செய்திகள்

சேலம் புதிய பஸ்நிலையத்தில் பஸ்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்

Published On 2018-05-27 16:51 GMT   |   Update On 2018-05-27 16:51 GMT
சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மற்ற பஸ்களை பயணிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
சேலம்:

பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க மாநில தலைவருமான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் சேலம் மாவட்டத்தில் நேற்று சில அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இந்த காரணங்களால் மாலையில் சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு இயக்கப்படும் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பஸ்களுக்காக காத்திருந்தனர். பின்னர் ஆத்திரமடைந்த பயணிகள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டு சென்ற மற்ற பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பஸ் டிரைவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசாருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பேரில் மேட்டூருக்கு 3 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் போலீஸ் பாதுகாப்புடன் மேட்டூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. 
Tags:    

Similar News