செய்திகள்
பிளஸ்-2 தேர்வில் தோல்வி - குட்டையில் குதித்து மாணவர் தற்கொலை
கோவையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத சோகத்தில் மாணவர் குட்டையில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சிங்காரவேலு. மெக்கானிக். இவரது மகன் நவீன் (வயது 17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் கணிதம், இயற்பியல் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
ஆனால் இவரது நண்பர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக நவீன் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த நவீன் தனது பெற்றோரிடம் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். குட்டையன் தோட்டம் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த நவீன் திடீரென அருகே இருந்த மயிலேரிபாளையம் குட்டையில் குதித்தார்.
இதனை பார்த்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குட்டையில் இருந்து நவீனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே நவீன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.