செய்திகள் (Tamil News)

அறந்தாங்கி வாலிபர் கொலை சம்பவம்: சித்தப்பா உள்பட 2 பேர் கைது

Published On 2018-05-22 16:28 GMT   |   Update On 2018-05-22 16:28 GMT
அறந்தாங்கி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டசம்பவத்தில், தகராறில் ஈடுபட்டதால் அடித்து கொன்ற சித்தப்பா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). அவரது குடும்பத்தினரும், அவரது சித்தப்பா பழனியப்பன் குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். வீரபத்திரன் இரவு நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள ரகுபதி என்பவருக்கு சொந்தமான குடிசையில் தங்கி வந்துள்ளார். மது அருந்தும் பழக்கம் உடைய வீரபத்திரன் பலருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீரபத்திரன் சாப்பிட்டு விட்டு, குடிசையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று காலை பழனியப்பன் குடும்பத்தினர் பார்த்தபோது, வீரபத்திரன் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரனை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் வீரபத்திரனை கொலை செய்த வழக்கில் அவரது சித்தப்பா பழனியப்பன் (42), உறவினர் ரவிச்சந்திரன் (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் பின் வருமாறு:- சம்பவத்தன்று இரவு வீரபத்திரன், குடிசையில் வழக்கமாக தூங்கும் இடத்தில் தூங்கினார். அப்போது நாங்கள் 2 பேரும் அங்கு சென்று தூங்கி கொண்டிருந்த வீரபத்திரனை எழுப்பி, ஏன் இப்படி குடித்து விட்டு பலருடன் தகராறு செய்கிறாய் என்று கேட்டோம். அப்போது வீரபத்திரனுக்கும் எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் வீரபத்திரனை முகம் சிதையும் அளவிற்கு அடித்தோம். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம், என்று தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  
Tags:    

Similar News