search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது.
    • எனவே அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில் பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கும், ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார். ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தி.மு.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.

    இதையொட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி பிரமாண்டமான மகளிர் மாநாடு மற்றும் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இதில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கருணாநிதி செய்த சாதனைகள், கொண்டு வந்த திட்டங்களை பற்றி எடுத்துரைத்து கருணாநிதிக்கு பெருமை சேர்த்திடும் வகையில் மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார். அவர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தவிர கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் எம்.பி. உள்ளிட்ட பிரபலங்களை கனிமொழி எம்.பி. நேரில் சென்று சந்தித்து அழைத்து வருகிறார்.

    இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இரண்டு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (23-ந்தேதி) அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று நிகழ்ச்சிகள் பற்றி விளக்குகிறார்.

    • சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்.
    • மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இன்று மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்றைய விவாதத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, பெண்களுக்கு சமமான மதிப்பு கொடுத்தாலே போதுமானது என்று தெரிவித்தார்.

     

    இது தொடர்பாக அவர் பேசும் போது, "பெண்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டாம், அவர்களை கொண்டாட வேண்டாம். பெண்களை சமமாக நடக்க அனுமதியுங்கள். எங்களை தாய் என்றோ சகோதரி என்றோ மனைவி என்றோ அழைக்க வேண்டாம். எங்களையும் சமமாக நினைத்து, மரியாதை அளித்தாலே போதுமானது."

    "இந்த விவகாரம் தொடர்பாக என்ன கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டு இருக்கிறது. என்னென்ன விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த மசோதா மிகவும் ரகசியமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது. எங்களுக்கும் உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. இந்த நாடாளுமன்றம் எங்களுக்கு சொந்தமானது," என்று தெரிவித்தார்.

    • விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார்.
    • தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் காலை உணவு சமைத்து வழங்குகிறார்.

    அங்கு பயிலும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் வருவாய்துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர்.

    இதனை அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காலை உணவையும் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர், காலை உணவு திட்ட சமையலர், மாணவ-மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''உசிலம்பட்டியில் உள்ள சிலருக்கும், காலை உணவு திட்ட சமையலருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை உணவு சாப்பிட அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.

    இந்நிலையில் சம்பந்தப்படட அந்த பள்ளியில் இன்று கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். தொடர்ந்து கிராம பொதுமக்களிடம் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.

    பொதுமக்கள் சாலை வசதி, வாறுகால்வசதி, தார்ச்சாலை வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார். மேலும் காலை உணவு மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள திட்டம். எனவே தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.

    அப்போது கிராமமக்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். எந்த வேறுபாடும் இல்லை. எனவே தொடர்ந்து மாணவ-மாணவிகள் காலை உணவுதிட்டத்தில் சாப்பிடுவார்கள் என்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கோயம்பேடு மார்கெட்டில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • விழாவில் வியாபாரி சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கோயம்பேடு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    போரூர்:

    கோயம்பேடு, மதுரவாயல் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கோயம்பேடு மார்கெட்டில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு சங்க கவுரவ தலைவர்கள் எல்.சி.ராஜேந்திரன், பெப்சி வி.எஸ்.பாலமுரளி ஆகியோர் தலைமை தங்குகிறார்கள். சங்க தலைவர் எல்.கே.என் ராஜா நாடார், மார்கெட் ஜெ.முத்து, பழக்கடை டி.கனகராஜ், மு.வைகுண்ட ராஜா, ஜெ.பால்ராஜ், வ.பெ.ரா.பால்பாண்டியன், கே.முத்துராமன், செ.துரைமாணிக்கம், தங்கம் ஏ.ராமச்சந்திரன், பி.ராஜேஷ் பாண்டியன், பி.கருணாநிதி, ஆர்.எஸ்.பாண்டியன், ஆர்.அழகுநிதி, எஸ்.ஜவகர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சங்க செயலாளர் ரஸ்னா என்.ராமசந்திரன் வரவேற்றுப் பேசுகிறார்.

    விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி. கலந்து கொண்டு 1521 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், ஏழை பெண்களுக்கு புடவை உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இதில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பிரபாகர ராஜா எம். எல். ஏ. , தமிழ் நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண் குமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ், இந்திய நாடார் பேரவை தலைவர் ராகம் சவுந்திரபாண்டியன், காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் மின்னல் அந்தோணி, நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன், கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஜி.டி. ராஜசேகரன், பல்வேறு நாடார் சங்கங்கள் மற்றும் வியாபாரி சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கோயம்பேடு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் எஸ்.செல்வகுமார் நாடார் நன்றி கூறுகிறார். விழாவுக்கு வரும் அனைவரையும் சிறு மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகளான எஸ். எஸ். முத்துக்குமார், சி.பி.ரமேஷ், ஆர்.ரத்தினசாமி, ஏ.செல்வ குமார், எஸ்.ஆர்.சி. ரமேஷ் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

    • தங்கை கனிமொழி முன்னெடுக்கும் “கலைஞர் 100”-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.
    • செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை கனிமொழி முன்னெடுக்கும் "கலைஞர் 100"-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.
    • ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    மதுரை:

    மதுரை வலையங்குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த மாநாடு வெற்றி பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.

    கிழக்கு நுழைவு வாயில் வழியாக கோவிலுக்குள் சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்த அவர் பிரகாரங்கள் வழியாக சுற்றி வந்தார். பொற்றாமரை குளத்தின் படிக்கட்டுகளில் நின்றவாறு கோவில் அழகை ரசித்தார்.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இன்று இரண்டாவது நாளாக அவர்கள் சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டனர். இதையடுத்து கனிமொழி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி கோவிலுக்குள் சென்ற சிறிது நேரத்தில் கனிமொழி எம்.பி.யும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். இருவரும் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    ஆனால் இருவரும் வெவ்வேறு பிரகாரங்களில் இருந்தனர். அவர்கள் சந்திக்கவில்லை என்று உடன் சென்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் முதலில் எடப்பாடி பழனிசாமியும், அதன் பிறகு கனிமொழி எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் கோவிலை விட்டு வெளியே வந்து புறப்பட்டு சென்றனர்.

    இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை மாவட்டத்தில் பாராளுமன்ற நிலை குழுவினர் கனிமொழி தலைமையில் ஆய்வு நடத்தினர்.
    • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமை யில், குழு உறுப்பினர்கள் மதுரை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கனிமொழி கலந்துரையாடி னார். தொடர்ந்து மதுரை யானைமலை ஒத்தக்கடை யில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாய தொழில் முனைவோர் பாதுகாப்பு மையத்தை பார்வை யிட்டனர்.

    பின்னர் சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் கனிமொழி கூறியதாவது:-

    ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் தொடங்கி மதுரை மாவட்டம் வரை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருகிேறாம். இந்த ஆய்வின் போது களிமண் பொம்மை தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின் போது கலெக்டர் சங்கீதா, நாடாளுமன்ற இயக்குநர் கல்யாண சுந்தரம், நாடாளுமன்ற நிலைக்குழு அலுவலர் சுனில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அகரம் மேல் ஏ.ஜி. ரவி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
    • கலை நிகழ்ச்சியில் அவதூறாக பாடல் பாடியுள்ளதுடன் அதை அக்கட்சியின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர்.

    பூந்தமல்லி:

    மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறாக பாடல் பாடியதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், திமுக மாவட்ட கலை இலக்கிய மற்றும் பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளருமான அகரம் மேல் ஏ.ஜி. ரவி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், அதிமுக சார்பில் மதுரையில் அக்கட்சியின் பொன்விழா மாநாடு கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து கலை நிகழ்ச்சியில் அவதூறாக பாடல் பாடியுள்ளதுடன் அதை அக்கட்சியின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளனர். இது திமுகவினருடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மக்கள் பிரதிநிதிகளாக உள்ள திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது இவ்வாறு அவதூறான அருவருக்கத்தக்க விதமாக பாடலை, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகள் மீதும் மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய எடப்பாடி பழனிசாமி, மாநாடு பொறுப்பாளர்கள் செல்லூர் ராஜு, ஆர். பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மீது பொதுவெளியில் பெண் தலைவரை கொச்சைப்படுத்தியதற்காகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்ட இவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. மகளிரணியினர் உள்பட கட்சியினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    • கனிமொழி கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்து பாடிய செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொன்விழா மாநாடு கடந்த 20-ந்தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி.யை அவதூறாக விமர்சிக்கும் வகையிலான பாடல் இடம்பெற்றது. இந்தப்பாடல் பேஸ்புக், 'எக்ஸ்' என்ற டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இது தி.மு.க. மகளிரணியினர் உள்பட கட்சியினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தி.மு.க. மாநில பிரசாரக்குழு செயலாளர் அண்ணாநகர் ராணி, சமூக வலைத்தள பொறுப்பாளர் ரத்னா லோகேஷ் உள்பட தி.மு.க. மகளிரணியைச்சேர்ந்த நிர்வாகிகள், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில், அதன் தலைவர் ஏ.எஸ்.குமரியை நேற்று நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து, தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுரையில் கடந்த 20-ந்தேதியன்று நடைபெற்ற அ.தி.மு.க.வின் மாநில மாநாட்டில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழியை தரைக்குறைவாக விமர்சிக்கும் வகையில் பாடல் பாடப்பட்டது. அங்கு இருந்த முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கைதட்டி சிரிக்கிறார்கள். நாட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் கனிமொழி கருணாநிதி. அவரை தரக்குறைவாக பேசியவரை கைது செய்யவேண்டும். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கனிமொழி கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்து பாடிய செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக மகளிர் அணி சார்பாக தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று.
    • ஒண்டிவீரன் சிலைக்கு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை நீதிமன்றம் எதிரில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் கார்த்திகேயன், எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், ஞானதிரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலைராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சி பாண்டியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் தொகுதியில் மோடி சொன்னதை செய்யவில்லை.
    • மோடி ஆட்சியில் மீனவர்கள் அதிக அளவில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவாரா? மாட்டாரா? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் போட்டியிட்டால் எதிர்த்து நின்று சமாளிப்பதற்கான வியூகங்களை தி.மு.க. இப்போதே வகுக்க தொடங்கிவிட்டது.

    மீனவர்கள் மாநாடு, பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தை ராமநாதபுரம் தொகுதியில் நடத்தி அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அத்துடன் ராமநாதபுரம் தொகுதியில் மோடி சொன்னதை செய்யவில்லை. மோடி ஆட்சியில் மீனவர்கள் அதிக அளவில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார்.

    கனிமொழி எம்.பி. பேசும்போது, "ராமநாதபுரம் கலைஞர் மனதில் இடம்பிடித்த தொகுதி. 1958-ல் உதயசூரியன் நாடகம் முதல் முதலில் இங்குதான் நடத்தப்பட்டது. அரங்கேறிய சில நாட்களிலேயே அதுவே கட்சியின் சின்னமாகவும் கிடைத்தது.

    இந்த தொகுதியில் டெல்லியில் இருந்து யாரோ போட்டியிட போகிறாராம். அவர் ஒரு வரலாற்றை புரிந்துக் கொள்ள வேண்டும். 1952, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களில் இங்கு அரசராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    1957 தேர்தலில் அண்ணாவும், கலைஞரும், ராஜாவுக்கு எதிராக தங்கப்பன் என்ற வேட்பாளரை நிறுத்தினார்கள். அவர் அரண்மனை வாசலில் குதிரை வண்டி ஓட்டுபவராக இருந்த சாதாரண மனிதர். கடைசியில் ஜெயித்தது ராஜா அல்ல குதிரை வண்டிக்காரர்தான். அவரை வெற்றி பெற செய்தது தி.மு.க. எனவே இங்கே போட்டியிட நினைப்பவர்கள் இந்த வரலாறுகளை படிக்க வேண்டும்" என்றார்.

    ×