திருமங்கலத்தில் குடிநீர்-அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்டது லட்சுமிபுரம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் லட்சுமிபுரம் பகுதி பெண்கள் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுடுகாட்டுப் பகுதியில் உள்ள சுகாதாரமற்ற தண்ணீரை எடுத்து வந்தனர்.
குடிநீர் பிரச்சினை தவிர, அடிப்படை வசதிகளும் சரிவர செய்துதரவில்லை. சாலை வசதி, சாக்கடை போன்றவை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக லட்சுமிபுரம் கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதற்கு அவர்கள் போதிய நிதி இல்லை என தெரிவித்தனர்.
இதை கண்டித்தும், குடிநீர் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தியும் இன்று அந்தப்பகுதியைச் சேர்ந்த 60 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திருமங்கலத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷ மிட்டனர். பொதுமக்கள் திரண்டு பல மணி நேரமாகியும் அதிகாரிகள் அங்கு வரவில்லை. பின்னர் திருமங்கலம் போலீசாரே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.