செய்திகள்
கும்பகோணம் அருகே வீடு புகுந்து வெள்ளி சாமி சிலைகள் கொள்ளை
கும்பகோணம் அருகே வீடு புகுந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள வெள்ளி சாமி சிலைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே பந்தல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது56). இவரது மனைவி சொர்ணலதா. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சிலைகளையும், சிறிய அளவிலான தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்று விட்டனராம்.
காலையில் எழுந்து பார்த்தபோது சுவாமி சிலைகள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி இதுகுறித்து பந்தநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.