உள்ளூர் செய்திகள்

சேரன்மகாதேவியில் மூதாட்டி கொலையில் 2 பேர் சிக்கினர்

Published On 2024-07-14 04:54 GMT   |   Update On 2024-07-14 04:54 GMT
  • இடப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 75).

இவரது 4 மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஒரு மகன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆபிரகாம் இறந்துவிட்டதால் பொன்னம்மாள் மட்டும் சொந்த ஊரில் தனியாக வசித்து வந்தார்.

சமீபத்தில் அவருக்கு துணையாக மருமகள் மற்றும் பேரன் சொந்த ஊருக்கு வந்து தங்கி உள்ளனர். கடந்த 11-ந்தேதி மாலையில் காருக்குறிச்சி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற பொன்னம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து சேரன்மகா தேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னம்மாளை கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் 2 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 பேரையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் இடப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கொலையை அந்த 2 பேர் மட்டும்தான் செய்தார்களா? அல்லது கூட்டாளிகள் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து 2 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News