search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 144523"

    முசிறியில் மணல் கடத்தலை தடுத்த அதிகாரி மீது ஒருவர் மோட்டார்சைக்கிளால் அவர் மீது மோதி கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முசிறி:

    முசிறி பி.எஸ். அக்ரஹாரம் படித்துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளி மூட்டைகளாக கட்டி இரு சக்கர வாகனங்களில் கடத்தப்படுவதாக முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி வள்ளிநாயகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    அப்போது, சிலர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி சென்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் கிராம நிர்வாக அதிகாரி பிடிக்க முயன்றார்.

    இதையடுத்து மணல் கடத்தல்காரர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளால் கிராம நிர்வாக அதிகாரி மீது மோதி கொல்ல முயன்றார். மேலும் மணல் மூட்டைகளை தள்ளிவிட்டும், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டும், மணல் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த கிராம நிர்வாக அதிகாரி வள்ளிநாயகன், சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஸ்ரீஹரிகோட்டா அதிகாரியிடம் நகை, லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பலை சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருபவர் நாகராஜ். இவர் நேற்று மதியம் 2 மணிக்கு காரில் சென்னை ஆலந்தூர் பகுதிக்கு வந்தார்.

    ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    சாப்பிட்டு முடிந்ததும் திரும்பி வந்து பார்த்தார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த 20 கிராம் தங்க நெக்லஸ், லேப்டாப் மற்றும் அவரது மகளின் எம்.எஸ்.சி. படிப்பு சான்றிதழ் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    நாகராஜ் இதுபற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கார் கண்ணாடியை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்புத்துறை சார்பில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கான உதடு மற்றும் அன்னப்பிளவு சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் கடந்த மாதம் 658 பிரசவங்கள் நடைபெற்றன. ஒரே மாதத்தில் இவ்வளவு பிரசவங்கள் நடைபெறுவது மாநிலத்தியே இதுதான் முதல் முறை. ஒரே மாதத்தில் 658 பிரசவங்கள் பார்த்து திருவள்ளூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். அப்படி சிகிச்சை பெற்றால் உயிரிழப்பு ஆபத்து உள்ளது. போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    குட்கா விற்க லஞ்சம் கொடுத்தவரை கைது செய்யும் போது லஞ்சம் வாங்கிய அமைச்சர், அதிகாரிகளை கைது செய்யாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். #GutkhaScam #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குட்கா வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில், ஊழல் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ சோதனை நடத்திய பிறகும், இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும், அதை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

    கான்ஸ்டபிள் ஒருவர் மீது புகார் வந்தாலே “சஸ்பெண்ட்” செய்யும் நிலையில், காவல்துறைத் தலைவர் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்த பிறகும் அரசும், ஆளுநர் அவர்களும் அமைதி காப்பது அரசியல் சட்டத்தின் படி செயல்பட வேண்டிய அரசுக்கு ஒரு போதும் ஏற்ற செயலாக இருக்க முடியாது.


    சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி.க்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவையும், அந்த லஞ்சத்தைக் கொண்டு போய் கொடுத்த ராஜேந்திரன் உள்ளிட்ட இடைத்தரகர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்து அவர்கள் எல்லாம் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு விட்டார்கள்.

    ஆனால், லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனையும் கைது செய்யாத மர்மம் என்ன என்பது இன்னும் விளங்கவில்லை. ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை முதலில் கைது செய்வதுதான் வழக்கம்.

    ஆனால், “குட்கா ஊழல்” வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை பதவியில் நீடிக்க அனுமதித்து விட்டு, லஞ்சம் கொடுத்திருப்பவர்களையும், அந்த லஞ்சப் பணத்தை கொண்டு போய் கொடுத்த இடைத்தரகரையும் முதலில் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ.

    “குட்கா டைரி”, “குட்கா மாதவராவின் வாக்குமூலம்” மற்றும் “சோதனை” அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் “லஞ்சம் கொடுத்தவர் கைது” “லஞ்சப் பணத்தை கொண்டு போய் சேர்த்த இடைத்தரகர் கைது” “ஊழல் பணத்தைப் பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் கைது” என்று தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சி.பி.ஐ. மாநில அமைச்சரிடமும், மாநிலத்தில் உள்ள டி.ஜி.பி.யிடமும் நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

    ஆகவே, ஆவணங்கள் மற்றும் வாக்கு மூலங்களின் அடிப்படையில் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் பேரணி வகுத்து நிற்கும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் அவர்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GutkhaScam #DMK #MKStalin
    சென்னிமலை அருகே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அதிகாரியின் ஜீப்பை சிறை பிடித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி மற்றும் ஓட்டப்பாறை ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதிக்கு 5 லட்சம் லிட்டரும். ஓட்டப்பாறை ஊராட்சிக்கு 2.75 லிட்டரும் சப்ளை செய்யப்பட வேண்டும். கடந்த 20 நாட்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மின் மோட்டார்கள் நீரில் முழ்கி குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது மின் மோட்டார் சரி செய்யப்பட்டு தண்ணீர் சப்ளை ஆகிறது. இதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதிக்கு மட்டும் குடிநீர் சப்ளை ஆகி உள்ளது. ஓட்டப்பாறை கிராம பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை. இதற்கு ஓட்டப்பாறை கிராமமக்கள் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதியில் வீட்டு இணைப்புகள் அனைத்தும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மெயின் குழாய்களில் கொடுத்துள்ளதால் ஓட்டப்பாறை ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என கூறி உள்ளனர்.

    இதை ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஜீப்பில் வந்து என்.பி.என்., காலனி பகுதியில் உள்ள நீர் ஏற்றும் தரை தொட்டியை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் எங்களுக்கு வழங்க வேண்டிய நீரில் அளவினை சரியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அதிகாரிகள் வந்த ஜீப்பை சிறை பிடித்து பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொதுமக்களை சமாதானம் செய்து இனி வரும் நாட்களில் கூடுதல் தண்ணீர் கொடுத்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    கண்டாச்சிபுரம் அருகே புதிதாக டாஸ்மாக்கடையை திறக்கக் கூடாது என மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் மனு அளித்துள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது ஆயந்தூர். இங்குள்ள காரணை பெருஞ்சானூர் சாலையில் அரசு சார்பில் புதிதாக டாஸ்மாக்கடை அமைக்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து அங்கு அதிகாரிகள் தீவிர ஏற்பாடு செய்து வந்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் அங்கு டாஸ்மாக்கடை திறக்கப்படும் என தெரிகிறது. இதுபற்றிய தகவல் ஆயந்தூர் கிராம மக்களுக்கு தெரியவந்தது.

    இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மனுக்கள் வாங்கிக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி பிரியாவிடம் மனு கொடுத்தனர்.

    அதில் எங்கள் கிராமத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. அந்த கடையை திறக்கக் கூடாது. அவ்வாறு திறந்தால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். #tamilnews
    சக ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். #SupremeCourt
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலம், அவுரங்காபாத்தில் கல்வி இயக்குனரகத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர், மேலதிகாரி தன்மீது அதிக பணிச்சுமையை சுமத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, சம்மந்தப்பட்ட அதிகாரி தன் கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் புகார் செய்து, அதன்கீழ் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 306-ன் கீழ் வழக்கு பதிவானது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அந்த அதிகாரி மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், சக ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில், “ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுமென்றே திட்டமிட்டு இருந்தால் அது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 306-ன் கீழ் குற்றம்சாட்ட வாய்ப்பு உண்டு.

    ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரையில், கூறப்பட்டு உள்ள தகவல்கள் முற்றிலும் போதுமானவை அல்ல. மேலதிகாரி, ஊழியருக்கு சில வேலைகளை செய்யுமாறு பணித்தார் என்பதாலேயே குற்ற மனம் அல்லது தீய நோக்கம் இருந்தது என எடுத்துக்கொள்ள முடியாது” என கூறப்பட்டு உள்ளது. 
    மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு, உடல் நலம் தேறிய பின் குரங்கை யசோதா தத்தெடுத்து கொண்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். #Yashodha #Monkey #SaviourMother
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் யசோதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள எல்லம்மா கோவில் அருகே உள்ள மைதானத்துக்கு சென்றார். அப்போது, அந்த மைதானத்தில் ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.



    இதனால், அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிய யசோதா அங்கு சென்றார். அப்போது, குரங்கு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்தப்பகுதியில் உள்ள மின்வயரில் சென்றபோது அந்த குரங்கை மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குரங்கை மீட்டு அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். உடல் நலம் தேறிய குரங்கை யசோதா தத்தெடுத்து கொண்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். குரங்கு அவருடன் நன்றாக பழகி, அவர் கூறுவதை கேட்டு நடந்து கொள்கிறது. தனது குழந்தையை இடுப்பில் சுமந்து செல்வது போல் குரங்கையும் அவர் தூக்கி செல்வது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.



    இதுகுறித்து யசோதா கூறுகையில், ‘மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. காப்பாற்ற முயன்றால் குரங்கு கடித்து விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உதவி செய்யவில்லை. நான் குரங்கை மீட்டு சிகிச்சை அளித்தேன். தற்போது குரங்கு நன்றாக உள்ளது. குழந்தை போல் பாசமாக என்னிடம் குரங்கு உள்ளது’ என்றார்.  #Yashodha #Monkey #SaviourMother
    ×