search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.
    • திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்ட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாகப்பட்டிணம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஸ்ரீதேவி மூதேவி சமேத சௌந்தரராஜபெருமாள் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ஆலய முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பினர் அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது.
    • பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை நம்பிக்கை.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இப்பிறவியிலேயே துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதி கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய சக்தி சொரூபினியான பார்வதிதேவி. உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள்.

    அந்தன்காடு

    ஒரு காலத்தில் கேரளாவில் எங்கு பார்த்தாலும் மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிரம்ப பெற்றிருந்தது. அதனால் அந்த பகுதி 'மலையாளம்' என்று அழைக்கப்பட்டது. அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாக கிடந்தது. அதனால் அந்த இடத்தை 'அந்தன் காடு' என்று அழைத்தனர். உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில் யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடையவும் அந்த தவத்தை செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்துக்கு மனமிறங்கிய பார்வதி தேவி, அவர் முன்பாக தோன்றி, "இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக, இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்" என்று கூறி மறைந்தாள். தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாளோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார். நாளடைவில் அந்த வனப்பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது.

    சிறைச்சாலை

    கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததை கொண்டு அந்த பகுதி 'பழஞ்சிறை' என்று அழைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்த பகுதியில் அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு ஆலயம் அமைக்கப்பட்டது.

    பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால் இந்த அன்னையை 'பழஞ்சிறை தேவி' என்றே பெயரிட்டு அழைத்தனர். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள். இந்த ஆலயத்தில் அழகு வண்ண சிற்பங்கள், கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்ப கிரகத்தை 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும்மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதார காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    கன்னியர் பூஜை

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத இறுதியில் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலும் பொங்கல் விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவை தவிர மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி ஆலயத்தில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.

    இந்த தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டின் போது தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

    பழஞ்சிறை தேவிக்கு வஸ்திரம் அணிவித்து, அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். இந்த அம்மனுக்கு தினமும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பழஞ்சிறை அம்மனை வழிபடுபவர்களுக்கு இன்னல்கள் எதுவும் ஏற்படாது என்பதுடன், அவர்களுக்கு மறு பிறவி என்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    திருமண தடை நீங்கும்

    அதேபோல் இந்த ஆலயத்தில் நடைபெறும் பூதபலி பூஜை, பஞ்சபூத பொங்கல் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற கோவில் பூசாரி தனது பாதங்களில் சிலம்பு அணிந்து கரங்களில் திரிசூலம் ஏந்தி மூவர்ண பட்டு உடுத்தி வருவார். கோவில் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்நோக்கி செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்குபலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண் பானையில், கைகுத்தல் அரிசியை போட்டு, தண்ணீர் விட்டு நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குலவை ஒலி ஆகியவை எழுப்பப்படும். பொங்கல் தயாரானதும் வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது.

    இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு பஞ்சபூத பொங்கல் என்று பெயர். நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் 'சண்டி ஹோமம்' நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கும். இத்தலத்தில் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

    அமைவிடம் :

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் இருக்கிறது பழஞ்சிறை தேவி கோவில்.

    • இக்கோயிலை எட்டு பங்கு இந்து நாடார் உறவின் முறையினர் நிர்வகித்து வருகின்றனர்.
    • ஆண்டுதோறும் இக்கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருவிழா நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மேலப்புதுக்குடி. இவ்வூரில் அமைந்துள்ளது அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில் தடாகம்(நீர்நிலை) ஒன்று இருந்தது. அதிலுள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இந்த தடாகத்தில் இருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் ஒருவர் குடத்தினில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள். கானகத்தின் வழியே நடந்து சென்றபோது வழியில் கல்லால் கால் இடறி விழுந்தாள். அவள் விழுந்ததால் குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைத்தது. தவநிலை கலைந்த முனிவர் கடும்சினம் கொண்டார்.

    கவனச்சிதறலால் கால் இடறி விழுந்த கன்னிகையே, ''உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அடுத்த கனமே அவர் மாண்டுபோவார். இதை நீ வெளியே தெரிவித்தால் மறுகனமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்காக மரிப்பாய்'' என்று சாபம் இட்டார். ''அனைத்தும் அறிந்த மாமுனியே, அறியாது செய்த பிழைக்கு மாபெரும் தண்டனையா,'' என்று மங்கையவள் வினவ, ''பெண்ணே, நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்கு பிறகு நீ சொர்க்கம் போவாய்'' என்று உரைத்தார் அவர்.

    இந்நிலையில் மன்னன் சிங்கராஜன் தினமும் உண்டு வந்த கனி மரம் தினமும் ஒரு கனி தான் காய்க்கும். அக்கனியை தான் மன்னன் உண்டு வந்தான். மரத்திலிருந்து விழும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் கிடக்கும். அதை யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மன்னனின் காவலாட்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து வந்தனர். வழக்கம் போல் தடாகத்தில் தண்ணீர் எடுத்து வந்த கனகமணியின் குடத்திற்குள் அந்த கனி விழுந்து விட்டது. இதை காவலாட்களும், காண்கவில்லை, கன்னி கனகமணியும் கவனிக்கவில்லை. குடத்து நீருடன் குமரி அவள் இல்லம் சென்றாள். வரும் வழியில் இருபத்தோரு தேவாதி தேவாதைகள் எதிரில் வந்தன. அவைகள் தாகத்தோடு இருக்கிறோம்.

    பெண்ணே தண்ணீர் கொடு என்று கனகமணியிடம் கேட்க, திடுக்கிட்டாள் அவள். காரணம் முனிவர் இட்ட சாபம் நினைவுக்கு வந்தது. யாருக்கேனும் நீ தண்ணீர் கொடுத்தால் அவர்கள் மரணம் அடைவார்கள். இந்த ரகசியத்தை எடுத்துக்கூறினால் நீ மரித்து போவாய் என்றது. அதை எண்ணி தண்ணீர் கொடுக்க மறுத்தாள் கனகமணி. அப்போது தாகத்தால் நாங்கள் மரணித்து போய் விடுவோம் போல் உள்ளதே என்று கெஞ்சின. மனதை கல்லாக்கிய மங்கை கனகமணி தண்ணீர் கொடுக்க மறுத்து சினத்துடன் வழியை விட்டு விலகி செல்லுங்கள். நான் அனுதினமும் வழிபடும் அரிஹர புத்திரன் மீது ஆணை என்றுரைக்க, தேவாதைகள் வழிவிட்டன. அவள் வீடு போய் சேர்ந்தாள்.

    கானகத்தில் பசியோடு கனி தேடி மரத்தடி வந்தான் மன்னவன். காவலாட்கள் இன்னும் கனி விழவில்லை என்றனர் கனிவோடு, கடுஞ்சினம் கொண்ட மன்னன் நேரம் தவறிவிட்டது. விழாமல் இருக்காது கனி. காரணம் இது இறைவன் கொடுத்த அருட்பணி. மாலை பொழுதாக போகிறது மறுபடியும் விழாது இனி. கனியை உண்டது உங்களில் யார் என்று வினவ, மறைத்து வைக்கவே மனமிருக்காது. மறந்தும் மன்னவருக்கு உரிய கனியை உண்ண நேருமோ, மரணத்தை மனம் உவர்ந்து வரவேற்க யார் முன் வருவா் என்று காவலர்கள் பதில் உரைத்தனர். அப்படியானால் கனி களவாடப்பட்டிருக்கிறது. காப்பவனை விட கள்வனே பெரியவனாகி விட்டான்.

    ''சரி, எப்படியானாலும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் கனியை உட்கொள்ள வேண்டும். ஊருக்குள் செல்லுங்கள். ஒரு வீடு விடாமல் தேடுங்கள். கனியோடு வாருங்கள். இல்லையேல் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது'' என்று எச்சரித்தார். மன்னன் கட்டளையை ஏற்று காவலர்கள் ஊருக்குள் சென்று எல்லா வீடுகளிலும் தேடினர். கடைசியில் கனகமணி வீட்டில் தேடும் போது குடத்திற்குள் நீரோடு கனியும் இருக்க கண்டனர். கனி எடுத்த காவலர்கள் கன்னியவளை இழுத்து வந்தனர். மன்னன் முன் நிறுத்தினர். காவலர்கள் கூறினர் குடத்தில் நீருக்குள் இருந்தது. அப்போது அவ்விடம் வந்த தேவாதைகள், ''கொற்றவனே நாங்கள் உரைப்பதையும் ஒரு கனம் கேளீர், குடத்து நீரில் கனியை இவள் களவாடி சென்றிருக்கவேண்டும்.

    அதனால்தான் குரல் வளை காய்ந்து குடிக்க நீரை மன்றாடி கேட்டும், குமரி இவள் மறுத்து போனதன் மர்மம் இப்போது புரிகிறது''என்றனர். அப்போது அங்கு வந்த பேச்சியம்மன், ''முதுமையடைந்த பெண்ணாய் வந்து மன்னா, இவள் களவாட வில்லை. கனி தானாக விழுந்தது'' என்றுரைத்தும் மன்னன் கேளாமல் மங்கை இவளுக்கு மரண தண்டனையை. உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் கட்டளையை ஏற்ற காவலர்கள் கன்னி கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர். இறக்கும் தருவாயில் அரிஹரபுத்திரனை அழைத்தாள். நான் வணங்கும் அய்யனே என்று தனது தெய்வத்தை அழைத்தாள் கனகமணி. அவள் பக்திக்கு மனமிறங்கி வந்தார் சாஸ்தா. ''கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன்'' என்றார் சாஸ்தா.

    ''வேண்டாம் அப்பனே, இப்பிறவியில் நான் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை விரும்பவில்லை. இறக்கும் தருவாயில் நான் எண்ணியது நிறைவேறும் என்றார் அந்த மாமுனி. எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ, அது போல் இனி எவரும் தண்ணிக்கு அலைந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இவ்விடம் சுனையாக மாறி இருக்க விரும்புகிறேன். சுவாமி, சுனையை யாரும் அபகரிக்காமலும், மற்றவர்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வேலியிட்டு தடுக்காமலும் இருக்க, அய்யனே நீரே, சுனையை காத்தருள வேண்டும்'' என்றார்.''அருமையான சுனையாக மாறும் உன்னை காத்தருள்வேன் என்று உறுதியளித்த அய்யன் சாஸ்தா, இவ்விடம் அருஞ்சுனை காத்த அய்யனார்''என்று அழைக்கப்பட்டார். மன்னன் மதி மயங்கி தவறு இழைத்துவிட்டேன் என எண்ணி, தனது உயிரை மாய்த்துக்கொண்டான்.

    இருபத்தோரு தேவாதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோரின. அதன் பின்னர் அவர்களுக்கு தனது இருப்பிடத்தில் இடம் கொடுத்து தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் அய்யனார். மூலவர் பூர்ண புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன், தளவாய்மாடன், வன்னியடி ராஜன், கருப்பசாமி, சுடலைமாடன், இசக்கியம்மன், பட்டாணி சாமி, முன்னோடி முருகன் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சுனையில் குளித்தால் தீராத பினிகளும் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பட்ட கடன் தீரவும், இட்ட துயர் மாறவும் இத்தலம் வந்து அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபட்டால் அவை மாறிவிடுகிறது.

    துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை அருள்கிறார் அருஞ்சுனை காத்த அய்யனார். இக்கோயிலை எட்டு பங்கு இந்து நாடார் உறவின் முறையினர் நிர்வகித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருவிழா நடைபெறுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் குரும்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள மேலப்புதுக்குடியில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் உள்ளது. அம்மன்புரத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

    சு. இளம் கலைமாறன், ரா.பரமகுமார்

    • நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
    • குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக் கோவிலில் இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14 ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநில ங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித தீர்த்தமாடி நேர்ச்சை கடன் செலுத்தி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 8-ம் கொடை விழா கடந்த 21 ந் தேதி நடந்தது. 25-ந் தேதி (சனிக்கிழமை) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணிக் கொடைவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபி ஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இப்பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை, பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவான நாளை (சனிக்கிழமை) மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது. பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பொங்கலிட்டு வழிபடுவார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழாவில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவிலின் முன்பு வைக்கப் பட்டிருந்த திறந்த வார்ப்பு குமரி மாவட்ட திருக்கோ வில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண் கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ.3,87,205 ரொக்கமாக கிடைக்கப்பெற்றது.

    • இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சாமி கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இதையொட்டி 1-ம் திருவிழாவான இன்று(24-ந் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கொடிபட்டத்தை மலர்களால் அலங்கரித்து கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள கொடிமரத்தில் மேளதாளங்கள் மங்கல இசை மற்றும் சங்கு நாதம் முழங்க "அய்யா அரகர சிவசிவ" என்ற பக்தி கோஷம் விண்ணதிர கொடி ஏற்றப்பட்டது.

    முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் முட்டப் பதி கடலில் அய்யா வழி பக்தர்கள் தீர்த்தமாடி பதமிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உச்சிப்படிப்பு, அன்ன தர்மம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு 7 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந் தருளி கோவிலை சுற்றி மேளதாளங்கள்முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ம் திருவிழா வான நாளை (25-ந்தேதி) முதல் 7-ம் திருவிழாவான 30-ந் தேதி வரை தினமும் பணி விடைகள், உச்சிப் படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்திலும், 4 மற்றும் 5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அன்னவாகனத்திலும், 6-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு சர்ப்ப வாகனத்திலும், 7-ம்திருவிழாஅன்றுஇரவு 7.30மணிக்கு அய்யாகருட வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 31-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்படிப்பும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழா நாட்களில் இரவு 7.30 மணிக்கு சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடு களை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு.
    • இந்தக் கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

    'கரிக்ககம்' என்ற இடத்தில் உருவானது தான், 'தேவி கரிக்ககத்தம்மா' என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்தக் கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

    பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், தாங்கள் ஆண்ட பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தனர். முன்னதாக மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், சேர நாட்டில் 108 சிவாலயங்களையும், 108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார். பரசுராமர் ஆலயங்களை அமைத்த பகுதியே 'கேரளம்' என்று அழைக்கப்பட்டது. பிற்கால சேரர்கள், சிவன் கோவில்களுடன், பராசக்தியை பகவதி அம்மனாக, சாமுண்டி தேவியாக பற்பல இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

    இவ்வாறு 'கரிக்ககம்' என்ற இடத்தில் உருவானது தான், 'தேவி கரிக்ககத்தம்மா' என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக.. ரத்த சாமுண்டி தேவியானவள், சத்தியத்தை நிலைநாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வருகிறாள். இது பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான ஆலயம் ஆகும்.

    தல வரலாறு

    வேதவிற்பன்னர் ஒருவர், யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு அறிவுரைகளும், அருள்வாக்கும் அருளினார். யோகீஸ்வரனும் தன்னுடைய குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார். அவர் முன்பு அன்னையானவள், சிறுமி உருவத்தில் தோன்றினாள். அந்த சிறுமியை குருவும், சீடருமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பச்சைப் பந்தல் அமைத்து குடியமர்த்தினர்.

    உடனே அந்தச் சிறுமி, அம்பிகையாக காட்சியளித்து அங்கேயே குடிகொள்வதாகக் கூறி மறைந்தாள். இதையடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன் ஒரு அம்மன் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே அருள் சுரக்கும் கரிக்ககத்து அம்மனாக விளங்குகிறாள். இந்த அம்மனை பராசக்தி என்றும், பகவதி என்றும், பரமேஸ்வரி என்றும் அங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர்.

    ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு. சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக அம்மனை மக்கள் வழிபாடு செய்கின்றனர். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரமாகவே உள்ளனர். இந்தச் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை.

    முன்னொரு காலத்தில் இந்த ஆலயத்தின் கருவறை மூலஸ்தானத்தில், சாமுண்டிதேவியின் உருவம் வெள்ளி முகத்துடன் கலைமான் கொம்பில் பீடத்தின் பிரதிஷ்டையாக இருந்தது. நாளடைவில் பக்தர்கள், தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய விக்கிரக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில் சிலை அமைக்கப்பட்டது. தேவியை பஞ்சலோக விக்கிரகமாக செய்து பிரதிஷ்டை செய்தனர். அமைதி வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.

    இந்த அம்மனுக்கு கடும் பாயசம் நைவேத்தியமாக படைக்கப் படுகிறது. ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உடல்நலனுக்காகவும், பயம் நீங்கவும் 'கறுப்புக் கயிறு' மந்தரித்து கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.

    இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதி யில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் நீதிமன்றம், போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை 'சத்ரு சம்கார' (பகைமை அழிக்கும்) பூஜையாகும். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    அடுத்தது பால சாமுண்டி தேவி சன்னிதி. இந்த அன்னையும் சித்திரமாகவே காட்சி தருகிறாள். ஆனால் இவளது தோற்றம் சாந்தசொரூபிணியானது. இந்த அன்னை அமைதியும் அழகும் நிறைந்த தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த சன்னிதியில் வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அம்மனின் சன்னிதியில் தட்சணை செலுத்தி வழிபாடு செய்தால், அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்குமாம்.

    இந்த ஆலய வளாகத்தில் மகா கணபதி, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, நாகர் வனம், அன்னபூர்ணேஸ்வரி ஆகிய உப சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    வழக்கைத் தீர்க்கும் அம்மன்

    ஒரு முறை சேர மன்னன் ஒருவனின் அரசாட்சியில், அரசியின் விலை மதிப்பான காதணி காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு காவலரைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த காவலரின் காதலி, அரசியின் தோழி ஆவாள். அவள் செய்தி கேட்டு ஓடோடி வந்து தன்னை தண்டிக்கும்படியும், காவலரை விடுவிக்கும் படியும் மன்றாடினாள். அதைக் கேட்ட காவலனோ, 'இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்' என்றான்.

    'யார் குற்றவாளி' என்று கண்டுபிடிக்க, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவருக்கு அம்மனே தண்டனை வழங்குவார் என்பது உறுதி. குற்றம் சுமத்தப்பட்ட காவலரும், அந்த காவலரின் காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள்.

    'அரசியார் சலவைக்குப் போட்டத் துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். சாமுண்டி தேவியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே வந்தேன். காவலரும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள் மன்னா!' என்று கூறி தன்னிடம் இருந்த காதணியைக் கொடுத்தாள். மன்னன் மகிழ்ந்தான். காவலரும், அந்தப் பெண்ணும் விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய காதணிகள் இரண்டையும், சாமுண்டி தேவிக்கே சமர்ப்பித்தாள், அரசி.

    அப்போதிருந்து இன்றுவரை பல சிக்கலான வழக்குகள், சாமுண்டி தேவியின் சன்னிதி முன்பு சத்தியம் செய்வதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேவியின் நட்சத்திர தினமான பங்குனி மாதம் மக நட்சத்திர தினத்தில் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் 7-ம் நாளில் பொங்கல் வைக்கும் விழா நடக்கும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து அன்னையை வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. விழாவின் இறுதிநாளான ஏப்ரல் 2-ந் தேதி பொங்கல் விழா நடைபெறும்.

    ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில், பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்ககம் சாமுண்டி தேவி ஆலயம்.

    -பிரபா முத்துக்குமார், திருவனந்தபுரம்.

    • நெடுங்காலம் அந்த தலைமுடி வடிவ பீடம் மட்டுமே இருந்தது.
    • ஒரு குடும்பதெய்வத்தின் கதை அதனுடன் இணைந்து இன்றைய ஆலயக்கதை உருவாகியிருக்கிறது.

    இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம்: ஓர் இந்து, நாட்டார்த் தெய்வம். கன்யாகுமரி மாவட்டத்தில், விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் முடிப்புரை எனப்படுகிறது. இங்குள்ள நீலகேசி அம்மனுக்கு குழந்தைகளை தூக்கியபடி நெம்புகோல் ஒன்றில் தொங்கியபடி சுற்றிவரும் தூக்கு நேர்ச்சை எனப்படும் வழிபாடு செய்யப்படுகிறது.

    இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம் கன்யாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில், குலசேகரம் அருகே இட்டகவேலி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் இது முடிப்புரை எனப்படுகிறது. வழிபடப்படுவது முடி எனப்படும் ஒரு பொருள். அண்மைக்காலம் வரை ஆலயம் என்னும் அமைப்பு இல்லாமல் வழிபடுபொருட்களான முடி வைக்கும் கட்டிடமே இருந்தது. இப்போது ஆலயமாக மாற்றமடைந்துள்ளது.

    நீலகேசி அம்மன் கோவில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இட்டகவேலியின் தெய்வம் நீலகேசி அம்மன் எனப்படுகிறது. நீலகேசி என்பது தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. அக்கதையில் நீலகேசி என குறிப்பிடப்படும் தெய்வம் கணவனால் கொல்லப்பட்டு பேயான ஒரு பெண். சமண முனிவரால் மனம்திருந்தி அவர் ஆணைக்கேற்ப சமணக்கருத்துக்களை மறுதரப்புகளுடன் விவாதித்து நிறுவியவள். அந்தக் கதையின் இன்னொரு வடிவம் கள்ளியங்காட்டு நீலி என்ற பெயரில் கன்யாகுமரி மாவட்டத்தில் வழங்குகிறது. பழையனூர் நீலி என்ற பெயரிலும் அக்கதை தமிழகத்தில் வழங்குகிறது

    நீலகேசி என்னும் தெய்வம் சமண மதத்தின் வருகைக்கு முன்னரே தமிழ்நிலத்தில் வழிபடப்பட்ட பெண்தெய்வமாக இருக்கலாம். சமணம் அதை உள்ளிழுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது, சமணத்தெய்வமான நீலகேசி பின்னர் நாட்டார் தெய்வமாக உருமாற்றம் அடைந்து உள்ளூர் தொன்மங்கள் ஏற்றப்பட்டிருக்கவும்கூடும்.

    வரலாறு :

    பனங்கோட்டு நாயர் குடியைச் சேர்ந்த ஒரு பெண் கணவன் இறந்தபின் தன் தமையனுடன் வாழ்ந்தாள். அவள் மகள் பெயர் நீலகேசி. அவளை தாய்மாமனின் மனைவி கொடுமை செய்தாள். நீலகேசியை அடுப்பெரிக்க தீ வாங்கிவரும்படிச் சொல்லி ஓட்டைக் கொட்டாங்கச்சியைக் கொடுத்து அண்டையிலிருந்த பாண்டிநாட்டு கணியன் வீட்டுக்கு அனுப்பினாள். ஓட்டைவழியாகச் தீ சுட்டதனால் அவள் விரலை வாயிலிட்டு சப்பினாள். கணியன் வீட்டில் எதையோ வாங்கி தின்றுவிட்டாள் என பழிசுமத்திய மாமி மாமனிடம் கோள் சொல்லவே மாமன் அவளை கடுமையாக தண்டித்தான். நீலகேசி ஓடிப்போய் ஒரு புதரில் ஒளிந்துகொண்டாள். கணியர் அவளுக்கு உணவு அளித்தார். தாய் நீலகேசியை தேடிவந்து திரும்பக் கூட்டிச்செல்லும்போது நீலகேசி குளத்தில் பாய்ந்து மூழ்கி மறைந்தாள். அவள் அன்னையும் உடன் பாய்ந்தாள். அதை அறிந்து வந்த நீலகேசியின் பாட்டியும் நீரில் பாய்ந்து மடிந்தாள்.

    அவர்களின் உடல் கிடைக்கவில்லை. முடிக்கற்றைகள் மட்டுமே கிடைத்தன. கணியனின் ஆணைப்படி அந்த முடிக்கற்றைகளை தெய்வமாக கோயிலில் வைத்து அவர்களின் குடும்பம் வழிபட்டது. மூன்று முடிகளுடன் வெள்ளிப்பிள்ளை என்னும் சிறிய சிலையும் அங்கே நிறுவப்பட்டது.

    பனங்கோட்டு நாயர்கள் என்னும் குடும்பக் குழுவுக்கு உரிமைப்பட்ட குடும்பதெய்வ ஆலயமாக இருந்தது இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம். கணியர் சாதியினர் அதில் வழிபாட்டுரிமை, பூசையுரிமை கொண்டவர்கள். பின்னர் அனைவரும் வழிபடும் கோயிலாகியது.

    நீலகேசி அம்மன் என்னும் பெயரோ, அப்பெயர் கொண்ட ஆலயமோ முன்னரே இருந்திருக்கலாம். ஒரு குடும்பதெய்வத்தின் கதை அதனுடன் இணைந்து இன்றைய ஆலயக்கதை உருவாகியிருக்கிறது.

    கோயில் அமைப்பு

    வரிசையாக அமைந்த மூன்று கருவறைகளில் நடுவில் நீலகேசி அம்மன் கருவறை, மேற்குப்பக்கம் நீலகேசி அம்மனுடைய தாயின் கருவறை, கிழக்குப்பக்கம் நீலகேசி அம்மனுடைய பாட்டியின் கருவறை ஆகியவை உள்ளன. தலைமுடியை விரித்து வைத்தது போன்ற பீடங்களின் மேல் அம்மனின் நகைகளும் மணிமுடியும் வைக்கப்பட்டுள்ளது. நெடுங்காலம் அந்த தலைமுடிவடிவ பீடம் மட்டுமே இருந்தது. அது பனையோலையாலான பெட்டிக்குள் வைத்து வழிபடப்பட்டது. முன்பு ஓலைக்கூரை கொண்ட சிறிய குடிலில் இருந்த தெய்வங்கள் பின்னர் ஓட்டுக்கட்டிடத்தில் அமைந்தன. இப்போதுள்ள கோயில் பின்னர் கட்டப்பட்டது.

    அன்றாட வழிபாடு

    முப்பதாண்டுகளுக்கு முன்புவரை நீலகேசி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் மதியவேளையில் பூசை செய்யப்பட்டது. இப்போது அன்றாட பூசை நடைபெறுகிறது. பச்சரிசி, பழம், அவல்பொரி, மஞ்சள்பொடி, இளநீர், கமுகம்பூ ஆகியவை படையலிடப்படுகிறது.

    விழா

    நீலகேசியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். விழா தொடங்கும் முன்பு நாயர்வழிக் குடும்பத்தினரில் மூத்த ஒருவருக்கு காப்பு கட்டுவர். அதன் பின்பு வடக்கன்குளம், தச்சநல்லூர், ஶ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இருந்து வரும் கணியர் இனப் பூசாரிகளை, பூதப்பாண்டி பகுதிக்கு மேளதாளத்துடன் சென்று எதிர்கொண்டு வரவேற்பார்கள். கணியப் பூசாரிகள் அம்மனை வழிபட்ட பிறகு வெள்ளிப் பிள்ளை, மற்றும் மூன்று முடி பீடங்களை புதிய கோயிலிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பிறகு புதிய கோயில் பூட்டப்பட்டுவிடும். பீடங்களை உற்சவம் நடைபெறும் இடத்துக்கு அதாவது முடிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள கோயிலில் வைத்து பூசை செய்வர். அதன்பின்பு தினமும் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.

    திருவிழாவின் ஏழாம்நாள் நடைபெறும் தூக்க நேர்ச்சைச் சடங்குகோயிலின் சிறப்பான வழிபாட்டு முறையாக உள்ளது. எட்டாம் நாள் விளக்குப்பூசை நடைபெறும். ஒன்பதாம் நாள் அன்று நீலகேசி, அத்தையை வெற்றிக் கொண்டதைக் குறிக்கும் கமுகுப் பிடுங்குதல் சடங்கு நடைபெறும். , ஒரு கமுகு மரத்துக்குப் பூசை செய்து, வேருடன் பிடுங்கி, மரத்தின் ஒரு பகுதியை நீலகேசியாகவும் மற்றொரு பகுதியை மாமியாகவும் கருதி இருபக்கமும் ஆட்கள் நின்று இழுப்பார்கள். இறுதியில் நீலகேசி வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

    அதன்பின்பு கமுகமரத்தை ஓரிடத்தில் நட்டு வைப்பர். பின்னர் கமுகமரத்தின் உச்சியில் தீபம் ஏற்றி வைப்பர். பத்தாம் நாள் காளிக்கும் தாருகனுக்கும் நடந்த தாருதயுத்தம் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கணியர் இன மக்களில் ஒருவர் முடிவடிவமுடைய நீலகேசி அம்மன் பீடத்தைத் தலையில் எடுப்பார். மற்றொருவர் தாருகன் வேடம் பூணுவார். இருவரும் சண்டை இடுவதுபோல பாவனை செய்வர். இறுதியில் காளி தாருகனை வெற்றி கொள்வதாகச் சடங்கு நிறைவுறும். விழா முடிந்த பிறகு பீடங்கள் எடுத்துவரப்பட்டு மீண்டும் புதிய கோயிலில் வைக்கப்படும். அத்துடன் விழா நிறைவுறும். விழாமுடிந்த எட்டாம் நாள் மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

    தூக்குநேர்ச்சை

    தமிழகத்தில் குமரிமாவட்டத்திலும், கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் பத்ரகாளி ஆலயங்களில் நிகழும் ஒருவகை வழிபாடு தூக்கு நேர்ச்சை எனப்படுகிறது. நெம்புகோல்வடிவம் கொண்ட ஒரு அமைப்பில் கயிற்றில் தொங்கும் பூசாரியிடம் சிறுகுழந்தைகளை அளித்து ஆலயத்தைச் சுற்றிவந்து திரும்பப் பெறுதல் இச்சடங்கு. குழந்தைகளை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்ற இது செய்யப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அம்மயிறக்க திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த நேற்று தொடங்கியது. இந்த விழாவில் 26-ந் தேதி 2007 திருவிளக்கு பூஜை, 28-ந் தேதி தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. தொடர்ந்து 30-ந் தேதி கமுகு எழுந்தருளுதல், விழாவின் இறுதிநாளான 31-ந் தேதி பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.

    • 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    வீரபாண்டி :

    திருப்பூர் அருகே வீரபாண்டி பலவஞ்சிபாளையம் காளிகுமாரசுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணிக்கு 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா 29-ந் தேதி தொடங்குகிறது
    • அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே அம்மன் தரிசனம் செய்ய கோவிலில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி இரவு 10 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.

    விழாவின் முக்கிய உற்சவங்களான பொங்கல் வைபவம் ஏப்ரல் 5-ந் தேதியும், மின்விளக்கு தேர் பவனி 6-ந் தேதியும் 7-ந் தேதி பால்குடம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு புஷ்பபல்லக்கு வீதி உலாவும் நடக்கிறது. 8-ந் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறு கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வசதிக்காக பந்தல் மற்றும் வரிசையில் செல்ல காலரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வறண்டிருந்த தீர்த்த குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டு தற்போது தண்ணீர் நிரப்பி குளம் நிறைந்து காணப்படுகிறது.

    திருவிழா நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தாயமங்க லத்துக்கு வரும் பக்தர்கள் முத்து மாரியப்பனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி சுமந்தும் நேர்த்தி கடன் நிறைவேற்றி அம்மனை வழிபாடு செய்வார்கள்.

    திருவிழா தொடங்கு வதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பஸ், கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தாயமங்கலத்துக்கு வந்து வேண்டுதல் நிறை வேற்றி முத்துமாரியம்மன் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

    அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும் திருவிழா ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.

    • இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும்.
    • இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் அமைந்த மற்றொரு சிவத்தலம் விரிஞ்சிபுரம். இது ஷீரமாநதி (ஷீரம் என்பதற்கு வடமொழியில் பால் என்று பொருள்) என்றழைக்கப்படும் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இதன் புராணப்பெயர்கள் திருவிரிஞ்சிபுரம், கரபுரம்.

    தல சிறப்பு :

    மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கோவில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ வடக்கில் அமைந்துள்ளது. அருகிலேயே பாலாறு அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது.

    இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.

    இறைவி : மரகதாம்பிகை.

    தல மரம் : பனை மரம்

    தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்

    இத்தலம் மிக்க பழமையான ஒன்று. அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யப்பட்டவுடன் அவர் இறைவியை வேண்ட, இறைவி இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். பிரம்மனும் இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனின் சாபம் போக்க பிரம்மனை மனிதனாய் பிறக்க வைக்கிறார் இறைவன். பிரம்மன், சிவசர்மன் என்ற பெயரில் மனிதனாய் பிறக்க தக்க தருணத்தில் வந்து இறைவனே பிரம்மனுக்கு உபதேசம் செய்து ஆட்கொண்டார்.

    பிரம்ம உபதேச தலம் :

    சிவசர்மன் சிறுவனாக இருந்ததால் லிங்கத்திற்கு (லிங்கம் உயரமாக இருந்ததால்) நீருற்ற முடியவில்லை. சிவசர்மனாக பிறந்த பிரம்மன் தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, இறைவனிடம் முடியை காண இயலவில்லை என்று வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார். அண்ணாமலையில் இறைவனின் முடியை காணாத பிரம்மா இத்தலத்தில் தான் இறைவனின் முடியை கண்டார். லிங்கம் சுயம்பு லிங்கமாக சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது. பிரம்மா உபதேசம் பெற்ற தலம்.

    தல பெருமைகள் :

    இத்தலத்து இறைவனை வணங்கிடில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவன் சிவசர்மனாகிய பிரம்மனுக்கு உபநயனம் செய்வித்து ஒரு முகூர்த்த காலத்தில் 4 வேதங்கள், 6 சாஸ்த்திரங்கள், 18 புராணங்கள் மற்றும் 64 கலைகளையும் போதித்து ஆட்கொண்டவர். பிரம்மனுக்கு சிவபெருமானே சிவ தீட்சை அளித்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். நாமும் இத்தலத்தில் சிவ தீட்சை பெற்றால் அதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை.

    இத்தலத்து இறைவன் அறிவின் சிகரம். இத்தலத்து இறைவன் பிரம்மனுக்கு போதித்து வழிகாட்டியதால் மார்க்க சகாயர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவன் மிளகு வணிகருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணை வந்த நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    மைசூர் நகர வணிகர் ஒருவர் காஞ்சி மாநகர் சென்று மிளகு விற்பது வழக்கம். அவ்வாறு விற்க செல்லும் வேளையில் இத்தலத்தில் அந்த வணிகர் இரவு தங்க நேரிட்டது. இத்தலத்து இறைவனை வழித்துணையாக வரும் படி வேண்ட, இறைவனும் வேடன் வடிவில் வணிகரை பின் தொடர்ந்து சென்று திருடர்களிடமிருந்து காத்தார்.

    அதற்கு காணிக்கையாக மூன்று மிளகு பொதிகளை விற்ற பணத்தை காணிக்கையாக செலுத்தினார் அந்த வணிகர். வணிகரின் கனவில் இறைவன் தனது திருவிளையாட்டை எடுத்துரைக்க இறைவனின் அருளில் நெகிழ்ந்தார் வணிகர். இப்போதும் அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் "பார் வேட்டை" என்ற பெயரில் கோவிலில் இச்சம்பவத்தை நடித்துக் காட்டுவர். எனவே தான் இத்தலத்து இறைவனுக்கு மார்க்கபந்தீஸ்வரர் என்ற பெயரும், வழித்துணை வந்த நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

    அழகிய தோற்றம் :

    இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் சுவர்கள் உயரமானவை, அழகானவை. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்து பைரவர்கள் பற்றி தனியே ஒரு பதிவு வெளியிடப்படும். இத்தலத்து கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தல மரம் :

    இக்கோவிலில் 108 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும், 1008 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை வழிபடின் ஒரே நேரத்தில் 108 மற்றும் 1008 லிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தின் மரம் பனை மரம். இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பு. தொண்டை மண்டத்தில் பனை மரம் தல விருட்சமாக இருக்கும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று விரிஞ்சிபுரம்.

    மற்றொன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் செய்யாறு என்றழைக்கப்படும் திருவத்திபுரம். பண்டைக் காலத்தில் இத்தலமானது 'நைமி சாரண்யம்' என்றழைக்கப்பட்ட முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. இறைவன் இறைவியிடம், அம்பிகை கறுப்பு நிறமாய் இருப்பதால் 'ஹே சங்கரீ' என விளையாட்டாக அழைக்க இதனால் கோபமுற்ற இறைவி பாலாற்றின் வடகரையில் பொற்பனங்காட்டினுள் ஐந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தாள்.

    அத்தவத்தின் முடிவில் சிம்மகுளத்தில் நீராடி தனது கருமை நிறம் நீங்கி பொன்னிறம் கொண்ட மரகதவல்லியாக இறைவனின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள். இதனால் தான் இத்தலத்து மரம் பனை மரமாக உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற்ற நாள் கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு ஆண்டும் அதே நன்னாள் இரவில் பெண்கள் அம்பிகை, பிரம்மன் ஆகியோர் நீராடிய சிம்ம குளத்தில் நீராடி ஈர ஆடையுடன் கோவில் மண்டபத்தில் படுத்து உறங்குவர்.

    நீராடி ஈர ஆடையுடன் உறங்கும் பெண்களுக்கு எவ்வித குளிரும் தாக்குவது இல்லை என்பது கண்கூடு. இறைவன் இவ்வாறு நீராடிய பெண்களின் கனவில் வந்து பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது திண்ணம். இத்தலத்தின் தீர்த்தம் சிம்ம தீரத்தம் ஆகும். இதில் ஆதிசங்கரர் பீஜாட்சர யந்திரத்தினை அமைத்துள்ளார். இதில் நீராடினால் நீராடுபவர்களை பற்றிய தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை.

    மேலும் ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவனின் பெருமையை உணர்ந்த வட இந்திய மக்கள் இத்தலத்தை கண்டுபிடித்து வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் வணங்கி பயணம் இனிதாக அமைய வேண்ட இறைவன் கண்டிப்பாக வழித்துணையாக வருவான் என்பது திண்ணம்.

    போக்குவரத்து வசதி :

    தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

    பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

    பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இத்தலத்திற்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன.

    • உலக நன்மைக்காக மஹா சண்டி ஹோமம் நடந்தது.
    • சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மணக்குடியில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லநாயகி அம்மன் பொறையான் திருக்கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியாகும்.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் மஹா சண்டி ஹோமம் இதில் தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆலோசணைபடி சுந்தரேச சிவாச்சாரியார், திருக்கடையூர் மகேச குருக்கள் ஆகியோர் மஹா சண்டிஹோமம் பூஜைகள் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அவர்களுக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் குமரக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், மணக்குடி ஊரா ட்சி மன்ற தலைவர் வீரமணி, முன்னாள் தலைவர் வடிவேலு, ஆலவேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித், வள்ளலார் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், மற்றும் வெங்க ட்ராமன், குமார், ரவி, சீனிவாசன், மற்றும் குல தெய்வ குடும்பத்தார்கள், மனக்குடி கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொ ண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இக்கோவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
    • இந்த ஆலயத்தில் பல அற்புத நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    சைவ சமய குரவர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கள் அடியார் திருக்கூட்டங்களோடு பல புண்ணிய தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி வழிபடலாயினர். இவ்வகையில் திருவீழிமிழலை என்னும் பதியில் அருள்மிகு அழகிய மாமுலை அம்மன் உடனுறை வீழிநாதசுவாமியை வழிபடும் காலத்தில் ஈசன் திருவிளையாடல் புரிந்த ஆவண வீதியே தற்பொழுது ஐயன்பேட்டை என்று வழங்கப்படுகிறது. ஐயனே வந்து வியாபாரம் செய்தமையால் ஐயன்பேட்டை என்பதாயிற்று. திருவீழிமிழலை தலவரலாற்றில் இதுபற்றி விரிவாகக் காணலாம்.

    அத்துணைப் புகழ் வாய்ந்த இத்தலத்தின் கீழ்த்திசையில் அருள்மிகு முத்துமாரியம்மன் தனிக்கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறாள். இக்கோவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பரம்பரையாக சைவ வேளாளர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இறைவனார் பரமேஸ்வரன், இறைவி பார்வதிக்கு திருவாய் மலர்ந்தருளிய உபதேசத்தில் பிரமாண்ட கேரள நூல் ஏட்டுச் சுவடியில் இவ்வாலயம்பற்றி நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பன்னெடுங்காலமாகவே இக்குடும்பதினரால் பரம்பரையாக இவ்வாலய வளாகத்தில் விஷக்கடி நிவாரணம், ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் அம்மனின் அருட்சக்தி கொண்டு அளிக்கப்படுகிறது. குறிப்பாக நாய்க்கடி, எலிக்கடி, பூனைக்கடி, மனிதக்கடி மற்றும் அனைத்துவித மிருகங்களின் கடிகளுக்கும், விஷ ஜந்துக்களின் கடிகளுக்கும், விஷக் கடியால் ஏற்படும் தோல் நோய்களுக்கும் எந்தவித பத்தியமும் இல்லாத வகையில் பூரண உடனடி நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை முடிந்தபின், விபூதி, குங்குமப் பிரசாதம், வழங்கிய பிறகு இந்நிவாரணம் செய்யப்படுகிறது. முதலாவதாக ஆன்மிக சத்விஷயங்கள் கூறிய பிறகு மாந்திரீகர் தனது தலை அசைவினாலும், மந்திரக்கோலின் அசைவு கொண்டும் விஷக்கடியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மணி, மந்திர ஔஷதம் என்ற சித்தாமுறையில் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    மனிதர்களுக்கு மட்டுமின்றி மனிதர்களின் வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, நாய், பூணை, குதிரை, கிளி, புறா, கோழி, வாத்து ஆகிய விஷக்கடியால் பாதிக்கப்பட்ட பிராணிகளுக்கும் நிவாரணம் அளிக்கப்படுகிறது. விஷக்கடியால் பாதிக்கபட்ட வெளிநாடு வாழ் அன்பர்களுக்கும் இந்நிவாரணம் தக்கபடி வழங்கப்படுகிறது. இதைத்தவிர திருமணத் தடைகள் அகலவும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கும் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் பூஜை செய்தும் பக்தர்கள் பயன் அடைகிறார்கள். சித்தப்பிரமை, மனநலம் குன்றியோர், நலம் பெறவும் பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து நிவாரணம் பெறவும் சிறந்த பூஜை பிரார்த்தனை செய்து நல்ல பலனை பெறலாம்.

    நித்திய பூஜையும் வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜையும் முறையாக நடைபெறுகின்றன. தை மாதம் மற்றும் ஆடி மாதங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, ஆராதனைகளும், மாலையில் முத்துமாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் செய்வித்து சிறப்பு அன்னதானமும் முறையாக செய்யப்படுகின்றன. அத்துடன் மேற்கூறிய விழாக் காலங்களில் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் குத்து விளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் பல அற்புத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எதிர்பாரத விபத்துகளில் இருந்து தப்புவதற்கான நிகழ்வுகள், இரவு நேரங்களில் வெவ்வேறு வித பூக்களின் மணங்கள் ஆலயத்தில் வீசுகின்றன. இடைவிடாமல் அடிக்கடி ஆலயத்தில் சர்ப்பங்கள் உலாவுவதை காணலாம்.

    ஆலயத்தில் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் விருப்பங்கள் அம்மனின் அருட்சக்தியால் நிறைவேறுகின்றன என்பது கண்கூடு.ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் ஆண்டு திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது ஹோமங்கள், பால்காவடி, பால்குடம், அலகுகாவடியுடன் திருவீதியுலா வந்து முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகமும் 108 சங்காபிஷேகமும், அலங்காரம், பூஜை ஆராதனைகள் நடைபெறும்.

    ஆலயத் தொடர்பு ; 8526739981.

    கும்பகோணம்- பூந்தோட்டம் - காரைக்கால் வழிதடத்திலும், மயிலாடுதுறை - பூந்தோட்டம் - கும்பகோணம் வழித் தடத்திலும் (மருதவஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்கவும்). மயிலாடுதுறை - பூந்தோட்டம் - திருவாரூர் வழித் தடத்தில் பூந்தோடத்திற்கு மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

    ×