பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன: ப.சிதம்பரம் பேச்சு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தற்போது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீட்டு திட்டம் மோசடியான திட்டம். இந்த திட்டம் விவசாயிகளுக்காக கிடையாது. காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக தான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை, முதல்வர் வருத்தம் தெரிவிக்கவில்லை. நேரில் சென்று பார்க்கவில்லை. தமிழக அரசு பொம்மையாக செயல்படுகிறது. மத்திய அரசு ஒரு காலை தூக்க சொன்னால் தமிழக அரசு இரண்டு கால்களையும் தூக்குகிறது.
பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வருகிறது. காங்கிரஸ் வலுப்பட வேண்டும் என்றால் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்திற்காக அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் மற்றும் பிளக்ஸ் பேனர்களில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் படம் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். #pchidambaram #bjp