search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள்"

    மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
    கோவை:

    கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. தொழிலாளி. இவரது மனைவி சிந்து (வயது 26). இவர்களுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதையடுத்து சிந்து கர்ப்பமானார். 3-வது மாதம் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். டாக்டர்கள் ஸ்கேன் செய்த போது அவருக்கு 3 கருக்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

    பின்னர் டாக்டர்கள் அவருக்கு சத்து மாத்திரைகள் வழங்கி உணவு சாப்பிடும் முறை குறித்து ஆலோசனை கூறினர். இதைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான சிந்து கடந்த 2-ந் தேதி பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பிரசவ வலியால் துடித்த சிந்துவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக 4 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், நேற்று சிந்துவுக்கு சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர்.

    காலை 9.23 மணியளவில் சிந்துவுக்கு அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

    அதில், 2 பெண் குழந்தைகள் தலா 1¾ கிலோ எடையும், ஒரு குழந்தை 1½ கிலோ எடையுடன் இருந்தது. தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் தற்போது 3 குழந்தைகள் பிறந்து உள்ளது. அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

    இது குறித்து அந்த குழந்தைகளின் தந்தை சுரேஷ்பாபு கூறும்போது,

    மகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மிகவும் ஏழையான நான் 3 பெண் குழந்தைகளையும் எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை. எனவே அரசு எனக்கு உதவ வேண்டும் என்றார். #tamilnews
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பெத்தேஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் நடந்த மருத்துவ பரிசோதனையில் அவர் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. #DonaldTrump
    வாஷிங்டன் :

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மேரிலாந்து மாகாணத்தில் பெத்தேஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர் நல்ல ஆரோக்கியமாக இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி வெள்ளை மாளிகை மருத்துவர் சியான் கான்லே விடுத்த அறிக்கையில், ‘‘நானும், 11 சிறப்பு மருத்துவ நிபுணர்களும் 72 வயதான ஜனாதிபதிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினோம். 4 மணி நேரம் இந்த பரிசோதனைகள் நடந்தன. அதன் முடிவுகளில் இருந்து, ஜனாதிபதி நல்ல ஆரோக்கியமாக உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தனது பதவிக்காலம் முழுமைக்கும் மட்டுமல்லாது அதையும் கடந்து நலமாக இருப்பார்’’ என கூறினார்.

    அதே நேரத்தில் டிரம்பின் எடை, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, ரத்த அழுத்த விவரம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    கடந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் டிரம்ப் கொஞ்சம் எடை குறைய வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. அப்போது அவர் 107 கிலோ எடை இருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. #DonaldTrump
    டாக்டர்கள் மற்றும் ஆடிட்டர்களையும் வருமான வரி கட்ட வைக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. #IncomeTax #CentralGovernment

    புதுடெல்லி:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, வரி வருவாயை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7 கோடி பேர் வருமான வரி செலுத்தும் பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன் மூலம் வரி செலுத்தும் தனி நபர்கள் எண்ணிக்கை 68 சதவீதம் உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை கூறி உள்ளது.

    வருமான வரி செலுத்துபவர்களில் 90 சதவீதம் பேர் பணிகளில் இருப்பவர்கள்தான். தொழில் செய்பவர்களில் கணிசமானவர்கள் வருமான வரி வளையத்துக்குள் வராமல் உள்ளனர். இது பற்றிய தகவல்களை வருமான வரித்துறை திரட்டியுள்ளது.

    இந்தியாவில் சுமார் 9 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தும் பட்டியலில் இல்லை.

    அதுபோல நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களில் வெறும் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர்தான் முறையாக கணக்கு காட்டி வருமான வரி கட்டுவதாக தெரிய வந்துள்ளது.

    நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் ஆடிட்டர்கள் உள்ளனர். பெரிய, பெரிய தொழில் நிறுவனங்களின் நிதி கணக்கை கையாள்வது இவர்கள்தான். இதற்காக மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.

    ஆனால் இவர்களில் 3-ல் ஒருவர்தான் வருமான வரி செலுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வகையில் பல லட்சம் டாக்டர்கள், ஆடிட்டர்கள் முறையாக வருமான வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    எனவே இவர்களை வருமான வரி செலுத்த வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #IncomeTax #CentralGovernment

    அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி டாக்டர், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவரச சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் பல பிரிவுகள் உள்ளன.

    இந்த ஆஸ்பத்திரிக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியின் காவலாளியாக ராஜா (வயது 35). என்பவர் நேற்று இரவு இருந்தார்.

    இரவு 11 மணியளவில் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்ற வாலிபர் குடிபோதையில் ஆஸ்பத்திரியின் கேட்டில் நின்று கொண்டு காவலாளியிடம் கதவை திறக்கும்படி கூறினார். ஆனால் ராஜா கதவை திறக்காமல் இருந்தார்.

    அப்போது ஆத்திரம் ராமச்சந்திரன் கேட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே புகுந்தார். பின்பு பிரசவ வார்டு அருகே சென்ற அவர் அங்கு இருந்த கதவை உடைத்து ரகளை செய்தார். அப்போது அந்த அறையில் இருந்த நர்சுகள் கிரேசி, வசந்தி, மலர்விழி மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அந்த வாலிபரிடம் ஏன் இங்கு வந்து ரகளை செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டனர். அவர்களையும் ராமச் சந்திரன் ஆபாசமாக பேசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு இருந்த நர்சுகள் அலறிஅடித்துக்கொண்டு ஆஸ்பத்திரி அருகில் இருந்த புறக்காவல் நிலையத்திற்கு சென்று புகார் கூறினர். இதை அறிந்ததும் ராமச்சந்திரன் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்பு அவர் சிறிது நேரம் கழித்து தனது அண்ணன் இளையபெருமாள் (29), உறவினர் ஸ்ரீகாந்த் (32) ஆகியோருடன் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்பு அவர்கள் அங்கிருந்த காவலாளி ராஜாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து காவலாளி ராஜா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்று காலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு வழக்கம் போல் வந்தனர். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வாலிபர் காவலாளியை தாக்கி விட்டு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் திடீரென்று பணி செய்யாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    7 டாக்டர்கள், 18 நர்சுகள், 30 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், பட்டாபிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் சாந்தி கூறினார். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர்.

    அதனைதொடர்ந்து போராட்டம் நடத்திய டாக்டர்கள், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 3 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் பெரும் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளி ராஜாவை தாக்கிய ராமச்சந்திரன், இளையபெருமாள், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதலில் காயம் அடைந்த காவலாளி ராஜாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யாதீர்கள் என்று டாக்டர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை கூறி உள்ளார். #VenkaiahNaidu
    புதுச்சேரி:

    ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    இன்று ஜிப்மர் நிறுவனத்தின் இரண்டு வளாகங்களில் இருந்து சுமார் 200 மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடித்து பணியாற்ற தயாராவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களது கடுமையான படிப்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஒவ்வொருவரையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

    அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி கடந்த சில ஆண்டுகளில் இந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியர்களையும், மாணவர்களின் வெற்றிக்காக தன்னலமின்றி பாடுபட்ட அவர்களது பெருமைக்குரிய பெற்றோர்களையும் நான் பாராட்டுகிறேன்.

    அன்பார்ந்த மாணவர்களே, இந்த நாட்டில், உயர்தரமான கல்வியைப் பெறும் குறிப்பிட்ட சில மாணவர்களாக நீங்கள் திகழ்வது உங்களது பாக்கியம்.

    மருத்துவக் கல்வியின் சிறப்பான அடிப்படை முறைகள் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நான் நம்புகிறேன். அத்துடன் உங்களது விருப்பத்துக்கு ஏற்ற துறையை தேர்வு செய்து நிபுணர்களாவதற்கு நீங்கள் ஆயத்தமாகியிருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.



    நாட்டில் 3-வது சிறந்த மருத்துவக்கல்லூரியாக ஜிப்மர் மருத்துவக்கல்லூரி திகழ்கிறது. தன்வந்தரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவனை பின்னர் ஜிப்மர் என பெயர் பெற்றது. புதுவை மட்டுமின்றி தமிழகம், கேரளா, ஆந்திரா என பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுகின்றனர்.

    நிறுவனங்கள், சாலைகள் ஆகியவற்றுக்கு தலைவர் பெயர் வைப்பது நினைவு கூர்வதற்குத்தான் ஆனால் ஜிப்மர் மருத்துமவனை பண்டித ஜவகர்லால்நேரு பெயரை தாங்கியுள்ளது. ஆனால் அதை யாரும் கூறாமல் ஜிப்மர் என கூறுகின்றனர். அதேபோல எம்.ஜி. ரோடு, எஸ்பி ரோடு என தலைவர்களின் பெயரை நினைவுகூராமல் அழைக்கின்றனர். முழுமையாக தலைவர்களின் பெயரோடு அழைக்க வேண்டும். மதம், மொழி, கலாச்சாரம் என பலவற்றால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை உணர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி 3 தாரக மந்திரங்களை கொண்டு செயல்படுகிறார். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற 3 தாரக மந்திரங்களை மாணவர்களாக நீங்களும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

    மாணவர்கள் தங்களின் வாழ்நாளில் பெற்றோரை, பிறந்த மண்ணை, தாய்மொழியை, குருவை ஒரு போதும் கைவிடக் கூடாது. படித்து முடித்தவுடன் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் அங்கெல்லாம் சம்பாதித்து மீண்டும் தாய்நாட்டிற்கே திரும்புங்கள்.

    ஜிப்மர் மருத்துவமனை 90 சதவீத நோயாளிகளுக்கு இலவச மருத்துவத்தை அளித்து வருகிறது. இங்கு அதிநவீன சிகிச்சை செய்யப்படுகிறது. சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளது. ஜிப்மர் கிளை காரைக்கால், ஏனாமில் தொடங்கப்பட்டுள்ளது.

    நமது மருத்துவத்தில் உணவே மருந்தாகும். ஆனால் இன்றைய காலத்தில் பீட்சா, பர்கர் என மக்கள் பலவகை உணவுக்கு மாறிவிட்டனர். நோயாளிகளிடம் இந்திய உணவை உண்ணும்படி சொல்லுங்கள். தேவையற்ற பரிசோதனைகளை நோயாளிகளிடம் பரிந்துரை செய்யாதீர்கள்.

    தற்போது மருத்துவமனையில் எந்திரங்கள்தான் அதிகமாக உள்ளது. அதை கைவிட்டு நோயாளிகளிடம் நேரடியாக பேசுங்கள். இயற்கையோடு இணைந்த வாழ்வுதான் நோயற்ற வாழ்வைத்தரும். எனவே அதிகளவில் மரம் நடுங்கள்.

    புதுவை கவர்னர் வாய்க்கால்களை தூர்வாரியுள்ளார். அவர் மட்டுமின்றி மக்களும் தாமாக முன்வந்து இதை செய்ய வேண்டும். தேர்தலுக்கு பிறகு அரசியல் கிடையாது. நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகிறோம். இதே வளர்ச்சிப் பாதையில் நாடு சென்றால் 3-வது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறும்.

    பரந்து விரிந்த, பெருமளவிலான மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில், சுகாதார சேவைகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆரம்ப சுகாதார மையமாக இருந்தாலும் சரி, அல்லது, உயர் சிறப்பு மருத்துவமனைகளான உங்களது ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு செல்லும்போது, இன்னும் அதிக மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    உலகம் முழுவதும் இன்னும் தரமான மருத்துவ சேவை கிடைக்கவில்லை. நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு குறைந்த செலவில் உயர்சிகிச்சையும் கிடைக்கவில்லை.

    எனவே, ஒவ்வொருவருக்கும், சிறப்பான, தரமான, மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மிகவும் சிறப்பு மிக்க பிரதமரின் “ஜன் ஆரோக்யா திட்டத்தை” தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், இதுவரை நாம் கண்டிராத மாபெரும் சுகாதார திட்டமாகும். இந்தத் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினால், இந்தியா வின் மருத்துவ சேவையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

    குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்குவதற்கான இந்த உன்னதமான முன்முயற்சி யில், உங்களைப் போன்றவர்கள் மிக முக்கிய பங்குவகிக்க வேண்டும்.

    நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு குறைந்த செலவில் உயர் சிறப்பு மருத்துவ சேவை வழங்குவதில், ஜிப்மர் நிறுவனம் நீண்டகாலமாக முன்னணி நிறுவனமாக திகழ்வது மகிழ்ச்சிக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார். #VenkaiahNaidu
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. #UPDoctorsPoorHandwriting
    லக்னோ:

    பெரும்பாலன டாக்டர்கள் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை குறிப்புகளை எழுதுகின்றனர். தற்போது அது ஒரு பிரச்சினையாகவும், கிரிமினல் குற்றமாகவும் ஆகிவிட்டது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிதாபூர், உன்னாவோ, கோண்டா ஆகிய 3 மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குறிப்புகளும், மருத்து சீட்டுகளும் எழுதி கொடுத்தனர். ஆனால் அவர்களின் கையெழுத்து புரியவில்லை. இதனால் சரியாக மருந்து மாத்திரை வாங்க முடியவில்லை. வேறு இடத்தில் மேல்சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.

    இதையடுத்து டாக்டர் டி.பி.ஜெய்ஸ்வால் (உன்னாவோ) டாக்டர் பி.கே. கோயல் (சிதாபூர்) டாக்டர் ஆஷிஸ் சக்சேனா (கோன்டா) ஆகியோர் மீது அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு புரியாத கையெழுத்தில் மருத்துவ குறிப்பு மற்றும் மருந்து சீட்டு எழுதிய 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். அதை கோர்ட்டு நூலகத்தில் செலுத்தும் படியும் உத்தரவிட்டனர்.

    அதிக வேலைப்பழுவின் காரணமாகவே மருந்து சீட்டு மற்றும் மருத்துவ குறிப்பு எழுதுவதில் பிழைகள் ஏற்பட்டது. என விசாரணையின்போது டாக்டர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    தெளிவான கையெழுத்தில் மருத்துவ குறிப்புகள் எழுதினால் மற்ற அனைத்து டாக்டர்கள் புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க முடியும். கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சில மருத்துவ குறிப்புகளை வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

    எனவே அனைவருக்கும் புரியும்படி தெளிவான கையெழுத்துடன் மருத்துவ குறிப்புகள் எழுதுவது டாக்டர்களின் கடமை என்று தெரிவித்தனர். #UPDoctorsPoorHandwriting
    3 டாக்டர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாற்றுத்திறனாளி தம்பதி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளி தம்பதியினர் வந்திருந்தனர்.

    அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த போது தாங்கள் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை தின்றனர். பின்னர் கலெக்டர் அலுவலக மாடியில் சென்ற போது தம்பதியினர் திடீரென அங்கேயே மயங்கி விழுந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் , தம்பதியினரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாற்றுத்திறனாளி தம்பதி எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றனர்? என்று திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 3 டாக்டர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    தற்கொலைக்கு முயன்ற தம்பதியினர் திருத்துறைப்பூண்டி காமராஜர் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(வயது 40) -அவரது மனைவி சித்ரா(35) என தெரியவந்தது. இருவரும் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இதில் சித்ரா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். தட்சிணாமூர்த்தி ஆதிச்சபுரம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, சித்ரா ஆகியோர் ஊனத்தின் தன்மை குறித்து திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத் திரியில் பரிசோதனை நடந்தது. இதில் சித்ராவை பரிசோதித்த 3 டாக்டர்கள், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா, இன்று கணவர் தட்சிணா மூர்த்தியுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது திடீரென தம்பதியினர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தம்பதியினரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மும்பை பகுதியில் உடலில் காயம் அடைந்து ஊர்ந்து செல்ல முடியாமல் இருந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு, கோல்டு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Snake #MRI #Scan
    மும்பை:

    மும்பை தகிசர் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு விஷப்பாம்பு ஒன்று உடலில் காயம் அடைந்து ஊர்ந்து செல்ல முடியாமல் நெளிந்துகொண்டு இருந்தது. இதை பார்த்ததும் போலீஸ்காரர் அந்த பாம்பை மீட்டு பாம்பு பிடிக்கும் அனில் குபால் என்பவரிடம் ஒப்படைத்தார்.

    அவர் செம்பூரை சேர்ந்த கால்நடை டாக்டர்களிடம் சிகிச்சைக்காக அந்த பாம்பை கொண்டு வந்தார். பரிசோதனையில் அந்த பாம்பின் முதுகெலும்பு உடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முதுகெலும்பு எந்த அளவுக்கு சேதம் அடைந்து உள்ளது என்பதை கண்டறிய அந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது.

    அந்த பாம்புக்கு ‘கோல்டு லேசர்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், குழாய் மூலம் அதற்கு உணவு வழங்கப்படுவதாகவும், முற்றிலும் குணமடைந்ததும் அந்த பாம்பு காட்டில் விடப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். #Snake #MRI #Scan

    பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீழக்கரை:

    கீழக்கரை தாலுகா பெரியபட்டினத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். முத்துப்பேட்டை, வண்ணாங்குண்டு, சேதுநகர், களிமண்குண்டு, புதுக்குடியிருப்பு, உள்பட 20-க்கும் அதிகமான சுற்றுவட்டார கிராம மக்கள் சிகிச்சை பெறுவதற்கு பெரியபட்டணம் வந்து செல்கின்றனர்.

    இங்கு 3 டாக்டர்கள் பணிபுரிந்த இடத்தில் ஒரு பெண் டாக்டர் மற்றும் 4 நர்சுகள் மட்டுமே உள்ளனர். இரவில் அவசர சிகிச்சை, பிரசவத்திற்காக வரும் பெண்கள் டாக்டர் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் 24 கி.மீ., தொலைவில் உள்ள ராமநாதபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

    இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி பைரோஸ்கான் கூறுகையில், கிராம மக்களின் அவசியத்தை உணர்ந்து பெரியபட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    ஜாமீன் பெறுவதற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்ததால் வக்கீல், டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கோவை:

    கோவை காந்திபுரம் சத்தி ரோட்டில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் போதை பொருளை வைத்திருந்ததாக பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல், கோவை சாய்பாபா காலனி முகமது சிகாப், குனியமுத்தூர் ஜூல்பிகர் அலி, உக்கடம் முகமது அனாஸ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது பெங்களூரில் இருந்து இந்த போதை பொருட்களை வாங்கி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

    கைதான 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு கோவை இன்றியமையா பொருட்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கூறி முகமது சிகாப் வக்கீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதற்காக மருத்துவ சான்று, திருமண பத்திரிகை ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் உண்மை தன்மையை கண்டறிய போலீசாருக்கு நீதிபதி தஞ்சய் பாபா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் ஜாமீன் மனு தாக்கல் செய்த முகமது சிகாப்பிற்கு வலிப்பு நோய் இல்லை என்பதும், அவர் திருமண பத்திரிகை போலியாக அச்சடித்து மனு தாக்கல் செய்து இருப்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணம் தயாரித்து கோர்ட்டை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்பட்ட வக்கீல் மற்றும் மருத்துவ சான்றிதழ் வழங்கிய டாக்டர்கள் மீது கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் வழக்கு பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பி. சந்திரசேகர் ஆஜராகி வாதாடினார்.
    ஆலங்குளத்தில் அரிமா சங்கம்,மெர்கண்டைல் வங்கி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    ஆலங்குளம்

    ஆலங்குளத்தில் அரிமா சங்கம்,மெர்கண்டைல் வங்கி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற இந்த முகாமிற்கு  மெர்கண்டைல் வங்கி மேலாளர் கணேஷ் பாபு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர்  ஜெயராஜ் முன்னிலை வகித்தார். 

    செயலாளர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் 130 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 44 நபர்களுக்கு கண்புறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இந்த நிகழ்சியில் அரிமா சங்கத்தை சேர்ந்த உதயராஜ், பாலகிருஷ்ணன், அய்யங்கண்னு, ஜஸ்டின் ராஜ் திரவியம், ராஜகொளுந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×