கிரிக்கெட் (Cricket)

காயம்பட்ட கட்டைவிரலுடன் என்ன ஒரு அதிரடி..! ரசிகர்களின் பாராட்டு மழையில் ரோகித்

Published On 2022-12-07 17:13 GMT   |   Update On 2022-12-07 17:13 GMT
  • வங்காளதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
  • விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார்.

மிர்புர்:

வங்காளதேசத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய வங்காளதேச அணி 271 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

இப்போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பேட்டிங்கின்போது 9வது வீரராக களமிறங்கினார்.

இந்தியா 213 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 46வது ஓவரில் தீபக் சாஹரின் விக்கெட்டை இந்தியா இழந்ததும், ரோகித் பேட்டிங் செய்ய வந்தார். விரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் டி20 பாணியில் அதிரடி காட்டிய ரோகித் வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் நிச்சயம் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட அவர், 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்து வரை சேஸிங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

இப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோதிலும், காயத்தின் வலியையும் பொருட்படுத்தாமல் ரோகித் சர்மா ஆடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக டுவிட்டரில் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

'தலை வணங்குகிறேன் ரோஹித் சர்மா. கட்டைவிரல் காயத்துடன் பேட்டிங் செய்வதற்கு துணிச்சலான முடிவை எடுத்தார். அத்துடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தபோதும், அவர் தனது சக்தி முழுவதையும் கொடுத்து வெற்றியை நெருங்கினார். காயம்பட்ட கட்டைவிரலுடன் என்ன ஒரு அதிரடி..!' என ரசிகர்கள் ரோகித்தை பாராட்டி உள்ளனர்.

Tags:    

Similar News