search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?
    • ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 326 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கியதில் கிடைத்த கமிஷன் அடிப்படையில் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டு வந்தது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி, அரிசிக்கு பதில் பணம் வழங்க உத்தரவிட்டார்.

    இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனது. இதனிடையே, கொரோனா காலங்களில் மத்திய அரசு வழங்கிய அரிசியை கமிஷன் அடிப்படையில் விநியோகிக்கும் நடவடிக்கையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ஆனால் அந்த ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுவரை 55 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

    இவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எதிரொலித்தது.

    இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில், ரேஷன் கடைகளை மறுபடியும் திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோரி மேடு அப்பா பைத்தியசாமி கோவில் பின்புறம் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தை 100-க்கனக்கானோர் முற்றுகையிட்டனர்.

    ரேஷன் கடைகளை திறந்து நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி டென்னீஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஊழியர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர்.

    இதனிடையே விளையாட்டை முடித்து வீடு திரும்பிய முதலமைச்சரிடம் ஊழியர்கள், 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். தற்போது எங்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை சம்பளமும் வழங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களை நிரந்தரம் செய்தது போல் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர்.

    அப்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி 7 வருடங்களாக என்ன செய்தீர்கள்.? தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? என ஊழியரிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

    இதனையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர். அப்போது போலீசாருக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் அங்கிருந்தும் கலைந்து போகும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ஊழியர்கள் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    ஏற்கனவே இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மருத்துவமனை மேலே ஏறி நின்று தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர். அன்று மாலை அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்து அதற்கான உத்தரவை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    இதனால் பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்ற போராட்டங்கள் மூலம் பணி நிரந்தரம் பெற்று விடலாம் என்று எண்ணத்தால் புதுவை முழுவதுமே போராட்டக் களமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.
    • காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த 2011-ம் ஆண்டு முதல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அடுத்த சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்தார்.

    இதற்காக மாநில திட்டக்குழு கூட்டத்தை கூட்டி புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட்டில் கூறப்பட்ட சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    இந்த ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும். 70 வயது முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும்.

    மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும். புதுவையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும்.

    புதுவையில் வான்கோழிகள் வளர்க்க ஊக்குவிக்க 50 சதவீதம் மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம், ஆதி திராவிடர்களுக்கு ரூ.9 லட்சம் வரை 100 சதவீதம் மானியம், பிற வகுப்பினருக்கு ரூ.5 லட்சம் வரை 50சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

    எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு, புதுவையில் உள்ள கோவில்களில் ஆவணங்கள், சொத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை மின்னனு மையமாக்கப்படும். அதனை பொதுமக்கள் பார்வையிடும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    புதுவையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும்.

    புதுவையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை தேசிய வங்கியில் செலுத்தப்படும்.

    தொற்று நோயை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்படும்.

    50 புதிய மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் ஏற்படுத்தப்படும்.

    அட்டவணை இனத்து பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

    • ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.
    • நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

    ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டைகள் இருப்பதாகவும், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி விழாக்களில் தெரிவித்து வருகிறார்.

    சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் மாநில அந்தஸ்து போராட்ட ஒருங்கிணைப்பு குழு முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தபோது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என அவர் அங்கலாய்த்தார்.

    வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மீன் அங்காடி வளாகத்தில் ஸ்மார் சிட்டி நகர கட்டுப்பாட்டு மையம் அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

    அப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த விபரங்களை ரங்கசாமி அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள், சி.சி.டி.வி., நவீன சிக்னல் அனைத்தும் ஸ்மார்ட் பணிகளாக இருக்கப்போவதாக பெருமையுடன் கூறினர்.

    ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.

    அதிகாரிகளை கடிந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:

    நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் மேலே சிலாப் போட வேண்டும் என 1½ ஆண்டாக கூறுகிறேன்.

    அதை செய்ய முன்வரவில்லை. மக்கள் என்ன நினைப்பார்கள்? அரசைத்தான் குறை கூறுவார்கள்.

    அப்புறம் என்ன ஸ்மார்ட் பணி? அப்படி, இப்படியென சாலை அமைத்துள்ளோம். அரசு நினைக்கிற மாதிரி எதுவும் வரலை, வரும் ஆண்டிலாவது ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கிறேன். அதற்குள் எந்தெந்த செயலர் மாறுகிறார்களோ? வரும் செயலர்கள் எதை பார்த்து பயப்படுவார்களோ? என தெரியாது.

    பொதுப்பணித்துறை உதவாக்கரையாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் பஸ்ஸ்டாண்டு அமைக்க எதுவும் செய்யவில்லை. நிலத்தை சமப்படுத்தி மண் அடித்தால் போதும். பஸ்கள் நிற்கும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

    இங்கு 4 பில்லர் அமைத்து ஷெட் போட்டு பஸ்ஸ்டாண்டு ஆரம்பிக்க பொதுப்பணித்துறைக்கு தெரியலை. இதுக்கு டெல்லி போய் என்.ஓ.சி., அது, இதுன்னு சொல்லி விடிய, விடிய டிஸ்கஷன் செய்யுறாங்க.

    நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது. அவர்கள் திட்டமதிப்பீட்டிற்கும், நம் திட்ட மதிப்புக்கும் சம்பந்தம் இல்லை.

    இதை சரிசெய்யும் வரை நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். சாதாரண வேலையை செய்ய முடியாம ஜவ்வா இழுக்கின்றனர். எரிச்சலாக உள்ளது. ஒரு முடிவு கூட பண்ண முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் லபோ திபோன்னு பேச போறாங்க.

    இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

    இதை அங்கிருந்த அதிகாரிகள் எந்தவித கருத்தையும் கூறாமல் கப்சிப் என அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

    • பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்தும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
    • முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக தமிழிசை பதவியேற்று 2 ஆண்டினை நேற்றுடன் நிறைவு செய்தார்.

    அதனையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜ் நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    பதிலுக்கு கவர்னர் தமிழிசை தனது 2 ஆண்டு சாதனைகள் அடங்கிய யுனைடடு பார் புராகிரஸ் என்ற ஆங்கில நூலை பரிசாக முதல்-அமைச்சருக்கு வழங்கினார்.

    பின்னர் இருவரும் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்தும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். மேலும் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    முன்னதாக புதுவை கவர்னராக பதவியேற்று 2 ஆண்டை நிறைவு செய்ததையொட்டி கவர்னர் தமிழிசை மணக்குள விநாயாகர் கோவிலில் வழிபட்டார்.

    • எங்கள் கூட்டணி முறிந்துவிடும் என நாராயணசாமி சொல்ல, சொல்ல பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதியாகிக் கொண்டே செல்கிறது.
    • நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதில் தரப்படும்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு கப்பல்கள் வந்து செல்வது மிகவும் நல்லது, வியாபாரம் பெருகும். புதுவை மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கும். பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஏற்கனவே நாங்கள் கூறியது போல, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பா.ஜனதா-அ.தி.மு.க. கட்சிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எங்கள் அரசு செய்து வருகிறது. புதிதாக அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, சாலை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    மாநில அந்தஸ்து கிடைத்தால் ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும். எங்கள் ஆட்சியில் மாநில அந்தஸ்து பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கைதான் எல்லாம். கருப்பு சட்டையெல்லாம் அணிந்து போராடிய நாராயணசாமி மாநில அந்தஸ்து பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    எங்கள் ஆட்சியில் மாநில அந்தஸ்தை பெறுவோம். எங்கள் கூட்டணி முறிந்துவிடும் என நாராயணசாமி சொல்ல, சொல்ல பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதியாகிக் கொண்டே செல்கிறது. நாராயணசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் பதில் தரப்படும்.

    இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.

    • புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
    • புதுவை நகர பகுதி முழுவதும் 130 ஸ்மார்ட் தூண்கள் அமைக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.170 கோடியே 11 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரெயில்டெல் இந்தியா மேலாண்மை நிறுவனம் ஆகியவை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    புதுவை அரசு சார்பில் கலெக்டர் வல்லவன், ரெயில்டெல் நிறுவன பொது மேலாளர் பிரதீபாதேவேந்திரயாதவ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைமை செயல் அதிகாரி அருண், இணை அதிகாரி சுதாகர், சப்-கலெக்டர் வினயராஜ், ரெயில்டெல் செயல் இயக்குனர் மனோகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுவை நகர பகுதி முழுவதும் 130 ஸ்மார்ட் தூண்கள் அமைக்கப்படும். இந்த தூணில் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்படும். காற்று மாசு, வெப்பநிலையும் கண்காணிக்கப்படும். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புதுவை பிரதான சாலைகளில் போக்குவரத்து வாகன நெரிசல், வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள், கண்ணாடி ஒளியிழை புதைவடங்கள், சுற்றுலா வழிகாட்டு செயலிகள் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும்.

    இதன் மூலம் நகர பகுதியில் நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்படும். கண்காணிப்பு கேமராக்கள் வழியாக கண்காணிப்பதால் குற்ற நடவடிக்கைகளை குறைக்க முடியும்.

    இதனால் சுற்றுலா மேம்பாடு அடைந்து நகர பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இந்த திட்டத்தை 6 மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்டுப்பாட்டு மையம் அமைக்க கிழக்கு கடற்கரை சாலை நவீன மீன்அங்காடி, ரோடியர் மில் திடல், பழைய உள்ளாட்சித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து உரிய இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    வருகிற ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான குழுவினர் இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர்.

    கட்டுப்பாட்டு மையத்தை அமைக்கும் மத்திய அரசு நிறுவனம் இந்த மையத்தை 5 ஆண்டு பராமரிக்கும். அதன்பின் புதுவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

    • பாரம்பரிய அழகிய பிரெஞ்சு துணை தூதரக கட்டிடம் பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் மின்னியது.
    • கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து வானை நோக்கி லேசர் விளக்கு ஒளித்தது.

    புதுச்சேரி:

    பிரான்ஸ்- மேற்கு ஜெர்மனி இடையே போர் நிறுத்த எலிசி உடன்படிக்கை ஒப்பந்தம் இரு நாட்டு ஜனாதிபதிகளிடையே பாரீசில் உள்ள எலிசி அரண்மனையில் கடந்த 1963 ஜனவரி 22-ந் தேதி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த எலிசி உடன்படிக்கை ஒப்பந்த தினத்தையொட்டி புதுவையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்தில் லேசர் லைட் ஷோவுடன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பாரம்பரிய அழகிய பிரெஞ்சு துணை தூதரக கட்டிடம் பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் மின்னியது. மேலும் கடட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து வானை நோக்கி லேசர் விளக்கு ஒளித்தது. துணை தூதரகத்தினுள் கண் கவரும் பிராங்கோ-ஜெர்மன் எலக்ட்ரோ கச்சேரி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை பிரெஞ்சு துணை தூதர் லிசே டால் போட் பாரே தொடங்கி வைத்தார். இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள், புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை மக்கள் பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

    • தொடர்ந்து பல துறைகளில் அரசின் உதவி பெற்ற பெண்கள் பட்டியல் பெற்று உதவி பெறாத குடும்ப தலைவிகளின் பட்டியல் கணக்கிடப்பட்டது.
    • பலர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். இதனால் பயனாளிகளை 50 ஆயிரம் பேராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறாத 21 முதல் 55 வயதிற்குட்பட்ட ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இந்த திட்டத்திற்கான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கோப்புக்கு கவர்னர் தமிழிசை கடந்த 12-ந்தேதி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து பல துறைகளில் அரசின் உதவி பெற்ற பெண்கள் பட்டியல் பெற்று உதவி பெறாத குடும்ப தலைவிகளின் பட்டியல் கணக்கிடப்பட்டது. பலர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டனர். இதனால் பயனாளிகளை 50 ஆயிரம் பேராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி கூடுதல் செலவாகும். முதல்கட்டமாக 17 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை வருகிற 23-ந் தேதி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கல்லூரி வளாகத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முழுவீச்சில் செய்து வருகிறது.

    • புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி பற்றி அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து வில்லியனூரில் என்.ஆர்.காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் உருவபடம் தீவைத்து கொளுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஐ.ஜி. சந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

    இதுதொடர்பாக அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து, ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் அவரது மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் புதுவையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளோம். சபாநாயகரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்படும்.

    கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் சட்டசபைக்கு வரும் போதும் நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி பற்றி அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து வில்லியனூரில் என்.ஆர்.காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் உருவபடம் தீவைத்து கொளுத்தப்பட்டது.

    மேலும் அவருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கதிர், சங்கர், பொன்.சுகுமார், தேவா, மணிகண்டன், உறுவையாறு அழகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
    • ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? வேண்டாமா? என முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசு ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? எனவும் தெரிவிக்க வேண்டும்.

    மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் கவர்னர் மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால் முதலமைச்சர் அதிகாரம் தேவை என கூறுகிறார்.

    உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி உள்ளாரா? இல்லை கவர்னரையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா? அண்ணன் தங்கையாக இருந்தாலே பாக பிரிவினை, பங்கு பிரிவினை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதலமைச்சர் நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும்.

    சுயேச்சை எம்.எல்.ஏ. வை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை தூண்டுவது போன்ற நிலைப்பாடை கைவிட வேண்டும். நேரடியாக முதலமைச்சரே களம் இறங்க வேண்டும். அப்படி முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் பாராளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.

    வீதிக்கு வீதி திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு தனி வசதி என விளம்பரப்படுத்துகின்றனர். இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது. இது மிகப்பெரும் கலாச்சார சீரழிவு. குடும்பங்களை அழிக்கும் முயற்சி.

    எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறதா? இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா? அமித்ஷா அறிவித்த எக்சலண்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர்.
    • எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பா.ஜனதாவின் கொள்கை.
    • புதுவை மாநில பா.ஜனதாவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலால்துறை சார்பில் விடுதிகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபார்கள் அமைக்க கடந்த காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது விதிமுறைகள் அகற்றப்பட்டு, மதுபார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புதிது, புதிதாக நகர பகுதியில் பார்கள் உருவாகி வருகிறது. கோவில், குடியிருப்பு, பள்ளி, மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பார்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    புதுவை அரசு புதிதாக 5 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே புதுவை மாநிலத்தில் 5 மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள் அமைவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதோடு, குடிநீர் தட்டுப்பாடை உருவாக்கும் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மதுபான ஆலை, மதுபார் திறக்க திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்தித்தது. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோர், சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்து கடிதம் அளித்தனர்.

    அதில் மதுபான கொள்கையில் புதுவை பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பா.ஜனதாவின் கொள்கை. புதுவை மாநில பா.ஜனதாவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 12 பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிலைப்பாடும் இதுதான்.

    மக்களின் மன நிலையும் மதுவுக்கு எதிராகத்தான் உள்ளது. இதனால்தான் மக்கள் திரண்டு போரட்டம் நடத்துகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பா.ஜனதா சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, மக்களின் எண்ணங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 5 மதுபான தொழிற்சாலைகள், 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா மதுபான உரிமங்களுக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்யும் உத்தரவை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறப்பிக்க வேண்டும் என பா.ஜனதா சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல்-அமைச்சர் சுமூகமான தீர்வு காண வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜனதா அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    ×