search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்கள்"

    • பீகார் குழுவினர் மேட்டுப்பாளையம் பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்க்க கூடிய தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    கோவை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனால் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இது பீகார் மாநிலத்திலும் எதிரொலிக்கவே, அந்த மாநில அரசு உண்மை நிலையை கண்டறிவதற்காக ஊரக வளர்ச்சி திட்ட செயலளர் பாலமுருகன் தலைமையில் நுண்ணறிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது.

    அந்த குழுவினர் நேற்றுமுன்தினம் சென்னை வந்து தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த், டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று அவர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தனர்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    பின்னர் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்க்கும் 3 நிறுவனங்களுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து குறைகளை கேட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு எந்தவித குறையும் இல்லை. சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    பீகார் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்து கொண்டு நேற்றிரவு கோவைக்கு வந்தனர்.

    கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர்.

    இன்று காலை பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன், நுண்ணறிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்க்க கூடிய தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது அவர்களிடம் உங்களுக்கு இங்கு பாதுகாப்பு எப்படி உள்ளது? ஏதாவது குறைகள் உள்ளதா? அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா? யாராவது உங்களுக்கு எந்தவிதத்திலாவது பிரச்சினை கொடுக்கின்றனரா? என்ப து குறித்தும் கேட்டனர்.

    அதற்கு தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசிய குழுவினர் பின்னர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பீகார் மாநில குழு பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், தொழில் அமைப்பினர் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற பீகார் மாநில குழுவினரிடம், கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கு கடந்த சில நாட்களாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்ததும் குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விரிவாக விளக்கி கூறினர். இதை அனைத்தையும் கேட்டு கொண்ட பீகார் மாநில குழுவினர் வடமாநில தொழிலாளர்களுக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டு கொண்டது.

    • ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
    • தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

    திருச்சி:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் திருச்சி மிளகுபாறை பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இன்று திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 56 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை மிக சுகாதாரத்தோடும், போதிய அளவு தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது.

    தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பல் மருத்துவ பிரிவு மிக சிறப்பாக செயல்படுவதோடு தினமும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் மகப்பேறு மருத்துவத்தை பொருத்தவரை மிகச்சிறப்பாக செயல்படுகிறது.

    நான் ஆய்வு மேற்கொண்ட போது சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை மாலை நேரங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது. எனவே இங்குள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்படும்.

    அதேபோல் ஐ.சி.யூ. என்று சொல்லக்கூடிய தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் ஒரு வார காலத்திற்குள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் உறுதுணையோடு அந்த தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ஆய்வு குழு சென்னையில் ஐந்து அதிகாரிகள் தலைமையில் நேரடியாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அங்குள்ள தொழிலாளர்கள் நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் இயக்குனர் ராஜமூர்த்தி மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நான் இரட்டை வேடம் போடுவதாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
    • நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நான் இரட்டை வேடம் போடுவதாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது தி.மு.க.வினருக்கு இயல்பானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டைவேடம் தி.மு.க.விற்கு கைவந்த கலை.

    முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், "வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என்று கேட்டிருந்தேன். அதனால்தான் பிரசனையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

    முதலமைச்சரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை.

    பா.ஜ.க. மொழித் திணிப்பு செய்வதாக, குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் ஆர்.எஸ். பாரதி, அறுபதுகளில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, தி.மு.க. செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் "தமிழை கட்டாயப் பாடம்" ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.

    வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துவதாக என் மீது ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான். தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டின் மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு.

    வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தமிழகத்திற்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள். இரட்டை வேடம் அல்ல, நாடக தி.மு.க. வினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.

    இப்படி, தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? என்ற விசாரணையை சி.பி.ஐ. தொடங்க வேண்டும்.

    அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டி.ஜி.பி., திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?. ஆகவே தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரிய வரும்.

    நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பீகார் மாநில குழுவினர் தொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கடந்த சில நாட்களாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில அரசு அதிகாரிகள் குழு தமிழகத்துக்கு வந்துள்ளது.

    பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை அந்த குழு நேரில் சந்தித்து கலந்துரையாடியது.

    அதன்படி திருப்பூர் அருகே அருள்புரத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் அந்த குழுவினர் வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார். பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் அங்கிருந்தனர்.

    பீகார் மாநில குழுவினர் தொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது "வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. யாரும் அச்சமடைய தேவையில்லை. தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தகுந்த பாதுகாப்பை அளிக்கும் என உறுதி கூறியுள்ளனர்.

    இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சிறப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர் என்று பீகார் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் வடமாநில தொழிலாளர்களிடம் பீகார் மாநில குழு தலைவர் பாலமுருகன் தொழிலாளர்களை தனியாக அழைத்து சென்று அவர்களது சம்பள விவரம், விடுதியில் தங்க போதுமான வசதிகள் இருக்கிறதா, பாதுகாப்பாக இருக்கிறார்களா எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னிடம் தைரியமாக கூறுங்கள் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகதான் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என கேட்டறிந்தார்.

    அதற்கு வட மாநில தொழிலாளர்கள், தங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. பாதுகாப்புடன் இருக்கிறோம் என்றனர்.

    • கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
    • வடமாநில தொழிலாளர்களிடம் ஏற்பட்ட அச்சத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், விசைத்தறி, வெட் கிரைண்டர், பம்ப் தயாரிப்பு நிறுவனங்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு சென்றனர்.

    வடமாநில தொழிலாளர்களிடம் ஏற்பட்ட அச்சத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களிடம் அச்சப்பட வேண்டாம், ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் புகார் தெரிவியுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இருந்தாலும் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் கோவை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் கோவை வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.

    மேலும் கோவையில் இருந்து பீகாருக்கு நேற்று இரவு ஹோலி பண்டிகை சிறப்பு ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த ரெயிலிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. இதுபற்றி வடமாநில தொழிலாளர்கள் சிலரிடம் கேட்டபோது ஹோலி பண்டிகையை குடும்பத்தினரும் கொண்டாட சொந்த ஊர் செல்வதாகவும், விரைவில் திரும்பி வருவோம் எனவும் தெரிவித்தனர்.

    நேற்று மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் சென்றதாக ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன்.
    • இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது.

    பாட்னா :

    வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வெளியான தவறான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

    இதையொட்டி பீகார் மாநில துணை முதல்-மந்திரி ஜேதஸ்வி யாதவ், பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக எழுந்த புகார்களை மறுத்து தமிழ்நாடு டி.ஜி.பி. வெளியிட்ட அறிக்கையை நான் சட்டசபையில் வாசித்தேன்.

    நான் இந்த விவகாரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனவேதான், நான் அங்கம் வகிக்கிற அரசு, நேரில் ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளது. அதன் நோக்கம், களத்தகவல்களை பெறுவதுதான்.

    இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அவற்றை பீகார் அரசும் சகித்துக்கொள்ளாது. தமிழ்நாடு அரசும் சகித்துக்கொள்ளாது.

    தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள பீகார் அதிகாரிகள் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமான சம்பவங்களின் அடிப்படையில் பொதுவான அனுமானங்கள் கூடாது.

    எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் இதில் பீகாரில் எதிர்க்கட்சியாகவும், மத்தியில் ஆளும் கட்சியாகவும் உள்ள பா.ஜ.க.விடம் கேள்விகள் எழுப்ப வேண்டும்.

    இந்த விவகாரம், இரு மாநிலங்கள் தொடர்பானவை என்ற போதிலும் மத்திய அரசு இதுவரையில் அக்கறை காட்டவில்லை.

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர், பீகார் பா.ஜ.க. தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தங்கள் மாநிலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல்களை மறுத்தார் என்பது பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

    பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தவறான தகவல்களை, ஆத்திரமூட்டும் வார்த்தைகளை டுவிட்டரில் வெளியிட்டது தொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கெல்லாம் பா.ஜ.க. பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது.
    • வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது.

    குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக உள்ள கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி, வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

    ஆனால் இந்த வீடியோக்களுக்கும் மேற்கண்ட பகுதிகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்கள் பரவி வந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர போலீஸ், சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் தெரிவிக்க மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் விதமாக செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக ஒவ்வொரு பனியன் நிறுவனத்திலும் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக்கூறி, வடமாநில தொழிலாளர்கள் பலரும் குடும்பத்தினருக்கு வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பீகார், ஒடிசா, உ.பி., ம.பி. மற்றும் ஜார்க்கண்ட் இந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தற்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வீடியோவாக குடும்பத்தினருக்கு வெளியிட்டு வருகிறார்கள்.

    மேலும், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    இதேபோல கோவையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை அதிகாரிகள், போலீசார் நேரில் சந்தித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம், யாரும் அச்சப்பட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோவை குறிச்சி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்து ரையாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதால் யாரும் பயப்படத் தேவையில்லை என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறோம். மேலும் இந்தியில் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் இருக்கும் தொடர்பு எண்ணுக்கு பேசும்படியும் கூறி இருக்கிறோம். தொழிலாளர்களிடம் பேசியதில் அவர்கள் தங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை என கூறி உள்ளனர் என்றார்.

    இதேபோல டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து தைரியம் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி குனியமுத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளவர்கள் எங்களை சகோதரர்களை போல் நடத்துகிறார்கள். எங்களுக்கு இங்கு எந்த குறையும் கிடையாது. எங்கள் ஊரில் எவ்வாறு இருந்தோமோ அதே போன்று இங்கும் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் தாக்கப்படுகிறோம் என்பது வதந்தி என்பதை தெரிவிக்கிறோம். இன்று மட்டுமில்லை இன்னும் எத்தனை வருடம் இங்கு இருந்தாலும் தமிழர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கூறுகையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி உள்ளேன். யாரும் தாங்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை. அவர்கள் ஊரில் எப்படி சுதந்திரமாக இருந்தார்களோ, அதேபோல் இங்கும் சுதந்திரமாக இருப்பதாகவே தெரிவித்தனர் என்றார்.

    • பொய்யையே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தி வரும் அண்ணாமலை.
    • அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அமைதிப் பூங்கா எனப் பெயர் பெற்ற தமிழ்நாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொழில் முதலீடுகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்வதை, வெறுப்பரசியல் நடத்தும் பா.ஜ.க. நிர்வாகிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாள்தோறும் வதந்திகளைப் பரப்பி, தமிழ்நாட்டை வன்முறைக் காடாகமாற்றலாம் என மனப்பால் குடித்து வரு கிறார்கள்.

    கழகத் தலைவர், முதலமைச்சரின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று, "இந்தியாவுக்கு நம் கழகத்தலைவர் அவர்கள் தான் வழிகாட்ட வேண்டும்" என்றும், "இந்தியாவை வழிநடத்தும் தலைமைத் தகுதி நம் கழகத் தலைவருக்கு இருக்கிறது" என்றும் உளமாரப் பாராட்டியதால் பா.ஜ.க.வினருக்கு அங்கமெல்லாம் எரியத் தொடங்கிவிட்டது. தமிழ் நாட்டின் முதலமைச்சருடைய பெருமைமிகு சிறந்த நிர்வாகத்திற்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கலாம் என்பதே அவர்களின் வஞ்சகத் திட்டம்.

    பா.ஜ.க. பரப்பியதெல்லாம் வதந்திதான் என்பது தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடமும் அம்பலமாகிவிட்டதால் அலறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதில் வழக்கம் போல திசைதிருப்பும் வேலையைக் காட்டியிருக்கிறார், பொய்யையே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தி வரும் அண்ணாமலை.

    திராவிட முன்னேற்றக் கழகம் இந்திக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் செய்வதன் விளைவால்தான் வதந்திகூட உண்மைபோன்ற அச்சத்தை உருவாக்கிவிட்டது என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட அண்ணாமலை நினைக்கிறார். தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரான இயக்கமல்ல. எங்கள் அன்னைத் தமிழ்நாட்டவர் மீது ஆதிக்க இந்தியைத் திணிக்காதே என்று எந்நாளும் உரிமைக்குரல் கொடுக்கின்ற இயக்கம்தான் தி.மு.க. அதற்காகத் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு உயிர்க்கொடை ஈந்த தியாக மறவர்களைக் கொண்ட இயக்கம்.

    இந்தித் திணிப்புக்கு எதிரான தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்பது இந்தி பேசும் மக்கள் மீதான வெறுப்பாக ஒருபோதும் இருந்ததே இல்லை.

    இந்தி மட்டும்தான் தேசிய மொழி, ஆட்சிமொழி, அதைப் படித்தால் மட்டும் தான் வேலை என்கிற பா.ஜ.க.வின் மொழித் திணிப்பை அம்பலப்படுத்தி, இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள்கூட நமது தமிழ்நாட்டுக்குத்தான் வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் தி.மு.க.வினரின் பரப்புரையே தவிர, எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் எதிரான பிரசாரம் அல்ல.

    சாதிப்பிரிவினை அரசியலால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மீதான வன்முறைத் தாக்குதல்கள், சிறுபான்மை மக்களைப் பார்த்து 'பாகிஸ்தானுக்குப் போ" என பா.ஜ.க. நிர்வாகிகள் வெறுப்புணர்வுப் பிரசாரம், அவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் எனத் தொடர்ச்சியான வன்முறை-வெறுப்பரசியலை நடத்தி, இந்தியாவின் பன்முகத்தன் மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக இருப்பவர்கள் தேசபக்தி வேடம் போடும் அண்ணாமலையின் கட்சியினர்தான்.

    வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, "வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என்று கேட்பது வெட்கக் கேடு.

    ஆனால், பீகார் மாநில அரசின் சார்பில் வந்த குழுவினர், தமிழ்நாட்டில் எவ்வித அச்சமான சூழலும் இல்லை என்பதையும், வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்து, உண்மை நிலையைத் தெளிவான அறிக்கையாக அளித்துள்ளனர். உண்மைக்கு மாறாக, வதந்தியைத் தொடர்ந்து பரப்பும் உத்தரபிரதேச, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளை நோக்கி கேள்வி கேட்க வேண்டிய அண்ணாமலை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோக்கி அறிக்கை அம்பு விடுவது என்பது அரசியல் உள்நோக்கமின்றி வேறில்லை.

    வடமாநிலத் தொழிலாளர்கள் நலன் காப்பதில் தமிழ்நாடு அரசுக்குத் துணை நிற்போம் எனத் தெரிவித்த அண்ணாமலை, அந்த அறிக்கையில் உள்ள மையின் ஈரம் காய்வதற்குள், வன்ம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது அவரது இரட்டை வேடத்தைத்தான் தோலுரித்துக் காட்டி உள்ளது.

    அண்ணாமலையைப் போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். வதந்தி பரப்பி வன்முறைச் சூழலை உருவாக்க நினைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக போலீசார் போலி வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக போலீசார் போலி வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதில் தொடர்புடையதாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த சிலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வந்த அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    அதில் வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுகட்ட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    அதேநேரத்தில் தி.மு.க. தொடங்கிய இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய பிரசாரமே தற்போது ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது என்றும், வடமாநில மக்களை ஏளனமாக பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதுமான கலாசாரத்தின் விளைவே இந்த நிலைக்கு காரணம் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தார்.

    இதையடுத்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    153-ஐ.பி.சி. (கலகத்தை தூண்டும் வகையில் பேசுதல்), 153(ஏ) 1ஏ-(பேச்சால் அல்லது எழுத்தால் உணர்ச்சியை தூண்டுதல்), 5051பி (அறிக்கை மூலமாக குறிப்பிட்ட நபர் மீது குற்றம் சாட்டி பிரிவினையை தூண்டுதல், 5051 சி (உள் நோக்கத்துடன் செயல்படுதல்) ஆகிய 4 சட்ட பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து அண்ணாமலை பரபரப்பான டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்' என்று தமிழக அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் காரசாரமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

    அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    வட இந்திய சகோதரர்களுக்கு எதிரான பிரசாரத்தை அம்பலப்படுத்தியதற்காக தி.மு.க. என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

    எனவே, அவர்கள் பேசிய வீடியோ இதோ (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. முன்னணி தலைவர்கள் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பேசிய பழைய வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன).

    என்னை கைது செய்ய பாசிச தி.மு.க.வுக்கு சவால் விடுக்கிறேன்.பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல் வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

    ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள். திறனற்ற தி.மு.க.வுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது போலீசார் திடீரென வழக்கு போட்டிருப்பதும், இதைத் தொடர்ந்து அவர் சவால் விடுக்கும் வகையில் அறிக்கை விட்டிருப்பதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே பீகாரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி டுவிட்டர் பக்கத்திலும் வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன. இதற்கு எதிராகவும் தமிழக சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

    அந்த டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக தமிழக அரசு சார்பில் எடுத்து கூறப்பட்டது.
    • வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்க கூடிய கோவை, திருப்பூரில் இரு மாநில குழுவினரும், ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    கோவை:

    கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    கட்டுமான தொழில், மோட்டார் பம்ப் உற்பத்தி, பனியன் கம்பெனி முதல் தள்ளுவண்டி வியாபாரம் வரை அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் இங்கு உள்ளனர்.

    இந்த நிலையில், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பீகார் மற்றும் ஜார்க்கண்டை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.

    இதனால் வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு கூட்டம், கூட்டமாக செல்ல ரெயில் நிலையங்களில் கூடுவதாகவும் கூறப்பட்டது.

    இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதவிர இந்த சம்பவம் ஜார்க்கண்ட், பீகார் மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. இருமாநில எதிர்கட்சிகளும் தமிழகத்தில் தங்கள் மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பின.

    உடனடியாக இரு மாநில முதல்-மந்திரிகளும் தமிழக அரசை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டறிந்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டது.

    இருந்த போதிலும் இரு மாநில அரசுகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவினர் தமிழகத்தில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டன.

    இதையடுத்து ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் இருந்து 10 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழுவினர் நேற்று தமிழகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் சென்னையில் தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த், தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அப்போது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக தமிழக அரசு சார்பில் எடுத்து கூறப்பட்டது.

    இதற்கிடையே வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்க கூடிய கோவை, திருப்பூரில் இரு மாநில குழுவினரும், ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில் நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் கமிஷனர் அலோக்குமார், சிறப்பு பணி படை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூருக்கு வந்தனர். அவர்களுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினரும் வந்தனர்.

    அவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து பேசினர். அவர்களிடம் உங்களுக்கு இங்கு பாதுகாப்பு எப்படி உள்ளது. உங்களை யாராவது தாக்கினார்களா? அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா? குறைகள் ஏதாவது இருந்தால் தங்களிடம் சொல்லுங்கள் எனவும் கேட்டு தொழிலாளர்களிடம் விசாரித்தனர்.

    அப்போது வடமாநில தொழிலாளர்கள், அதிகாரிகள் குழுவினரிடம் நாங்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எங்களை தமிழர்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவரை போலவே நடத்துகின்றனர். அரசும் எங்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்து வருகிறது என தெரிவித்தனர்.

    பின்னர் 2 மாநில குழுவினரும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்கள், பல்வேறு சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களிடம் இரு மாநில குழுவினரும் வடமாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    ஆலோசனை கூட்டம் முடிந்ததும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்க கூடிய அனுப்பர்பாளையம், 15 வேலாம்பாளையம், பெருமாநல்லூர் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மக்களை சந்தித்து விசாரித்தனர்.

    பீகார், ஜார்க்கண்ட் மாநில குழுவினர் நாளை கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். இங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை புரியும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தொழில் அமைப்பினர், வடமாநில பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    மேலும் வடமாநில தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறை, நிறைகளையும், பாதுகாப்பு குறித்தும் கேட்டறிய உள்ளனர்.

    • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வதந்தி பரவியது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை.

    பொன்னேரி:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து இதுபோன்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்குப்படும் என்று தமிழக அரசு எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் பொன்னேரியில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ்சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று.மாநிலத்தில் உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிறது.

    கடந்த 2 நாட்களாக பரவிவரும் வதந்தி வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளாது. தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

    இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக 180 தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 2.5லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

    வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை, பாதிப்புகள் ஏற்பட்டால் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 7626 -ல் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் வாட்ஸ் அப்பில் புகார்களுக்கு 9444317862 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்புக்காக தமிழ்நாடு போலீஸ் எப்போதும் இருக்கும்.
    • வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது வதந்தி என்பதை புரிந்து கொண்டோம் என்றனர்.

    அம்பத்தூர்:

    வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பாடியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி கொரட்டூர் போலீஸ் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் சுற்றி உள்ள பகுதிகளில் பணிசெய்து வரும் சுமார் 500 வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பரவி வரும் வதந்தி குறித்து பேசினர். அப்போது தொழிலாளர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் கூறப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, 'தற்போது பரவி வரும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். பாதுகாப்புக்காக தமிழ்நாடு போலீஸ் எப்போதும் இருக்கும். உங்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் போலீசார் வழங்குவார்கள் என்று இந்தியில் தெரிவித்தார்.

    இதனை புரிந்து கொண்ட வடமாநில தொழிலாளர்கள், தமிழ்நாடு தான் எங்களுக்கு பாதுகாப்பான இடம், நாங்கள் இங்கே மகிழ்ச்சியாக பணிபுரிகிறோம், எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது வதந்தி என்பதை புரிந்து கொண்டோம் என்றனர்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகமாக ஹேப்பி தமிழ்நாடு... ஹேப்பி தமிழ்நாடு.. என்று குரல் எழுப்பினர்.

    ×