search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • 10-வது சீசனில் கின்னஸ் சாதனை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
    • தரை விரிப்பு முதல் நடனக்கலைஞர்களின் காஸ்டியூம் வரை பேப்பர்களால்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இதயங்களை கவரும் வகையில் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடத்தி காட்டினோம் என்று பெருமைப்பட்டாலும் உலக அளவில் கின்னஸ் சாதனையை படைக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அந்த சாதனையை நிகழ்த்துவதற்காக ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு அனுபவித்த வேதனை ஏராளம்.

    இந்நிகழ்ச்சியில் 10-வது சீசனில் கின்னஸ் சாதனை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுவும் 45 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் லைவாக நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அதுவும் வழக்கம்போல சாதாரண மேடையில் அல்ல. இல்யூஷன் அறைக்குள் அந்த காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்த இல்யூஷன் அறை என்பது வித்தியாசமானது. அறை அமைப்பு சாய்வாக இருக்கும். ஒருபக்கம் சிறிய நுழைவாயில் என்றால் இன்னொரு பக்கம் பெரிய அளவில் இருக்கும். ஆனால் கேமிராவில் வரும்போது அறை வித்தியாசமாக தெரியும். ஒற்றையடி பாதையில் செல்வதுபோல் தான் கலைஞர்கள் உள்ளே சென்று ஆட முடியும். இப்படி ஒரு ரவுண்டு கின்னஸ் சாதனை செய்வதற்காக ஏற்றுக்கொண்டாலும் இது முடியுமா? என்ற சந்தேகம் கின்னஸ் குழுவினருக்கு மட்டுமல்ல கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லோருக்குமே ஏற்பட்டது.

    இதற்கான மேடை வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவில் அமைத்து இருந்தோம். கடுமையான பயிற்சி எடுத்து நிகழ்ச்சி தொடங்கும் நாளும் வந்தது. கின்னஸ்சுக்கான நடுவர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஒவ்வொரு நிமிடமும் திக்... திக்... என்றே நகர்ந்துக் கொண்டிருந்தது. ஆனாலும் எல்லோரது கடினமான முயற்சிக்கும் பலன் கிடைத்தது. 45 நிமிடங்கள் சொன்னது போல் லைவாக நிகழ்ச்சியை நடத்தினோம். நடுவர்கள் பார்த்துவிட்டு சாதித்து விட்டீர்கள்... கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துவிட்டீர்கள் என்ற பிறகுதான் எங்களுக்கு நிம்மதியும், சந்தோசமும் வந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நான் கின்னஸ் சாதனை படைத்தேன்.

    ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. 7-வது சீசனில் மிகவும் வித்தியாசமாக முற்றிலும் பேப்பர்களால் மேடையை உருவாக்கியிருந்தோம். தரை விரிப்பு முதல் நடனக்கலைஞர்களின் காஸ்டியூம் வரை பேப்பர்களால்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சீசனின் நிறைவு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. நடிகர் ஜெயம் ரவி கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    கடல் தாண்டி நிறைவு நிகழ்ச்சியை மட்டுமே நடத்திக்கொண்டிருந்த நிலையில் 8-வது சீசனை உலகம் முழுவதிலும் இருந்து கலைஞர்களை தேர்வு செய்து நடத்த திட்டமிட்டோம். அதற்காக மலேசியா, சுவிட்சர்லாந்து மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஜோடிகளை தேர்வு செய்து போட்டியில் பங்கேற்க வைத்தோம். இந்த சீசனின் நிறைவு நிகழ்ச்சியை லண்டன் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் லண்டனுக்கு செல்வதற்கு விசா கிடைப்பதும் ஏற்பாடு செய்வதும் மிகவும் சிரமமாயிற்றே என்றபோது லைக்கா நிறுவனம்தான் இதை நடத்துகிறது.

    அந்த நிறுவனம் எதையும் எளிதாக செய்து முடிக்கும் என்றார்கள். அவர்கள் அப்போதுதான் முதன்முதலில் இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிறைய நடிகர்கள் வரவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்ட தால் நிறைவு நிகழ்ச்சியில் நடிகைகள் நமிதா, குஷ்பு, திரிஷா, சந்தியா மற்றும் பூர்ணா, நடிகர்கள் சிம்பு, கவுதம் கார்த்திக், சிவகார்த்தி கேயன், மிர்ச்சி சிவா, சுந்தர்.சி. என்று மிகப்பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமும், பாடகர் வேல்முருகன் போன்று செலி பிரிட்டிகளும் பஞ்சம் இல்லாத அளவுக்கு பங்கேற்றனர்.

    அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம் மைக்கேல் ஜாக்சன் அரங்கம். 15 ஆயிரம் பேர் அமரும் வகையிலான அந்த அரங்கத்தில் பாதி அளவு அமரும் வகையில்தான் அரங்கத்தை பிரித்து கொடுப்பார்கள். ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த லைக்கா நிறுவனம் முழு அரங்கையும் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எங்களுக்கு தான் பயம். அந்த அளவுக்கு ரசிகர்கள் வரு வார்களா? என்று நினைத்தோம். ஆனால் மாலை 5 மணியளவில் அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்க்கும்போது நாங்களே மிரண்டு போனோம். திருவிழா கூட்டம்போல் அரங்கிற்கு வெளியே ரசிகர்கள் திரண்டிருந்தனர். அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    10-வது சீசனில் முற்றிலும் மாறுபட்ட வகையில் `கிரீன்மேட்' போட்டு கலைஞர்களை ஆட வைத்தோம். சின்னத்திரையில் இப்படி கிரீன்மேட்டில் ஆட வைத்தது மானாட மயிலாட நிகழ்ச்சியில் மட்டும்தான். இந்த சீசனில் நிறைவு நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடந்தது. நடிகர்கள் மறைந்த விவேக் மற்றும் ஜெயராம், சிவக்கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். நிறைவு சீசனான 10-வது சீசனின் நிறைவு விழா கனடாவில் நடத்துவதற்கு அங்கிருந்த தமிழர்கள் ஆர்வப்பட்டனர். மிகவும் தொலைதூர நாடான கனடாவிற்கு சென்று நிகழ்ச்சி நடத்துவதும், அதற்கான ஏற்பாடுகளையும் நினைத்து யோசித்தோம். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு கேட்டுக்கொண்டதால் அங்கே ஏற்பாடு செய்தோம். கனடாவில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், ஹன்சிகாவும் வர வேண்டும் என்று அங்கிருந்த ரசிகர்கள் விரும்பினார்கள். அவர்களும் வந்து ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். காயத்ரி ரகுராம் வர்ணனையாளராக பணியாற்றினார். நடிகை மீனா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் பங்கேற்றார்கள். நயகரா நீர்வீழ்ச்சியில்கூட காட்சிகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி 10 சீசனும் முத்து முத்தான அனுபவங்களோடு மறக்க முடியாத நிகழ்வுகளோடு அரங்கேறியது. இன்றும் அந்த நிகழ்ச்சிகளை வலைதளங்களில் பலர் பொழுதுபோக்கிற்காக கண்டுகளிப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

    • இன்னும் பல சிந்தெடிக் உணவுகள் இப்போது மேற்கத்திய மார்கெட்டில் உலா வருகின்றன.
    • விவசாயிகள் தம் தொழிலை விட்டு நகரங்களுக்குக்குடி பெயர, இந்த உணவுப்பற்றாக்குறை என்னும் பூதம் பெரிதாகிக்கொண்டே வருகிறது.

    சமீபத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரை பலரை பாதித்து இருந்தது. ஒரு டெய்லர் கடையில் காஜா எடுக்கும் இளைஞர் இரண்டே இரண்டு பட்டர் பிஸ்கெட் சாப்பிட்டு "என் மதிய சாப்பாடு முடிஞ்சுட்டுது" என்று சொல்லி வேலையைத்தொடர்ந்த நிகழ்ச்சி ஏழ்மையின் நிலைமையை மனதை வறுத்தும்படி இருந்ததாக பலரால் சொல்லப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் வருத்தத்தைத்தராமல் முன்னேற்றத்தைக்காண்பிக்கும் நிலையை அடைந்து வருகிறோம்!

    "எஸ் ஐ திவாகரன்! உடனே கிளம்புங்க! டி ஐ ஜி கூப்பிடறாரு!"

    "இதோ நான் ரெடிங்க!"

    "என்ன திவா! லஞ்ச் முடிங்க! என்ன ஒரு பத்து நிமிஷம் ஆகப்போவுது! பரவாயில்ல.!"

    திவாகரன் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன குப்பில் இருந்து ஒரு பவுடரை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டு "வாங்க! லஞ்ச் சாப்டாச்சு!" என்று கிளம்பினார்…!

    "என்ன திவா? சாப்டாச்சா?"

    "அமாம் சார்! சாய்லெண்ட் பவுடர்!

    சிந்தெடிக் உணவு!

    உலகத்தின் ஜனத்தொகை பெருகிக்கொண்டே போக வருங்காலத்தில் நம் எல்லோருக்கும் தேவையான உணவை நம்மால் விளைவிக்க முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது! போதாதற்கு விளை நிலங்கள் குறைந்துகொண்டே வர, விவசாயிகள் தம் தொழிலை விட்டு நகரங்களுக்குக்குடி பெயர, இந்த உணவுப்பற்றாக்குறை என்னும் பூதம் பெரிதாகிக்கொண்டே வருகிறது.

    மிகப்பெரிய அரசாங்கங்களும் கம்பெனிகளும் இந்த மாற்று உணவு தயாரிக்கும் கலையில் பல கோடி டாலர்களை முதலீடு செய்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. ரோசா லேப்ஸ் என்னும் கம்பெனியின் சாய்லெண்ட் என்னும் இந்த பவுடர் தண்ணீரில் கலந்துசாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு ஒரு வேளை உணவுக்கான அத்தனை சத்துக்களையும் தந்துவிடுமாம். இது அமெரிக்கா மற்றும் கானடாவில் கடைகளிலேயே கிடைக்கின்றது! இது சம்மந்தமாக சில பாதுகாப்புக்கவலைகள் ஏற்பட்டு கோர்ட் கேஸ் என்று அலைந்தாலும் இவற்றின் கெடுதல்கள் "பயப்படத்தக்க லெவலில் இல்லை என்றுதான் விற்பன்னர்கள் சொல்லியிருக்கிறார்கள். ரோசா லேப்ஸ் மேலும் பல முன்னேற்றங்களைச்செய்து இந்த சிந்தெடிக் உணவை விற்பனை செய்து வருகிறது. இதுபோலவே இன்னும் பல சிந்தெடிக் உணவுகள் இப்போது மேற்கத்திய மார்கெட்டில் உலா வருகின்றன.

    இந்த இயலில் இன்னும் புதுமையான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பியாண்ட் மீட் என்னும் கம்பெனி பல புதுமையான சிந்தெடிக் உணவுகளை கொண்டு வந்திருக்கிறது. பட்டாணி புரோட்டீன், ஈஸ்ட் சாறு, பீட் ரூட் சாறு, தேங்காய்ப்புண்ணாக்கு, ஆம், புண்ணாக்கேதான், ஒரு பர்கர் போல தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு வேளைக்கான சத்துக்கள் நிறைந்தவையாகத் தயாரித்து விற்க பிரயத்தனங்கள் நடந்து வருகின்றன. இன்னொரு கம்பெனி தாவரங்களிலிருந்து பர்கர் வஸ்துவைத் தயாரித்துக்கொடுக்கிறது. இந்தக்கம்பெனியின் பெயர் என்ன தெரியுமா, இம்பாசிபிள் புட்ஸ்!

    மிருகவதை பற்றி நாம் இப்போது அதிகம் கேள்விப்படுகிறோம், படிக்கிறோம், டீவிக்களில் இந்த கழுத்து நரம்பு புடைக்க அரசியல்வாதிகள் வாதாடுவது தினமும் நடக்கிறது! இந்த சமாச்சாரம் இந்தியாவில் மட்டுமில்லை, உலகமெங்குமே நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மிக அதிகமானவர்கள் மிருகவதை தடை செய்யப்படவேண்டும் என்பது உரத்துச்சொல்லி வருகிறார்கள். நீண்ட கால நோக்கில் இந்த இயக்கங்கள் இன்னும் வலிவு பெறக்கூடும் என்பதால் பல நிறுவனங்கள் லாபராட்டரியில் முட்டையும் இரைச்சியும் வளர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்!

    இந்த சிந்தெடிக் உணவின் மிகப்பெரிய குறை ருசி இல்லாத உணவுதான். ருசி இல்லையென்றால் பசி இல்லை! ஆக நமக்கு உணவு என்பது வெறும் சத்துக்களுக்காகவும் உயிர் வளர்க்கவும் மட்டுமில்லையே! ருசி எவ்வளவு முக்கியம் என்பதைச்சொல்லவும் வேண்டுமோ!

    "நம்ம ஆம்பூர் மேலத்தெரு பாய்கடையில சிக்கன் பிரியாணி தருவான் பாரு! அந்த சிக்கனைக்கடிக்கும் போது காரமா ஜூஸ் வாயில் வரும்ப்பா!"

    "நேத்து நம்ம பஞ்சாபகேசன் வீட்டு கல்யாணத்துல ஒரு பதிர்பேணி போட்டானே! என்னமா கரயறதுடா! இன்னி காலம்பர வரைக்கும் நாக்குல டேஸ்ட் போகவே இல்ல!"

    இதில் நாட்டுக்கு நாடு பாகுபாடே கிடையாது! ஸ்டேக்கிலும், பிட்சாவிலும், பாஸ்தாவிலும் வித விதாமான சுவைகள் இருப்பதை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மணிக்கணக்காக பேசுவதையும் கவனிக்கலாம்.

    அதனால் இந்த ஆராய்ச்சியாளர்கள் சுவையையும் பசியையும் தூண்டும் வகையில் இந்த சிந்தெடிக் உணவு தயாரிப்பதில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

    "இந்தாங்க உங்க வேலைக்கான ஆபர் லெட்டர்! நல்லா படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போடுங்க!"

    "என்ன சார் இது! லஞ்ச் அவரே கிடையாதுன்னு போட்டிருக்கே!"

    "ஆமா எங்க கம்பெனியில லஞ்ச்சுக்குனு தனியா டைம் கிடையாது!"

    "எப்படி சார்! ஒரு தயிர் சாதம் சாப்பிடணூம்னா கூட பத்து நிமிஷம் ஆய்டுமே?"

    "எதுக்கு தயிர் சாதம்? எங்க கம்பெனியே லஞ்ச் கொடுத்துடும்!"

    "அப்ப அத சாப்பிட டைம் வேண்டாமா?"

    "எதுக்கு டைம் வேணும்? சாய்லண்ட் பவுடர டம்ளர்ல கலக்கி ஒரே மடக்கு குடிச்சுட்டு வேலையை கண்டின்யூ பண்ண வேண்டியதுதானே!"

    ஒரு பவுடர் பாக்கெட்டை வாயில் போட்டு தண்ணீர் குடித்து "த்ர" என்று சின்ன ஏப்பம்விட்டால் போதும், ஒரு வேளை உணவு முடிந்தது

    நடக்கத்தான்போகிறது!

    • சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்ற இவர் 1967-ல் மறுபடி கறுப்புபணம் படத்தை தானே சொந்தமாக எடுத்து நஷ்டப்பட்டார்.
    • சென்னையில் கவியரசு கண்ணதாசன் உருவச்சிலையும் காரைக்குடியில் மணி மண்டபமும் எழுப்பப்பட்டது.

    பெருந்தலைவர் காமராஜருக்கு பொருந்தமான வாக்கு இது. 'நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று கண்ணதாசனே அறிவித்தார்.

    கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படைப்பதிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்' என்று அவரே விளக்கம் அளித்துள்ளார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் முத்தையா.

    சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் (1927) பிறந்தவர். சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராயணன்' என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வியும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.

    சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.

    சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரியராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

    கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். 'கன்னியின் காதலி' படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

    கலங்காதிருமனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்று கன்னியின் காதலியில் அவர் எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, கண்ணே கலைமானே' கவிஞரின் கடைசிப் பாட்டு.

    எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும். திடீரென்று காணாமல் போய்விடும். பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு' என்பார் அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைத்தான் அப்படி சொல்வார்.

    மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஓட்டல், அபிராமபுரம் கவிதா ஓட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான்.

    வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணியமாட்டார்!

    'கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்' என்பது கவிஞரின் வாக்குமூலம்.

    முத்தான முத்தல்லவோ' பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்த பாடல்... "நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழப்பதில்லை".

    யார் மனிதன் என்றால் மறைந்தும் மக்களின் மனதில் நிற்பவனே மனிதன் என்கிறார். அவர் பாடலின் வைரவரிகள் இதோ.

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

    மக்களின் மனதில் நிற்பவர் யார்?

    மாபெரும் வீரர் மானம் காப்போர்

    சரித்திரம் தனிலே நிற்கின்றார்"

    என்று கூறுகிறார்.

    உலகத் தத்துவங்களை எளிய நடையில் இசையோடு தந்தவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். மனிதன் உண்மை உணர்வு பெற்றுவிட்டால் உலகம் சண்டையற்ற சமாதான வாழ்வில் வெற்றி நடைபோடும். சினிமாத்துறையில் ஏராளமான தத்துவங்களைக்கொண்ட பாடல்களை இயற்றியவர் இவர்.

    "வீடுவரை உறவு வீதிவரை மனைவி

    காடுவரைப் பிள்ளை கடைசிவரை யாரோ!"

    என்ற பாடல் எத்தனைக்கருத்துக்களை உடையதாக உள்ளது. அவரவர் தன் சொந்தக்காலிலேயே நிற்க வேண்டும் என்ற கருத்தை தத்துவ வரியாக

    "யாரை நம்பி நான் பிறந்தேன்

    போங்கடா போங்க

    என் காலம் வெல்லும் வென்ற பின்னே

    வாங்கடா வாங்க"

    என குறிப்பிடுகிறார்.

    "உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு" என்ற வரிகள் வாழ்வின் மிகச்சிறந்த தத்துவ பாடலாகும். இவர் எழுதிய தத்துவ பாடல்கள் காலத்தால் அழியாதவை. இதனால் தான் இவர் அனைவராலும் அதிகம் கொண்டாடப்படுகின்ற சிறந்த கவிஞராக போற்றப்படுகின்றார்.

    வாழ்க்கையினுடைய நிலையற்ற தன்மை, மனிதர்களுடைய எண்ணங்கள், காதல், நட்பு, துரோகம் என வாழ்வில் ஏற்படும் இன்னலான நிலைகளில் மனித மனங்களின் காயங்களுக்கு மருந்து போடும் கைதேர்ந்த வைத்தியர் இவர்.

    இவை அனைத்தும் இவர் கண்ட அனுபவங்களாக தான் இருக்க முடியும் "கடவுள் ஏன் கல்லானார் இந்த பாழாய்போன மனிதர்களாலே" என்று மனித மனங்களின் இழிவு நிலையை அழகாக எழுதியுள்ளார்.

    கண்ணதாசன் அடிக்கடி கேட்ட பாடல், 'திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா என்ற பாடலாகும். தனக்குப்பிடித்த பாடல்களாக, என்னடா பொல்லாத வாழ்க்கை; சம்சாரம் என்பது வீணை" ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

    கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம், நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான் என்பார்.

    'பராசக்தி', 'ரத்தத் திலகம்', 'கருப்புப் பணம்', 'சூரிய காந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கை கொடுக்கவில்லை. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

    மேலே யாரோ எழுதி வைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டுமாம்!. 'இயேசு காவியம்', 'பாண்டமாதேவி' உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த 'கண்ணதாசன் கவிதைகள்', 'அம்பிகை அழகு தரிசனம்' உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் அவர் படைத்தார்.

    (பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது') என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

    வரவும் செலவும் சரியாக இருந்ததே தவிர பெரும்லாபம் கிடைக்கவில்லை. ஆனால் சந்திரபாபுவை அப்போது சிவாஜி கணேசன் வாங்கி வந்த பணத்துக்கு மேல் கொடுத்து கதாநாயகனாக நடிக்க வைத்து இவர் தயாரித்த கவலையில்லாத மனிதன் படம் பெரும் நஷ்டத்தை உண்டாக்கி விட்டது. அதனால் சில வழக்குகளையும் கண்ணதாசன் சந்திக்க நேர்ந்தது.

    இதனால் சொந்தமாக படம் எடுக்ககூடாது என்ற முடிவுக்கு வந்தார் இவர். பட கம்பெனி மூடப்பட்டது. சில காலத்தில் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த கே. முருகேசனுடன் சேர்ந்து வானம்பாடி என்றோர் படத்தை எழுதித் தயாரித்து வெளியிட்டார். படம் வெற்றி பெற்றது. அதில் வந்த லாபம் பழைய கடனை அடைக்க உதவியது. சுமைதாங்கி என்றோர் படத்தை கோவை செழியனோடு சேர்ந்தும் ரத்தத்திலகம் படத்தை பஞ்சு அருணாச்சலத்தோடும் தயாரித்தார். அவையும் வெற்றி பெற்றன.

    சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்ற இவர் 1967-ல் மறுபடி கறுப்புபணம் படத்தை தானே சொந்தமாக எடுத்து நஷ்டப்பட்டார். அதில் இவர் ஒரு பாடல் காட்சியில் நடித்ததும் உண்டு.

    கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, 'வன வாசம்' என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். இவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களாக வெளிவந்தது. 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'குழந்தைக்காக' திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.

    1981 ஜூலையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்க விழாவிலும் கவிஞர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்ள அழைத்திருந்தார்கள். அங்கே சென்ற இவர் நெஞ்சு வலி ஏற்பட்டு சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு மூன்று மாதம் வரை படுக்கையில் இருந்தவர் எந்தச் சிகிச்சையும் பலன் தராத நிலையில் 17.10.1981 -ல் இரவு இந்திய நேரம் 10.45 க்கு மரணமடைந்தார். தமிழக அரசு செலவில் 21 -ந் தேதி அவர் உடல் இங்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது.

    சென்னையில் கவியரசு கண்ணதாசன் உருவச்சிலையும் காரைக்குடியில் மணி மண்டபமும் எழுப்பப்பட்டது.

    கண்ணதாசன் இறப்புக்கு 11 ஆண்டு களுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதி வைத்துக் கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்.

    'ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்

    அவன்பாட்டை எழுந்து பாடு!

    • சிவத்திருத்தலங்களில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
    • தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம்

    சிவபெருமானின் 64 மூர்த்திவடிவங்களில் மிகவும் அற்புதமானது நடராஜர் திருவுருவம் என்று போற்றப்படுகிறது. நடராசர் என்ற சொல்லானது நட + ராசர்> நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. கூத்தன் என்றால், கூத்து எனும்ஆடல்கலையில் வல்லவன் என்று பொருள். பொற்சபை (கனகசபை), வெள்ளிசபை (ரஜிதசபை), தாமிரசபை, ரத்னசபை, சித்ரசபை என்று ஐந்து சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சபைகள் பஞ்சசபைகள் என்று அழைக்கப்படுகின்றன. அம்பலம் என்ற சொல்லிற்கு திறந்தவெளி சபை என்று பொருளாகும். இந்தவகையான அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இவரது நட்சத்திரம் திருவாதிரை. இதுவெப்பமானது. அதற்கேற்ப சிவபெருமானின் கழுத்தில் தங்கிய விஷம், கையில்அக்னி, உடலில் சுடுகாட்டுச் சாம்பல் என உஷ்ணமான திருமேனியனாக இருக்கிறார். பொதுவாக சிவத்திருத்தலங்களில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.

    ஆனிமாதம் உத்திராயண காலத்தின் கடைசி மாதம் ஆகும். இதை தேவர்களின் மாலைப்பொழுது என்பர். ஆனிமாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப்பெருமானுக்கு திருமஞ்சனம் பழங்காலம் முதல் நடக்கிறது.

    நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம். அந்தஅந்தக் காலத்துக்கு ஏற்ப செய்யவேண்டும் என்கின்றன ஆகமவிதிகள். மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திரத்திலும் அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனங்கள் காலங்காலமாக நடைபெறுகின்றன. மனிதநாட்களின் ஓராண்டு என்பது தேவர்களின் கணக்கில் ஒருநாள் ஆகும். பொதுவாக ஒருநாளுக்கு ஆறுகாலத்தில் அபிஷேகங்கள் நடக்கின்றன, ஆனால் மனிதவாழ்நாளில் ஒரு ஆண்டில் ஆறுநாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படுகின்றன.

    சாதாரணமாக, கோவில்களில் தினமும் 6 காலபூஜை நடைபெறும். அதிகாலை திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, இராவுக்காலம், அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜையும் நடைபெறுவது வழக்கம்.

    தேவர்களும் இயக்கத்தை நடத்தி வரும் நடராஜாவுக்கு இதேபோல, தேவருலக கணக்குப்படி தினமும் ஆறுகால பூஜையை நடத்துகின்றனர். அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒருஆண்டு. அவர்களுக்கு ஆடி முதல் மார்கழி வரையுள்ள தட்சிணாயனம், தை முதல் ஆனி வரையான உத்ராயனம் என்ற இருவகை காலப்பிரிவுகள் உண்டு. அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப்பொழுதோ, மாசி மதியம் - சித்திரை ; மாலை - ஆனி; இராக்காலம் - ஆவணி; அர்த்தஜாமம்-எடுத்தும் – புரட்டாசி என்ற வகையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இதனால்தான், தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம். இதை, ஆருத்ரா தரிசனம் என்போம். அடுத்து, மாசிமாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று காலை, 6 மணிக்கும், சித்திரைமாதம் திருவோண நட்சத்திரத்தன்று மதியம், 12 மணிக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, ஆனி உத்திரத்தன்று மாலை, 4 மணியளவில் சிவனுக்குகந்த பிரதோஷவேளையிலும், அடுத்து, ஆவணிவளர்பிறை சதுர்த்தசியன்று இரவு 7 மணிக்கும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு 9 மணிக்கும் சிறப்புதின அபிஷேகம் செய்யப்படுகிறது.

     

    நாம் கொண்டாடும் ஆண்டுக்கணக்கில் தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச்சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் சித்திரை, மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. உத்திரநட்சத்திரத்தில் நடக்கும் தரிசனமாகையால் இந்நாள் ஆனிஉத்திரம் மற்றும் ஆனித்திருமஞ்சனம் எனப்படுகிறது.

    சிவனாரின் ஆனந்தநடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலிமுனிவர் இருவரும் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடனதரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ரமுனிவர்கள், உபமன்யுமுனிவர் என்று அனைவரும் கூடினார்கள். .

    அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும் சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம் குவித்து நின்றனர்.

    நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. இதுவே ஆனித்திருமஞ்சனக் காட்சியாகக் கொண்டு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். தில்லையில் ஆனிமாத உத்திரநட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி பிறமுக்கிய சிவாலயங்களில் பத்து நாள் விழா நடக்கும்.

    பொன்னம்பலமான இச்சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா எனப்படுகிறது. முதல் நாள் கொடி யேற்றத்துடன் துவங்கும் திருவிழாவில் எட்டாம்நாள் வரை உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், மற்றும் உற்சவர்கள் தங்கவாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். காலை 5.30 மணியளவில் சோழர்களின் வாரிசுகளான பிச்சாவரம் ஜமீன்தாரர் குடும்பத்தார் அளிக்கும் மண்டகப்படி மரியாதையை ஏற்கும் நடராஜப்பெருமான், திருத்தேரில் எழுந்தருளி ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் உலாவரும் அதிசயம் நடைபெறும்.

    தேரைத் தொடர்ந்து நடராஜரையும், அன்னைசிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்தநடனம் புரியும் அற்புதக்காட்சி அரங்கேறும். ஆனந்தநடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்த ருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

    திருமஞ்சன தரிசனபலன்

    ஆனித்திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலி களாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும்கிடைக்கிறது, கன்னிப்பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறுகிறது என்று ஆண் களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும், வளமும் கூடும் கருதப்படுகிறது. நாடெல்லாம் நல்லமழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனி உத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பிற்பகல் ஒருமணிக்கு மேல் நடராஜரும், சிவகாமசுந்தரியும் ஆனந்த நடனமாடிய படியே சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும். அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.

    நடராஜப்பெருமானுக்கு ஆனிமாதம் உத்திரநட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித்திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். அன்று சிதம்பரம் கோவிலில் ஆதிமூலவர் சந்திரமவுலீஸ்வரருக்கு ஆறுகாலபூஜைகள் வெகுவிமரிசையாக நடக்கும். அப்போது கனகசபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதுமுடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும்.

    நடராஜரின் இந்த அபிஷேகம் பஞ்சசபைகளான திருவாலங்காடு ரத்தினசபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிரசபை, குற்றாலம் சித்திரசபை இவற்றில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது சிறப்பானது என்பர்.

    ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் பாண்டிநாட்டு கோவில்களில் காணப்பெறுவது போல ஒரேகல்லால் செய்யப் நடராஜருக்குத் திருமஞ்சனமும் நடைபெறும். கோவை பேரூரில் பட்டீஸ்வரர், சுந்தர மூர்த்திசுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் எனவழங்குகிறது.

    சிதம்பரத்தில் ஜூன் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் ஆனித்திரு மஞ்சனவிழா வெள்ளி சந்திரப்பிரபை, தங்க சூர்ய பிரபை, வெள்ளி பூதம்,வெள்ளி ரிஷபம், வெள்ளி யானை, தங்க கைலாசம் ஆகியவற்றில் தினமும் புறப்பாடாகி ஜூன் 24-ந் தேதி தங்க ரதத்தில் பிட்சாடனர் புறப்பாடும், 25-ந் தேதியில் பஞ்சமகா ரதங்கள் புறப்பாடும் நடக்கும். 26-ந் தேதி 10-ம் நாள் 1000 கால் மண்டப ராஜ சபையில் சிவகாம சுந்தரியுடன் ஆனந்த நடராஜ மூர்த்தியும் அபிசேகமும், அலங்காரமும் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடந்து 27-ந் தேதி முத்துப்பல்லக்கு காட்சியும் நடைபெறும். தில்லைக்கு சென்று ஆனந்த நடராஜ மூர்த்தியின் ஆனித்திருமஞ்சன விழாவில் கலந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள். புனிதப்பலன் பெறுவார்கள் .இயலாதவர்கள் எங்கும் நிறைந்தருளும் சிவனை அருகில் உள்ள கோவில்களில் ஸ்ரீநடராஜபெருமான் அபிஷேகம் கண்டுகளித்து வாழ்வில் வளம் பெறலாம்.

    • உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
    • பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    உலகெங்கும் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

    2014-ம்ஆண்டு ஐ.நா.வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படலாம் என்றும் ஒரு ஆண்டில் நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் இந்த நாள் உலகில் உள்ள பல பகுதியினருக்கும் சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ஐ.நா. வில் ஜூன் 21-யோகா தினமாகக் கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    யோக சூத்திரம்: பதஞ்சலி முனிவர் வகுத்த அட்டாங்க யோகம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு அடுக்கு எனப்படும் அட்டாங்க வழியைக் காண்பிக்கும் ஒன்று.

    இதனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், சமுதாய நலனும் மேம்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் உலகெங்கும் யோகா இப்போது நடைமுறைப் பழக்கமாக ஆகிவிட்டது.

    இதற்கென தனி இடமோ அல்லது விசேஷமான சாதனங்களோ தேவை இல்லை. உடலே இதற்கான கருவி. உள்ளமே உயரத்தை எட்டுவதற்கான ஏணி.

    யோகத்தினால் மூச்சை அடக்கிய யோகி:

    உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை வியத்தகு முடிவுகளை அறிவித்துள்ளன.

    மகராஜா ரஞ்சித் சிங் லாகூரை ஆண்டபோது அவருடன் இணைந்து பிரிட்டிஷ் ஜெனரலான சர் கிளாட் வேட் ஒரு சோதனையை நடத்தினார். அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் யோகியான ஹரிதாஸ் என்பவர் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார். 120 நாட்கள் கழித்து குழி தோண்டப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்த போது முன்னர் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே போல அவர் எழுந்து வந்தார். இதைப் பார்த்த அனைவரும் பிரமித்தனர்.

    1986-ம் ஆண்டு பிரிட்டன் ராணுவ ஆய்வு மையம் பிரெனர் மற்றும் கனாலி ஆகிய இரு விஞ்ஞானிகளை மூச்சை அடக்கும் யோகா திறன் பற்றி ஆய்வு செய்ய நியமித்தது.

    'தியானத்தின் மூலமாக மிக அதீத ஓய்வு நிலையைப் பெறுவதால் உடல் இயக்கம் நம்ப முடியாதபடி குறைந்து ஆக்சிஜன் தேவையை வெகுவாகக் குறைக்கிறது. ஆகவே இது சாத்தியமாகிறது' என்று அவர்கள் ஆய்வின் முடிவைக் கூறினர்.

    1927-ம் ஆண்டு பாரீசில் நடந்த பன்னாட்டு அதீத உளவியல் மாநாட்டில் பேராசிரியர் வான் ஷ்ரெங் நாட்ஜிங் முன்னிலை வகிக்க மாநாட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞர் 27 முறை மேலே பறந்து காண்பித்தார். யோகத்தால் வந்த - மிதக்கும் - 'லெவிடேஷன்' சக்தி இது என்று அவர் கூறியபோது அனைவரும் வியந்தனர்.

    யோகம் தரும் பயன்கள்: தியானம் மற்றும் எளிய ஆசனங்கள் எல்லையற்ற பயனைத் தருபவை. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதற்கு ஒதுக்கினால் போதும். நல்ல ஒரு ஆசானிடம் எளிய ஆரம்பப் பயிற்சிகளைக் கற்று ஒருவர் இதில் ஈடுபட்டால் ஏராளமான பயன்களைப் பெறலாம்.


    சில பயன்களின் பட்டியல் இதோ:

    1) பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானம் ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    2) நடத்தையைச் சீராக்கும் மருத்துவ சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது.

    3) மன அழுத்தத்தை இது நீக்குகிறது. நல்ல ஓய்வை உறுதி செய்கிறது.

    4) ஒருவரின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை அவரது லட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.

    5) அனைத்தும் உள்ளடக்கிய முழு மருத்துவத்தைத் தன்னுள்ளே கொண்டது இது.

    6) அகங்காரத்தை நீக்குகிறது.

    7) நிகழ்காலத்தில் வாழ வழி வகுக்கிறது.

    8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் சிறந்த உத்தியாக அமைகிறது இது.

    9) ஆரோக்கியத்திற்கான அற்புதத் திறவுகோல் இது. மாரடைப்பு, கேன்சர், பக்கவாதம் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல் செய்ய உள்ள அற்புத வழி இது.

    10) தியானத்தால் நம்பமுடியாத உடல் ரீதியான சாகசச் செயல்களைச் செய்ய முடியும்.

    11) தியானத்தினால் தானியங்கி நரம்பு மண்டலத்தை நமக்கு உகந்த படி கட்டுப்படுத்த முடியும்.

    12) மன அழுத்தம், மன இறுக்கம் சம்பந்தமான உளவியல் மற்றும் இதர பிரச்சினைகளை நீக்குவதற்கு உதவுவது இது.

    13) மனிதனுக்கு அகண்ட பார்வையைத் தருவது இது.

    14) வேக யுகத்தில் நமக்குள்ள தொழில்நுட்ப கலாசாரத்தின் தீமைகளை எளிதில் அகற்றுவது இது.

    15) மனித வாழ்வின் மாண்புகளையும் மதிப்புகளையும் உணர்த்துவது இது.

    16) நமக்குத் தெரிந்த கலைகளிலேயே மிக எளிதாகக் கற்கக் கூடிய கலை யோகக் கலையே.

    17) நமக்குத் தெரிந்த உத்திகளிலேயே மிக எளிதாகப் பயிற்சியை நடைமுறைக்குக் கொண்டுவருவது இதுவே.

    18) இதைச் செய்ய பணம் தேவை இல்லை.

    19) இதற்கு வயது வரம்பு கிடையாது.

    20) ஆண், பெண் என்ற பால் பாகுபாடு இல்லை.

    21) எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.

    22) தியானத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.

    23) இனம், மதம், நாடு, அந்தஸ்து என்ற பாகுபாடோ பேதமோ இல்லை.

    24) மனதைப் பண்படுத்தி உயரலாம்.

    25) உடலை மேம்படுத்தலாம்.

    26) ஆன்மீக சக்தியை அதிகப்படுத்தலாம்.

    27) மனித குலத்தின் பாரம்பரியத்தின் சிறந்த குணங்கள் தியானத்துடன் சம்பந்தமுள்ளவையாக இருக்கின்றன.

    28) தியானத்தின் போது ஆச்சரியகரமான அற்புத அனுபவங்கள் ஏற்படும்.

    29) நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.

    30) கெட்ட கனவுகள் அகலும்.

    31) இரவில் நல்ல தூக்கம் வரும்.

    32) தாடைகளை இறுக்குதல், முதுகெலும்பு, தோள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும்.

    33) அனைவரையும் கவரும் வண்ணம் எல்லையற்ற அமைதியுடன் எப்போதும் இருக்க முடியும்.

    34) புன்னகை ஒளிர முகத்தில் ஒரு ஒளி தோன்றும்.

    35) வெட்கம் அகலும்.

    36) விளையாட்டு வீரர்கள், கணினி நிபுணர்கள், விஞ்ஞானிகள், பைலட்- என இப்படி எந்தத் துறையினருக்கும் இது பொருந்துவதோடு அவர்களின் திறனை வியத்தகு அளவில் கூட்டும்.

    தலாய்லாமாவின் அழைப்பு: 2000-ம் ஆண்டில் தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளை தியானம் பற்றி அறிவியல் ரீதியாக ஆராய வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் ஒரு யோகியை சோதனைக்கு அனுப்புமாறு வேண்ட அமெரிக்காவிற்கு 30 வயதே ஆன ஒரு யோகியை தலாய்லாமா அனுப்பினார்.

    விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல நியூரோ விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்சன் அந்த யோகியின் மீது சோதனைகளை மேற்கொண்டார்.

    யோகி ஆறு விதமான தியான நிலைகளைச் செய்து காண்பித்தார்.

    மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் மெஷின் (MRI) என்ற நவீன கருவியை உபயோகித்து ஒவ்வொரு தியானத்திலும் லாமாவின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ரிச்சர்ட் ஆராய்ந்தார்.

    ஒவ்வொரு விநாடியும் அந்தச் செயல்பாடுகளை ஸ்கேன் செய்ய முடிந்தது. ஆறு தியான நிலைகளில் 'தயை' என்னும் தியானம் லாமாவின் மூளையில் இடது பக்க பிரண்டள் கைரசின் செயல்பாட்டைக் காண்பித்தன.

    இந்தப் பகுதி தான் ஒரு மனிதனின் சந்தோஷம், உற்சாகம், சக்தி, விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.

    வலதுபக்க பிரிப்ரண்டல் பகுதி ஒருவரின் சோகம், துக்கம், கவலை, ஏக்கம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறிக்கும். 'தயை தியானத்தில்' லாமாவின் மூளைப்பகுதி சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் எல்லையற்ற நலத்தையும் காண்பித்தன. இவற்றைப் பயிற்சி மூலம் பெறலாம் என்பதை இது உறுதிப்படுத்தியது.


    அடுத்த சோதனைத் தொடரை பால் எக்மன் என்னும் விஞ்ஞானி நடத்தினார். முகத்தில் ஏற்படும் நுணுக்கமான முகபாவ வேறுபாடுகளை ஆய்வதில் வல்லவர் அவர்.

    திடீரென ஒரு பயங்கரமான ஓசையை அவர் ஏற்படுத்தி லாமாவைக் கவனித்தார். இந்த சத்தத்திற்கு யாராக இருந்தாலும் திடுக்கிட்டுப் பயப்படாமல் இருக்க முடியாது. ஆனால் லாமாவோ 'ஓபன் ஸ்டேட்' என்னும் தியான நிலையை மேற்கொண்டிருந்ததால் அவர் முகத்தில் எந்த வித பய உணர்ச்சியும் தெரியவில்லை. அவரது இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் சிறிது உயர்ந்தது. எந்த வித அதிர்ச்சி ஏற்பட்டாலும் உடனடியாக சமநிலைக்கு உடனே வர முடியும் என்பதை தியானம் மூலம் அவர் நிரூபித்தார்.

    இப்படி ஏராளமான சோதனைகள் நடந்தன. முடிவுகளை வெளியிட்ட விஞ்ஞானிகள் வியந்தனர்.

    பிரபல உளவியல் இதழான சைக்காலஜி டு டே தொடர்ந்து யோகாவின் சிறந்த பயன்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறது.

    பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன.

    இந்த பத்து நிமிட தியானத்திலேயே தியானம் செய்வோர் அதிக அளவுஆல்பா அலைகளை (ஓய்வான மூளை அலைகள்) வெளியிடுவதையும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதையும் ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமனிகளில் தடிப்பு ஏற்படும் ஆர்தெரோலெரோசீஸ் என்ற வியாதியால் அவதிப்பட்ட அமெரிக்கர்களில் அறுபது பேர் ஆறு முதல் ஒன்பது மாதம் வரை தியானம் செய்ய அவர்களின் தமனிகளில் தடிமன் குறைய ஆரம்பித்தது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

    மகரிஷி மகேஷ் யோகி கற்பித்த ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ஏராளமான அறிவியல் சோதனை முடிவுகள் இரு பாகங்களாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

    கவனத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு தனிமனிதனின் உணர்வில் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு உத்தியே தியானம் என அறிவியல் தியானத்தை வரையறுத்துக் கூறுகிறது. ஆனால் இதைத் தோற்றி வளர்த்துக் காக்கும் இந்து மதமோ, "உடல் ரீதியாக உயர்வது மட்டுமின்றி ஆன்மாவை உணர்வதற்கான கலையே யோகா" என்று கூறுகிறது.

    யோகம் கற்போம்! வளமுடன் வாழ்வோம்!!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • நிகழ்ச்சிக்கு பிரபு தேவா-நயன்தாரா ஜோடியை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருந்தோம்.
    • ஒரு ஜோடி 80 அடி உயர கிரேனில் தொங்கியபடி நடனம் ஆடிக்கொண்டே வந்தது.

    ஒரு நிகழ்ச்சியின் வெற்றி தோல்வி என்பது ரசிகர்களின் ஆதரவை பொறுத்தது என்பது உண்மை. ஆனால் ஒரு நிகழ்ச்சியையே ரசிகர்கள் நடத்தி காட்டினார்கள் என்றால் அது மானாட...மயிலாட... நிகழ்ச்சிதான்.

    மானாட...

    மயிலாட...

    நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் வெற்றிகரமாக அமைந்தது. 5-வது சீசன் நடந்து கொண்டிருந்தபோது இந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகையான துபாயை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர் அந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவை துபாயில் நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.

    நான் அவரை முன்பின் பார்த்ததில்லை. போனில் மட்டுமே பேசி பழகி இருந்தேன். இவ்வளவு பெரிய ரியாலிட்டி ஷோவை வெளி நாட்டில் நடத்துவது சாதாரண விஷய மல்ல. இவர் தெரிந்து தான் பேசுகிறாரா? அல்லது ஆர்வம் மிகுதியால் பேசுகிறாரா என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

    ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. தொடர்ந்து அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு எங்கள் நாட்டில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

    வேறு வழியின்றி அவரை சென்னைக்கு வரவழைத்தோம். சென்னைக்கு வந்ததும் அவரிடம் தெளிவாக கூறினோம். ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்துவது சாதாரண விசயமல்ல. அதற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்புக்கான உபகரணங்கள் எல்லாவற்றையும் கொண்டு வர வேண்டும். அதற்கான செலவுகள், வருபவர்களுடைய செலவுகள் என்று நிறைய செலவாகும். அது உங்களால் முடியுமா? என்றோம்.

    ஒரு வாரத்தில் பதில் சொல்கிறேன் என்று சொன்னவர் மீண்டும் தொடர்பு கொண்டு நாங்கள் நடத்த தயார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. பார்த்துக்கொள்கிறோம் என்றார். அவர் பெண் மருத்துவர். அவர் அவரது தோழிகளுடன் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டார். நாங்களும் அபுதாபிக்கு புறப்பட்டு சென்றோம்.

    அபுதாபி சென்று இறங்கியதும் ஆச்சரியமாக இருந்தது. எந்த பக்கம் திரும்பினாலும் மானாட...மயிலாட... நிகழ்ச்சியின் சுவரொட்டிகள். கடல் கடந்து ஒரு தேசத்தில் நிகழ்ச்சி அரங்கேற போகிறது என்பது மட்டுமல்ல. எங்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அந்த வரவேற்பு சுவரொட்டிகள் அமைந்திருந்தன.

    அபுதாபி நகரில் மையப்பகுதியில் இருந்த பிரமாண்டமான அரங்கம் அது. பல வெளிநாட்டு குழுவினர் படப்பிடிப்புகளை அங்கு நடத்துவதுண்டாம். அங்குள்ள மேடையே வித்தியாசமானது. நடுவில் இருக்கும் ஒரு பிளாட்பாரம். சுற்றிலும் கீழே இறங்கும் வசதியை கொண்டது.

    மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 5 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சி தொடங்கியது. முதல் முதலாக மானாட... மயிலாட... நிகழ்ச்சிக்கு பிரபு தேவா-நயன்தாரா ஜோடியை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருந்தோம். நிகழ்ச்சியை தொடங்கியதும் பிரபுதேவாவையும், நயன்தாராவையும் பாதாளத்தில் இருந்து நடனம் ஆடியபடியே மேலே அழைத்து வருவது போல் அந்த பிளாட்பாரத்தில் மேடையில் கொண்டு நிறுத்தினார்கள். அரங்கமே ஆரவாரம் செய்தது.

    ஏற்கனவே 4 சீசன்களை நடத்தி முடித்திருந்த நாங்கள் இந்த 5-வது சீசனில் சில மாற்றங்களை கொண்டு வந்தோம். அதாவது ஒன்று முதல் 4-வது சீசன் வரை முதல் 3 இடங்களை பிடித்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான ஜோடிகளை மட்டும் வெளியில் இருந்து தேர்வு செய்தோம். அது மட்டுமல்ல அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் நடனம் ஆடுபவர்களுக்கு தேவையான செட்டிங் வசதிகளையும் போட்டியாளர்களே செய்து கொள்ள வேண்டும் என்று கூறினோம். ஏனெனில் சிலர் தங்களுக்கு செட் சரியில்லை என்று குறைபட்டு கொள்ள கூடாது என்பதற்காக அப்படி ஒரு முடிவு செய்தோம்.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.3 லட்சமும் 4-வது சீசன் வரை வழங்கப்பட்டு வந்தது. இந்த 5-வது சீசனில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வீடு பரிசு அளிக்க முன் வந்தது. அதாவது முதல் பரிசு பெறும் ஜோடிகளுக்கு ரூ.40 லட்சம் உள்ள வீடுகளை ஆளுக்கு ஒன்று வீதம் 2 வீடுகளை வழங்கியது. இது போட்டியாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. கடுமையாக முயற்சி எடுத்து சிறப்பாக ஆடவும் வைத்தது.

    ஒரு ஜோடி 80 அடி உயர கிரேனில் தொங்கியபடி நடனம் ஆடிக்கொண்டே வந்தது. மெய்சிலிர்க்க வைக்கும் அந்த காட்சி எங்களுக்கே பயமாக இருந்தது. போட்டியாளர்கள் கீழே விழுந்து எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பயப்பட்டோம். ஆனால் போட்டியாளர்கள் ரிஸ்க் எடுத்து அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.

    ஒரு போட்டியாளர் வாய்க்குள் நிஜ கத்தியை சொருகுவது போன்ற காட்சிக்கு அனுமதி கேட்டார். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். ஏதாவது ஏடாகூடமாக ஆகி அதனால் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த மாதிரி தேவையில்லை என்று மறுத்துவிட்டோம்.

    இந்த சீசனில்தான் நீதிபதி ரம்பா கர்ப்பமானதால் அவருக்கு பதிலாக குஷ்பு நடுவராக இருந்தார். பிருந்தா, குஷ்பு, நமீதா, நான் ஆகிய 4 பேரும் நிரந்தர நடுவர்களாக அமர்ந்தோம். இதில் எனக்கு மட்டும் சிறப்பு நடுவர் என்ற அங்கீகாரமும் தரப்பட்டது. சில போட்டிகளில் ஒரே மதிப்பெண் வரும்போது யாருக்கு கூடுதல் மதிப்பெண் போடலாம் என்பதில் குறிப்பிட்ட மதிப்பெண் போடும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டது.

    போட்டியாளர்களை பொறுத்தவரை 50 மதிப்பெண்கள் நடுவர்கள் மூலமும், மீதம் 50 மதிப்பெண்கள் பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையிலும் வழங்கப்பட்டது. அதன்படி இந்த சீசனில் பாலா-சுவேதா ஜோடி முதல் பரிசு பெற்று ஆளுக்கு ஒரு வீட்டை இலவசமாக பெற்றார்கள்.

    6-வது சீசனில் நடுவர்கள் மாறினார்கள். சுதா சந்திரனும், மும்தாஜூம் நடுவர்களாக வந்தார்கள். குஷ்பு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் நடுவராக வர முடியவில்லை. அதே போல் தான் நமீதாவுக்கும் படப்பிடிப்பு அதிகமாக இருந்தது.

    பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடன நிகழ்ச்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டார். இளைய தலைமுறையினரிடம் இருந்த நடன திறமைகளை வெகுவாக புகழ்ந்து பாராட்டினார். இந்த சீசனின் பரிசளிப்பு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    7-வது சீசனில் மீண்டும் நடுவராக குஷ்புவும், நமீதாவும் இணைந்தனர். இந்த சீசனில் மிகச்சிறந்த பொழுதுபோக்காக கோகுலின் நடன நிகழ்ச்சி அமைந்தது. பரிசளிப்பு விழா மலேசியாவில் நடைபெற்றது. ஜெயம் ரவி பரிசுகளை வழங்கினார். 

    • குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
    • நாம் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை....

    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் சூப்பர் ஹீரோ அப்பாக்கள் தான்.

    ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கிறார்.

    இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என எல்லாவற்றிக்கும் ஒரு தினம் இருக்கையில், தாய்க்கு அடுத்தபடியாக போற்றப்படும் தந்தைக்கு ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3-வது ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

    இந்தியா உள்பட 52 நாடுகளில் இதே தேதியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 'தந்தையர் தினம்' என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

    குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.

    குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை. ஆம், 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! நீ தந்தை ஆகும் வரை, உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது.

    தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு இரண்டு முக்கிய கதைகள் உள்ளன.

    உலகில் முதல் முறையாக தந்தையர் தினம் 1910 ஆண்டு ஜூன் 19-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் இல்லாமல் தந்தையில் அரவணைப்பில் வளர்ந்த பெண் ஒருவர் தந்தையர் தினத்தை தோற்றுவித்தார்.

    சொனாரா ஸ்மார்ட் டாட், அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒரு நாள் அன்னையர் தினத்தை கொண்டாடிய பின், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என நினைத்தார். இவரின் தாய் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் உயிரிழந்துவிட்டார். அதன் பின் ஆறு குழந்தைகளையும் தந்தை பாசத்துடன் வளர்த்தெடுத்தார். இதனால், இவர் தனது தந்தையை கொண்டாட முடிவு செய்தார்.

    முன்னதாக, 1907ம் ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி 362 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1908 ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

    இந்த சம்வபத்திற்குப் பிறகு, சொனாரா ஸ்மார்ட் டாட் என்பவர் தந்தையர் தினத்தை தேசிய நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்தார். உள்ளூர் சமுதாயம் மற்றும் அரசாங்கத்திடம் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என கோரி பலமுறை மனு கொடுத்து வந்தார்.

    இவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வாஷிங்டன் 1910, ஜூன் 19-ந்தேதி முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தந்தையர் தின கொண்டாட்டத்தை நடத்த அனுமதி வழங்கியது.

    கொண்டாடும் முறைகள்:

    தந்தையர் தினத்தை ஒவ்வொருவரும் கொண்டாடும் முறை உள்ளது. இந்த நாளில் பலர் நல்ல உணவை உண்பதற்காக வெளியே செல்கிறார்கள். குழந்தைகள் தங்கள் தந்தைக்கு பரிசுகளை வழங்குவார்கள், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள், அட்டைகள் மற்றும் பூக்களை வழங்குவார்கள்.

    இந்த நாளில், ஒவ்வொரு குழந்தையும் தனது தந்தைக்கு நன்றி செலுத்துகிறது.

    தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பவருக்கும் தாய்க்கு இணையான மரியாதை கிடைக்க வேண்டும்.

    எப்படி அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடுகிறோமோ, அதே போன்று தந்தையின் அன்பை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும்.

    தன் துக்கத்தையும், வேதனையையும் வெளிக்காட்டாமல் தன் கடமைகளை எல்லாம் செய்பவர் தந்தை. அம்மாவுக்குப் பிறகு நம் மனதுக்கு மிக நெருக்கமானவர் என்றால் அது நம் அப்பாதான்.

    தந்தையின் அன்பு அன்னையைப் போல் இல்லை, ஆனால் அப்பாதான் நம்மை உள்ளிருந்து வலிமையாக்குகிறார்.

    உலகில் உள்ள நல்லது கெட்டது பற்றி எங்கள் தந்தை நமக்கு பாடம் நடத்துகிறார். நம் தந்தையின் கை நம் நெற்றியில் இருக்கும் வரை நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

    எப்பொழுதும் துக்கத்தை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்.

    நாம் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

    குடும்பத்தில் சமத்துவத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதில் உங்கள் இருப்பு முக்கியமானது. ஒருவர் வளரும்போது அவரைப் போல இருக்கத் தேவையான பண்புகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தி, தன்னலமற்ற அன்பின் அடையாளமாக திகழும் தந்தைகள் ஒவ்வொருவரும் ஆண்டு முழுவதும் கொண்டாடப் பட வேண்டியவர்கள் தான்.

    • குண்டலம் போன்ற கேசத்தை உடையவள் என்ற பொருளில் அவள் குண்டலகேசி எனக் காரணப் பெயர் பெறுகிறாள்.
    • தெய்வப் பிறவியான ஆண்டாளின் தூய பக்தியைப் புலப்படுத்திய பெருமை அவள் தலைமுடிக்குத் தான் உண்டு.

    முடி நம் ஆன்மிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கு குலதெய்வ சன்னிதியில் மொட்டை போடும் பழக்கம் ஏராளமான இந்துக்களிடம் உண்டு. திருப்பதி, பழனி போன்ற திருத்தலங்களில் நேர்த்திக் கடனாக முடி காணிக்கை செலுத்துபவர்கள் பலரைப் பார்க்க முடியும்.

    நீத்தார் சடங்கு செய்யும்முன் மொட்டை அடித்துக் கொள்வதும் நம் மரபில் உள்ளதுதான்.

    ராமாயணத்தில் சூர்ப்பணகை சீதாப்பிராட்டியைத் தூக்கிச் செல்ல எண்ணு கிறாள். அதற்கான முயற்சியில் அவள் ஈடுபடும்போது கடும் சீற்றமடைகிறான் லட்சுமணன்.

    தன் அண்ணிக்குத் தொல்லை தர முனைந்த சூர்ப்பணகையின் மூக்கை அரிந்துவிடுகிறான். அவள் அழுதுகொண்டே தப்பி ஓடுவதை விவரிக்கிறது கம்ப ராமாயணம்.

    ஓர் அபூர்வ ராமாயணத்தில் இதுதொடர்பாக மேலும் ஒரு செய்தி இருக்கிறது. சூர்ப்பணகை குற்றத்திற்கான முயற்சியில் ஈடுபட்டாளே அன்றிக் குற்றம் நடைபெறவில்லை. சீதையை அவள் எடுத்துச் செல்லவில்லை.

    அப்படியிருக்க அவள் நாசியைத் துண்டிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை. சாதாரணக் குற்றங்களுக்குக் கடும் தண்டனை கொடுப்பது சரியான ராஜநீதி அல்ல.

    சூர்ப்பணகையின் இழந்த மூக்கைப் பார்ப்போர் எல்லாம் அதுபற்றி அவள் வாழ்நாள் முழுவதும் பேசுபவர். அரிந்த மூக்கு ஒருபோதும் வளராது. எனவே, அடுத்தவரின் கேலிப் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் சூர்ப்பணகை மனத்தில் இதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற வஞ்சினம் உருவாகும்.

    `அவளின் பழிவாங்கும் உணர்வு நமக்குப் பல தொல்லைகளைத் தரக்கூடும் லட்சுமணா!` என்கிறாள் சீதாதேவி.

    `அப்படியானால் நான் என்ன தண்டனை கொடுத்திருக்கலாம் என நினைக்கிறீர்கள் அண்ணி?` என்று வினவுகிறான் லட்சுமணன்.

    `நீ அவள் கூந்தலை அரிந்திருக்கலாம். அரியப்பட்ட கூந்தல் காலப் போக்கில் மீண்டும் வளர்ந்துவிடும். அது அவளுக்குத் தற்காலிகத் தண்டனையாக மட்டுமே அமையும். ஆனால் நாசியைத் துண்டித்தது நிரந்தரத் தண்டனையாக அமைந்து விட்டதே?' என சீதை வருந்துவதாகச் சொல்கிறது அந்த ராமாயணம்.

    ராமாயணத்தில் கானகத்திற்குச் செல்வதற்கு முன் ஆலம்பால் மூலம் தங்கள் தலைமுடியை ராமனும் லட்சுமணனும் திரித்து சடையாக்கிக் கொண்ட விவரம் வருகிறது. ராம பட்டாபிஷேகத்திற்கு முன் ராம லட்சுமணர்கள் அந்தச் சடையை நீக்கிக் கொள்கிறார்கள் என்ற தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    *இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் தலைமுடி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. பாஞ்சாலியை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் தலைவிரி கோலமாகக் காட்டுகிறது மகாபாரதம்.

    பஞ்ச பாண்டவர்கள் தங்களைத் தோற்றுத் தன்னையும் வைத்துத் தோற்ற அதர்மமான சூதாட்டத்தின் இறுதியில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பாஞ்சாலி சபதம் செய்யும் காட்சியை பிரமிக்க வைக்கும் வார்த்தைகளில் விவரிக்கிறார் மகாகவி பாரதியார்.

    `பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப்

    பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம்

    மேவி இரண்டும் கலந்தே குழல்

    மீதினில் பூசி நறுநெய் குளித்தே

    சீவிக் குழல்முடிப்பேன் யான் இது

    செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்!`

    துச்சாதனன் துரியோதனன் ஆகியோரின் குருதியைத் தன் கூந்தலில் பூசிக்கொண்டு எண்ணெய் தேய்த்துக் குளித்த பின்னரே கூந்தலை முடிப்பேன் என்றும் அதுவரை தலைவிரி கோலமாகவே இருப்பேன் என்றும் திரெளபதி ஆங்காரத்தோடு சபதமிடும் காட்சி படிப்பவர்களைச் சிலிர்க்கச் செய்கிறது.

    *சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன் `பகீரதப் பிரயத்தனம்` செய்து ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வருகிறான்.

    ஆனால் கடும் வேகத்தோடு வரும் கங்கை நேரடியாக பூமியில் பாய்ந்தால் பூமியே அழிந்துவிடலாம். கங்கையின் வேகத்தை எப்படிக் கட்டுப் படுத்துவது?

    பகீரதன் சிவனைப் பிரார்த்தனை செய்ய சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். அதனால் வேகம் குறைந்த கங்கை பின்னர் பூமிக்குத் தாவுகிறாள் என்கிறது கங்கையின் உற்பத்தியைச் சொல்லும் கதை.

    காளமேகப் புலவருக்கு `குடத்திலே கங்கையடங்கும்` என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டது. அந்த ஈற்றடியில் ஓர் அழகிய நேரிசை வெண்பாவை இயற்றினார் அவர். அதில் கங்கை சிவனின் தலைமுடியில் சிக்கி அடங்கிய கதையை இணைத்துப் பாடினார் :

    `விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

    மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை

    இடத்திலே கொண்ட இறைவனின் ஜடாம

    குடத்திலே கங்கையடங்கும்!`

    *கண்ணனின் பால லீலைகளில் ஒன்று பெண்களின் பின்னலை அவர்கள் அறியாமல் பிடித்து இழுப்பது. அவன் செய்யும் பல குறும்புகளைப் பற்றி எழுதிய பாரதியார், கண்ணன் பாட்டில் `தீராத விளையாட்டுப் பிள்ளை` எனத் தொடங்கும் பாடலில், இதையும் பதிவு செய்கிறார்.

    `பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை

    பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்

    வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி

    வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்'

    *கவரிமா என்னும் விலங்கு அதன் மயிரை நீக்கி விட்டால் உயிர் வாழாது என்றும் அதுபோல் மானத்திற்கு இழுக்கு நேர்ந்தால் சான்றோர் உயிரை விட்டுவிடுவர் என்றும் திருக்குறள் பேசுகிறது.

    `மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

    உயிர்நீப்பர் மானம் வரின்!'

    விலங்குகளின் முடியில் யானை முடிக்குத் தனி மதிப்புண்டு. யானை முடியால் ரட்சை கட்டும் வழக்கம் இருக்கிறது.

    *ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியிலும் கூந்தல் தலையாய இடம் வகிக்கிறது. பத்தரை என்ற அரசகுமாரி ஒரு கள்வனைக் காதலித்து மணந்து கொள்கிறாள்.

    ஒரு சிறிய ஊடலின் மூலம் அவளிடம் பிணக்குக் கொண்ட கணவன், அவளை மலைமேலிருந்து தள்ள முயல்கிறான். ஆனால் எச்சரிக்கை அடைந்த அவள் தன் கணவனைத் தள்ளி விடுகிறாள்.

    காதலித்து மணந்த கணவனைக் கொன்றோமே என்ற கழிவிரக்கம் காரணமாக அவள் சமண மதத்தில் சேர்ந்து துறவினி ஆகிறாள். அவள் முடி மழிக்கப் படுகிறது. என்றாலும் மழிக்கப் பட்ட முடி, மீண்டும் மீண்டும் சுருள்சுருளாக குண்டலம் குண்டலமாக வளர்கிறது.

    அதனால் குண்டலம் போன்ற கேசத்தை உடையவள் என்ற பொருளில் அவள் குண்டலகேசி எனக் காரணப் பெயர் பெறுகிறாள். அந்தப் பெயரே காப்பியத்தின் பெயராகவும் நிலைபெறுகிறது.

    *தெய்வப் பிறவியான ஆண்டாளின் தூய பக்தியைப் புலப்படுத்திய பெருமை அவள் தலைமுடிக்குத் தான் உண்டு.

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி அல்லவா அவள்? ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையைக் கோவிலில் கண்ணனுக்குச் சூட்டும்போது அதில் ஒரு முடி இருந்ததை அறிந்து திகைக்கிறார் பெரியாழ்வார். மாலையில் இருந்த முடி ஆண்டாளின் செய்கையைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

    இனி இவ்விதம் தெய்வத்திற்கென்று தொடுத்த மாலையை அவள் அணியக் கூடாது என ஆண்டாளைக் கடிந்துகொண்ட பெரியாழ்வார் உறங்குகிறார்.

    அவர் கனவில் வருகிறான் கண்ணன். ஆண்டாள் அணிந்த மாலையையே தான் அணிய விரும்புவதாக அறிவிக்கிறான்.

    துளசிச் செடியின் கீழ் தனக்குக் கிடைத்த தன் வளர்ப்பு மகள் ஆண்டாளின் தூய பக்தியை அறிந்து பரவசமடைகிறது பெரியாழ்வாரின் நெஞ்சம்.

    கண்ணன்மேல் பக்திகொண்ட ஆண்டாள், பின்னாளில் திருவரங்கத்தில் கண்ணனோடு ஐக்கியமானதை ஆண்டாளின் திருச்சரிதம் தெரிவிக்கிறது.

    தலையலங்காரத்தில் ஆண்டாள் கொண்டை என்ற தலையலங்காரம் புகழ்பெற்றது. நாட்டியங்களிலும் நாடகங்களிலும் ஆண்டாள் வேடமிடுபவர்கள் அவ்விதத் தலையலங்காரத்தின் மூலம் தோற்றத்தாலேயே தாங்கள் ஆண்டாள் என்பதைப் புலப்படுத்துகிறார்கள்.

    *புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை நாள்தோறும் எழுதிய நாட்குறிப்பு வரலாற்றுப் புகழ்பெற்றது. அதில் ஒரு செய்தி வருகிறது. ஒரு விந்தை மனிதரைப் பார்க்க விரும்பிய துரையையும் துரைசானியையும் அந்த மனிதனிடம் அழைத்துச் செல்கிறார் அவர். அங்கே அவரைப் பார்த்து துரையும் துரைசானியும் வியந்ததாக நாட்குறிப்பு சொல்கிறது.

    அப்படி அந்த மனிதரிடம் தென்பட்ட விந்தைதான் என்ன? அவரது உள்ளங் கைக ளிலும் உள்ளங் கால்களிலும் அடர்த்தியாக முடி முளைத்திருந்தது என எழுதி அந்த அதிசய மனிதரைப் பற்றித் தம் நாட்குறிப்பில் பதிவு செய்கிறார் ஆனந்தரங்கம் பிள்ளை.

    *அடர்த்தியான நீண்ட கூந்தல் பெண்களுக்குத் தனி அழகு சேர்ப்பதாக இலக்கியங்கள் பேசுகின்றன. இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. பெண்களின் கூந்தலைப் பற்றித்தான் இலக்கியங்கள் அதிகம் பேசுகின்றனவே தவிர ஆண்களின் தலைமுடி பற்றி அதிகம் பேசுவதில்லை.

    பெண்களின் தலைமுடிக்கு அழகு சேர்க்கும் பல அணிகலன்கள் பற்றியும் இலக்கியங்கள் குறிப்புத் தருகின்றன. சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை அவற்றில் சில. குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள் பற்றிய விவரங்கள் உண்டு.

    ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் சீதாதேவி தன் தலை அணிகலனான சூடாமணியைத் தான் ராமனுக்குத் தரவேண்டிய அடையாளப் பொருளாக அனுமனிடம் கொடுத்தனுப்புகிறாள்.

    *ஒரு காலத்தில் கணவனை இழந்த கைம்பெண்ணின் தலைமுடியை முற்றிலுமாக நீக்கி மொட்டையடித்து முக்காடு போட்டார்கள். அவள் தோற்றத்தைச் சிதைப்பதே அந்தச் செயலின் நோக்கம்.

    இந்தக் கொடுமையான வழக்கத்தை மாற்ற எழுத்தாளர் கல்கி உள்படப் பலரும் தங்கள் படைப்புகளால் குரல் கொடுத்தார்கள். காலப் போக்கில் அந்தக் கொடூர வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது.

    *நாம் நம் மனத்தை மேம்படச் செய்து நம்மை உயர்த்தும் ஆன்மிகத்தை நம் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறோம் என்றால் அதில் வியப்பில்லையே?

    தொடர்புக்கு-

    thiruppurkrishnan@gmail.com

    • பல ரகசியங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான நட்சத்திரம் தான் திருவாதிரை!
    • ஆறு முகங்களும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகனே தமிழ் தந்த முருகன்.

    நாம் அனைவருமே நட்சத்திர மனிதர்கள் தாம்! நாம் எல்லோரும் நட்சத்திரங்களினாலேயே ஆக்கப்பட்டிருக்கிறோம் - என்ற ஆகப்பெரும் அமெரிக்க இசைக்கலைஞரான மோபியின் பாடல் உலகையே கலக்கி ஆட்டி வைத்தது அனைவரும் அறிந்ததே

    நம் உடலில் உள்ள கார்பன், நைட்ரஜன் அணுக்கள் மற்றும் இதர மூலகங்கள் அனைத்தும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சென்ற தலைமுறை நட்சத்திரங்களினாலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நவீன அறிவியலும் ஒத்துக் கொண்டிருக்கிறது.

    வானில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் தட்ப வெப்ப நிலையையும் , மனிதர்களின் மனோநிலையையும் பாதிக்கிறது என்பதையும் அறிவியல் ஒப்புக் கொண்டுவிட்டது.

    இதே கருத்தை இந்திய நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துக் கூறியது தான் அதிசயம்.

    புவியில் உள்ள மனிதர்களைப் பாதித்து நல்லதையும் கெட்டதையும் நல்கும் 28 நட்சத்திரங்களில் காலப்போக்கில் நமது சுழற்சியிலிருந்து வெளியில் சென்று விட்ட அபிஜத் நட்சத்திரத்தை விட்டு விட்டு மீதியுள்ள அஸ்வினி முதல் ரேவதி முடிய 27 நட்சத்திரங்களை நமக்குப் பலன் தரும் தாரகைகளாக நமது அறநூல்கள் பட்டியலிட்டுள்ளன.

    சங்க காலத் தமிழகத்தில் வானவியல் உச்சகட்டத்தில் இருந்ததை அதில் நாம் காணும் சுமார் 150க்கும் மேற்பட்ட அதிசயிக்கத்தக்க அற்புதமான வெவ்வேறு பாடல்களில் வரும் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. அவைகள் தரும் உண்மைகளோ நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

    இந்தப் பின்புலத்துடன் வானில் ஒளிரும் சில நட்சத்திர ரகசியங்களையும் அதிசயங்களையும் பார்க்கலாமா?

    திருவாதிரை நட்சத்திரம்: 27 நட்சத்திரங்களில் இரண்டே இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு என்ற அடைமொழியைக் கொண்டிருக்கின்றன. அவை திருவாதிரையும் திருவோணமும் தான். திருவாதிரை சிவபிரானுக்கும் திருவோணம் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனுக்கும் உரியது.

    பல ரகசியங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான நட்சத்திரம் தான் திருவாதிரை! பிரம்மாண்டம் என்றால் எப்படிப்பட்ட பிரம்மாண்டம்? இரண்டுகோடியே ஐம்பது லட்சம் சூரியன்களைத் தன்னுள்ளே அடக்கி வைக்கக் கூடிய அளவு அது பெரியது. சூரியனோ பூமியை விட பதிமூன்று லட்சம் மடங்கு பெரியது. அப்படியானால் திருவாதிரை பூமியை விட எத்தனை கோடி மடங்கு பெரியது! கணக்கிட்டுப் பாருங்கள்!!

    பீடல்ஜியஸ் (Betelgeuse) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திருவாதிரையானது, செக்கச் செவேலென்று ஒளிரும் உக்கிரமான ஒரு நட்சத்திரம் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி வர்ணிக்க முடியும்? அமெரிக்காவில் மவுண்ட் வில்சன் ஆப்ஸர்வேடரியிலிருந்து நூறு அங்குல டெலஸ்கோப்பை வைத்து இதைப் பார்க்கும் விஞ்ஞானிகள், "அது ஒளிர்கிறது! பல கோடி சூரியன்கள் ஒன்றாக ஆகி எரிவது போல எரிகிறது" என்கின்றனர்.

    முக்கண்ணன் தனது உக்கிரமான பார்வையினால் மன்மதனை எரித்தான் என்பதை பட்டி தொட்டிகளில் எல்லாம் காலம் காலமாக நாம் கேட்டு வரும் வில்லுப்பாட்டு கூறுகிறது. காம தகனம் கதையைக் கேட்காதோர் இல்லை!

    கடுமையான கோடைகாலம் முடிந்தவுடன் வசந்த காலம் வர காம உணர்வும் எழுகிறது. இந்த உணர்வு எழுவது எப்போது? சூரியன் மறைந்தவுடன் தனுர் ராசிக்குரிய நட்சத்திரங்கள் எழுகின்ற வேளையில் தான்.

    வில்லுடனும் அம்புடனும் குறிக்கப்படுவது இந்த தனுசு ராசி. இந்த ராசிக்குரிய நட்சத்திரங்களே மலர் கணையைத் தொடுக்கும் வில்லுடன் கூடிய மன்மதனைக் குறிக்கிறது.

    கீழ்வானத்தில் அதாவது கிழக்கே திருவாதிரை நட்சத்திரம் எழ மேல் வானத்தில் தனுர் ராசி நட்சத்திரங்கள் மறைகின்றன, ருத்ரனின் பார்வை பட்டு மன்மதன் மறைகிறான்; எரிந்து போவதாகப் புராணங்கள் கூறுகின்றன! எப்போதும் தேவ- அசுர நட்சத்திரங்கள் நேர் எதிரெதிராக 180 டிகிரியில் இருப்பதை நாம் அறிந்தால் மன்மதனின் மறைவு நமக்கு நன்கு புரிய வரும்.

    இதை ரெட் ஜெயண்ட் என்று அனைவரும் புகழ்கின்றனர். எகிப்திய பிரமிடிற்கும் திருவாதிரைக்கும் உள்ள தொடர்பை ஓரியன் மிஸ்ட்ரி உள்ளிட்ட பல ஆங்கில நூல்கள் விவரிக்கின்றன. படித்தால் பிரமிப்பு தான் ஏற்படும்!

    இது 642 ஒளி ஆண்டுகள் தூரத்தில் புவியிலிருந்து இருக்கிறது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஆறு லட்சம் கோடி மைல்கள் ஆகும்!

    விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கைப் போட்டால் ஒரு ஆண்டிற்கான மைல்களாக ஒளி செல்லும் தூரமாக வருவது இது!

    திருவோணம் நட்சத்திரம்: "மூவுலகும் ஈரடியா முறைநிரம்பா வகை முடியத்

    தாவிய சேவடி" கொண்ட திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கேட்கிறார்!

    மகாபலி என்ற அசுரன் இந்திரனுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது கச்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாக மகாவிஷ்ணு புரட்டாசி மாதம் சுக்ல பட்சத்தில் 12ஆம் நாள் அபிஜித் என்ற சுபயோக வேளையில் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். அவர் வாமனனாக குள்ள வடிவம் எடுத்து மகாபலி நடத்திய யாகத்திற்குச் சென்றார். அங்கு மகாபலி அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க மூன்று அடி நிலம் வேண்டும் என்கிறார் வாமனன். உடனே தந்தேன் என்கிறான் மகாபலி.

    தனது முதல் இரு அடிகளால் பூமியையும் ஏனைய அனைத்து உலகங்களையும் அளந்த வாமனன் மூன்றாவது அடி வைக்க இடம் எங்கே என்று கேட்கிறார். அதற்குத் தன் தலையில் அந்த அடியை வைக்குமாறு மகாபலி சொல்ல மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து அவனைப் பாதாள லோகம் சேர்க்கிறார் வாமனனான மகாவிஷ்ணு.

    இது மலையாளத்தில் ஓணம் பண்டிகையாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதை மகாவிஷ்ணு.

    ஆங்கிலத்தில் அக்கிலா எனப்படும் நட்சத்திரத் தொகுதி திருவோணத்தைக் குறிக்கிறது.

    இதன் மேல் பக்கத்தில் மூன்று நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. அது கருடனின் தலைப்பகுதியை உருவாக்கும் மூன்று நட்சத்திரங்களாக ஒளிர்கின்றன.

    இந்த நட்சத்திரத் தொகுதியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பால் வீதி என்பது காசியோபியா நட்சத்திர மண்டலத்தில் ஆரம்பித்து சிரியஸ் நட்சத்திரத்தைத் தாண்டி தென் மண்டலத்தில் போகிறது.

    பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தூரம் இது பரவி இருக்கிறது. இந்தப் பால்வீதி மண்டலத்தைப் பார்த்துப் பிரமித்துப் போன விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷல், "இருண்ட வானத்தில் தங்கத் துகள்களை இரு கைகளாலும் ஒருவன் வாரி இறைத்தது போல பால் வீதி மண்டலம் உள்ளது" என்கிறார்.

    அறிவியல் வியக்கும் இந்தப் பால்வீதியே அனந்தசயனம் அதாவது பாம்பணை! கற்பனைக்கெட்டா தூரம் இந்த லட்சக் கணக்கான நட்சத்திரங்கள் படுக்கை போலப் பரவி இருப்பதை வானில் பார்ப்பதே தனி ஒரு ஆனந்தம் தான்!

    இங்குள்ள முக்கிய நட்சத்திரங்களே குடை விரித்த பாம்பு போலத் தோற்றமளிக்கின்றன! அங்குள்ள வானநடுவரையால் கடக்கப்படும் திருவோண நட்சத்திரமே திருமால் வாமனாக அவதரித்த நட்சத்திரம்.

    கருடனின் உருவத்தில் மூன்று நட்சத்திரங்களாக தலைப்பகுதியில் உள்ளவையே வாமனனின் பாதங்கள். இப்படி புராணத்தையும் அறிவியலையும் இணைக்கும் அற்புத நட்சத்திரமே திருவோணம்.

    இந்த நட்சத்திர விசித்திரத்தைப் பார்த்த குலசேகரத்தாழ்வார், "மாதவனை வணங்குகிறேன். எவருடைய நட்சத்திர வடிவமானது குளிர்ந்த அலைகளையுடைய பாற்கடல் போலப் பரந்திருக்க, அதன் நடுவே பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறதோ அந்த மாதவனை வணங்குகிறேன்" என்கிறார். - முகுந்தமாலை செய்யுள் 39)

    கந்தனை வளர்த்த கார்த்திகை!: தமிழர் தம் தனிப்பெரும் தெய்வம் முருகன். முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆறு முகங்களும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகனே தமிழ் தந்த முருகன்.

    கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி ஆகிய ஆறு நட்சத்திரங்களே அவைகள்!

    கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி. கிருத்திகா என்றால் வெட்டும் கருவி என்று பொருள். தீ நாக்குப் போலத் தோற்றம் அளிப்பவை இந்த ஆறு நட்சத்திரங்களூம்.

    பிளையாடிஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இந்த நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனம் ஆகும் நாட்களே வருடத்தில் மிகவும் உஷ்ணமான நாட்கள். இதை கார்த்தி நாட்கள் என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகிறோம்.

    சூரியனுக்கே இப்படி கூட்டு சேர்க்கையாலேயே அதிக வெப்பம் தரும் இதன் உண்மையான உஷ்ணம் எப்படி இருக்கும்? கற்பனை செய்ய வேண்டியது தான்.

    அழுக்குகளையும் பொய்யையும் சுட்டுப் பொசுக்கும் இந்த நட்சத்திரம் ஒளி, தீபம் ஆகியவற்றுடன் இணைத்துப் பேசப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாள் வாழ்வில் ஒளிமயமான ஏற்றத்தைக் குறிக்கும் நாள்!

    சங்க இலக்கியத்தில் தனியொரு இடத்தை இந்த நட்சத்திரம் பெறுகிறது.

    அகஸ்திய நட்சத்திரம்: கானோபஸ் என்று மேலை நாட்டினரால் குறிப்பிடப்படும் அகத்திய நட்சத்திரம் எப்போதெல்லாம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு பூ மலரும். அதுவே அகத்திப்பூ. அந்தக் கீரையே அகத்திக் கீரை.

    "தூய கடல் நீரை முழுது உண்டு அது துரந்தான்" என்று கவிச்சக்கரவர்த்தி கம்பனால் வர்ணிக்கப்படும் அகத்தியர் தெற்கு வான மண்டலத்தில் தெரியும் நட்சத்திரம்.

    சூரியன் சிம்ம ராசியில் மறையும் போது கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இதைக் கண்ட நமது முன்னோர் அவருக்கு கும்ப முனி என்ற பெயரை இட்டனர்.அகத்தியர் தோன்றியவுடன் சரியாக மழைக்காலம் முடிகிறது. ஆகவே தான் மழைக்காலம் நீங்கிய உடனேயே தோன்றும் அகத்தியர் நீரைக் குடித்து விட்டார் என்ற வழக்கு வந்தது. இன்னொரு அறிவியல் கூற்றுப்படி எப்போதெல்லாம் அகத்திய நட்சத்திரம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் கடல் நீர் கூடுதலாக வற்றுகிறது.

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • மிகவும் பிசியாக இருந்த சிம்புவுக்கு கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • சிம்பு வருவாரா? வரமாட்டாரா என்று எங்களுக்கு திக்...திக்... என்று இருந்தது.

    பிரமாண்டம்... வித்தியாசம்...

    இதுதான் மானாட மயிலாட ஷோவின் அடிப்படையாக அமைந்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் அப்படித்தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கவும் செய்தார்கள்.

    மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டாத அந்த காலத்திலும் பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி பிரமாண்டங்களையும், வித்தியாசங்களையும் மேடையில் உருவாக்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினோம்.

    ஒவ்வொரு சீசனிலும் அமைக்கப்பட்ட காட்சிகளை விட அடுத்து வரும் சீசன் அதைவிட பிரமாண்டமாக அமைய வேண்டும் என்ற நிர்பந்தம் இயற்கையாகவே ஏற்பட்டது.

    கடந்த சீசனில் இந்தமாதிரி காட்சிகளை அமைத்திருந்தோம். அடுத்து வரும் சீசனில் என்னென்ன புதுமைகளை புகுத்தலாம் என்ற எண்ணம்தான் எப்போதும் எங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். 3 சீசன்களை நிறைவு செய்துவிட்டோம். 4-வது சீசன் தொடங்கியது. இந்த சீசனிலும் அறிமுகம் இல்லாத புதுமுகங்கள் பலரை தேர்வு செய்து ஜோடிகளாக உருவாக்கினோம்.

    அவர்களில் எந்த ஜோடியும் சோடை போகவில்லை என்ற ரீதியில் போட்டிப்போட்டு அவ்வளவு அற்புதமாக ஆடினார்கள். பொதுவாக ஒருவர் நன்றாக டான்ஸ் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் எங்களிடம் குறுகிய காலத்திலேயே பயிற்சி எடுத்துக்கொண்டு கைதேர்ந்த நடன கலைஞர்கள் போல் ஆடியது எங்களையே பிரமிக்க வைத்தது.

    4-வது சீசனில் கோகுல்-நீபா, லோகேஷ்-ஸ்வேதா, கிரண்-பூஜா, மகேஷ்-பிரியதர்ஷினி, ரகுமான்-நிகிதா, குமரன்-அப்சரா, கார்த்திக்-சவுந்தர்யா, கிரண்-ஸ்ரீதேவி என்று எல்லா ஜோடிகளுமே ரசிகர்களை கவர்ந்த ஜோடிகள்தான். மேலும் இந்த சீசனில் இருந்துதான் போட்டியாளர்களை தேர்வு செய்யும் முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தோம். அதாவது போட்டிக்கு நடுவராக இருப்பவர்கள் போடும் மதிப்பெண்ணில் 50 சதவீதம் வாங்குபவர்களும், அதேபோல் ரசிகர்களின் வாக்குகளில் 50 சதவீதம் வாங்குபவர்களும் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். ரசிகர்களையும் பங்கெடுக்க வைத்தது நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

    இதனால் ஒருதொய்வு நீங்கி பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சீசனில் வித்தியாசமான போட்டியாளர்களாக இருந்தவர்கள் மனோவும், சுகுமாரும். மனோ மிமிக்கிரியில் கில்லாடி. இவர்கள் இருவரும் தான் மேடையை களை கட்ட வைப்பார்கள்.

    மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர்தான் தற்போது சின்னத்திரையில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் குமரன். இவரும் மிகச்சிறந்த டான்சராக இருந்து சின்னத்திரைக்குள் புகுந்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இந்த சீசனில் கிராபிக்ஸ் சுற்று என்ற புதிய சுற்றை அறிமுகப்படுத்தினார்.

    பின்னணியில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பின்னணியில் மேடை அமைப்பு கச்சிதமாகவும், பார்க்க பிரமாண்டமாகவும் இருக்கும். அதில் போட்டியாளர்களின் நடனம் இடம் பெறும். அது ஒரு ரியல் ஷோ போல் காட்சி அளிக்கும் ரசிகர்களின் நாடித்துடிப்பு பார்த்து அவர்களின் ரசனைக்கு ஏற்ப என்னால் இப்படி புதுமையாக காட்சிகளை அமைக்க முடிந்தது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் நிகழ்ச்சியை தயாரிப்பதில் எந்த தலையீடும் இல்லாதது தான்.

    நான் காட்சியை பற்றியும், இந்த இந்த மேடைகள் அமைக்க போகிறோம் என்றும் சொல்வேன். அவ்வளவுதான். என் விருப்பப்படி அமைத்துக்கொள்ள சொல்வார்கள். அதனால்தான் என்னால் அந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது.

    4-வது சீசனில் நான், குஷ்பு, நமீதா ஆகியோர் நடுவர்களாக இருந்தோம். எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை காட்சியாக அமைப்பேன். அது ரசிகர்களையும் கவரும். எனது கற்பனை என்பது நான் ரசிகர்களை நேரில் பார்க்கும் போது அவர்களது ரியாக்ஷனை பார்த்துதான் வரும்.

    உதாரணத்துக்கு ஒரு குதிரையில் இருந்தபடி "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற பாடலுக்கு ஒரு ஜோடி ஆடியது. அதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆட்டம்? எப்படி இருக்கிறது என்றனர். அவர்கள் எப்படிபட்ட ரசனை படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப காட்சிகளையும், ஷெட் அமைப்புகளையும் கொண்டு வந்தேன்.

    இந்த காலக்கட்டத்தில் எவ்வளவோ ரியால்டி ஷோக்கள் நடக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மானாட... மயிலாட...தான் அடிப்படை என்பதில் எனக்கு பெருமை.

    சின்ன வயதில் எனக்கு படிப்பு வராது. ஆனால் ஆசிரியர் வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு வேளை இந்த துறைக்கு வந்திருக்காவிட்டால் ஆசிரியர் வேலைக்கு போயிருப்பேன்.

    எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு கிரியேட்டிவிட்டி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது எப்படி சாத்தியமாகும். மிகவும் சிரமமாயிற்றே என்றெல்லாம் நினைக்க மாட்டேன். எவ்வளவு சிரமப்பட்டாலும் சரி அதை உருவாக்கியே தீருவேன். அதுதான் ஒவ்வொரு நிகழ்ச்சியின் வெற்றிக்கும் காரணமாக இதுவரை இருந்து வருகிறது.

    ரியாலிட்டி ஷோக்களில் வெள்ளித்திரையை விட பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டது எல்லோராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இந்த சீசனில் விமான நிலையம் போன்ற மேடையை அமைத்திருந்தோம். மேடை வடிவமைப்பாளர் தோட்டா தரணி அதை அமைத்து தந்தார். விமானம் நிற்பதுபோலவும், விமான நிலையத்தின் டிராலிகள் ஆங்காங்கே நிற்பது போலவும் இருந்த அந்த காட்சி விமானநிலையத்தையே கண்முன் கொண்டு வந்தது.

    இந்த சீசனில் கோகுல்-நீபா முதல் பரிசையும், அனீஷ்-கவிதா 2-வது பரிசையும், லோகேஷ்-தர்ஷியா 3-வது பரிசையும் பெற்றிருந்தார்கள்.

    பரிசளிப்புவிழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது. பரிசளிக்க சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு அழைக்கப்பட்டார். அந்த காலக்கட்டத்தில் மிகவும் பிசியாக இருந்த சிம்புவுக்கு கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    அக்கா...நான் வருவதில் சிரமமாக இருக்கிறது என்று அவர் சொன்னதும் எப்படியாவது வரப்பாருங்கள் என்று சொல்லி இருந்தோம். நிகழ்ச்சி தொடங்கியது. சிம்பு வருவாரா? வரமாட்டாரா என்று எங்களுக்கு திக்...திக்... என்று இருந்தது.

    இரவு 8 மணி அளவில் அவசர அவசரமாக வந்து சேர்ந்தார். அதன்பிறகுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது. அனைவருக்கும் அவர் தான் பரிசை வழங்கினார்.

    தமிழகத்தில் சக்கைபோடு போட்ட மானாட மயிலாட முதல்முறையாக வெளி நாடுகளுக்கு பயணப்பட்டது. அதுபற்றிய தகவல்களுடன் அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன்.

    நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


    காங்கிரஸ்... ஒரு காலத்தில் நாடு முழுவதும் எல்லோருக்கும் தெரிந்த ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் தான் என்பது மிகை ஆகாது.

    நான் சிறுமியாக இருந்த போதே மும்பையில் காங்கிரஸ் கொடியை கையில் பிடித்தபடி அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். மாணவ பருவத்தில் காங்கிரசை பற்றி ஓரளவு அறிந்து கொண்டேன். நாட்டுக்காக போராடிய கட்சி நல்ல பல தலைவர்கள் இருந்த கட்சி என்றெல்லாம் அறிந்தேன்.

    அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தில் தான் தி.மு.கவில் இணைந்து எனது அரசியல் பயணத்தை தொடங்கினேன். சுமார் 10 ஆண்டுகள் அந்த கட்சியில் இருந்து அரசியலை ஓரளவு புரிந்தும் கொண்டேன்.

    தி.மு.கவை விட்டு வெளியேறினாலும் அரசியல் ஆர்வம் மட்டும் என்னை விட்டு வெளியேறவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதனால் தான் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் குறையாமல் இருந்தது.

    ஆர்வம் இருந்தது. ஆனால் எந்த கட்சியில் இணைவது என்று தெரியவில்லை. அப்போது தான் காங்கிரஸ் கட்சியை பற்றி யோசிக்க தொடங்கினேன். நல்ல தலைவர்கள் இருந்த கட்சி என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியில் சேருவது என்று தீர்மானித்தேன்.

    எனது எண்ணப்படியே காங்கிரசிலும் இணைந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த காங்கிரஸ் இப்போது இல்லை என்பதை உள்ளே சென்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

     

    குஷ்பு, சோனியா காந்தி

    அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவியை சோனியா காந்தி வழங்கினார். அந்த பதவிக்கு எந்த குறையும் வைக்காமல் மனநிறைவோடு உழைக்கவும் செய்தேன்.

    ஆனால் நான் முதலிலேயே குறிப்பிட்டது போல் காங்கிரஸ் முந்தைய காங்கிரஸ் போல் இல்லை என்பதால் பலர் கட்சியை விட்டு விலகி கொண்டிருந்தார்கள்.

    நான் தாக்கு பிடிக்கலாம் என்று நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த ‘கை’ என்னையும் கைவிட்டது. காங்கிரசில் இருந்து விலகு வதை தவிர வழிஇல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

    அதற்கு காரணம் தலைமையை மட்டும் குறை சொல்ல முடியாது. சோனியா மீதான மரியாதை தனியானது. ஆனால் அரசியல் ரீதியாக அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

    ஒரு அரசியல் இயக்கத்திற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த தலைவர் இருந்தால் தான் கட்சியினருக்கு பயம் இருக்கும். ஆனால் காங்கிரசில் ஆளாளுக்கு முடிவு எடுக்கிறார்கள். 10 தலைவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முடிவை எடுக்கிறார்கள்.

    அதனால் தான் கட்சி பலவீனம் அடைகிறது. கட்சிக்கு வேலை செய்பவர்களை விட சுற்றி இருக்கும் 10 பேரை சமாளிப்பதே பெரிய வேலை. பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    நான் காங்கிரசில் இருந்து வெளியேற டெல்லி தலைவர்கள் காரணம் அல்ல. தமிழ் நாட்டில் காங்கிரசுக்குள் எத்தனை கோஷ்டிகள்...? என்பதை எல்லோரும் அறிவார்கள்.

    ஒருவரை ஒருவர் ஓரம் கட்டுவது எப்படி? என்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர கட்சி வளர்ப்பில் ஆர்வம் காட்டவில்லை. தலைவர்களை தாஜா செய்தால் தான் பதவி கிடைக்கும் என்ற பரிதாப நிலை. இந்த நிலை எப்போதும் மாறப்போவதும் இல்லை.

    குஷ்புவுக்கு பெயர், புகழ், பணம் அரசியலை வைத்து தான் சம்பாதிக்க வேண்டுமா? ரசிகர்கள் கோவில்கட்டும் அளவுக்கு புகழும் பெற்று விட்டேன். ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட காலத்தையும் சந்தித்தவள் நான். இப்போது தேவையான அளவுக்கு பணமும் சம்பாதித்து விட்டேன்.

    கட்சிக்கூட்டங்களுக்கு நான் பேசுவதற்கு சென்றால் கூட்டம் கூடுகிறது. எனக்கு தான் பத்திரிக்கைகளும் முக்கியத்துவம் தருகின்றன என்ற பொறாமை குணம் அங்கு உருவானது. இதற்கு நான் என்ன செய்வேன்? இந்த ஒரே காரணத்தால் தான் என்னை ஓரம் கட்ட தொடங்கினார்கள்.

    கூட்டங்களுக்கு அழைப்பு கொடுப்பதை கூட தவிர்த்தார்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் தலைவராக இருந்த போது தான் காங்கிரசில் சேர்ந்தேன்.

    அவரை பொறுத்த வரை ஈகோ பார்க்க மாட்டார். பொதுக்கூட்டங்களில் பேசும் போது அவர் முதலில் பேசி விட்டு என்னை கடைசியில் பேச வைப்பார். அப்போது தான் கூட்டம் இருக்கும் என்பார். அதில் எந்த கவுரவமும் பார்க்க மாட்டார்.

    ஒரு முறை ஒரு கூட்டத்துக்கு போகும் போது வேறொரு தலைவர் வந்தார். அவர் முறைப்படி நான் தான் கடைசியில் பேசுவேன் என்றார். ஈ.வி.கே.எஸ். எவ்வளவோ சொல்லி பார்த்தார். அவர் கேட்க வில்லை.

    அவர் சொன்ன படி நான் முதலில் பேசினேன். நான் பேசி முடித்ததும் மொத்த கூட்டமும் கலைந்து சென்று விட்டது.

    இது தான் காங்கிரஸ் கட்சியின் நிலை. யாரை எப்படி பயன்படுத்தி கொள்வது என்று யோசிக்க மாட்டார்கள். தங்கள் கவுரவத்தை மட்டுமே பார்ப்பார்கள்.

    அடிமட்ட தொண்டர்களும், பல நிர்வாகிகளும் என்னிடம் அன்பு காட்டினார்கள். என்னை வைத்து தங்கள் அரசியலை பலப்படுத்தி கொண்டார்கள். ஆனால் உயர்மட்ட தலைவர்கள் தங்களுக்கு பலவீனமாகி விடும் என்ற தவறான எண்ணத்தால் என்னை ஓரம் கட்டினார்கள்.

    அரசியலில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த என்னால் வேலை செய்யாமல் எத்தனை நாள் இருக்க முடியும்?

    அரசியல் இப்படித்தான்...! இதற்குள் இருந்து போராடி தான் நாம் எதிர்பார்ப்பதை சாதிக்க முடியும் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை.

    உழைப்புக்கும், திறமைக்கும் ஏற்ற மரியாதை கிடைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவள் நான்.

    அரசியலுக்கு இழுத்த கழுதை போராட்டம்

    நான் அரசியலுக்கு வராத காலம். ஆனால் பொதுவாக வெளிவரும் கருத்துகளுக்கு என் மனதில் படும் பதிலை எதை பற்றியும் யோசிக்காமல் பட்டென்று சொல்லி விடுவேன்.

    இப்போது நாம் இந்த கட்சியில் இருக்கிறோம். எனவே இதை சொல்லக் கூடாது என்றெல்லாம் நினைப்பதில்லை. என் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை உடனே சொல்லிவிடுவேன். இதனால் தான் சில நேரங்களில் சிலரது எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வருகிறது.

    அப்படி தான் 2005-ல் நான் அரசியலுக்கு வராத அந்த காலகட்டத்தில் நான் சொன்ன ஒரு கருத்துக்காக என் மீது சிலர் பொங்கி எழுந்து விட்டார்கள். எனக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களையும் நடத்தினார்கள்.

    என் வீட்டுக்கு கழுதையுடன் ஊர்வலமாக வந்து வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அப்போது நான் வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த எனது குழந்தைகள் வீட்டிற்கு வெளியே கழுதை, கையில் துடைப்பகட்டையுடன் ஆவேசமாக அர்ச்சனை செய்து கொண்டிருந்தவர்களை பார்த்து பயந்து நடுங்கி இருக்கிறார்கள்.

    நான் வீடு திரும்பியதும் என் குழந்தைகள் ‘அம்மா... ஏம்மா உன்னை இப்படி எல்லாம் திட்டுறாங்க... பயமா இருக்கும்மா’ என்று அழுதார்கள்.

    இந்த சம்பவமும் நான் அரசியலில் ஈடு படுவதற்கு ஒரு காரணமாக இருந்தது.

     ttk200@gmail.com

    எல்லா பிறந்த குழந்தைகளுமே டாக்டர், நர்சு, சுற்றுப்புற சூழ்நிலை இவற்றில் இருந்து நுண்ணுயிர்களை பெறுகின்றது.


    நம்மில் பலருக்கு ஒரு வழக்கம் உள்ளது. அது தன்னைத்தானே பரிதாபப்படுத்திக் கொண்டு பேசும் ஒரு வழக்கம் ஆகும். எனக்கு யாருமே இல்லை. எல்லா உறவுகள் இருந்தும் நான் யாரும் இல்லாதவனாகவே இருக்கிறேன் என விவரித்து தானே கண்ணீர் விட்டு பரிதாபப்பட்டுக் கொள்வர். இவர்களுக்கெல்லாம் மருத்துவ ரீதியாக ஒன்று சொல்லப்பட வேண்டும். ஒவ்வொரு நபரும் ஏராளமான பல மில்லியன் நுண்ணுயிர்களை உடலில் சுமந்தே வாழ்கின்றனர். இவ்வளவு நுண்ணுயிர்களை கூட வைத்துக்கொண்டு எனக்கு யாருமே இல்லை என இனிமேல் சொல்லக்கூடாது அல்லவா!

    நாம் நுண்ணுயிர்களால் சூழப்பட்டும், உடலில் அதை சுமந்து கொண்டும் தான் வாழ்கின்றோம். இவைகளை நாம் சாதாரண கண் பார்வை கொண்டு காண முடியாது. ஒரு நுண்ணுயிர் கூர்மையான பென்சில் நுனியினை விட ஆயிரம் மடங்கு சிறியவை. பல வகை வடிவம் கொண்டவை. அதிக சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப் மூலமாகவே இதனை காண முடியும். இவை மண், ஆறு, செடி, கொடிகள், விலங்கினங்கள், குழாய் நீர், அன்றாடம் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீ போர்ட், படுக்கை, நம் உடல் என எங்கும் பரந்து விரிந்துள்ளன. வாழ்கின்றன. நம் உடலில் உள்ள செல்களை காட்டிலும் இந்த நுண்ணுயிர்கள் அதிகம் என்றால் அவைகளின் எண்ணிக்கையினை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நுண்ணுயிர்களை பாக்டீரியாக்கள் என்ற வகையில் குறிப்பிடுகின்றோம். ஏன் இவை நம்மோடு இருக்கின்றன.

    நமது சருமம், மூக்கினுள், வாய், தொண்டை, உணவுப் பாதை, பெண் பிறப்புறுப்பு இவற்றில் இவை நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்கின்றன. அதிகமாக இந்த பாக்டீரியா நுண்ணுயிர்கள் குடலில் உள்ளன. அநேகமாக இவை பாதிப்பினை கொடுப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்டால் கிருமி பாதிப்பு, நோய் பாதிப்பு என்று கூறுகின்றோம்.

    பிறக்கும் பொழுதே நாம் இந்த நுண்ணுயிர்களை கையோடு கூட்டிக் கொண்டுதான் வருகின்றோம். குழந்தையாக பிறக்கும் பொழுது தாயின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளியே வரும் பொழுது அம்மாவிடம் இருந்து இந்த நுண்ணுயிர்களை குழந்தைகள் பெற்று விடுகின்றன. அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் தாயின் சருமம் மூலமும் நுண்ணுயிர்களை பெற முடியும்.

    குழந்தை இயற்கை முறையில் பிறக்கும் பொழுது தாயின் பிறப்பு பாதையில் இருந்து லாக்டோபேசிலி என்ற நல்ல நுண்ணுயிரினை பெற்றுக் கொள்கின்றது. இது குழந்தையின் பால் செரிமானத்திற்கு நன்கு உதவுவதால் குழந்தையின் ஆரோக்கியம் வலுப்பெறுகின்றது. அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தை தாயின் சருமம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை இவற்றின் மூலம் இந்த நுண்ணுயிர்களை பெறுகின்றது.

    எல்லா பிறந்த குழந்தைகளுமே டாக்டர், நர்சு, சுற்றுப்புற சூழ்நிலை இவற்றில் இருந்து நுண்ணுயிர்களை பெறுகின்றது. தாய்பால் அருந்தும் குழந்தை தாயின் சருமத்தில் இருந்து நல்ல நுண்ணுயிரினை பெறுவது குழந்தைக்கு ஆரோக்கியத்தினை நிறையவே கொடுக்கின்றது. இவை எல்லாம் இறைவன் செயல் அல்லது இயற்கை செயல் என எப்படி எடுத்துக் கொண்டாலும் நாம் பெறும் ஆரோக்கிய கிடங்குகள். மேலும் தாய்பால் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக மட்டுமே இறைவன் கொடுத்த கருணை. பின் வளர்ந்து வரும் குழந்தை உணவின் மூலமும் நுண்ணுயிர்களை பெறுகின்றது. பாக்டீரியா, நுண்ணுயிர் என்றாலே நாம் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கெட்ட அல்லது தீய பாக்டீரியாக்களை மட்டுமே நினைக்கின்றோம்.

    உண்மையில் நம் சருமம் மூக்கு, தொண்டை என பல பகுதிகளில் இருக்கும் அநேக நுண்ணுயிர்கள் தீய பாக்டீரியாக்கள் உள் நுழைவதனை எதிர்த்துப் போராடுகின்றன. தீய நுண்ணுயிர்களை நாம் நோய் கிருமிகள் என்கின்றோம். தீய கிருமிகள் நம்மை தாக்க முயற்சிப்பதும் அதை நல்ல கிருமிகள் தடுக்க முயல்வதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. சுகாதாரம், நல்ல உணவு, மருந்துகள் இவற்றின் உதவியோடே மனித சமுதாயம் தீய கிருமிகளிடம் இருந்து காப்பாற்றப்படுகின்றன.

    இந்த தீய நுண்ணுயிர்களை தடுக்கும் விதமாகத்தான் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, குளிப்பது, பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வது என பல சுகாதார முறைகள் வலியுறுத்தப்படுகின்றன.

    நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து தீய பாக்டீரியாக்கள் அதிகரித்தால் நோய் தாக்குதல் ஏற்படுகின்றது. உதாரணமாக அதிக இனிப்புகள், சாக்லேட் கேக் போன்றவைகளை சாப்பிடும் பொழுது அவை பற்களில் ஒட்டி ஈறு, பல் இவற்றினை அழிக்கின்றது. இதன் காரணமாகவே இரு வேளை பல் துலக்குவது, வாய் நன்கு கொப்பளிப்பது போன்ற பழக்கங்களை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதிக சர்க்கரை உணவுகளை தவிர்க்க சொல்கின்றனர்.

    மருத்துவ முன்னேற்றம் எப்படி வளர்ந்து கொண்டு இருக்கின்றதோ அதே போன்று பல வகை நோய்களின் பாதிப்பும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கான பல முக்கியமான காரணங்களில் ஒன்று மாறுபட்ட உணவு முறையும் ஆகும். விதவிதமான இனிப்புகள், துரித உணவுகள், கொழுப்பு வகைகள் இவை அனைத்துமே உடலை வெகுவாய் பாதிக்கின்றன. காய்கறி வகைகள், விதைகள், நார் சத்து இவை நமது குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்களுக்கு தேவை. இவ்வகை உணவுகளை பிரிபயோடிக் என்பர். இவை உடல் நல முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுபவை. பிரிபயோடிக் என்பவை நமக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள். செரிமானத்திற்கு உதவும், செரிமான கோளாறுகளை நீக்கும். தயிர், மோர், இட்லிமாவு இவை நல்ல பாக்டீரியா நிறைந்த உணவுகள் ஆகும். சில நேரங்களில் உடல் பாதிப்பின் காரணமாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பாக்டீரியாக்களும் அழியக்கூடும். ஆகவேதான் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும் பொழுது சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். ஆகவேதான் மருத்துவர்கள் சிலருக்கு குறிப்பிட்ட முறையில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மேலும் சில சத்துகளோடு சேர்த்து அளிப்பார்கள். சிலர் தன் மனம் போனபடி ஆன்டிபயாடிக் மருந்துகளை மேலும் கொண்டு பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

    வைரஸ், பூஞ்சை தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் உதவாது. ஆக ஜலதோஷம், புளூ போன்ற பாதிப்புகளுக்கு தாங்களே ஏதோ ஒரு மருந்தினை எடுத்துக்கொள்வது, அதையே தொடர்ந்து செய்வது போன்றவை தற்கொலைக்கு சமம். இதனையே மற்றவர்களையும் சாப்பிட பரிந்துரைப்பது கொலைக்கு சமம். இனியாவது இத்தகு விஷப் பரீட்சைகளை செய்யாது இருப்போம்.

    அதிக கொழுப்பு, சர்க்கரை இதனை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், விகிதாசார உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் உங்கள் உணவு வானவில் போல் ஏழு நிறங்களில் இருந்தால் நல்லது. சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களாவது கண்டிப்பாய் இருக்க வேண்டும்.

    நிறைந்த ஆய்வுகளுக்கு பிறகு வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இக் கட்டுரை அளிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் நல்ல பாக்டீரியாக்களோடு ஆரோக்கியமான வாழ்வினை மேற்கொள்வோம். பொதுவில் நல்ல நுண்ணுயிர் குறைந்து, தீயது அதிகரிக்கும் பொழுது அவர்கள் சற்று உடல் சோர்வாக இருப்பது, எரிச்சலாக இருப்பது மனச்சோர்வுடன் இருப்பது ஆகியவற்றை வெளிப்படுத்தலாம். உங்கள் உடன் இருப்பவர்கள், உங்களது உயர் அதிகாரிகள் அல்லது உங்களது உதவியாளர்கள் இந்த அறிகுறிகளை வெளிப்படுத்தினால் டீ, காபிக்கு பதிலாக சுத்தமான மோர் அவருக்கு வாங்கிக் கொடுக்கலாமே!

    மேலும் சில குறிப்புகளை பார்ப்போமா?

    வாய்:- இந்த வாயால் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். சதா ஏதாவது மென்று கொண்டு இருக்கும். கட்டுப்பாடில்லாமல் பேசும். அத்தோடு மட்டுமா? 700 வகைக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் இருக்கின்றன. சில வகைகள் நல்லவை. பல வகைகள் பல்லையும், ஈறுகளையும் பாதிப்பதாகவே இருக்கின்றன. இவைகளை எப்படி நீக்குவது. தவிர்ப்பது.

    காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும்.

    ஈறுகளை விரல் கொண்டு மசாஜ் செய்து கொப்பளிக்க வேண்டும். நாக்கினை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். தெரிந்த சாதாரண செய்திதான். ஆனால் அதனை கடை பிடிக்காததன் காரணமே பல்லை காப்பாற்றுவது படாத பாடாகிவிட்டது.

    தீய பாக்டீரியாக்கள் பல் இடைவெளிகளில் புகுந்து சந்தோஷமாய் ஒரு ஊரினையே உருவாக்கி விடும். பிளாசிங் என்ற முறையினை பல் மருத்துவர் மூலம் நன்கு கற்று கடைபிடிக்க வேண்டும்.

    வருடம் இரு முறையாவது பல் பரிசோதனை அவசியமே.

    குடல்:- குடலினை பொறுத்தவரை ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் சாராம்சமாக சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்.

    * வயிறு உப்பிசம், வயிறு வலி, கழிவு வெளியேற்றத்தில் சில பிரச்சினைகள், நெஞ்சுவலி, சரும சிவப்பு திட்டு, வாய் நாற்றம், இப்படி பல அறிகுறிகள் இருக்கலாம். சில நோய்களைக் கூட இந்த தீய பாக்டீரியாக்களின் விளைவாக குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.

    * சுத்தமான தேன், மஞ்சள், அன்னாசி பழம், இஞ்சி, பூண்டு, தயிர், மோர் போன்ற உணவுகளை கிருமி நாசினி உணவாக குறிப்பிடுகின்றனர்.

    இதுபோல் பச்சை மாங்காய், மாம்பழம், முட்டை கோஸ் இவற்றினையும் குறிப்பிடுகின்றனர்.

    இவற்றினை அடிப்படையாக வைத்துதான் நார்சத்து உணவு, பல வண்ண காய்கறிகள், உடற்பயிற்சி, சர்க்கரையினை தவிர்த்தல், தேவையான அளவு தூக்கம், இவைகள் பரிந்துரைக்கப்படுகின்றது.

    அதே போன்று அன்றாடம் குளித்தல், கைகளை சுத்தம் செய்தல், துவைத்த ஆடைகளை அணிதல் எனவும் சிறு வயதிலிருந்து குழந்தைகளை பழக்குகின்றோம்.

    நட்பு என்ற பெயரில் ஒரே தட்டில் நண்பர்களோடு உண்பது, ஒருவர் கடித்த உணவு துண்டினை அடுத்தவர் எடுத்துக் கொள்வது, ஒரு ஸ்பூன் கொண்டு பலரும் அதில் உண்பது என்பது அன்பால் அள்ளி அள்ளி தீய கிருமிகளை மற்றவர்களுக்கு தருகின்றோம் என்பதை உணர்ந்து அதனை தவிர்ப்போமாக.

    ×