search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீல்"

    நாகை மாவட்டத்தில் மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வந்த பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். #NagaiFakeUniversity #UniversitySealed
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

    தொலைதூர பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர் நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவ துறைகளின் கீழ் சான்றிதழ்கள் அளித்துள்ளார்.

    இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருந்து இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பட்டங்களை பெற்றுள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு பல்கலைக்கழகம் குறித்து சந்தேகம் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து குத்தாலம் மேலசெட்டித்தெருவில் ஒரு வீட்டில் செயல்பட்ட அந்த பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் வந்தனர்.

    சென்னையில் உள்ள மருத்துவ விழிப்புணர்வு பணி துணை போலீஸ் சூப்பிரண்டு தாமஸ்பிரபாகர் தலைமையில், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் திறந்தவெளி மாற்றுமுறை பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த பல்கலைக்கழகம் போலியாக செயல்பட்டது தெரியவந்தது.



    இதைத்தொடர்ந்து அங்கு இருந்த போலி சான்றிதழ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி முன்னிலையில் மருத்துவ அதிகாரிகள் போலி பல்கலைக்கழகத்தை மூடி சீல் வைத்தனர்.

    இதுபற்றி சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது:-

    இந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம், மாற்றுமுறை மருத்துவம் என்பதை பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் பதிவு செய்யப்படவில்லை. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்களை பெற்று மருத்துவம் பார்த்து வருவதாக தெரிகிறது. இதில் அதிகமாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், சென்னை, மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அவர்களது விவரங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு அனுப்பி போலி டாக்டர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NagaiFakeUniversity #UniversitySealed


    ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த 41 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் ‘சீல்‘ வைத்தனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமாக 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஏலத்தில் வாடகைக்கு எடுத்தவர்கள் டீ கடைகள், பேன்சி ஸ்டோர், சலூன் கடைகள் உள்பட பல்வேறு கடைகளை வைத்து நடத்தி வந்தனர். இந்த கடைகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சேதமடைந்து மேல்தளம் பெயர்ந்து கீழே விழுந்தது. மேலும் மழைநீர் கட்டிடத்தின் மேல்தளத்தில் தேங்கியதால் கடைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையொட்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் கடைகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் கடைகள் பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் இல்லை என்பது தெரியவந்தது. இதையொட்டி சேதமடைந்த கடைகளை ஏலத்தில் எடுத்தவர்களுக்கு கடைகளை காலி செய்யும்படி நகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    இதையொட்டி நேற்று நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த 41 கடைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கட்டிடங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும், அதற்கான பூமி பூஜை நடைபெறும் என்று நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தெரிவித்தார்.
    பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் அந்த பாருக்கு சீல் வைக்க காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். #DenguFever
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகின்றன.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பொன்னையா இன்று அதிகாலை காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழிவு நீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.

    பின்னர் ரெட்டிப்பேட்டை பகுதியில் உள்ள கோழிக்கறி கடை மற்றும் ஐஸ் பேக்டரிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

    இந்தபகுதியில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் உடனடியாக அந்த பாருக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் அனுமதி இல்லாமல் பார் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் சுகாதாரத்தை உறுதி செய்ய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமான இடங்களை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. #DenguFever
    மாயார் வழித்தடத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யாத 10 ரிசார்ட்டுகளுக்கு நோட்டீஸ் வழங்கி சீல் வைக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடங்கள் தொடர்பான வழக்கில் மாயார் யானைகள் வழித்தடத்திலுள்ள 39 ரிசார்ட்டுகளை முதல் கட்டமாக மூடி சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. இதில் மசினகுடியில் உள்ள 12 ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தங்களிடம் ஆவணம் உள்ளதாக தெரிவித்ததால் அதனை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.மீதமுள்ள 27 ரிசார்ட்டு களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி 12 ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் முறையான அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் குறைந்த அளவே இருந்தது.மேலும் சில ஆவணங் களை கூடுதலாக அளிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு நேற்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அவகாசம் முடிந்ததால் 10 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்படும் என தெரிகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா கூறும் போது, மாயார் வழித் தடத்திலுள்ள 39 ரிசார்ட்டுகளில் 27 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டு விட்டது.

    12 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வந்தது. இதில் 10 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் முறையாக இல்லாததால் அவற்றை காலி செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) நோட்டீஸ் அனுப்பப்படும்.

    இந்த ரிசார்ட்டுகளுக்கு நாளை சீல் வைக்கப்படும். மற்ற 2 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது என்றார். #tamilnews
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது.

    யானைகளின் வழித் தடங்களான மசினகுடி, மாயார், மாவல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளது. இவைகள் யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

    மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு ஜூலை 12-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யானை வழித்தடம் குறித்த செயல் திட்டத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்தனர். அதன்படி கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் யானைகள் வழித்தடங்களில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 27 ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கவும், 12 ரிசார்ட் உரிமையாளர்கள் கலெக்டரிடம் 48 மணி நேரத்தில் ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 27 ரிசார்ட்டுகள் சீல் வைக்கப்பட்டது. கோர்ட்டு அவகாசம் வழங்கிய 12 ரிசார்ட் உரிமையாளர்கள் ஆவணங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். ஆவணங்களை கலெக்டர் ஆய்வு செய்த போது 10 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் முறையாக இல்லை. எனவே இந்த 10 ரிசார்ட்டுகளை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மீதமுள்ள 2 ரிசார்ட்டுகளின் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    ஊட்டியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 27 விடுதிகளை அப்புறப்படுத்தியதை கண்டித்து மசினகுடியை சுற்றியுள்ள பொதுமக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி, சோலூர், உல்லத்தி, கடநாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அப்போது 39 தனியார் விடுதிகள், 390 குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள் என 821 கட்டிடங்கள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் முதல்கட்டமாக யானை வழித்தடத்தில் உள்ள 39 விடுதிகளில் 27 விடுதிகளை 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு உத்தரவிட்டடனர்.

    மீதி உள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் சரி பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 27 விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் வழங்கிய 48 மணி நேரத்தில் விடுதியை சீல் வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

    ஊட்டி ஆர்.டி.ஒ. சுரேஷ் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட உள்ளாட்சி, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய 3 குழுவினர் மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 27 விடுதிகளுக்கு சீல் வைத்தனர்.

    பொக்காபுரம் பகுதியில் உள்ள விடுதியை சீல் வைத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் உரிமையாளர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். அதன் பின்னர் அதிகாரிகள் விடுதியில் உள்ள அனைத்து அறைகளுக்கும் தனித்தனியாக சீல் வைத்தனர்.

    இதே போல் 27 விடுதிகளுக்கும் அங்குள்ள அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இரவு 7.30 மணி வரை சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

    மசினகுடியில் 27 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மசினகுடி பொதுமக்கள் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இன்று முதல் (13-தேதி) 15-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. அதே போல் சுற்றுலா வாகனங்களை இயக்காமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும் போராட்டம் நடத்த போவதாகவும் பொதுமக்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. மசினகுடி, மாவநல்லா, வாழைத்தோட்டம், சொக்க நல்லி, பொக்காபுரம், தொட்டலிங்கி, மாயார் மற்றும் மசினகுடியை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்து உள்ள 27 ஓட்டல்களுக்கு உடனே ‘சீல்’ வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #ElephantCorridors
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.

    மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீடு வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான வக்கீல் யானை ராஜேந்திரன், “நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது” என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன, அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அதே நேரத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ யானைகள் மிகுந்த பெருமை வாய்ந்த விலங்குகள். அவை நம் நாட்டின் சொத்துக்கள், அவற்றை நாம் அழித்து கொண்டிருக்கிறோம்” என்று வேதனை தெரிவித்தனர்.

    யானைகள் வழித்தடத்தில் விதிமுறை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.  #SupremeCourt #ElephantCorridors
    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இக்பால் என்ற 60 வயது முதியவரின் கிட்னியை மருத்துவர் விபு கார்க் திருடியுள்ளார்.

    இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மருத்துவர் விபு கார்க் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்துள்ள உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறையினர், அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டள்ளதாக சிறப்பு மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
    நீலகிரியில் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு சீல் வைக்க முயன்றதால் வியாபாரிகள் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காந்தல்:

    ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக சுமார் 3 ஆயிரம் கடைகள் உள்ளது. இதனை வாடகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரிகளுக்கு குறைவான வாடகை தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு சில வியாபாரிகள் கடைகளை உள் வாடகைக்கு விட்டு அதிக பணம் சம்பாதிப்பதாகவும் புகார் எழுந்தது. ஊட்டி நகராட்சி ஒரு வருடத்திற்கு முன் கடை வாடகையை உயர்த்தியது.

    இதனை பெரும்பாலான வியாபாரிகள் கட்டவில்லை. ஒரு சில வியாபாரிகள் மட்டுமே கட்டினார்கள். உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க கோரி வியாபாரிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தனர்.

    வாடகையை கட்டா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் வியாபாரிகள் வாடகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    ஊட்டி நகராட்சி கடைகளை 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தினர் தான் நடத்தி வருகிறார்கள். இதனால் பொது ஏல முறையில் விட நகராட்சி முடிவு செய்தது.

    இதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான 1,500 கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதனை கண்டித்து ஊட்டி மார்க்கெட் முன்பு வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டியில் இன்று காலை மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
    ×