search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிக்கொம்பன் யானை"

    • தொடர்ந்து அதனை ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
    • வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

    நெல்லை:

    கேரளா மாநிலம் மற்றும் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அரிக்கொம்பன் யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

    பின்னர் அந்த யானை குமரிமாவட்டம் மேல் கோதையாறு பகுதியை கடந்து குட்டியாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில் விடப்பட்டது. தொடர்ந்து அதனை ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி மாஞ்சோலை பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் நாலுமுக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. அதனை வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

    இந்நிலையில் மஸ்து பாதிப்பால் ஆக்ரோசமாக இருந்த அந்த யானைக்கு நேற்று காலை பாதிப்பு குறைந்து ஊத்து தொழிற்சாலை, பள்ளிக்கூடம் பகுதியில் சுற்றித்திரிந்தது. அதனை விரட்டினால் குடியிருப்புக்குள் புகுந்துவிடும் என்பதால் வனத்துறையினர் நிதானம் காட்டி வந்தனர்.

    தொடர்ந்து அதன் நடமாட்டத்தை ரேடார் மூலம் அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், நேற்று மதியம் மேல் கோதையாறு பகுதிக்கு அரிக்கொம்பன் திரும்பியது. அங்கு சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால், அந்த இதமான சூழ்நிலையை நோக்கி அரிக்கொம்பன் நகர்ந்து கொண்டே இருந்த நிலையில் இரவு முத்துக்குழி வயல் பகுதியை அடைந்தது.

    தற்போது முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கு தேவையான உணவை அரிக்கொம்பன் யானை தேடி அலைவதாகவும், ஆனாலும் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் விடவேண்டும் என்று கேரளாவை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் அரிக்கொம்பன் யானை மீட்பு குழு என்ற பெயரில் அம்பை வனக்கோட்ட அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று அதிகாலை அரிக்கொம்பன் யானை ஊத்து எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்து வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர்.
    • அரிக்கொம்பனை தற்போது நாங்களாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மக்களை பீதியடைய செய்த அரிக்கொம்பன் யானையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிடித்து வந்து மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மேல் கோதையாறு அணை வழியாக கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் வனத்துறையினர் விட்டனர். பின்னர் அதன் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதன் கழுத்தில் ரேடார் கருவியும் பொருத்தினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை திடீரென்று புகுந்தது. நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகளின் முன்பு இருந்த வாழை மரங்களை சாய்த்தும், வாழைத்தார்களை தின்றும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்தனர். நேற்று அதிகாலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் யானை நிற்பதாக வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் யானை அங்கு இல்லை.

    இதனால் அம்பை, களக்காடு வனக்கோட்டங்களை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அரிக் கொம்பன் யானை ஊத்து எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்து வருவதை வனத்துறையினர் கண்டு பிடித்தனர். தொடர்ந்து அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கூறியதாவது:-

    அரிக்கொம்பன் யானை இன்று காலை 8 மணி நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் சற்று தொலைவில் உள்ள ஆர்கானிக் தொழிற்சாலை அருகே நடமாடி வருகிறது. தற்போது அதற்கு மஸ்து எனப்படும் மதநீர் குறைந்து இயல்பு நிலையில் இருக்கிறது.

    நேற்று இரவு நாலுமுக்கு-ஊத்து சாலை பகுதியில் அடர்ந்த மூடுபனி காணப்பட்டதால் எங்களால் யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ரேடார் கருவியில் எந்த பழுதும் இல்லை. தற்போது வரை அந்த ரேடார் சீரான இயக்கத்திலேயே உள்ளது.

    அரிக்கொம்பனை தற்போது நாங்களாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அதன் நடமாட்டத்தை மட்டுமே கண்காணித்து வருகிறோம். ஏனெனில் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நாம் அரிக்கொம்பனை விரட்ட முயற்சிக்கும்போது, அது எங்கு செல்வது என்று தெரியாமல் குடியிருப்புக்குள் புகுந்து விட்டால் ஆபத்தாகி விடும்.

    எனவே அரிக்கொம்பனால் தேயிலை தோட்ட குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடாத வண்ணம், அதுவாகவே தானாக வனத்துக்குள் செல்ல வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின.
    • புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து, நெல்லை மாவட்டம் மணி முத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப் பகுதியான மேல் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில்விட்டனர்.

    அதன்பின்னர் அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை புகுந்தது.

    நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின.

    நேற்று அதிகாலையில், குடியிருப்பு பகுதிக்குள் யானைகளின் நடமாட்டத்தை அறிந்த தொழிலாளர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அரிக் கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இன்று காலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் நிற்பதை வனத்துறையினர் அறிந்தனர்.

    தற்போது அதனை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக ப்ரியா கூறியதாவது:-

    மாஞ்சோலை வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அரிக்கொம்பன் யானை தான். வேறு யானை கூட்டம் எதுவும் வரவில்லை. தற்போது அந்த யானையின் கண்ணுக்கு மேலே மஸ்து உள்ளது. அது இருக்கும் வரை யானையின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும்.

    அதனால் தான் தற்போது அட்டகாசம் செய்து வருகிறது. இதுபோன்ற பாதிப்பு ஆண்டுக்கு ஒருமுறை வரும். அதனை சரி செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்பின்னர் முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு யானை விரட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானையை அமைதிப்படுத்தும் கருவி மூலம் பிடிப்பது அறிவியலுக்கு எதிரானது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
    • யானையை பிடிப்பதை தவிர வேறு மாற்று வழிகளை பரிசீலிக்கவும் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சந்தன்பாறை, சின்னக்கானல் பகுதியில் மக்களிடம் பிரபலமானது அரிக்கொம்பன் யானை.

    அரிசி விரும்பியான இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வயல் வெளிகளை சேதப்படுத்தி வந்தது. மேலும் மக்களையும் அடிக்கடி தாக்கியது. இதில் சில உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மக்களிடம் அரிக்கொம்பன் என்ற பெயரைக் கேட்டாலே அச்சம் ஏற்பட்டது. எனவே இந்த யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். இதற்காக விக்ரம், சூர்யா என்ற 2 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டன. வயநாட்டில் இருந்து மேலும் 2 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட இருந்தன.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுவது என்று திட்டமிடப்பட்டது. இந்நிலையில் யானையை அமைதிப்படுத்தும் கருவி மூலம் பிடிப்பது அறிவியலுக்கு எதிரானது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இதனை தொடர்ந்து யானையை பிடிக்கும் பணிக்கு வருகிற 29-ந் தேதி வரை தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் யானையை பிடிப்பதை தவிர வேறு மாற்று வழிகளை பரிசீலிக்கவும் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் கோர்ட்டு தடை விதித்து இருந்தாலும், அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கான முன் பணிகளில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.

    இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோர்ட்டு அனுமதித்தால் யானையை பிடிப்போம். 29-ந் தேதி அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் ஒத்திகை பயிற்சி கும்கி யானைகள் மூலம், நடத்தப்படுகிறது என்றார்.

    ×