குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் 'கணக்கு' பயத்தை ஆரம்பத்திலேயே விரட்டுங்கள்..

Published On 2022-11-11 05:04 GMT   |   Update On 2022-11-11 05:04 GMT
  • குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜி.
  • கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது.

மற்ற பாடங்கள் எல்லாவற்றையுமே ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜியாக இருப்பதுண்டு. இதை அலர்ஜி என்பதைவிட, 'ஃபோபியா' (பயம்) என்றே குறிப்பிட வேண்டும்.

ஆம்...! அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஆஷ்கிராப்ட் இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அதில் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

கணித பயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் செய்த ஆய்வில், கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது. கூடவே படிப்பு மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறதாம். இதனால், அவர்கள் மிகச் சாதாரணமான இரண்டு எண்களைக் கூட்டுவது போன்ற விஷயங்களுக்குக் கூட பதற்றமும், திணறலும் அடைகிறார்கள். சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவும், இதயத் துடிப்பின் அளவும் எகிறியதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், ''எண்களைப் பார்த்ததும் இவர்களது மனதில் ஏராளமான சிந்தனைகள் அலைமோதுகின்றன. அதனால் கணக்கிடத் தேவையான சிந்தனையோ, பொறுமையோ அவர்களிடம் இல்லாமல் போகிறது. இதனால் நாளடைவில் அவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது.

இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி... கணிதம் தொடர்பான பயத்தை மழலை பருவத்திலேயே அகற்றி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். கணக்கு என்றவுடனே, முகம் சுழிக்கும் குழந்தைகளுக்கு, அதை உற்சாகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்களது பதற்றமும், கணக்கு பயமும் குறைந்துவிடும்'' என்கிறார் ஆஷ்கிராப்ட்.

Tags:    

Similar News