search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா இன்று பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.

    ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    • இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு.
    • இந்தியா டி20 அணியை போன்று விளையாட வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சியாளராக கவுதம் காம்பீர் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் இந்திய பயிற்சியாளருக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் விண்ணப்பித்து இருந்தால், காம்பீர் சிறப்பான பயிற்சியாளராக இருப்பார். உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு நல் வாய்புகள் உண்டு. இந்தியா டி20 அணியை போன்று விளையாட வேண்டும். அபாரமான திறமை நம்மிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

     


    முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த வகையில், பத்து ஆண்டுகள் கழித்து கொல்கத்தா அணி இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று அசத்தியது.

    இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, "நமது அணிக்கு சரியான பயிற்சியாளரை கண்டுபிடிப்பது முழுமையான செயல்முறை. இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு பற்றிய புரிதல், தரவரிசையில் வளர்ச்சி பெற்றுள்ள வீரர்களை அடையாளம் காண்பதில் சிறப்பான ஒருத்தரை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்," என்று தெரிவித்தார். 

    • புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
    • நியூ யார்க் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.

    உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறப்பு மற்றும் குழந்தைக்கு அவர்கள் சூட்டிய பெயரை அறிக்கை வாயிலாக அறிவித்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி, இந்த நேரத்தில் தங்களுக்கு தனிமை அவசியம் என்றும் பொது வெளியில் தங்களது குழந்தைகளை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

    இந்த நிலையில், தங்களது கோரிக்கைய ஏற்று தனியுரிமையை பாதுகாத்ததற்காக புகைப்பட கலைஞர்களுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக விராட் கோலி இந்தியாவில் இருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.

    தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுக்கு விமான நிலையத்தில் வைத்து புகைப்பட கலைஞர்கள் விராட் கோலியிடம் நன்றி தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த விராட் கோலி அவை தனது மனைவியின் ஏற்பாடு என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    • கேண்டியாக் பார்க் மைதானத்தில் போதுமான வசதிகள் இல்லை.
    • இதனால் இந்திய வீரர்கள் பயிற்சிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

    நியூயார்க்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

    இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்காக நியூயார்க், டல்லாஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டினர்.

    கேண்டியாக் பார்க் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும், இந்திய அணி விளையாட உள்ள மைதானத்திற்கும் இடையில் நீண்ட தூரம் இருக்கிறது.

    பயிற்சிக்கு ஏற்றவாறு மைதானங்களில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. எல்லாமே தற்காலிக ஏற்பாடுதான். பிட்சில் இருந்து அனைத்துமே தற்காலிகமானது என இந்தியா சார்பில் கூறப்பட்டுள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் வருகிற 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது.
    • சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை? என்பது குறித்து விவாதம் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் ஸ்பெஷலிஸ்ட் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாதன் லயன் கூறுகையில் "டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொறுத்தவரையில் ஒரு அணி எது என்றால் வெளிப்படையாக அது ஆஸ்திரேலியாதான். ஏனென்றால், நான் ஆஸ்திரேலியா சார்புடையவன். மற்றொரு அணி என்றால் அது பாகிஸ்தான் அணிதான். அங்குள்ள கண்டிசனை பொறுத்த வரையில் சுழற்பந்து வீச்சு எடுபடும். பாகிஸ்தான் அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மேலும், பாபர் அசாம் போன்று எலக்ட்ரிக் பேட்டர்ஸ் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "இந்த தொடரில் மிட்செல் மார்ஷ் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. பேட்டிங் பவர் உடன், சிறப்பாக பந்து வீசும் திறனும் பெற்றுள்ளார்" என்றார்.

    இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • வரும் 9-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது.

    நியூயார்க்:

    9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

    இந்நிலையில், அச்சுறுத்லை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து அச்சுறுத்தல் வந்ததாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மைதானம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறையின் தகவல்படி இந்த நேரத்தில் நம்பகமான பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனாலும் அதிகப்படியான கண்காணிப்பு, முழுமையான சோதனைகள் உள்ளிட்ட உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொது பாதுகாப்பே எனது முதன்மையான முன்னுரிமை. உலகக் கோப்பை போட்டி பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
    • ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள்தான் அடித்திருந்தார். விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கிடையே ஒவ்வொரு அணிகளும் எப்படி விளையாட வேண்டும். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என வீரர்களுக்கு கிரிக்கெட் விமர்சகர்கள் புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தபோது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் "இரண்டு வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. ஆனால் முதல் 10 ஓவரில் 62 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தது.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏராளமான பந்துகளை சந்தித்தனர். ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 96. விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 125. 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

    இந்த போட்டியில் (தொடரில்) இந்தியா தோல்வியடைந்தது. 33 பந்தில் 190 ஸ்டிரைக் ரேட்டுடன் 63 ரன்கள் அடித்த ஹர்திப் பாண்ட்யாவுக்கு நன்றி சொல்லனும். 10 ஓவரில் இங்கிலாந்து சேஸிங் செய்தது.

    இதில் இருந்து நாம் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். அது என்னவென்றால் ரோகித் சர்மா, விராட் கோலி இந்த போட்டியில் செய்த அதே தவறை செய்யக் கூடாது. விராட் கோலி 2 வருடத்திற்கு முன்னதாக இருந்து அதே டி20 பிளேயர் அல்ல. வெளியில் இருந்து வந்த விமர்சனங்கள் அவரை இரண்டு வருடத்திற்கு முன்னதாக இருந்தை விட சிறந்த டி20 பேட்ஸ்மேனாக உருவாக்கியுள்ளது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    • டி29 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு.
    • விராட் கோலி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவரும் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்தியா பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியில் யார் யார் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பது குறித்து விவாதம் கிளம்பியது.

    அதிலும் தொடக்க ஜோடி யார்? என்பதுதான் மிகப்பெரிய விவாதம். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடினார்.

    இதனால் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறக்கப்பட வேண்டும் என விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையே ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வாசிம் ஜாபர் "விராட் கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரம் நாம் பெறும் தொடக்கத்தை பொறுத்து 3-வது மற்றும் 4-வது இடத்தில் களம் இறங்க வேண்டும். ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார். ஆகவே, 4-வது இடத்தில் களம் இறங்குவது கவலை அளிக்கும் விதமாக இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா தொடக்க சுற்றில் அயர்லாந்து (ஜூன் 5), பாகிஸ்தான் (ஜூன் 9), அமெரிக்கா (ஜூன் 12), கனடா (ஜூன் 15) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.

    • வெஸ்ட் இண்டீஸ்க்கு 15 பேரில் 9 பேர் மட்டுமே சென்றுள்ளனர்.
    • கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் போன்றோர் ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் இன்னும் அணியுடன் இணையவில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் (இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன) அங்கு சென்றுள்ளன. தற்போது டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    வெஸ்ட் இண்டீசில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நமீபியா அணிகள் மோதின. நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அப்போது ஆஸ்திரேலிய அணிக்காக அந்த அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் பீல்டிங் செய்ய களம் இறங்கினர். இது போட்டியை பார்க்க வந்திருந்த அனைவரும் இது ஆச்சர்யமாக இருந்தது.

    இது தொடர்பாக விசாரிக்கும்போது ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர்களில் தற்சமயம் 9 பேர் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளனர்.

    டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோர் ஐபிஎல் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடியதால் சற்று ஓய்வு எடுத்து பின்னர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல திட்டமிட்டுள்ளதால் ஆஸ்திரேலியா 9 வீரர்களுடன் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சப்ஸ்டிடியூட் பீல்டர்களாக தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    முதலில் களம் இறங்கிய நமீபியா 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 21 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் ரன் குவிக்க திணறிய டேவிட் வார்னர் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது ஆஸ்திரேலிய அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    டிம் டேவிட் 16 பந்தில் 23 ரன்கள் அடித்தார். மேத்யூ வடே 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை 'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது.
    • பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ம் தேதியும், அமெரிக்காவுடன் 12-ம் தேதியும், கனடாவுடன் 15-ம் தேதியும் மோதுகிறது.

    உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தது. இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கி உள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்திய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதுகிறது.

    டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனான ரிஷப் பண்ட் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார்.
    • அவர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி குணமடைந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனான அவர் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார். அவர் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்துள்ளேன். அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். உண்மையில் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனென்றால் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும், அவரது பேட்டிங் ஆற்றல் என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான பயிற்சி போட்டி நடைபெறுகிறது.
    • பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகல்.

    டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்க உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்த இருக்கும் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் லூயிஸ் தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. இதையொட்டி, நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.

    ஜாஸ் பட்லர் பயிற்சி போட்டியில் இருந்து விலகியதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும், ஜாஸ் பட்லர் - லூயிஸ் தம்பதிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×