செய்திகள்

கொடைக்கானல் அருகே கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் பீதி

Published On 2018-05-12 11:10 GMT   |   Update On 2018-05-12 11:10 GMT
கொடைக்கானல் அருகே கூட்டமாக உலா வரும் யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பெருமாள்மலை:

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, ஐந்து வீடு இதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் யானை, மான், காட்டு எருமை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

தற்போது குட்டியுடன் 5 யானைகள் பேத்துப்பாறை ஐந்து வீடு பகுதியில் முகாமிட்டுள்ளன. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து வெடி வெடித்தும் ஓசை எழுப்பியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் கூடமாக உலா வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். விவசாய நிலங்களுக்கு இரவு நேர காவலுக்கு செல்வதற்கு தயங்கி வருகின்றனர்.

எனவே வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் யானைகள் உணவு தேடி வெளியே வருகின்றன.

வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் யானைகளுக்கு பிடித்த உணவுகளான சோளம், பலா, வாழை ஆகியவற்றை சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். யானைக் கூட்டம் பட்டா நிலங்களில் புகுந்தால் வனத்துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, கள்ளக்கிணறு, தடியன்குடிசை ஆகிய பகுதிகளிலும் யானைகள் முகாமிட்டள்ளதால் ஆதிவாசி குடியிருப்பு பகுதி மக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News