செய்திகள் (Tamil News)
கரூர் நகைக்கடையில் நூதன முறையில் திருடிய இளம்பெண் கைது
கரூர் நகைக்கடையில் நூதன முறையில் திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:
கரூர் ஜவகர் பஜாரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அங்கு நகைக்கடை வைத்துள்ளார்.நேற்று இவரது கடைக்கு இளம் பெண் ஒருவர் நகை வாங்க வந்தார். இதையடுத்து கடை ஊழியர்கள் நகைகளை காண்பித்தனர். பின்னர் அவர் நகை எதுவும் பிடிக்கவில்லை என்று கூறி சென்று விட்டார்.
இந்நிலையில் மாலையில் பாலாஜி நகைகளை சரி பார்த்த போது அதில் 6 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது. இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போது, அதில் நகை வாங்க வந்த இளம்பெண் நகையை நைசாக திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து கரூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் நகை திருடியது சேலம் சொர்ணபுரியை சேர்ந்த விஜயா (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.