செய்திகள்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க தவிக்கும் நோயாளிகள்

Published On 2018-05-10 09:53 GMT   |   Update On 2018-05-10 09:53 GMT
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசு பொது மருத்துவமனை ஆகும். இங்கு 3,500 படுக்கைகள், 800 மருத்துவர்கள், 890 நர்சுகள், 750 உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். தினமும் 13 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

இங்கிருக்கும் சிகிச்சை கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிகிச்சைக்காக பிரிக்கப்பட்டுள்ளன. 2 பிரம்மாண்ட டவர் கட்டி டங்களும் உள்ளன.

டவர்-1 பொது சிகிச்சைக்காகவும், மருந்து- சிகிச்சை, பரிசோதனைக்காகவும், டவர்-2 கட்டிடம் அறுவை சிகிச்சைக்காகவும் உள் நோயாளிகளுக்காகவும் செயல்பட்டு வருகிறது.

பொதுமருத்துவம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், மூட்டு தசை, இணைப்பு திசு, காது, மூக்கு, தொண்டை, பிரச்சினைகள், புற்று நோய், நாளமில்லா சுரப்பிகள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை, குடல் நோய்கள், கல்லீரல், சர்க்கரை நோய், நெஞ்சக நோய்கள் உள்பட அனைத்து நோய்களுக்கும் தனித்தனி சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

தினமும் அனைத்து வகையான நோய்களுக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள், வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில் ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன், மேமோகிராம் உள்ளிட்ட ஸ்கேன் எடுக்க தினமும் நீண்ட வரிசையில் நோயாளிகள் கூட்டம் காணப்படுகிறது. மணிக்கணக்கில் நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன், மேமோகிராம் எடுக்க குறைந்தது 4-5 மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கிறார்கள்.

இதனால் நோயாளிகள் மிகவும் சோர்ந்து விடுகிறார்கள். ஆங்காங்கே நோயாளிகள் கவலையுடன் அமர்ந்து இருப்பது பரிதாபமாக உள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், நர்சுகள் நோயாளிகளிடம் சரிவர பதில் கூறாமல் காத்திருக்க வைக்கின்றனர்.

இதுகுறித்து சிகிச்சை பெற வந்த நோயாளிகளில் ஒருவர் கூறியதாவது:-

எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க காலையிலேயே வந்து விட்டேன். மருத்துவமனை ஊழியர்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வைக்கிறார்கள். இங்கு ஸ்கேன் எடுக்க 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

நோயாளிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க கூடுதல் எந்திரங்கள் அரசு அமைத்து தர வேண்டும். நோயாளிகளை மணிக்கணக்கில் காத்திருக்க வைக்க கூடாது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News