search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 131837"

    தஞ்சையில் அதிகாலையில் மதுக்கடையை திறந்து கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் பாலாஜி நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்தக்கடை சாலையோரமாக, குடியிருப்பு பகுதிகளின் அருகாமையில் செயல்பட்டு வருகிறது.

    நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த கடை அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய மதுக்கடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கடையில் தினமும் காலையில் உள்ளே சிலர் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தனர்.இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் . அந்த வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது,

    இந்த மதுக்கடையில் தொடர்ந்து கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    புதுவை அருகே மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கனூர்:

    புதுவை அருகே திருக்கனூர் - விழுப்புரம் மெயின் ரோட்டில் தமிழக எல்லையையொட்டி தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் திருக்கனூர் மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் ஏராளமானோர் மது அருந்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மதுக்கடையை கேஷியர் பூட்டிவிட்டு சென்றார். அவர் கடையை பூட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடை மீது வீசினர். உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அந்த வெடிகுண்டு கடையின் ஷெட்டரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மதுக்கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையின் ஷெட்டர் மட்டுமே சேதமானது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு வீசியவர்களின் அடையாளங்கள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் வெடிகுண்டு வீசிய நபர்கள் யார் - எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ரவுடிகள் மதுக்கடை மீது வெடிகுண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் திருக்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வெடிகுண்டு வீசப்பட்ட மதுக்கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்த டிரைவர் பலராமன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன்கொட்டாய் கிராமத்தில் புதிய மதுக்கடை அமைக்கப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் பரவியது. இதையடுத்து நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டனர். அவர்கள் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இருசன்கொட்டாய் கிராமத்தைச் சுற்றி பாலஜங்கமனஅள்ளி, அட்டப்பள்ளம், கூன்மாரிக்கொட்டாய், வெத்தலஆத்துக்கொட்டாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள் உள்ளன. மதுக்கடை வழியாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு மதுபிரியர்களால் இடையூறு ஏற்படும். எனவே இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது. மீறி அமைத்தால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்ணமல்லி கிராமத்தில் புதிதாக அரசு மதுபானகடை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல முறை மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து திறக்கப்பட்ட மதுக்கடை ஒவ்வொரு முறையும் மூடப்பட்டது.

    மேலும் மதுக்கடைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த இரு தரப்பினரிடையேயான பேச்சுவார்த்தை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்தது. இதில் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இதனையடுத்து மதுக்கடையும் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் அந்த மதுக்கடை மீண்டும் திடீரென திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள், தாமாகவே முன்வந்து கடையை மூடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் சாராய கடை, கள்ளுக்கடை இயங்கி வந்தது.

    தற்போது புதிதாக மதுபான கடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கோவில், கல்வி நிலையம், குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் சாராயம், மதுபான கடைகள் இயங்கக்கூடாது. இதை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்காக முதல்-அமைச்சர், சபாநாயகர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். ஆனால் 2 மாதமாக கடைகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என சோ‌ஷலிஸ்டு யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா என்ற கம்யூனிஸ்டு அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

    இதற்காக இன்று காலை கருவடிகுப்பம் சித்தானந்தா கோவில் அருகில் நிர்வாகிகள் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்டு மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.

    தொகுதி செயலாளர் நாகராஜன், இளைஞர் அணி செயலாளர் பிரளயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் முத்து, தலைவர் சிவக்குமார், நிர்வாகி சிவசங்கரன் மற்றும் நிர்வாகிகள் சரவணன், சங்கர், இப்ராகிம், முனுசாமி, தன்ராஜ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் மதுக்கடை அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடையை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் சுமார் 50 பேரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    சுரண்டை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பரங்குன்றாபுரம் பொதுமக்கள் தாசில்தாரிடம் அனு கொடுத்துள்ளனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் பொதுமக்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் நல்லையாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரங்குன்றாபுரத்திலிருந்து கலிங்கப்பட்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி, பெண்கள் பீடி கடைக்கு செல்கின்ற பகுதி என்பதால், கடையை உடனடியாக அகற்ற வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடை மூடப்பட்டது. 

    இந்நிலையில் பரங்குன்றாபுரத்திலிருந்து சுரண்டை வரும் ரோட்டில், மரியதாய்புரம் ரோடு பிரிகின்ற இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம், அச்சம் குன்றம், கருவந்தா, குறிச்சான்பட்டி,  முதலான கிராமங்களுக்கு செல்கின்ற பொதுமக்கள் பரங்குன்றாபுரம் விலக்கில் இறங்கி நடந்து இப்பகுதிக்கு செல்லுகின்றனர். 

    இந்நிலையில் பரங்குன்றாபுரம், மரியதாய்புரம் ரோடு பிரியக்கூடிய இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இது பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். நடந்து செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். எனவே கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதில் ம.தி.மு.க. மாவட்ட மகளிரணி செயலாளர் தேனம்மாள், சுதா, ராணி, மகேஸ்வரி, பாப்பா, ரீகன், அமிர்தராஜ், பொன்னுத்துரை, குமாரவேல் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    புழலில் புதிதாக திறந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செங்குன்றம்:

    புழல் போலீஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் நேற்று புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இன்று காலை மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர். #tamilnews
    டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம், காந்திநகர், ரங்கசமுத்திரம் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வால்பாறை சாலை வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் வஞ்சியாபுரம் பிரிவு பி.ஏ.பி. கால்வாய் பகுதியில் விவசாய நிலத்திற்குள் மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் கடையை அனுமதிக்க கூடாது என அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    ஆனால் தொடர்ந்து டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்ததால் ஆத்திரமடைந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. இதனால் வால்பாறை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் டாஸ்மாக் அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி யளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    கருவடிக்குப்பத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி சோசலிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் இன்று மதுக்கடை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற சித்தானந்தா கோவில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ளது.

    இங்கு ஏற்கனவே அமைந்துள்ள சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடைகளால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    இந்த மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஏற்கனவே உள்ள சாராய-கள்ளுக்கடைகளையும், புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி சோசலிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் இன்று மதுக்கடை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சோசலிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் முத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சேகர், சுதாகர், பிரளயன், ஏழுமலை, சீனு, சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(புதன்கிழமை) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களையும் மூட வேண்டும். மேலும் மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது.

    இந்த விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன் படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்தது. #ChennaiHighCourt #tamilnaduGovernment
    சென்னை:

    சென்னை, திருமுல்லைவாயலில் புதிதாக மதுபான கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.



    மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளை ஏன் மதிய உணவுக்கு முன்பே திறக்கின்றனர்?, அந்த கடைகளில் வேலை நேரத்தை குறைத்தால் என்ன?, டாஸ்மாக் மதுபான கடைகளில் செயல்படும் பார்களில் தரமான உணவு விற்கப்படுகிறதா?, அந்த பார்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய உரிமங்களை பெற்றுள்ளதா? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

    அதில், சென்னையில் உள்ள டாஸ்மாக் பார்களில் 205 பார்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு உரிமம் பெறுவது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உரிமம் பெறாத பார்கள் 7 நாட்களுக்குள் உரிமத்தை பெறவேண்டும். இல்லையென்றால், அந்த பார்களின் இழுத்து மூடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கே.செல்வராஜ், எங்கள் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் உணவு பாதுகாப்பு உரிமத்தை வாங்கிவிட்டனர். தரமான உணவு பண்டங்கள் தான் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், குடிபோதையில் சாப்பிடும் உணவு தரமானதா? என்பது குடிமகன்களுக்கு தெரியாது. அவர்கள் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும், அவர்களுக்கு நல்ல உணவு பண்டங்கள் தரமாக வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக அக்கறை எங்களுக்கு உள்ளது. எனவே, பார்களில் தரமான உணவு பண்டங்கள் விற்கப்பட வேண்டும். தரம் குறைவாக இருந்தால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    பின்னர், டாஸ்மாக் மதுபான கடையின் வேலை நேரத்தை ஏன் இதுவரை அரசு குறைக்கவில்லை. 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கடை திறந்துள்ளது. ஏன் உணவு இடைவேளைக்கு முன்பு மதுக்கடையை திறக்கிறீர்கள்?, பிற்பகல் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன? என்று அரசு தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அரவிந்த்பாண்டியன், டாஸ்மாக் மதுபான கடையை எப்போது திறப்பது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்றார். அதற்கு நீதிபதிகள், மதியம் உணவுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடையை திறந்து மக்களை குடிக்க வைப்பதில் என்ன கொள்கை முடிவு தமிழக அரசுக்கு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர்.

    அதைத் தொடர்ந்து, படிப்படியாக மதுபான கடைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அரவிந்த்பாண்டியன், நெடுஞ்சாலைகள் அருகே மதுபான கடைகள் திறக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால், தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டுவிட்டன. இதை நாங்கள் கணக்கு காட்ட விரும்பவில்லை. இருந்தாலும், இந்த 500 மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

    இதையடுத்து விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #ChennaiHighCourt #tamilnaduGovernment
    திருவள்ளூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள பேரம்பாக்கத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பொருளாதார ஆசிரியர் நியமிக்க வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை வசதி மற்றும் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்- அப்பில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ காட்சி 6 நிமிடம் ஓடுகிறது.

    அதில் மாணவி ஒருவர் ஆவேசமாக பேசுகிறார். சில மாணவிகள் கோரிக்கை குறித்து அட்டையை ஏந்தி நிற்கிறார்கள். அருகில் 50-க் கும் மேற்படட மாணவிகள் கோ‌ஷம் எழுப்புகின்றனர்.

    மாணவிகளின் இந்த போராட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்ததாக தெரிகிறது. இதனை மாணவிகளே படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தணி அருகே அரசு பள்ளியில் இடமாறுதல் ஆன ஆசிரியர் பகவானை வெளியே விட மறுத்து மாணவ - மாணவிகள் பாசப் போராட்டம் நடத்திய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×