மேட்ச் பிக்சிங் புகார்: தற்கொலைக்கு முயன்ற முகமது ஷமி... நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்
- முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.
- முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பையில் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.
வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கோரி விவாகரத்து கோரியிருந்தார். அப்போது பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கி மேட்ச் பிக்சிங் செய்ததாக முகமது ஷமி மீது அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் அந்த சமயத்தில் இந்த புகாரால் மன உளைச்சலுக்கு உள்ளான முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரின் நண்பர் உமேஷ் குமார் அதிர்ச்சி தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
சுபங்கர் மிஸ்ராவுடன் பாட்காஸ்ட்டில் பேசிய போது இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
"அந்த சமயத்தில் முகமது ஷமி என்னுடன் என் வீட்டில் வசித்து வந்தார். அவர் மீது மேட்ச் பிக்சிங் புகாரை அவரது முன்னாள் மனைவி கூறிய போது அவர் உடைந்துவிட்டார். 'என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் என் நாட்டிற்கு துரோகம் செய்கிறேன் என்ற குற்றசாட்டை பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அவர் கூறினார்.
நாங்கள் வசித்த 19வது மாடியில், அதிகாலை 4 மணியளவில் முகமது ஷமி பால்கனியில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நின்று கொண்டிருந்தார். அந்த இரவு ஷமியின் நீண்ட இரவாக இருந்தது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணை அறிக்கை வெளிவந்த பொது ஷமி மிகவும் சந்தோஷப்பட்டார். உலக கோப்பையை வேன்றபோது கூட ஷமி இவ்வளவு சந்தோசப்பட்டிருக்கமாட்டார்" என்று அவர் தெரிவித்தார்.