செய்திகள்

குடும்ப தகராறில் பெண்ணை தாக்கி பொருட்கள் சூறை: கணவர்- உறவினர்கள் மீது புகார்

Published On 2018-06-21 17:02 GMT   |   Update On 2018-06-21 17:02 GMT
அரியாங்குப்பம் அருகே குடும்ப தகராறில் பெண்ணை தாக்கி பொருட்களை சூறையாடிய கணவர்- உறவினர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் அருகே மணவெளி திருமால் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 45). இவரது மனைவி கலைவாணி. (41). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

ராஜகோபால் ஷெட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

அது போல் சம்பவத்தன்று இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜகோபால் தனது உறவினர்களான செல்வி, நந்தினி, பிரியா ஆகியோருடன் சேர்ந்து கலைவாணியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடியதாக தெரிகிறது.

இதுகுறித்து கலைவாணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அது போல் ராஜகோபாலும் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

புகாரில் தன்னை கலைவாணி இரும்பு பைப்பாலும், கிரிக்கெட் மட்டையாலும் தாக்கியதாக தெரிவித்தார். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News