இது புதுசு

மீண்டும் இந்தியா வரும் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள்

Published On 2022-09-06 11:07 GMT   |   Update On 2022-09-06 11:07 GMT
  • லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மாடல்கள் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • இதற்காக லம்ப்ரெட்டா நிறுவனம் பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது.

இந்திய இருசக்கர வாகன சந்தையில் அதிக பிரபல பிராண்டாக லம்ப்ரெட்டா இருந்து வந்தது. இத்தாலி நாட்டு நிறுவனமான லம்ப்ரெட்டா இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் லம்ப்ரெட்டா மீண்டும் இந்தியாவில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரி எண்ட்ரி கொடுக்க பேர்டு மொபிலிட்டி எனும் நிறுவனத்துடன் லம்ப்ரெட்டா கூட்டணி அமைப்பதாக தெரிகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய லம்ப்ரெட்டா திட்டமிட்டுள்ளது. லம்ப்ரெட்டா பிராண்டின் தாய் நிறுவனமான இன்னோசெண்டி எஸ்ஏ இந்தியாவில் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2024 வாக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லம்ப்ரெட்டா பிராண்டின் பெரும்பாலான மாடல்கள் 200 சிசி முதல் 300 சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும்.


இந்தியாவில் களமிறங்குவதன் மூலம் உள்நாட்டிலேயே தனது வாகன உற்பத்தியை துவங்க லம்ப்ரெட்டா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். அறிமுகமாகும் போது இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்கூட்டர்களாக லம்ப்ரெட்டா மாடல்கள் நிச்சயம் இருக்காது. இது தற்போது விற்பனையாகும் பிரீமியம் ஸ்கூட்டர்களை போன்ற விலையிலேயே அறிமுகமாகும்.

பேர்டு மொபிலிட்டி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதை அடுத்து லம்ப்ரெட்டாவிடம் 51 சதவீத பங்குகளும், பேர்டு மொபிலிட்டி 49 சதவீத பங்குகளை கொண்டிருக்கும். உலகம் முழுக்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக ஸ்கூட்டர்களை லம்ப்ரெட்டா விற்பனை செய்து இருக்கிறது. இந்தியாவில் களமிறங்குவதன் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. தற்போது உலகின் 70 நாடுகளில் லம்ப்ரெட்டா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News