செய்திகள்

தாம்பரத்தில் துணிகரம்: கடையின் பூட்டை உடைத்து ரூ.35 லட்சம் கைக்கெடிகாரங்கள் கொள்ளை

Published On 2018-05-13 22:57 GMT   |   Update On 2018-05-13 22:57 GMT
தாம்பரத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
ஆலந்தூர்:

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் (வயது 29). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள வேளச்சேரி சாலையில் கைக்கெடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை சந்தீப் பூட்டி விட்டு சென்றார்.

வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க சந்தீப் வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டார். இதுபற்றி சேலையூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு வேனில் வந்த கொள்ளையர்கள் கைக்கெடிகாரங்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் இருந்து ரூ.35 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கைக்கெடிகாரங்களை அவர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த மாதம் கிழக்கு தாம்பரம் மகாலட்சுமி நகர் வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்த மற்றொரு கெடிகாரக்கடையிலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கெடிகாரங்கள் கொள்ளைபோனது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News