search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா"

    • புத்தூர் கீழத்தோப்பில் 13 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம்.
    • உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.

    கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அம்மாபேட்டை புத்தூர் கீழதோப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்மாபேட்டை பேரூரா ட்சிக்கு உட்பட்ட புத்தூர் கீழத்தோப்பில் 13 குடும்பங்கள் பல தலைமுறைகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம்.

    எங்களுக்கு வீட்டு வரி ரசீது, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில், 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு, ரூ.75.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் பயனாளி ஒருவருக்கு தலா 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

    அதனை செயல்படுத்தும் விதமாக, பெண்கள், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்க ரூ.75 கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதோடு, பயனாளிகளில் குறைந்தது 30 சதவீதம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

    ஆடுகள்

    குறிப்பாக ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


    தங்களுக்கு பட்டா வழங்க கோரி போடி தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலசொக்காநாதபுரம்:

    போடி ஜீவாநகர் தெற்கு தெருவில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 60 ஆண்டுக்கு மேலாக 50- க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் போடி நாயக்கனூர் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் மற்றும் மின் கட்டணம் அனைத்தும் முறையாக செலுத்தி அதற்கான ரசீது பெற்று வருகின்றனர். கடந்த 3 தலைமுறைக்கும் மேலாக குடியிருந்து வரும் தங்களை சிலர் இப்பகுதியிலிருந்து வெளியேற கோரி கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளனர். ஆனாலும் இந்த பிரச்சினை தொடர்ந்து வெடித்து வருகிறது.

    எனினும் போடி தாசில்தாரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வீட்டுமனை பட்டா வழங்காமல் அலைக்கழித்து வந்து உள்ளார். இது முதல்- அமைச்சர் தனிப்பிரிவுக்கும் தேனி மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்துள்ளனர்.

    தற்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் இப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற கோரி பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். எனவே இதனை கண்டித்தும் தங்களுக்கு பட்டா வழங்க கோரியும் ஏராளமானோர் போடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அதன்பின்னர் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்த தாசில்தார் இது குறித்து உரிய விசாரணை நடத்தி பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    போராட்டகாரர்கள் கூறுகையில் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கா விட்டால் அனைவரும் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்து உள்ளனர்.

    பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி டிரைவர், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    மோகனூர் அருகே உள்ள செவந்திப்பட்டி பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவர் நேற்று தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்த கிருஷ்ணன், திடீரென 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ம் ஆண்டு ராமனுஜம் வகையறாகளிடம் இருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ம் ஆண்டு நிலஅளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.

    எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால், நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும், சிவில் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

    நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை அரசு அப்பீல் செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்சினையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார். #tamilnews
    அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. #TNGovernment
    சென்னை:

    அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 11.7.2018 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்பதன் மூலம் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான நெறிமுறைகளை வகுப்பது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

    அந்த கலந்தாய்வில், சிறப்பு வரைமுறை திட்டத்துக்கான வரைவு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசுக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரை அனுப்பினார். அந்தப் பரிந்துரையை ஏற்று, ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு வரைமுறை திட்டத்துக்கான நெறிமுறைகளை வகுத்து அரசு ஆணையிடுகிறது.

    அதன்படி, கடந்த 5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்து பட்டா வழங்க கோரிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. அனைத்துவிதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்துவிட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் இந்தத் திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆவர்.

    அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவர்களின் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஊரகப் பகுதியில் 4 சென்ட், நகர்ப் பகுதியில் இரண்டரை சென்ட், மாநகராட்சிப் பகுதியில் 2 சென்ட் அளவுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கலாம்.

    சென்னை மாநகராட்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னை மாநகர் சூழ் பகுதிகள், இதர மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வரைமுறைப்படுத்துவதற்கு உள்ள தடையாணை தொடரலாம். மற்ற நகரங்களில் தடையாணையை விலக்கி மாவட்ட அளவிலான குழுவின் நடைமுறைகளை பின்பற்றி வரைமுறை செய்யலாம்.

    நீர்நிலை போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அவர்களை குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டும்.

    மேய்க்கால், மந்தைவெளி, சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிப்போரையும் முடிந்த அளவில் அதே முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டும்.

    இந்த சிறப்பு வரைமுறைத் திட்டத்தை 6 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment
    பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி பெயரில் பட்டா வழங்கக்கோரி அவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவர் பவர் டில்லர் ஓட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஊர் அருகே சொந்தமாக காலியிடம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி உள்ளார். இந்த இடத்திற்கு அவரது பெயரில் பட்டா வழங்கக்கோரி சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே மனு செய்துள்ளார். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து அவர் பாவூர்சத்திரம்- சுரண்டை ரோட்டில் உள்ள கீழப்பாவூர் பகுதி-1 கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அவர் இதுவரை அனுப்பிய மனுக்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கழுத்தில் கட்டித் தொங்க விட்டு கொண்டு உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தெரிவித்தார்.

    இதை அறிந்து அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி ஞானக்கண் பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினரை அழைத்து பேசினர். அதன்படி விரைவில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். #tamilnews
    புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

    அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 29) என்பவர் தனது குடும்பத்தினருடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார். அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் பெட்ரோல் கேன் இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ராமசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எங்கள் (ராயர்பாளையம்) பகுதியில் உள்ள 3½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் எங்களது கால் நடைகளை மேய்த்து பராமரித்து வருகிறோம். தற்போது திட்டக்குடியை அடுத்த குடிகாடு பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த நிலத்தை நான் பராமரிக்க போகிறேன். இந்த நிலத்தை இனிமேல் நீ பராமரிக்கக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்தார். கால்நடைகளை நம்பியே எங்களது வாழ்வாதாரம் உள்ளதால் கால்நடைகளை பராமரிக்க வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

    எனவே அந்த புறம்போக்கு நிலத்துக்கு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்காக இன்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம். எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து கையில் பெட்ரோல் கேன் கொண்டு வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வாலிபர் ஒருவர் வந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×