செய்திகள் (Tamil News)

அமித்ஷா குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? - ஆ.ராசா கேள்வி

Published On 2018-07-15 07:07 GMT   |   Update On 2018-07-15 07:07 GMT
தமிழகத்தில் ஊழல் என அமித்ஷா குற்றச்சாட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். #EdappadiPalaniswami #AmitShah

திருவொற்றியூர்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. பகுதி செயலாளர் கே.பி.சங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி. சாமி, மாதவரம் சுதர்சனம் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கலந்துகொண்டு நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

கலைஞர் முதல்வராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். 20 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் கலைஞர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வரலாற்றில் இடம் பிடித்தவர். மக்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்களை தான் இன்னும் அமைச்சராக நினைத்து கொண்டு இருக்கின்றனர். அ.தி.மு.க அமைச்சர்களுக்கு மதிப்பில்லை.

மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் கனவை தகர்த்து உள்ளது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வு முறையினால் தற்போது மருத்துவ படிப்பிற்கு காசோலை மூலம் லஞ்சம் பெறப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எவ்வித சக்தியும் அதிகாரமும் இல்லை மத்திய அரசை எதிர்பார்த்து இருக்கும் நிலை தான் உள்ளது ஆகவே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.

தமிழகத்தில் டாஸ்மாக், பொதுப்பணித்துறை, சத்துணவு துறை என அனைத்திலும் ஊழல் என்று கமி‌ஷன் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு இது ஒரு பொற்காலம் டி.டி.வி தினகரனுடன் பேசி அவருடன் செல்ல நினைக்கும் எம்.எல்.ஏ.விற்கு மாத மாதம் ரூ.10 லட்சம் பணமும் தங்கக்கட்டிகளும் வழங்கப்படுகிறது.


தமிழகத்திற்கு வந்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகம் தான் ஊழலில் உச்சக்கட்டம் என கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவிக்காமல் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

அமித்ஷா மட்டுமல்லாது இன்று முட்டையில் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பதற்கு அ.தி.மு.க என்ன பதில் சொல்லப்போகிறது

மத்தியில் மதவாத ஆட்சியும் மாநிலத்தில் ஊழல் ஆட்சியும் இணைந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதை தடுக்க தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நிர்வாகிகள் வி. ராமநாதன், நாகலிங்கம் கருணாநிதி, ரமேஷ், துர்கா கோதண்டம், ஏ. வி. ஆறுமுகம், மணலி டி. நாகபாண்டியன், ஆதிகுருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கே. பி. சொக்கலிங்கம் நன்றி கூறினார். #EdappadiPalaniswami #AmitShah

Tags:    

Similar News