search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி விவகாரம்"

    • தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன.
    • இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    கோவை:

    கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இன்று (நேற்று) மதுரை ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள், தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை தடுத்து, கைது செய்துள்ளனர்.

    மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுத்து உள்ளார்கள். கோவையில் எந்த இடம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் சொல்லுங்க அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்து இருந்தோம்.

    ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2½ மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்க கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

    கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்து உள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். தமிழகம் முழுவதும் நாங்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்த கடிதத்தை நிராகரித்து இருக்கிறார்கள். எங்களது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னரிடம் தொலைபேசியில் முறையிட்டேன்.

    இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பா.ஜ.க. கட்சி குழு கவர்னரை சந்திக்க உள்ளது. இந்த குழு கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, நாங்கள் நேரிடையாக கள்ளக்குறிச்சி சென்று பார்வையிட்டது என அனைத்தையும் கவர்னரிடம் தெரிவிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் தி.மு.க.விற்கு உள்ள தொடர்பு குறித்து கவர்னரிடம் அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். எங்களது கருத்துரிமையை பறிக்க கூடிய தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை கவர்னர் முன்வைப்போம். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்துவோம்..

    தி.மு.க.விற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிகொண்டு வர சி.பி.ஐ. விசாரணை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு சி.பி.ஐ. வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி எத்தனை ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடைபெற்றால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை.

    தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டு அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா.
    • உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்த படம் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் கோவையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    தேர்தல் வர 20 மாதங்கள் தான் உள்ளது. அதனால் 10 லட்சம் என்ன போட்டி போட்டு ஒரு ஆளுக்கு 1 கோடி கூட கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த உயிர்களை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்துவிட்டதாக கோபப்படுகிறீர்கள். நம் நாடு, தெரு முழுக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது தவறாக தெரியவில்லையா. இவன் இப்பவே செத்து விடுவான். இவன் 5 வருடம் கழித்து சாவான். இது ஸ்லோ பாஸ்சன்.

    உங்களால் கள்ளச்சாராயத்தை எல்லாம் ஒழிக்கவே முடியாது. உங்களால் பிளாஸ்டிக் பாட்டிலை ஒழிக்க முடிந்ததா... எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    இது யாருக்கும் தெரியாமலோ, அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு தெரியாமலோ நடந்திருக்காது.

    இது எவ்வளவு வருத்தப்படக்கூடிய சம்பவம். இன்றைக்கு காலையில் எங்காவது விற்றுக்கொண்டிருப்பார்கள். இது முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள். இப்போதும் எங்காவது சரக்கு ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறினார்.

    • மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர்.
    • கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    மதுரை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 55 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இதையொட்டி பா.ஜ.க.வின் பல்வேறு தலைவர்களும் தி.மு.க. அரசை விமர்சித்து வருகின்றனர்.

    கள்ளச்சாராய சம்பவத்தில் 55 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    அதேபோல் மரக்காணத்தில் கள்ளச்சாராயத்துக்கு 23 பேர் பலியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயத்துக்கு 55 பேர் பலியாகி உள்ளனர். இருந்த போதிலும் கள்ளச்சாராயத்தை தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்த சூழலில் கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா உள்பட அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளூர் சிலை அருகே பா.ஜ.க. சார்பில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் இறந்தவரை தூக்கி செல்லும் பாடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக அரசை கண்டித்து சிலர் பாடையை எடுத்து வந்து போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜ்குமார், கருட கிருஷ்ணன், நவீன், வேல்முருகன், ஓம்சக்தி தனலட்சுமி, ஊடகப்பிரிவு தலைவர் வேல்பாண்டியன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது.
    • கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் கள்ளத்தனமாக மாந்தோப்பில் சாராய ஊரல் வைத்திருந்த சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்னலேரஅள்ளி பகுதியில் மாந்தோப்பில் சாராய ஊறல் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சின்னஆலேரஅள்ளி பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராய ஊறலை வைத்திருந்து மத்தூர் அருகே உள்ள மூக்கா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது36 ), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (44) ஆகிய 2 பேரும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே மத்தூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
    • சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை.

    சென்னை:

    கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    * உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம்.

    * கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

    * கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

    * இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்புமணி.

    * எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா?

    * சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை. வீட்டில் தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கண்ணுக்குட்டி தி.மு.க பிரமுகராகிவிடுவாரா?

    * ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
    • தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது.

    ஊட்டி:

    மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்களை கடந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் மக்களை வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக, இந்த தி.மு.க அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகளின் வீடுகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களின் படங்கள் தான் இடம்பெற்றுள்ளது. இதனால் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது. தி.மு.க அரசு மக்களை போதைப் பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போதும், அதற்கு பதிலளிக்க தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது இருந்தே வேலைகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம். உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறினார்.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

    அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
    • ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும்.

    ஏற்காடு:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி சேலம் மாவட்டத்திலும் போலீசார் பல்வேறு இடங்களில் சாராயம் விற்க்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஏற்காடு மலை பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.

    ஏற்காடு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து ஒவ்வொரு கிராமங்களிலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    மேலும் ஆத்துஓடைகள், வனப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். விடிய, விடிய போலீசார் மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து போலீசார் கூறும் போது, சட்டத்துக்கு புறம்பாக யாராவது சாராயம் காய்ச்சி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலை கிராமங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊர்தலைவர்கள் கண்டறிந்து ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கூறும் போது. ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும். சட்டத்துக்கு புறம்பாக யாராவது மது மற்றும் சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

    • தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதே 53 பேர் பலியாக காரணம்.
    • தி.மு.க. அரசின் போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது.

    சென்னை :

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

    * கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவே அவையில் பேச அனுமதி கேட்டோம், ஆனால் தரப்படவில்லை.

    * மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இது மக்களின் உயிர் பிரச்சனை என்பதால் அவையில் விவாதிக்க அனுமதி கேட்டோம்.

    * கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 183 பேரில் 55 பேர் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகிறது.

    * விஷ முறிவு மருந்து இருப்பு இல்லை என நான் கேட்டதற்கு வயிற்று புண்ணுக்கான மருந்து ஸ்டாக் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். நான் சொன்ன மருந்து வேறு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன மருந்து வேறு..

    * தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதே 53 பேர் பலியாக காரணம்.

    * கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக மருத்துவமனை வந்ததே பலர் பலியாக காரணம் என கூறப்படுகிறது. இதற்கு அரசு தான் காரணம்.

    * கள்ளச்சாராயத்தால் உயிர்கள் பலியான நிலையில், கள்ளக்குறிச்சி ஆட்சியரோ அரசுக்கு ஆதரவாக பொய் கூறியுள்ளார்.

    * வலிப்பு வந்ததால் ஒருவர் பலி, வயது முதிர்வின் காரணமாக மற்றொருவர் பலி என ஆட்சியர் கூறிய பொய்யால் பலர் பலி.

    * தி.மு.க. அரசின் போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜா ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்வது வழக்கம்.
    • குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட எத்னால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்நது கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வந்த பக்தர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து பலியானது தற்போது தெரியவந்தது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    கோவையை சேர்ந்தவர் ராஜா (வயது 35). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 3 குழந்தைகள் உள்ளனர். சிவ பக்தரான ராஜா ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்வது வழக்கம். அதுபோல் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு செல்ல கோவையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய ராஜா அங்குள்ள டீ கடைக்காரரிடம் சாராயம் எங்கு விற்கப்படுகிறது என கேட்டுள்ளார். அதற்கு டீ கடைக்காரர் கருணாபுரத்தில் சாராயம் விற்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி கருணாபுரத்தில் சாராயம் வாங்கி குடித்த ராஜா சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா இறந்தார்.

    அவர் அணிந்திருந்த சட்டைபையில் இருந்த ஆதார் கார்டு மூலம் அவரது முகவரியை தொடர்பு கொண்டு போலீசார் ராஜாவின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று அவரது குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    • கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
    • மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

    இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னால் யார் இருந்தாலும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்டம் துரையூர் நெசக்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பது குறித்து உளவுத்துறைக்கு அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் முன்னிலையில், கள்ளச்சாராயத்தை குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 876 சாராய வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×