சிராஜ் 4 விக்கெட் எடுத்து அசத்தல் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவிப்பு
- முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களை குவித்துள்ளது.
- அந்த அணியின் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர்.
லண்டன்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் சதமடித்தார். அவருக்கு ஸ்மித் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும். பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அடுத்து இறங்கிய மிட்செல் ஸ்டார்க் 5 ரன் எடுத்திருந்தபோது அக்சர் படேலின் துல்லிய பீல்டிங்கில் ரன் அவுட்டானார்.
8-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியுடன் பாட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.