சீர்காழியில் வீட்டில் 2544 மதுபாட்டில்களை பதுக்கி வைத்த பெண் கைது
சீர்காழி:
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் நாகை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சஞ்தேஷ்முக் உத்தர வின் பேரில் மது விலக்கு தனிப்படை அமைக்கப்பட்டு நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி இன்று காலை தனிப்படை போலீசார் சீர்காழியில் ரோந்து பணியில் இடுபட்டனர். அப்போது திருக்கோலக்கா என்ற தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சென்று சோதனையிட்டனர். அங்கு 53 அட்டை பெட்டிகளில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 2544 எண்ணிக்கையில் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த மதுபாட்டில்களை அப்பகுதியில் கள்ளத்தனமாக விற்பதற்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த வீட்டில் இருந்த தோப்புத்துத் தெருவை சேர்ந்த தமிழரசி(வயது45) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் அந்த வீட்டிலிருந்து தப்பியோடிய ரவி என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.
இதையடுத்து தனிப்படை போலீசார் மது பாட்டில்களையும், கைது செய்த தமிழரசியையும் சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.