைகளையும் தவிர்க்கச்செய்யும். இந்த கோடை காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, மாம்பழம், கிர்ணி போன்றவற்றை ஒரு போதும் தவிர்க்கக் கூடாது.

    • இரவில் நீரிழப்பு ஏற்பட்டால் உடல் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும்.
    • தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் பருகுவது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது.

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு செல்போன், டி.வி. உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தவிர்ப்பது, காபி பருகுவது தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு முன்பு திரவ உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. தூங்க செல்லும்போது தாகம் எடுத்தால் தண்ணீர் பருகலாமா? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கிறது. அப்படி தண்ணீர் பருகுவது நல்ல தூக்கத்திற்கு உதவுவதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இரவில் தண்ணீர் பருகுவது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    நிபுணர்களின் பரிந்துரை

    தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இரவில் நீரிழப்பு ஏற்பட்டால் உடல் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கும். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது உடலை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க உதவும். உடலில் நீர்ச்சத்து போதிய அளவில் இருப்பதும் உறுதி செய்யப்படும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், மன நிலையை எதிர்மறையாக பாதிக்கும். தூக்க சுழற்சிக்கும் இடையூறு ஏற்படும்.

    எனினும் தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் பருகுவது எல்லோருடைய உடல் நிலைக்கும் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு தூக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்தலாம். அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க நேரிடும். இரவில் அப்படி எழுந்திருப்பதை தவிர்க்க தூங்கச் செல்வதற்கு முன்பு திரவ வகைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவதன் மூலமாக சிறுநீர் பையில் அதிக அளவு சிறுநீரை தக்கவைத்துக்கொள்ள நேரிடும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

    இரவில் ஏன் தண்ணீர் பருகக்கூடாது?

    தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகினால் இரவில் அடிக்கடி கழிவறைக்கு செல்ல நேரிடும். இரவில் தண்ணீரை தவிர்ப்பதன் மூலம் சிறுநீர் உற்பத்தி குறையும். அதனால் இரவில் ஆறு முதல் எட்டு மணி நேரம் தடையின்றி தூங்கலாம். தூங்குவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவில் நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க பகலில் போதுமான தண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் இரவில் தண்ணீர் பருக வேண்டிய தேவை எழாது. உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்தால் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். அதுதான் சரியானது. சிறுநீர் மஞ்சள் நிறமாகவோ, வெண்மை நிறமாகவோ இருக்கக்கூடாது.

    இரவில் எப்போது தண்ணீர் பருகலாம்?

    இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு திரவ உணவுகளை உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும். தாகம் எடுப்பதாக உணர்ந்தால் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு தண்ணீர் பருகலாம்.

    எந்த நீரை பருக வேண்டும்?

    இரவில் குளிர்ந்த நீர் பருகலாமா? வெதுவெதுப்பான நீர் பருகலாமா? என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. குளிர்ந்த நீரை விட மிதமான சூடு கொண்ட வெதுவெதுப்பான நீரை பருகுவதுதான் சிறந்தது. அது இரவு முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் செயல்முறையை எளிதாக்கும். நச்சுத்தன்மையையும் போக்க உதவும். மேலும் இரவில் வெதுவெதுப்பான நீர் பருகுவது வியர்வை அதிகமாக சுரக்க வித்திடும். அது சரும செல்களை சுத்தப்படுத்தவும், உடலில் படிந்துள்ள அதிக உப்பு தன்மை மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். இருப்பினும் சிறுநீரக மற்றும் இதய நோயாளிகள் மருந்துவரின் பரிந்துரைப்படி தண்ணீர் பருக வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை.
    • நமது மொத்த உடல் எடையில் 18 முதல் 20 சதவீதம் புரோட்டீன்களால் ஆனது

    நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் முதன்மையானது புரோட்டீன். இது `புரோட்டிலோஸ்' என்ற கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் அர்த்தம், 'அடிப்படை' அல்லது 'முதல் இடம்'.

    1883-ம் ஆண்டில்தான் புரோட்டீன் என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. நமது உணவை சமநிலைப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது இந்த சத்துதான். சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 56 கிராம் புரோட்டீன் தேவை.

    மூன்று வயது வரை 13 கிராம்; 4 முதல் 8 வயது வரை 19 கிராம்; 9 முதல் 13 வயது வரை 34 கிராம்; 14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 46 கிராம்; 14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 52 கிராம்; 19 வயதைத் தாண்டியவர்களுக்கு 46 கிராம்; 19 வயதைக் கடந்த ஆண்களுக்கு 56 கிராம் தேவை.

    நமது மொத்த உடல் எடையில் 18 முதல் 20 சதவீதம் புரோட்டீன்களால் ஆனது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் பெறப்படும் புரோட்டீன், பொதுவாக 2 அல்லது அதற்கும் குறைவான நாள்தான் உடலில் இருக்கும்.

    நமது உடலுக்கு அல்புமின் என்ற புரோட்டீன் மிக மிக அவசியம். அது இல்லாவிட்டால் உடம்பு முழுவதும் வீங்கி விடும்.

    நமது உடலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வகை புரோட்டீன்கள் உள்ளன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் ஒரு குறிப்பிட்ட தேவையும் வேலையும் உண்டு. உதாரணமாக, தலைமுடி கெரோடின் என்ற புரோட்டீனால் ஆனது. அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பார்கள். அது புரோட்டீனுக்கும் பொருந்தும்.

    நமது உடலுக்கும் வயதுக்கும் ஏற்றபடி அளவோடு சாப்பிடுவது நல்லது. புரோட்டீன் அதிகரித்தால் எலும்புச்சிதைவு நோய், புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகத்தில் கல் சேர்வது போன்ற பாதிப்புகள் வரும்.

    புரோட்டீன் உணவுகள்

    1. சூரியகாந்தி விதை

    2. சோயா பீன்ஸ்

    3. பட்டாணி

    4. துவரம் பருப்பு

    5. பாதாம் பருப்பு

    6. முந்திரி

    7. பாதாம் நெய்

    8. சோயா பால்

    9. கோதுமை ரொட்டி

    10. பசலைக்கீரை (வேக வைத்தது)

    11. கோழி இறைச்சி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கோடைக்காலத்தில் வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.
    • உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே.

    நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.

    பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

    இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.

    இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.

    எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..

    கோடை வெயில் கொளுத்ததொடங்கினாலும், மதுக்கடைகளில் விற்பனைவெளுத்து வாங்குகிறது. குறிப்பாக மது பானங்கள் தவிர மதுப்பிரியர்களின் கிக் கேற்றும் குளிர்பானமாக திகழும் பீர் விற்பனை பொங்கி வழிகிறது. இதனால் அதற்கு சில வேளைகளில்தட்டுப்பாடும் உள்ளதாக கூறுகின்றனர்.

    இந்த நிலையில் வெயில் காலங்களில் பீர், மற்றும் மது பானங்களை அருந்துகிறவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக கூறுகின்றனர். வெயில் காலங்களில் மது அருந்தும்போது உடலில் உள்ள ரத்த குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிகளவில் வெளியேறும்.

    இந்த நிலையில் போதையால் தாகம் தடைபடும்போதும், தவிர்க்கப்படும் போதும், தண்ணீர் அருந்தக்கூடிய உணர்வு ஏற்படுவதில்லை. இந்த நிலையில் போதையில் தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது உடம்பில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும். இதனால் ரத்த நாளங்களில் அதிக பாதிப்புஏற்படும்.

    இதனால் அடைப்புஏற்பட்டு இதயத்தில் பிரச்சினை ஏற்படும் என்கின்றனர். ஆகவே ஜில்பீர் மட்டுமின்றி, எந்த வகையான பீர் மற்றும் மது பானங்களை வெயில் காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆபத்தானது என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

    • தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது.
    • மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர்.

    தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது. இதன் விளைவு மக்கள் சுகர் பிரீ உணவுப் பொருட்களை மட்டுமே நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இந்த சுகர் பிரீ உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதா இல்லையா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் சர்க்கரை நோயாளிகள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சாப்பிடும் பிஸ்கட்டிலிருந்து, காபி டீ என எல்லாவற்றிற்கும் சுகர் பிரீயைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

    சர்க்கரை சத்து பொதுவாக மாவு போன்ற கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. ஆனால் மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர்.

    சுகர் பிரீ மாத்திரைகள் அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் இனிப்பு சுவை கொண்டவையாக இருந்தாலும் இவை கொடுக்கும் கலோரிகள் குறைவு. ஆஸ்பார்டேம், சுக்ரலோஸ், சாக்ரைன், ஸ்டிவ்யோசைடு, லீவுலோஸ் போன்றவை நீரிழிவு நோயாளிகளால் பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டிகள்.

    நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. நீரிழிவு நோயாளிகள் செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தினமும் பயன்படுத்தும் செயற்கை இனிப்பூட்டியின் அளவு மிகக் குறைவு என்பதால் பக்க விளைவு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம்.

    பினைல்கீட்டோன்யூரியா நோய் உடையவர்கள் ஆஸ்பார்டேம் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும். சல்பா அலர்ஜி உடையவர்கள் சாக்ரைன் உள்ள செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏற்படுவதால் அதை தவிர்க்க வேண்டும். அதேபோல் சுக்ரலோஸ் உள்ள செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியா அழிந்து குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.

    நிபுணர்களின் கூற்றுப்படி சுகர் பிரீயில் இயற்கையான பொருட்கள் இருந்தால் பாதுகாப்பானது. அதில் கெமிக்கல்கள் கலக்கும் போது மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. கெமிக்கல்கள் நிறைந்த சுகர் பிரீ எலும்புகளையும் பாதிக்க வல்லது. எனவே சுகர் பிரீயை வாங்குவதற்கு முன் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலை படித்துக் கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் தூக்கமின்மை நேரலாம்.
    • நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் விழித்திரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார்.

    கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியுமா? (மு.பெனாசிர் பேகம், தூத்துக்குடி)

    பதில்: ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்கு உள்ளே செல்ல இன்சுலின் தேவைப்படுகிறது. பொதுவாக செல்களின் வெளிப்புறத்தில் உள்ள சவ்வு உறை (மெம்ப்ரேன்) நீரை வெறுக்கும் (ஹைட்ரோபோபிக்) தன்மையுள்ளது. ஆனால் குளுக்கோஸ் நீரை விரும்பும் (ஹைட்ரோபிலிக்) தன்மையுள்ளது. இதனால் குளுக்கோஸால் செல்களுக்குள்ளே நேரடியாக செல்ல முடிவதில்லை.

    இது செல்களுக்குள் மூன்று முக்கியமான புரதங்களின் மூலம் தான் செல்லமுடியும். அவை: 1. சோடியம் சார்ந்தில்லாத குளுக்கோஸ் டிரான்ஸ்போர்டர் (ஜி.எல்.யு.டி)புரதம், 2. சோடியம் சாராத குளுக்கோஸ் சிம்போர்டர்ஸ் (எஸ். ஜி. எல்.டி) புரதம், 3. குளுக்கோஸ் யுனிபோர்ட்டர் (ஸ்வீட் புரதம்)

    பெரும்பாலான செல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புரதங்கள் இருக்கும். பொதுவாக செல்களின் உள்ளே இருக்கும் ஜி.எல்.யூ.டி புரதம் செல்களின் மேலே வெளிப்படுவதற்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் இல்லாமல் செல்களுக்கு உள்ளே குளுக்கோஸ் செல்ல முடிவதில்லை. அதனால் தான் 'செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரியும் சாவி' என்று இன்சுலின் அழைக்கப்படுகிறது.

    கேள்வி: சர்க்கரை நோயினால் இரவு நேரங்களில் தூக்கமின்மை நேருமா? (உஷா, காஞ்சிபுரம்).

    பதில்: நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் தூக்கமின்மை நேரலாம். ஏனென்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடுவதால் தூக்கம் தடைபடுகிறது. அதேபோல் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது (சர்க்கரை தாழ்நிலை) தூக்கமின்மை, கெட்ட கனவுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தம் அல்லது மனநல பிரச்சினை ஏற்படக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகம். மன அழுத்தத்தால் இவர்களால் சரியாக தூங்க முடிவதில்லை.

    நீரிழிவு நோயினால் நரம்பியல் பாதிப்பு (டயாபட்டிக் நியூரோபதி) ஏற்படும்போது கை, கால்களில் வலி, மதமதப்பு, எரிச்சல், தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

    நீரிழிவு நோயாளிகளில் 21 சதவீதத்தினருக்கு ஏற்படும் 'ரெஸ்ட்லஸ் லெக் சின்ட்ரோம்' (ஆர்.எல்.எஸ்) எனப்படும் நரம்பு கோளாறில் தூக்கத்தில் கால்களில் விரும்பத்தகாத உணர்வு ஏற்பட்டு, கால்கள் அமைதியற்ற விதத்தில் தானாகவே நடுங்குவதால் தூக்கம் தடைப்பட்டு தூக்கமின்மை ஏற்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 77 சதவீதம் பேர் தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    கேள்வி: எனக்கு 20 வருடமாக சர்க்கரை நோய் இருக்கிறது. நான் இன்னும் மாத்திரைகள் எடுத்து கொண்டு தான் இருக்கிறேன். இதனால் எனது சிறுநீரகம் பாதிப்பு அடையுமா?. எனக்கு வயிற்றில் எரிச்சலும் அதிகமாக இருக்கிறது. இது எதனால்? (கண்ணன், தஞ்சாவூர்)

    பதில்: நீங்கள் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியான அளவு எடுத்துக்கொண்டால் மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது. உங்களுக்கு ஒரு வேளை நீரிழிவு நோயாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரை மாத்திரைகளின் அளவையோ அல்லது மாத்திரைகளையோ மாற்றலாம். சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது அதன் வேலைப்பளுவை குறைப்பதற்காக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும் சர்க்கரை மாத்திரைகள் அளவை குறைத்தோ அல்லது வேறு மாத்திரைகளையோ பரிந்துரைக்கலாம். மேலும் எஸ்.ஜி.எல்.டி2 இனஹிபிட்டர் மாத்திரைகள் சிறுநீரக பிரச்சினையை மேலும் மோசமடையாமல் தடுக்கிறது என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உங்களுக்கு வயிறு எரிச்சல் ஏற்படுவதற்கு வயிற்றுப்புண் (கேஸ்ட்ரைட்டிஸ்), நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய இரைப்பை வாதம் (கேஸ்ட்ரோபெரிஸிஸ்) அசிடிட்டி, அமிலப் பின்னோட்ட நோய் (ரிப்லக்ஸ்) போன்றவை காரணமாக இருக்கலாம். வயிறு எரிச்சல் இருப்பதால் நீங்கள் ஏற்கனவே மெட்பார்மின் மாத்திரைகள் உட்கொள்பவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று மெட்பார்மின் மாத்திரையின் அளவை குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதற்கு பதிலாக வேறு மாத்திரைகளை மாற்றிக் கொள்ளலாம்.

    கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லை என்றால் கண் பார்வை பாதிக்கப்படும் என்கிறார்கள். ரத்த சர்க்கரையின் அளவை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தால் கண் பார்வை மீண்டும் நார்மல் ஆகிவிடுமா? (சரவணன், சென்னை)

    பதில்: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால் விழித்திரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் விழித்திரையில் உள்ள ரத்தநாளங்கள் சேதம் அடைவதால் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் விழித்திரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பிற்கு இது முக்கிய காரணமாக திகழ்கிறது. பொதுவாக விழித்திரை நோய் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துகிறது. மீண்டும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இது மீளக்கூடிய வாய்ப்பு மிகக் குறைவு. விழித்திரை நோய் பாதித்த ஆரம்ப கட்டத்தில் வேண்டுமானால் இதிலிருந்து மீள்வது சாத்தியம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் விழித்திரை நோய் மேலும் மோசமடைவதை வேண்டுமானால் தாமதிக்கலாம்.

    • மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
    • உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது.

    கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது. இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.

    ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

    குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.

    கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி, மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைக்கால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம். காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் வைட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது. மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.

    ப.கோபிகா

    12-ம் வகுப்பு,

    ஜெ.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

    • முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும்.
    • நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.

    தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் ஓய்வு பெற்ற பின் அமைதியான சூழலில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு உகந்த இடம் வயதானவர் ஒய்வு இல்லம். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அயல்நாட்டில் வேலை பார்ப்பதால் இங்கு பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத காரணத்தினாலும் தனிக்குடுத்தனங்கள் பெருகி உள்ள நிலையில் இடவசதி இன்மை, சௌகரியங்கள் இன்மை இது போன்ற பல தவிர்க்க முடியாத காரணத்தால் பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கின்றனர்.

    பெரியவர்களும் தங்களுக்கு உள்ள சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் தனக்கென்று ஒரு தனிமை தேவைப்படுவதாலும் தங்களது தனி உரிமைக்காகவும் சிலர் அமைதியான இது போன்ற சூழலில் வாழ விரும்புகின்றனர்.

    முதியவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓடி கொண்டே இருந்த சூழலில் தங்களது வயதான காலத்தில் அமைதியாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழும் சூழலை விரும்புகின்றனர். இவை அனைத்தும் இது போன்ற ஓய்வு இல்லங்கள் நிறைவேற்றுகின்றது.

    தற்போது பல கட்டட அமைப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் முதியவர்களுக்கு என தனித்தனியே வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. அவைகள் முதியவர்களின் வசதிக்கேற்ற மாதிரி முதியவர்களுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. இதில் பலதரப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஓய்வு பெற்ற முதியவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள்.

    முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும். ஆனால் தனித்தனி சொந்த வீடுகள். முதியவர்கள் வயதான பின்பு ஓய்வு காலத்தில் அவரவர் சொந்த வீட்டில் சுதந்திரமாக பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வாழும் வண்ணம் இக்கட்டட அமைப்புகள் அமைகின்றன.

    அவரவர் வசதிகளுக்கு ஏற்ப அவர்களின் பிள்ளைகளோ வயதானவர்களே கூட தங்களது ஓய்வு ஊதிய பணத்தை அதில் முதலீடு செய்து தனக்கென சொந்தம் ஆக்கிக் கொள்கிறார்கள். அங்குள்ள அனைத்து வீடுகளிலுமே முதியவர்கள் இருப்பதால் அதுவயதானவர்இல்லம் போன்ற ஒரு அமைப்பையே உருவாக்கி தருகிறது. அங்கு மருத்துவ வசதிகள் யோகாசன பயிற்சிகள் பூங்காக்கள் நடைபாதை மேடைகள் என பல வசதிகளும் அமைக்கப்படுகிறது.

    வயதானவர்கள் அவரவர் வீடுகளில் வசிப்பது போன்றே எந்த தொந்தரவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் அமைதியான பாதுகாப்பான முறையிலும் வீட்டு சூழலை உருவாக்கி தருகிறார்கள்.

    வயதானவர்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்பவும் கட்ட மைப்புகள் அமைக்கப்படுகின்றன. வீட்டில் குளியலறை வசதி படுக்கையறை சமையலறை என ஒவ்வொரு அறையிலும் வயதானவர்களின் வசதிகளுக்கு ஏற்ப கட்டட அமைப்புகள் உள்ளன.

    வயதானவர்களை கவனித்துக் கொள்ள பணியாளர்களும் அங்கே அமர்த்தப்படுகிறார்கள். 24 மணி நேரமும் மருத்துவ வசதிகளும் குடிநீர் வசதி என பல வசதிகளுடன் கட்டப்படுகிறது.

    வயதானவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் மூச்சுப் பயிற்சிகள் என அனைத்து பயிற்சிகளும் உள்ளேயே வழங்கப்படுகிறது. விளையாட்டுக் கூடங்கள் தோட்டங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கட்டமைப்பாகும்.

    வயதானவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதற்கான கட்டட அமைப்புகளும் அதற்குள்ளேயே உருவாக்கப்படுகிறது.

    பெரிய அடுக்குமாடி கட்டடங்களில் அனைவருக்கும் பொதுவான பூங்காக்கள் நடைபாதைகள் பயிற்சி மையங்கள் விளையாட்டு பொழுது போக்கு கூடங்கள் கோயில்கள் என்ற அனைத்தும் உள்ளடங்கிய கட்டட அமைப்புகள் போன்ற அமைப்பை ஒத்தவை தான் இந்த முதியோர் இல்ல கட்டட அமைப்புகளும்

    சிறந்த தொழில்நுட்ப கட்டட வல்லுனர்களால் பல அதிநவீன வசதிகளுடன் முதியவர்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கட்டடங்கள் வடிவமைக்கப்படுகிறது. அவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி கட்டடங்கள் கட்டப்படுகிறது.

    அனைத்து வசதிகளும் முதியோர் இல்லத்தில் இருந்தாலும் அது நமக்கு என சொந்தமான இடம் இல்லை என்பது பலருக்கும் மன வருத்தத்தை உருவாக்குவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்கும் வண்ணம் இது மாதிரி வயதானவர் ஓய்வு இல்லங்கள் சொந்த வீடுகளில் வாழும் சூழல் மற்றும் மன அமைதியை தருகிறது.

    மன உற்சாகத்தை தருவதுடன் அயல்நாடுகளில் வேலை பார்க்கும் தங்களது பிள்ளைகள் பேரன் பேத்திகள் என்று வந்தாலும் தங்குவதற்கு வசதியாக இருக்கும். சொந்த வீடு என்பதால் தங்குவதற்கு தொந்தரவு இல்லாத சூழலையும் உருவாக்கி தரும்.

    அவர்களுக்கும் தாய் தந்தையருடன் சொந்த வீட்டிலேயே இருக்கலாம். பேரன் பேத்திகளுக்கும் இது என் தாத்தா பாட்டி வீடு என்று சுதந்திரமாக சுத்தி திரிவதற்கும் வசதியாக இருக்கும்.

    வயதானவர்கள் காலத்திற்குப் பின்பு அவர்களது பிள்ளைகள் இதே மாதிரி மகிழ்ச்சியாக தங்களது வயதான காலத்தை கழிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவர்களது மகன் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள் என்று பரம்பரையாக சொந்த வீட்டில் வசிக்கலாம்.

    இதுவும் சொந்த வீடு வாங்கி சொத்து சேர்ப்பதற்கான ஒரு அமைப்பு தான். ஆனால் வயதானவர்கள் ஒன்று கூடி வாழும் ஒரு சூழலில் சொந்தமாக சுதந்திரமாக அமைதியாக வாழும் ஒரு அமைப்பு.

    சம்பாதிக்கும் நாட்களிலேயே இது போன்ற வீடுகளை வாங்கி வைத்துக் கொள்வது பிற்காலத்தில் நமக்கும் நமது சந்ததியினருக்கும் உதவியாக இருக்கும். இதுவும் ஒருவித முதலீடு தான். பாதுகாப்பான முதலீடு. சொத்து சேர்ப்பதற்கான நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.

    • தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன.
    • புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    முன்பு புற்றுநோய்(கேன்சர்) வந்து விட்டால் குணப்படுத்த முடியாது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. புற்றுநோய் வந்து விட்டால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் இறந்து விடுவார்கள் என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன. புற்றுநோய் கட்டிகளை அகற்றி குணப்படுத்தப்பட்டவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பெருங்குடல் புற்று நோய் எளிதில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் குடல் நோய் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:-

    பெருங்குடல் புற்று நோய்

    புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று பெருங்குடல் புற்று நோய். இந்த புற்று நோய் ஜீரண மண்டலத்தின் கடைசி பகுதியான பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் ஏற்படும்.

    பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும். ஆண்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக பெருங்குடல் புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுகிறது.

    மரபணு கோளாறு

    பெருங்குடலில் தான் நீர்சத்து உறிஞ்சப்பட்டு மனித கழிவு உருவாகுகிறது. இந்த பெருங்குடல் புற்றுநோய் மரபணு கோளாறு, குடும்பத்தில் மூதாதையர்களுக்கு யாருக்காவது(பரம்பரையாக) இருந்தால் வரும். உணவு பழக்க வழக்கங்களாலும் ஏற்படும். புகை பிடித்தல், மது அருந்துதல், இறைச்சி வகைகளை அதிகமாக உண்பதாலும் இந்த புற்றுநோய் ஏற்படும்.

    தற்போது யாரும் கீரை போன்ற நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவது இல்லை. குறிப்பாக மேலை நாட்டு உணவு வகைகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் இந்த புற்று நோய் ஏற்படுகிறது. இந்த புற்று நோயை கண்டறிய வயிற்று பகுதியில் ஸ்கேன் மற்றும் குடல் உள்நோக்கி கருவிகள்(colonoscopy) செய்து பார்க்க வேண்டும்.

    மூல நோய்

    குடல் புற்று நோய் அறிகுறி இருந்தால் மலக்குடல் வழியாக ரத்தம் வரும். அதனால் நாம் மூல நோய் வழியாகத்தான் ரத்தம் வருகிறது என எண்ணக்கூடாது. 85 முதல் 90 சதவீதம் வரை மூலநோய் இருக்கலாம். 15 சதவீதம் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இதேபோல வலது பக்க பெருங்குடல், மேல் பகுதியில் ரத்தக்கசிவு இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம்.

    உடலில் ஹீமோகுளோபின்(ரத்த அளவு) குறைந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு உடல்சோர்வு, பசியின்மை, மலச்சிக்கல், ரத்தசோகை போன்றவை காரணமாக இருக்கும். இடது பக்க பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டு பின்னர் அடைப்பு ஏற்படும். மேலும் மலச்சிக்கலுடன், ஒரிரு நாட்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி என அடிக்கடி ஏற்பட்டால் கூட பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக தென்படும்.

    தொடக்க நிலை

    இதை கவனிக்காமல் விட்டால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதற்கு தகுந்த அறுவை சிகிச்சை முறை மூலம் குணப்படுத்தலாம். இதை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். இதற்கு அறுவை சிகிச்சை ஹீமோதெரபி, மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் இதில் எந்த நோயாளிக்கு எந்த வகையான சிகிச்சை முறை தேவை என்பதை புற்றுநோய் மருத்துவக்குழு தான் முடிவு செய்யும்.

    அறுவை சிகிச்சைகளும் 2 வகையாக மேற்கொள்ளப்படும். ஒன்று வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்யப்படும். மற்றொரு முறை நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை(laparoscopy) மூலம் புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படும். இந்த சிகிச்சை முறையை சிறந்த அறுவை சிகிச்சை டாக்டர்களை கொண்டு செய்ய வேண்டும். வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்வதை காட்டிலும், லேப்ராஸ்கோப்பி மூலம் நுண்துளை அறுவை சிகிச்சை முறை என்பது மிகவும் துல்லியமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையாகும்.

    கதிர்வீச்சு சிகிச்சை

    வயிற்றை திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சை செய்தால் அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தால் மறு நாளே நோயாளி எழுந்து நடக்கலாம். 4 நாட்களில் வீடு திரும்பலாம். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    பெருங்குடல், மலக்குடல் புற்று நோயை முதல் மற்றும் 2-வது நிலைகளிலேயே கண்டறிந்தால் துல்லியமாக குணப்படுத்தி விடலாம். ஆரம்ப நிலையில் அலட்சியமாக இருந்து விட்டு நோய் முற்றிய நிலையில் சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்துவது சற்று கடினம். தற்போது இந்த பெருங்குடல் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரோபோடிக் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் வந்து விட்டது. எனவே நாம் விழிப்புடன் இருந்தால், பெருங்குடல் புற்று நோயை குணப்படுத்தி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×