செய்திகள்

மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

Published On 2018-06-30 16:46 GMT   |   Update On 2018-06-30 16:46 GMT
மின் இணைப்பு வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு கிருஷ்ணகிரி கோர்ட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஓமண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ், விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிற்கு மின் இணைப்பு பெற தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது அவரிடம், அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் நடராஜன், தனக்கு ரூ.3 ஆயிரத்து 500 லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பு வழங்க முடியும் என கூறியுள்ளார். இது குறித்து சதீஸ் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜன் தலைமையிலான போலீசார் இளநிலை பொறியாளர் நடராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி பாலசுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கினார். அதில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இளநிலை பொறியாளர் நடராஜனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
Tags:    

Similar News