மதுரையில் ரேசன்கடை ஊழியரை கொன்றது கூலிப்படையா?: போலீசார் விசாரணை
மதுரை:
மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 28). இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மதுரை மாநகர் 70-வது வட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார்.
ரேசன் கடை ஊழியரான முனியசாமி நேற்று காலை ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் 5 பேர் முனியசாமியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்துவிட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி விட்டனர்.
இது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
முனியசாமி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு பெண் வந்து அடையாளம் காட்டிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த பெண் தகராறில் கூலிப்படையை ஏவி முனியசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்தும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
முனியசாமி கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் விரைவில் சிக்குவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.