ஆன்மிகம்
ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதிஉலா வந்தபோது எடுத்த படம்.

திருவண்ணாமலை கோவிலில் நாளை கார்த்திகை தீப தேரோட்டம்

Published On 2018-11-19 07:19 GMT   |   Update On 2018-11-19 07:19 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீப விழா தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி மகாதீபம் ஏற்றுவதற்கான கொப்பரையும் தயார் நிலையில் உள்ளது.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகாதீபம் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதனையொட்டி தீப திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது.

5-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கார்த்திகை தீப திருவிழா தொடங்கியுள்ளதால் நேற்று வழக்கத்தை விட பல மடங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதை படத்தில் காணலாம்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள். தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது.

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று தேர்களில் குதிரைகள், குடைகள் கட்டும் பணியும், தேரின் உச்சியில் கலசங்கள் பொருத்தும் பணியும் நடந்தது. காலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது.

2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். பெரிய தேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.


தேருக்கு கலசம் பொருத்தும் பணி நடைபெற்ற போது எடுத்த படம். சிறப்பு பூஜை செய்யப்பட்ட மகா தீப கொப்பரை.

வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் நகரின் மையப்பகுதியில் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

இதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனை மண்ணு நாட்டார் தலைமையிலான குழுவினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தயார் நிலையில் உள்ள தீப கொப்பரைக்கு நேற்று அவர்கள் பூஜை செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

கார்த்திகை மகாதீபம் ஏற்ற ஒரு சில நாட்களே இருப்பதாலும் தேரோட்டமும் நாளை நடைபெற உள்ளதாலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News