கிரிக்கெட்

ஷிவம் சிங் அதிரடி சதம்: 30 ரன்கள் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி

Published On 2024-07-27 01:03 GMT   |   Update On 2024-07-27 01:03 GMT
  • நடப்பு டி.என்.பி.எல். தொடரில் முதல் சதமடித்தார் ஷிவம் சிங்
  • சுரேஷ் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார்.

திண்டுக்கல்:

டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

விமல் குமார் 23 ரன்னிலும், பாபா இந்திரஜித் 29 ரன்னிலும், சரத் குமார் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

பொறுப்புடன் ஆடிய ஷிவம் சிங் 56 பந்தில் சதமடித்து அசத்தினார்.

இறுதியில், திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்துள்ளது. நடப்பு தொடரில் முதல் சதமடித்த ஷிவம் சிங் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதில் 10 சிக்சர், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்து மதுரை அணி தோல்வியடைந்தது.

சிறப்பாக விளையாடி சதமடித்த திண்டுக்கல் வீரர் ஷிவம் சிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் போட்டிகளுக்கு திண்டுக்கல் அணி தகுதி பெற்றது.

Tags:    

Similar News