search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவம்"

    • யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ளவய

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதியில், நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டனர். அந்த யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது. மேலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரசவத்தின்போது, உயிரிழந்த பெண் யானையின் உடலை, வனக்கால்நடை மருத்துவரால் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்வயர் கடித்து பெண் யானை இறந்த நிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி ஈன்ற பெண் யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.
    • பிரசவத்திற்கு பின் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

    பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.

    மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

     அந்த காலத்தில் பிரசவத்திற்கு பின்பு பெண்களின் வயிற்றில் இறுக்கமாக, துண்டை கட்டி வைப்பார்கள். கால்களையும் சேர்த்து அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே காற்று உட்செல்வது தடுக்கப்பட்டு, எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும் வயிறு ஒட்டிய நிலையில் அக்கால தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

    கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திவிடும்.

    தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.

    சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு அவசியம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது.

    ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்றப் பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகிவிடும்.

    இப்போது வயது வித்தியாசமின்றி பலரும் தொப்பை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதும் தொப்பைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு வித்திடும். கார்போஹைட்ரேட் அதிகம் கலந்த உணவுகள், புரதம், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படக்கூடும். பெண்களுக்கு தொப்பை அதிகம் இருந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும். தொப்பை உருவாகுவதற்கு முதன்மை காரணம் கொழுப்புதான். தண்ணீருக்கு பதிலாக அவ்வப்போது வெந்நீர் பருகுவது தொப்பையை கரைக்க உதவும்.

    • சூலூர்பேட்டை அருகே செல்லும்போது மதினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் தாய் மற்றும் குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    திருப்பதி:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் யபாபி. இவருடைய மனைவி மதினா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். யபாபி பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் மதீனா 3-வதாக கர்ப்பமானார். நேற்று யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சூலூர்பேட்டை அருகே செல்லும்போது மதினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    அப்போது பயணிகள் சிலர் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ரெயில் சூலூர்பேட்டை வந்ததும் அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தாய் மற்றும் குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    • கருப்பை இயல்பு நிலைக்கு வர 7-8 வாரங்கள் வரை ஆகலாம்.
    • கொழுப்பை குறைக்க சரியான நேரமும் கவனிப்பும் அவசியம்.

    பொதுவாக குழந்தை பிறந்த பிறகு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பை மெதுவாக அதன் கர்ப்பத்துக்கு முந்தைய வடிவில் சுருங்க உதவுகின்றன. ஆனால் கருப்பை இயல்பு நிலைக்கு வர 7-8 வாரங்கள் வரை ஆகலாம். கர்ப்பகாலத்தில் கூடுதலாக எடுத்துகொள்ளும் உணவு கொழுப்பு வடிவில் மீண்டும் சேமிக்கப்படுகிறது. அதனால் தான் தொப்பை கொழுப்பு பிடிவாதமாக கரையாமல் எடை குறைப்பதில் சிக்கல் நேரிடுகிறது. இந்த கொழுப்பை குறைக்க சரியான நேரமும் கவனிப்பும் அவசியமாகிறது.

    பிரசவத்துக்கு பிறகு வயிற்றை பலூன் போல நினைத்து பாருங்கள். குழந்தை வளரும் போது, உங்கள் வயிறு மெதுவாக விரிவடைகிறது. இப்போது குழந்தை வெளியே வரும் போது பலூன் சட்டென்று சுருங்காது. அதில் உள்ள காற்று மெதுவாக வெளியேறுகிறது. நீங்கள் கவனித்திருந்தால் பலூன்கள் சுருங்கி, காற்றின் பெரும்பகுதி வெளியேறும் போது சிறிது காற்றை தாங்கும். அந்த காற்றை வெளியேற்ற முயற்சிக்க செய்தாலே தொப்பை இல்லாமல் செய்யலாம்.

    பிரசவத்துக்கு பிறகு தாயின் வயிறு பழைய நிலைக்கு திரும்புவது சட்டென்று நடந்துவிடுவதில்லை என்பதால் முதலில் இது குறித்து கவலை கொள்ளாதீர்கள். சிலருக்கு ஒரு மாதத்தில் வயிறு பழைய நிலைக்கு திரும்பலாம்.

    எளிமையாக குறிப்புகள்

    * பிரசவத்துக்கு பிறகு மட்டுமல்ல பொதுவாக உடற்பயிற்சியின் எளிமையான பயிற்சி நடைபயிற்சி தான். ஒரே நேரத்தில் இல்லை என்றாலும் இது உடல்வலி, தலைவலி போன்றவற்றிலிருந்து மீண்டு வரும் பொது நன்மை அளிக்கும்.

    * உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற மெலிந்த புரதம், மசாலா, க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துவரலாம். நச்சு நீங்கினால் உடல் எடை பழைய நிலைக்கு திரும்பும்.

    * நீங்கள் செய்யும் எளிமையான மூச்சு பயிற்சி காற்றை இழுத்து உங்கள் வயிற்றில் வைத்திருக்கும் சுவாச பயிற்சியாகும். இது வழக்கமாக தாள சுருக்கங்கள் உங்கள் வயிற்றை தொனிக்க உதவுகிறது.

    * உடல் எடை இழப்புக்கான பாடி ரேப்களை போலவே தொப்பை அல்லது மகப்பேறு பெல்ட்களும் உங்கள் வயிற்றை இழுத்து கருப்பை அதன் அசல் அளவுக்கு சுருங்க உதவும். இது நம் முன்னோர் கால வயிற்றில் துணி கட்டும் முறைதான். தொப்பை குறைய பயன்படுத்தப்படும் பழமையான வழி இது.

    * உடல் எடை குறைக்கும் போது மசாஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வயிற்றை குறிவைத்து வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் மசாஜ் செய்யுங்கள்.

    • நிசார் முகமது வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.
    • கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா பள்ளி தைக்கால் பகுதியில் வசிப்பவர் நிசார் முகமது. வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவர் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.

    திடீரென, அந்த பசு நேற்று முன்தினம் ஒன்றின்பின் ஒன்றாக கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

    இதனை கண்ட நிசார் முகமது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் பசுவையும், 2 கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • டாக்டர் நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
    • கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு தனது கணவரை அழைத்து கொண்டு சிகிச்சை பெற சென்றார்.

    அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர், நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த பெண் சிறுநீர் சேகரிப்பதற்காக ஆஸ்பத்திரியில் இருந்த கழிவறைக்கு சென்றார்.

    அப்போது கழிவறையில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவமாகி உள்ளது. கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது. வயிற்று வலிக்காக சிகிச்சை பெற அழைத்து வந்த தனது மனைவி, குழந்தை பெற்ற சம்பவம் அவரை சிகிச்சைக்காக அழைத்து வந்த கணவரை அதிர்ச்சியடைய செய்தது.

    கழிவறையில் பிரசவித்தது குறித்து அந்த பெண்ணிடம் டாக்டர்கள் கேட்டனர். அப்போது, தான் கர்ப்பமாக இருந்தது தனக்கே தெரியாது என்று அந்த பெண் தெரிவித்தார். அவர் கூறியதை கேட்ட டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர்.

    இதையடுத்து அந்த பெண் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை ஆகிய இருவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிறந்த குழந்தைக்கு தொற்று ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டி இருப்பதால் கூடுதல் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    ஆனால் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை சாவக் காட்டில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    • 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம்.

    திருப்பதி:

    சதீஷ்கர் மாநிலம் பிஜப்பூர், உசூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தேவா. இவரது மனைவி போஜ்ஜா.போஜ்ஜாவுக்கு ஏற்கனவே 4 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தேவா தனது மனைவியுடன் ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

    மீண்டும் கர்ப்பமான போஜ்ஜா பிரசவத்திற்காக கடந்த 2-ந் தேதி பத்ராசலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போஜ்ஜாவுக்கு இது 8-வது பிரசவம் ஆகும்.

    அங்கு போஜ்ஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரது ஹீமோகுளோபின் அளவு 5.1 கிராம் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் போஜ்ஜா வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் சுகப்பிரசவத்தில் போஜ்ஜாவுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தேவாவுக்கு 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போஜ்ஜாவுக்கு ஏற்கனவே பிரசவம் பார்த்த டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பிரவசம் பார்த்ததால் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வடக்குபாளையம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் மனைவி சுபாஷிணி (வயது 23) தனது 2-வது பிரசவத்திற்காக சென்றார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்சும், உதவியாளர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுபாசிணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே அங்கிருந்த நர்சு சுபாஷிணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் சுபாஷிணியை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும், இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

    தற்போது சுபாஷிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து குழந்தையின் தந்தை கோபிநாதன் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுபாஷிணியின் குடும்பத்தினர் குழந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். பிரவசத்தின் போது குழந்தை இறந்து பிறந்த சம்பவம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
    • கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.

    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)

    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

    இதற்கு முக்கியமான காரணிகள்...

    * குடும்பப் பின்னணியில் நீரிழிவு

    * 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்

    * திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை

    * சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்

    * பருமன், அதிக எடை

    * முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்

    * நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை

    * அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு

    * பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்

    * முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...

    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    *எடை கூடுதல்

    *உயர் ரத்த அழுத்தம்

    *கரு கலைதல்

    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    *டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்

    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    *பிறப்புநிலைக் கோளாறுகள்

    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    *மஞ்சள் காமாலை

    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    *குறைப் பிரசவம்

    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    கட்டுப்படுத்துவது எப்படி?

    மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

    ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.

    தயக்கம் வேண்டாம்!

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக

    அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்

    விளக்கப்படும்.

    *வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

    • யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
    • உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு.

    *இயற்கை வழி பிரசவமாக (சுகப்பிரசவம்) இருந்தால் குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பிறகும், அறுவை சிகிச்சையாக (C - section) இருந்தால் ஆறு மாதத்திற்குப் பின்பும் உடற்பயிற்சிகள் தொடங்கலாம்.

    *ஆரம்ப நிலை உடற்பயிற்சி முதல் படிப்படியாக அதிகரித்து கடினமான உடற்பயிற்சிகள் வரை செய்யலாம்.

    *இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதித்து பின் எந்தெந்த தசைகளுக்கு வலிமை பயிற்சிகள், இலகுவாக்குவதற்கான பயிற்சிகள், தாங்கும் ஆற்றலுக்கான பயிற்சிகள் (Cardiac Endurance), எடை குறைய உதவும் பயிற்சிகள் எனத் தனித்தனியாகப் பிரித்து கற்றுக்கொடுப்பர்.

    *ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இதனை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

    *மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்க வேண்டும் என்பதால் கைகள், தோள்பட்டைக்கான பயிற்சிகள் வழங்குவார்கள். கூடவே,எப்படி, எவ்வாறு குழந்தையை தூக்குவது, எந்த முறையில் பால் கொடுப்பது போன்ற யுக்திகளையும் கற்றுக் கொடுப்பர். இதனால் உடல் வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    கவனிக்க வேண்டியவை...

    * யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், சில பயிற்சிகளை குழந்தை பிறந்த பின்பு செய்யக் கூடாது. அதேபோல சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    * அதேநேரம், உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு. தாய்ப்பால் உற்பத்தி செய்ய நிறைய சக்தி தேவைப்படும். கூடவே கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகள் சராசரியாக மற்றவர்களுக்கு தேவைப்படுவதை விட ஒரு பங்கு அதிகமாக தேவைப்படும் என்பதால், அளவைக் குறைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

    *போதிய அளவு உறக்கம் என்பது புது தாய்மார்களுக்கு கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், தூக்கம் சரியாக இல்லை எனில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் மீது நாட்டம் (Sugar Cravings) வரும். இதனால் நொறுக்குத் தீனி, சாப்பாடு அதிகம் சாப்பிடுவது, இனிப்பு வகைகள் உண்பது என உடல் எடை அதிகரிக்குமே தவிர தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே, கட்டாயமாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.

    *பிஸ்கட், சிப்ஸ், கேக் போன்ற நொறுக்குத் தீனிகள் தின்பதற்கு பதில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சாலட்கள், வேகவைத்த பயிறு, கடலை வகைகளை தாராளமாக உண்ணலாம். இதனால் எடையும் ஏறாது, ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

    *சரிவிகித உணவு முறையை (Balanced diet) கட்டாயம் தொடர வேண்டும். பேலியோ, நீர், கீட்டோ டயட் போன்றவற்றை கடைபிடிப்பதில் முழு பலன் இருக்காது.

    *சினிமா நடிகைகள், இணையதள பிரபலங்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் எடையை குறைக்கிறார்களே என்று சிலருக்கு தோன்றலாம். ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து மாறுபடும் என்பதால், நமக்கானதைத் தேடி, அறிந்து அதன் வழி மாற்றிக்கொள்வது நல்ல பலன்களை தரும்.

    *தாங்களாகவே நடைப்பயிற்சி, ரன்னிங், நடனம், வெறும் உணவு வழியாக எடையை குறைப்பது போன்றவை செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என நினைத்தால் செய்யலாம். ஆனால், சில வகையான தசை வலிமை பயிற்சிகள், தசை இலகுவாக இருக்க பயிற்சிகள் எனக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகு வலி, முன் வயிற்றில் தசை பிரிவதை தடுப்பது போன்ற பல பேறுக்காலத்திற்குப் பின் வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.

    நம் உடலிற்கு எது பொருந்துமோ அதன் வழியை பின்பற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்து நடப்பதே என்றென்றைக்கும் சிறந்தது.

    • கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது.
    • ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.

    பிள்ளைப்பேறு, பெண்களுக்கு மறுபிறவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கர்ப்ப காலத்தில் பலருக்கு பயம், குழப்பம், பதற்றம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வு மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை கையாள்வதற்கு யோகா எந்த வகையில் உதவும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஜெயபிரபா.

    கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் இருந்து யோகா பயிற்சி தொடங்கலாம்?

    கருவுற்று இருக்கும் பெண்கள் மூன்று மாதம் முடிந்து, 4-வது மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பயிற்சிக்குத் தயாராக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று காலை, மாலை இரண்டு வேளையும் உடலை வருத்தாமல் எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகளை, பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்யலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.

    கர்ப்பிணிகள் என்னென்ன யோகாசனங்களை செய்யலாம்?

    தடாசனம், பத்தகோணாசனம், வஜ்ராசனம், யோகா நமஸ்காரம், ஆனந்த சயனாசனம், பாலாசனம், சவாசனம், மகாமுத்திரா மற்றும் மூச்சுப் பயிற்சி என மொத்தம் எட்டு ஆசனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவத்தை உடல் மற்றும் மனரீதியாக எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்துகிறது. இவற்றை பயிற்சியாளரின் துணையுடன் செய்வதே பாதுகாப்பானது.

    எத்தனை மாதங்கள் இந்தப் பயிற்சிகளை செய்ய வேண்டும்?

    பிரசவம் வரை இந்தப் பயிற்சிகளை செய்யலாம். 8-வது மாதத்தில் பயிற்சி செய்யும்போது லேசாக மூச்சு வாங்கும். மூச்சுப் பயிற்சிகளை ஆரம்பத்தில் இருந்து செய்யும்போது இந்த சிரமம் ஏற்படாது. குழந்தையின் எடை கூடும்போது உட்கார்ந்து எழும் பயிற்சிகள் செய்வது சற்று சிரமமாக இருக்கும். மற்ற பயிற்சிகளை சற்று இடைவெளி விட்டு ஓய்வெடுத்து செய்யலாம்.

    கர்ப்பகால யோகா பயிற்சிகள் செய்வதன் நன்மைகள் என்ன?

    கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது. கர்ப்பிணிகள் தன்னைப்போல, பல கர்ப்பிணிகளுடன் ஒன்றாக சேர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்யும்போது தனிமை பயம் நீங்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதால் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலை சீராக இருக்கும். தேவையில்லாத எதிர்மறை சிந்தனைகள் குறையும். வயிற்றில் இருக்கும் கருவைத் தாங்குவதற்கும், எளிதாக பிரசவிப்பதற்கும், எலும்புகள், தசை மற்றும் தசை நார்களை உறுதியாக்குவதற்கும், உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதற்கும் இந்தப் பயிற்சிகள் உதவும்.

    • சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    • சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது.

    தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புபடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

    * பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வது, பணி நிமித்தம் காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, 35 வயதை எட்டிய பிறகு கருத்தரிப்பது போன்றவை சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    * உடல் பருமனும் சிசேரியன் பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. பி.எம்.ஐ. அளவு 25-க்கு மேல் இருந்தால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாகிவிடும்.

    * சில பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்துக்கொள்வதற்கு விரும்புகிறார்கள்.

    * பிரசவ அறையில் அதிக நேரம் செலவிடும் சூழலும் சிசேரியனை தேர்ந்தெடுக்க காரணமாகிவிடுகிறது. குழந்தை பிறப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்தும் பிரசவ வலி ஏற்படாதபோது, தாய்-சேய் இருவரது உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு சிசேரியனை தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.

    சுகப் பிரசவத்திற்கு வழிமுறைகள்

    * சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது. பிரசவம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துக்களையும் குறைக்கும்.

    * நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் (ஸ்டெமினா) தேவைப்படும். பிரசவமும் அது போன்றதுதான். மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகுவதுபோல 10 மாத கர்ப்ப காலத்தையும் கருத வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

    * தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே சுக பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனினும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடல் நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமானது.

    * 'ஸ்குவாட்' எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியை செய்வது பிரசவத்தை எளிதாக்கும். கால்களை நேர் நிலையில் வைத்துக்கொண்டு மூட்டுகளை நன்றாக மடக்கியபடி குனிந்து நிமிரும்போது இடுப்பு பகுதிகள் விரிவடையும். கருவில் இருக்கும் குழந்தை எளிதாக பிரசவ நிலைக்கு வருவதற்கு வழிவகுக்கும். இந்த பயிற்சியை மருத்துவ ஆலோசனை பெற்று உடற்பயிற்சியாளரின் அறிவுரையின்படி மேற்கொள்ள வேண்டும்.

    * பிரசவ காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் மையங்கள் இருக்கின்றன. அங்கு பயிற்சி பெறுவது பிரசவத்தை எளிதாக்கும்.

    * கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. உடலுக்கு போதுமான புரதம் மற்றும் ஆற்றலை வழங்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் கருப்பையை வலுவாக்க முடியும்.

    ×