செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை- அமைச்சர் வழங்கினார்

Published On 2018-06-08 02:00 GMT   |   Update On 2018-06-08 02:00 GMT
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார்.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளை பாராட்டும் வகையில் அந்த பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்ற 30 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த ஊக்கத்தொகையை வழங்கினார்.

இந்த ஊக்கத்தொகையில் தளவாடப்பொருட்கள் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரமும், ஆசிரியர்கள் சுற்றுலா செல்வதற்கு ரூ.20 ஆயிரமும், ஆய்வுக்கூட உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரமும், மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரமும் பயன்படுத்தப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News