செய்திகள் (Tamil News)
கொலைசெய்யப்பட்ட தனசீலி, தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள் கதறி அழுத காட்சி

போலீசில் புகார் செய்ததால் மனைவியை வெட்டி கொன்ற போதை கணவர்

Published On 2018-05-14 08:40 GMT   |   Update On 2018-05-14 08:40 GMT
திண்டுக்கல் அருகே போலீசில் புகார் செய்த மனைவியை கணவர் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் சவேரியார் பாளையம் ஜீவாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தனசீலி (வயது30) என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு தருண் (12), வருண் (10), தர்ஷினி (8), ஆரோவ் (6) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடித்து விட்டு வீட்டிற்கு பணம் தராமல் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தனசீலி தனது தாய் புஷ்பாவுடன் குழந்தைகளை வைத்து வளர்த்து வந்தார். கணவர் வருமானம் இல்லாததால் பழைய இரும்பு கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அவ்வப்போது குடித்து விட்டு மனைவியுடன் பிரச்சினை செய்து வந்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவரால் தானும் குழந்தைகளும் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறி இருந்தார்.

இதனால் மனைவி மீது அருண்குமார் மேலும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனசீலி நன்னப்பாநகர் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் தனசீலியை பல இடங்களில் வெட்டினார். இதில் தனசீலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை பார்த்ததும் அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட தனசீலியின் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரது மகன்கள் தருண் மற்றும் வருண் ஆகிய 2 பேரும் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தனர்.

தர்ஷினி மற்றும் ஆரோவ் ஆகிய 2 பேர் மட்டுமே பாட்டி வீட்டில் இருந்தனர். தனது தாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை அறிந்ததும் குழந்தைகள் கதறி அழுதது காண்பவர்களின் கண்களை குளமாக்கியது.

இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
Tags:    

Similar News